Lekha Books

A+ A A-

பிச்சைக்காரர்கள் - Page 8

Pichaikkarargal

அந்த மகனைத் தேடி அவள் நடந்து திரியலாம். அந்தக் கதையை அவன் யாரிடமாவது சிறிதுநேரம் கூறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடாதா?

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த கருவாட்டு மணம் சுற்றிலும் பரவி விட்டிருந்தது. சூடான சாதத்தின் மணமும் தான்! அவனுடைய தாய் சமைக்கும் குழம்பின் வாசனையும் இதே போலத்தான் இருக்கும். அவன் அந்த வாசனையை எவ்வளவு நாட்கள் அனுபவித்திருக்கிறான்! அந்த சாப்பாட்டின் ருசி இப்போது கூட அவனுடைய நாக்கு நுனியில் இருந்துகொண்டுதான் இருக்றிது.

கேசு தயங்கித் தயங்கி அவர்களை நெருங்கினான்.

"நீ ஏன்டா இங்கே உட்கார்ந்திருக்கே?"

"நான் என் அம்மாவைத் தேடித் திரியிறேன்."

அந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை. அவன் கூறுவதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருப்பதைப் போல் தோன்றியது.

அவன் சொன்னான்:

"நாங்க இங்கேதான் வசித்தோம். நான் இங்கேயிருந்து போய் பல நாட்கள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தப்போ அம்மா, அக்கா, தாத்தா யாரும் இல்ல..."

அந்தக் கதை அந்த அளவிற்கு சிறியதாக இருந்தது. அந்தப் பெண் சொன்னாள்:

"அப்படியா? அவங்க தங்களோட வயிற்றைக் காப்பாற்ற எங்கேயாவது போயிருப்பாங்க."

"நான் தேடி அலையிறேன்."

"ஒரு வேளை நீ எங்கேயாவது அவங்களைப் பார்க்கலாம். இல்லாட்டி அவங்க செத்துப் போயிருக்கலாம்."

அதைக் கேட்டு அவன் அதிர்ந்து போய்விட்டான். செத்திருப்பார்கள்! அவனுடைய தாயும் தாத்தாவும் அக்காவும் இறந்திருப்பார்கள்! அப்படியென்றால், அவர்களை இனி பார்க்க வேண்டாம். இல்லா விட்டால் அவன் வரும் வரையில் அவர்கள் அந்தப் புளிய மரத்தடியில் இல்லாமல் போயிருப்பார்களா? 

அந்தப் பெண் சாதத்தையும் குழம்பையும் இறக்கி வைத்தாள். அவள் கேட்டாள்:

"நீ ஏதாவது சாப்பிட்டியா?"

"இல்ல."

ஒரு சிறு சட்டியில் கொஞ்சம் சாதத்தையும் அதன் மீது கொஞ்சம் மீன் குழம்பையும் ஊற்றி அவனுக்கு முன்னால் அதை நகர்த்தி வைத்து விட்டு, இன்னொரு சட்டியில் அவள் தன்னுடைய சாப்பாட்டைப் பரிமாறினாள்.

இப்படி ஒரு உணவைச் சாப்பிட்டு எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. அவனுடைய சட்டித் துண்டு இப்போது அங்குதான் கிடக்கிறது. ஆனால், சாதம் உள்ளே இறங்கவில்லை. தன்னுடைய தாய் இறந்திருப்பாளா? அதை எப்படித் தெரிந்து கொள்வது? அந்தக் கேள்வியை அவன் அந்தப் பெண்ணிடம் கேட்டான்.

"செத்திருப்பாங்கடா."

"செத்திருந்தா தெரிஞ்சிருக்குமே!"

"அது எப்படி? சாலையோரங்களிலும் மூலை முடுக்குகளிலும் எவ்வளவு பேர் செத்துக் கிடக்குறாங்க! அதையெல்லாம் யார் பார்த்துக்கிட்டு இருக்காங்க?"

மற்றொரு காட்சி அவனுடைய மனக் கண்களுக்கு முன்னால் தோன்றியது. சிறு வயதிலிருந்து அவன் பார்த்திருக்கும் காட்சி தான். நகரத்தின் பல பகுதிகளிலும் பலரும் இறந்து கிடப்பார்கள். அவர்களை வண்டியில் எடுத்துப் போட்டு எங்கோ கொண்டு செல்வார்கள். சிறு வயதிலிருந்து அப்படிக் கொண்டு போவதாக தான் பார்த்த எல்லா பிணங்களும் நினைவில் தோன்றுவது மாதிரி அவனுக்கு இருந்தது. எப்படிப்பட்ட பிச்சைக்காரர்களெல்லாம் இறந்து முடித்திருக்கிறார்கள்! யாரும் யாரையும் அறிவதில்லை. அந்த இறந்தவர்கள் எல்லோருக்கும் பிள்ளைகளோ, சகோதரர்களோ இருப்பார்களேயானால்... இருப்பார்கள். அவர்களுக்குப் பிள்ளைகளும் சகோதரர்களும் இருப்பார்கள். ஆனால், அந்தப் பிள்ளைகளோ சகோதரர்களோ அவர்கள் யாரும் இறந்த விஷயத்தை அறிந்திருக்க மாட்டார்கள். அந்தப் பிள்ளைகளும் சகோதரர்களும் ஒருவேளை அவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கலாம். இந்தப் பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவரும் இப்படித் தங்களுடைய சொந்தக்காரர்களைத் தேடித் திரிபவர்களாகக் கூட இருக்கலாம். இந்தத் தேடலுக்கு மத்தியில் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? தாயும் பிள்ளைகளும் சகோதரனும் சகோதரியும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிட்டால், பிறகு ஒன்று சேரும் பொதுவான இடம் எங்கு இருக்கிறது?

படிப்படியாக அவனுடைய மனக்கண்களுக்கு முன்னால் பிச்சைக்காரர்களின் ஒரு மிகப்பெரிய கூட்டம் தோன்றியது. எவ்வளவு பிச்சைக்காரர்கள்! நகரம் முழுக்க அவர்கள் நடந்து திரிகிறார்கள்! பலர் இறந்த பிறகும், அந்தக் கூட்டம் குறைவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வீட்டில் ஏறுகிறபோதும், அவர்கள் கூறுவதென்னவோ உண்மைதான். பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிட்டது.

அவன் கேட்டான்:

"அம்மா, உங்களுக்குச் சொந்தமானவங்க யாராவது அப்படி இறந்திருக்காங்களா?"

"இறந்திருக்கலாம்."

"அம்மா, அதற்குப் பிறகு அவங்களைத் தேடினீங்களா?"

"எதற்குத் தேடணும்? இருந்தாலும் இப்பவும் நான் போற இடங்களில் எல்லாம் அவங்களைத் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன்."

"அவங்க யாரு?"

"இந்தக் குழந்தைக்கு மூத்த பசங்க. ஒரு ஆணும் ஒரு பெண்ணும்."

அந்த இரவு நேரத்தில் வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் படித்த அந்தப் பெண் அவனிடம் ஏராளமான விஷயங்களைக் கூறினாள். அது மட்டுமல்ல; அன்றைய இரவில் அவன் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டான். நகரத்தில் இங்குமங்குமாக மாலை வேலைகளில் ஒன்று சேர்ந்து கஞ்சி வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பமும் முழுமையானதல்ல. தந்தை அந்தக் குடும்பங்களில் இருப்பது என்பதே அபூர்வமானது. பிறந்த பிள்ளைகள் எல்லாரும் தாயிடம் இருக்க மாட்டார்கள். பிறந்த கணத்திலேயே அவள் அவர்களை எங்காவது தூக்கிப் போட்டிருக்கலாம். அப்படியே வளர்த்தாலும், அதற்குப் பிறகு அவன் எங்காவது போயிருக்கலாம். சகோதரர்கள் சகோதரிகளையும், சகோதரிகள் சகோதரர்களையும் அடையாளம் கண்டு பிடிக்காமலே கடைசிவரை ஆகியிருக்கலாம். இப்படி அந்த பரிதாபக் கதை நீளமாக நீண்டு கொண்டிருந்தது. இந்தப் பிச்சைக்காரர்கள் இனத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குக் கணக்கும் இல்லை.

இந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை வாழ்க்கையில் அவன் முதல் தடவையாக உணர்ந்தான். பேருந்து நிலையங்களிலும் படகுத் துறையிலும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்களும் சிறுமிகளும் இந்த மாதிரி குடும்பங்களை விட்டு ஓடியவர்களாக இருக்க வேண்டும். குப்பையில் வீசி எறியப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அவனுக்கு சிந்திப்பதற்கான விஷயமாக இது ஆனது. மேலும் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவல் அவனுக்கு உண்டானது. அவன் கேட்டான்:

"அம்மா, அப்படின்னா... இந்தப் பிச்சைக்காரர்கள் பெற்று பிச்சைக்காரர்கள் உண்டானாங்க. அவர்கள் பெற்றதும் பிச்சைக்காரர்களைத்தான். இப்படி கதை போகுது... அப்படித்தானேம்மா?"

உடனடியாக பதில் கூற முடியாத ஒரு கேள்வி என்பதை போல அவள் சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தாள்.

அவள் சொன்னாள்:

"அது அப்படியில்ல, குழந்தை! நான் சொல்றேன். நானும் அதைப்பற்றி சிந்திச்சிருக்கேன். நேர்ல பார்க்கவும் செய்திருக்கேன். இப்போ... இந்த சின்னப் பையனையே எடுத்துக்கோ. இது எப்படியோ வளர்ந்திடுதுன்னு வச்சுக்கோ. வளர்ந்த பிறகு இவனுக்கும் பிள்ளைகள் பிறக்கும். பிறக்கும் அந்த எல்லா பிள்ளைகளும் உயிரோடு இருக்காது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel