Lekha Books

A+ A A-

பிச்சைக்காரர்கள் - Page 4

Pichaikkarargal

யாரை மனதில் வைத்துக் கொண்டு அவன் அப்படி உரத்த குரலில் அழைத்தானோ, சம்பந்தப்பட்ட அந்த ஆள் அந்தக் குரலைக் காதில் வாங்கி பதிலுக்கு உரத்த குரலில் சத்தம் உண்டாக்குவான். இரண்டு மூன்று மைல்கள்வரை அந்தக் குரல் போய்ச் சேரவும் செய்திருக்கிறது. ஆனால், அது அமைதி தவழும் கிராமப் புறத்தில் நடந்தது. நகரத்தில் இருந்து கொண்டு அவன் அப்படி உரத்த குரலில் கத்தினான். கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் இருந்த பழக்கம் அது. அவனுடைய பேத்தி அந்த அழைப்பைக் கேட்பாளா?

மகள் எழுந்து போனாள். கேசுவும் அவளைப் பின் தொடர்ந்தான்.

"என்ன அம்மா, தாத்தா இப்படிப் பண்ணுறாரு?"- அவன் கேட்டான்.

அந்தப் பெண் இளம் வயதிலிருந்தே அந்த கூக்குரலைக் கேட்டிருக்கிறாள். ஒரு நிமிட நேரம் கடந்துபோன காலத்திற்குள் அவள் மூழ்கிவிட்டாள். அவளுக்கு அந்தக் கூப்பாட்டின் அர்த்தம் புரிந்தது. பேத்தியைக் காணவில்லையே என்ற பதற்றத்தில் இடத்தையும் காலத்தையும் மறந்து கிழவன் பழக்க தோஷத்தால் அப்படிக் கூவி விட்டான்.

"என்ன அப்பா இப்படி?"

கிழவன் சுய உணர்விற்கு வந்தான்.

"பெண்ணைக் காணோமே மகளே?"

"அவள் வருவாள்."

"ராத்திரி அதிக நேரம் ஆயிடுச்சே?"

"அவள் வருவாள்."

அந்தப் பெண் கிழவனைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். சுய உணர்வு இல்லாத மனிதனைப் போல அவன் நடந்தான்.

ஆனால், அவன் சுய உணர்வு இல்லாத மனிதனாகத்தான் இருந்தானா? திரும்பி வந்தபோது ஒரு நாய், பானையில் வெந்து கொண்டிருந்த மரவள்ளிக் கிழங்குத் துண்டுகளைக் கடித்துத் தின்று கொண்டிருந்தது. கேசு ஒரு குதி குதித்து நாயை ஓங்கி ஒரு அடி அடித்தான்.

"மரவள்ளிக் கிழங்கை நாய் தின்னுடுச்சே!"

அவனுடைய கோபம் கிழவனின் பக்கம் திரும்பியது. அவனால்தானே மரவள்ளிக்கிழங்கை நாய் தின்றது? ஒரு துண்டைக் கூட அந்தக் கிழவனுக்குத் தரக்கூடாது. அவனுடைய பங்கினை நாய் தின்றுவிட்டது.

அந்தப் பெண் கிழவனைப் பிடித்துக் கொண்டு வந்து உட்கார வைத்தாள். வெறுமனே உட்கார்ந்துகொண்டு தின்று கொண்டிருப்பதாக அவன் கூறினான். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் கிழவன் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அவனுக்கு சுய உணர்வு இல்லாமல் போய்விட்டதா? இல்லை. அவன் கேட்டான்:

"மகளே கல்யாணி! உன்னை நான் இப்படி வளர்க்கலையேடி...!"

கல்யாணியால் அதற்கு எந்த பதிலும் கூற முடியவில்லை. என்ன பதில் கூறுவது? நெறிமுறைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த விவசாயி தன் மகளை எப்படி வளர்த்தான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

கிழவன் அழ ஆரம்பித்தான். ஒருவேளை, கிழவனின் குழி விழுந்து உள்ளே போயிருக்கும் கண்கள், அப்போது நிறைந்த கண்ணீர் வழியாக அந்த வம்சத்தின் எதிர்காலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் தான் எப்போதும் கூறக்கூடிய நெறிமுறைகள் தகர்வதை அவன் கண்டு கொண்டிருக்கலாம். அப்போதும் அந்த இதயம் வெடித்து அவன் இறக்கப் போவதில்லை. எலும்புகள் அந்த அழுகையில் நொறுங்கிக் கீழே விழப் போவதில்லை. முதிர்ச்சியடைந்து முறுக்கேறிய நரம்புகள் அறுந்துவிடப் போவதில்லை.கேசு கிழவனை வாய்க்கு வந்தபடியெல்லாம் மோசமான வார்த்தைகளில் திட்டினான். அமைதியாக உட்கார்ந்திருந்த கல்யாணியின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்து கீழே விழுந்தது.

அந்தப் புளிய மரத்தின் கிளைகளுக்குக் கீழே அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் சற்றுத் தாமதம் உண்டானாலும், ஒன்று சேர்ந்து விடுவார்கள். அந்தப் புளிய மரத்தடிக்கு எல்லோரையம் ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு சக்தி இருக்கவே செய்தது. இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால், அங்கு சாயங்கால நேரத்தில் வந்து சேர்ந்து விட வேண்டும் என்ற ஒரு மெல்லிய ஆசை எல்லோருக்கும் இருந்தது. அந்த வகையில் கல்யாணிக்கும் ஒரு திட்டம் இருக்கத்தான் செய்தது.

அவளுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். அவனுக்கு சுமை தூக்கக்கூடிய வயது நடக்கிறது. பெண்ணை யாராவது வந்து திருமணம் செய்யக் கேட்பார்கள். நான்கு ஓலைக் கீற்றுகள் வேய்ந்த ஒரு வீட்டிற்கு மாற வேண்டும். இப்படி அவளுடைய வாழ்க்கைக்கான திட்டம் போய்க் கொண்டிருந்தது.

ஒருநாள் கேசு வரவில்லை. கிழவனுக்கு இரவில் உறக்கமே வரவில்லை. அவனுக்காக மூடி வைத்திருந்த மரவள்ளிக் கிழங்கையும் கஞ்சியையும் நாய் சாப்பிட்டு விடாமல் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டு கல்யாணி உட்கார்ந்திருந்தாள்.

"இருந்தாலும் அவன் ஏன் மகளே வரலை?"

இப்படிக் கிழவன் கேட்டுக் கொண்டிருந்தான். கல்யாணி என்ன பதிலைக் கூறுவாள்? அவ்வப்போது அவன் தன் பேத்தியை எழுப்பி அன்று அவனை விட்டு அவள் எங்கு பிரிந்து சென்றாள் என்று கேட்டான். அவளுக்கு அது ஒரு பெரிய தொந்தரவான விஷயமாக இருந்தது. குலுக்கி எழுப்பினாலும், அவள் கண்களைத் திறக்க மறுத்தாள். பையனுக்கு ஏதாவது ஆபத்து உண்டாகியிருக்குமோ? நூற்றுக்கணக்கான ஆபத்துகளை அவன் மனதில் நினைத்துப் பார்த்தான். அவன்மீது கார் ஏறியிருக்குமோ? இல்லாவிட்டால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஏதாவதொரு இடத்தில் படுத்துக் கிடப்பானோ? கல்யாணியும் அந்த மாதிரியெல்லாம் நினைக்க ஆரம்பித்தாள். அவளுடைய மனதும் குழப்பம் கொண்டதாக ஆனது. கிழவன் சொன்னான்:

"ஒரு ஆண் வாரிசுதான் இருக்கு. அவன் தான் நமக்கு இருக்குற ஒரே நம்பிக்கை. அவனும் போயிட்டா... நான் இனியும் எதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கோ?"

"அப்பா, வாய்க்கு வந்தபடி பேசாதீங்க. நாக்குல எப்போ சனியன் வந்து நிற்பான்னு சொல்ல முடியாது."

"நான் உன்னைத்தான் சொல்றேன் மகளே. ஆபத்துகள்தான் எனக்கு ஞாபகத்துல வருது. நாக்குலயும் அதுதான் வரும். நான் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிச்சவனாச்சே மகளே! என் கடவுளே! என் பிள்ளையை நீதான் காப்பாத்தணும்!"

அது இதயத்திற்குள்ளிருந்து வந்த பிராத்தனையாக இருந்தது. அந்த தாயும் கடவுளிடம் வேண்டினாள். அவளுடைய மனம் பலவிதப்பட்ட சிந்தனைகளால் முழுமையான குழப்பத்தில் இருந்தது. ஏதாவது ஒரு வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, எங்காவது அவன் படுத்திருக்கலாம். இல்லாவிட்டால் உணவு தேடிப்போன அந்தப் பயணத்தில், வேகமாக பாய்ந்து வந்த ஏதாவது வண்டி அவனைக் கீழே தள்ளி நசுக்கி முடித்துவிட்டுப் போயிருக்கலாம். யாருக்குத் தெரியும்?

எப்படியோ பொழுது விடிந்தது. அவள் புறப்பட்டாள். எங்கு என்று அவளுக்கே தெரியாது. அவனை அவள் எங்கு கண்டுபிடிப்பாள்? யாரிடம் கேட்பது?  சற்று தூரத்தில் ஒரு சிறுவன் நடந்து செல்வதை அவள் பார்த்தாள். அவன் அளவிற்குத்தான் அந்தச் சிறுவனின் உயரமும் இருந்தது. அவனுடைய அதே நிறம்தான். வேகமாக ஓடி அந்தச் சிறுவனை அவள் நெருங்கினாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel