Lekha Books

A+ A A-

பிச்சைக்காரர்கள் - Page 2

Pichaikkarargal

டுமையாக உழைத்து உழைத்து வீணாகிப் போன ஒரு உடம்பு அது. வயதைத் தீர்மானிக்க முடியாது. சதை முழுவதும் சுருங்கிப்போய் விட்டாலும், கூர்மையான பார்வைக்கு எந்தக் குறைவும் உண்டாகவில்லை. துருத்திக் கொண்டிருக்கும் எலும்புகளுக்கு மத்தியில் கொஞ்சமாக இருக்கும் சதையைப் பார்க்கும் யாரும் அந்த உடல் 'கொழு கொழு' என்றிருந்த காலத்தைப் பற்றிக் கட்டாயம் நினைத்துப் பார்ப்பார்கள். ஆள் நல்ல உயரம். அளவெடுத்த உடம்பு. அது மட்டும் உண்மை. அவன் ஒரு விவசாயியாக இருந்தான்.

நகரத்தில் இரண்டு சாலைகள் ஒன்று சேரும் ஒரு சந்திப்பில் ஒரு பெரிய புளிய மரம் நின்றிருக்கிறது. அதற்குக் கீழேதான் அந்தக் குடும்பம் வசிக்கிறது. சாயங்கால நேரத்தில் ஒரு அடுப்பு எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். குழந்தைகளின் அழுகைச் சத்தமும், தாயின் வசைபாடலும் கிழவனின் சராசரியைவிட உரத்த குரலில் பாடும் கீர்த்தனையும் - இப்படி அந்த நேரத்தில் ஒரே சப்த கோலாகலமாக இருக்கும்.

சிறிது நேரம் கடந்தால், அந்த அடுப்பிலிருக்கும் நெருப்பு அணைந்து அந்த இடம் மிகவும் அமைதியானதாக மாறிவிடும்.

அந்தக் குடும்பத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதைச் சரியாக யாராலும் கூற முடியாது. ஒரு குடும்பம் அங்கு வசிக்கிறது. அவர்கள் எப்படி அங்கு வந்தார்கள்? யாருக்குத் தெரியும்? பல பரம்பரைகளாக நடந்து கொண்டிருக்கும் ஒன்று அது. அவர்களும் வளர்கிறார்கள். அந்தப் பரம்பரை எந்த இலக்கை நோக்கி வளர்கிறதோ, யாருக்குத் தெரியும்... அந்தக் குழந்தைகள் யாராக, எப்படியெல்லாம் வரப்போகிறார்கள்? மனித வம்சத்திற்கு அந்த வாழ்க்கை மூலம் பரிசாக என்ன தந்துவிட முடியும்? அவர்கள் எதற்காகப் பிறந்தார்கள்? வளர்கிறார்கள்? யாருக்குத் தெரியும்...

அந்தக் கிழவன் உட்பட்ட அந்தக் குடும்பத்தைப் பார்க்கும்போது யாரும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கத்தான் செய்வார்கள். கடந்த தலைமுறையில் அவர்கள் பிச்சைக்காரர்களாக இருந்தவர்கள் அல்ல. அவர்களின் வரலாறு என்ன? அந்தக் கிழவனிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் போல இருக்கும். ஆனால் ஆயிரம் வேலைகளை மனதில் வைத்துக்கொண்டு அந்த வழியாக நடந்து போகிறவர்களுக்கு சிறிது நிற்க நேரம் எங்கே இருக்கிறது? ஒரு நிமிட நேரம் ஒருவகை ஆர்வத்துடன் மனதில் தோன்றும் அந்த சமூகப் பிரச்சினை, வந்த வேகத்திலேயே அடங்கிப் போய்விடும். அதுமட்டுமல்ல- எப்படிப்பட்ட சந்திப்பிலும், மூலையிலும், தெரு முனையிலும், சுவருக்கு அருகிலும் நாம் இப்படிப்பட்ட பிச்சைக்காரக் குடும்பங்களைப் பார்க்கலாம்! ஹோட்டலுக்குப் பின்னாலிருக்கும் எச்சில் தொட்டிக்கு அருகிலும், பேருந்து நிலையங்களிலும் நாம் பார்ப்பவர்கள் இங்கிருந்து போனவர்களாகத்தான் இருக்கும்.

எனினும், எந்த இயந்திரம் இந்தப் பிச்சைக்காரர்களை உண்டாக்குகிறது?

அந்தக் கிழவன்...

ஒரு நீண்ட பெருமூச்சு விடுவதைப் போல இருந்தது. இல்லை. அவனுடைய இதயம் எழுந்து கொண்டிருந்தது. அடுப்புக்கு அருகில் இருந்த ஒரு உருவத்திடம் அவன் கேட்டான்:

"பிள்ளைகள் இவ்வளவு நேரம் ஆகியும் ஏண்டி வரல?"

அந்த உருவம் சொன்னது:

"அவங்க வருவாங்க அப்பா."

"சாயங்காலத்துக்கு முன்னாடியே கிடைச்சதை வச்சிக்கிட்டு வரவேண்டியதுதானே! அது போதும்னு நினைக்கணும்."

அதற்கு அந்தப் பெண் பதில் எதுவும் சொல்லவில்லை.

கிழவன் தொடர்ந்து கேட்டான்:

"ஒரு கூரை வீடு கூட இல்லாம, இந்தப் புளிய மரத்துக்குக் கீழேதானே வந்து கிடக்கிறோம்! பட்டினி கிடந்தாலும் நேரம், காலம் பார்த்து கொஞ்சம் முன்னாடியே வந்து சேருவோம்னு இருக்க வேண்டாமா?"

அதற்கும் அந்தப் பெண் எந்த பதிலும் கூறவில்லை. பானையில் அரிசியைப் போட்டுவிட்டு, அவள் நெருப்பை ஊதி எரிய வைத்தாள். கிழவன் தொடர்ந்து பல விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருந்தான். காலையில் அங்கிருந்து கிளம்பிச் சென்ற தன் பிள்ளைகளைப் பற்றி அவன் மிகவும் கவலைப்பட்டான். ஆனால், அந்தப் பெண்ணுக்கு அந்த அளவிற்கு பதைபதைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. கிழவன் அன்றும் ஆயிரமாவது முறை தன்னுடைய சரித்திரத்தைத் திரும்பவும் கூறினான்:

"நான் வேலை செய்தவன். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டுல குடும்பத்தோடு வாழ்ந்தவன். என்னால இதையெல்லாம் பார்க்கவே முடியல. நான் இதையெல்லாம் பார்க்கணும்னு அந்த பெரிய துரோகி எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருக்கான்."

அந்தப் பெண் அப்போது சொன்னாள்:

"அப்பா, நீங்க எப்பவும் இதையேதான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. எதுக்கு இதைச் சொல்லணும்? அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சுத்தான் ஆகணும்."

"நீ சொல்றது உண்மைதான் மகளே. பிச்சை எடுத்துக் கொண்டு வந்ததைத் தின்னு சாகணும்ன்றது விதி. அனுபவிச்சுத்தான் ஆகணும். நான் வேற எந்த இடத்திலும் கையை நனைச்சவன் இல்ல. இன்னொருத்தன்கிட்ட சாதாரணமா ஒரு பாக்குகூட கேட்டவன் இல்ல. வேலை செய்து வாழ்ந்தவன் நான்."

கிழவன் தன்னுடைய பத்து வயதிலிருந்து உள்ள வரலாற்றை விளக்கமாகக் கூறினான். கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறு விவசாயியின் போராட்ட வாழ்க்கை. அவன் கஷ்டப்பட்டு உழைத்தது நகரத்திலிருக்கும் புளியமரத்திற்குக் கீழே பிள்ளைகள் பிச்சை எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பதைக் கொண்டு தன் இறுதிக்காலத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. அவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. தோல்வியடைந்த ஒரு திட்டம்! எல்லாமே தகர்ந்து போய்விட்டன. அந்த வரலாற்றை அவன் இப்படிக் கூறி முடித்தான்.

"நான் கஷ்டப்பட்டதெல்லாம் எங்கு போனது? யார் கொண்டு போனார்கள்? ஒவ்வொரு நாளும் இரண்டு ஆளுங்க செய்ய வேண்டிய வேலையை நான் ஒருவனே செய்தேன். எனக்கு மிச்சம்னு எதுவுமே நிக்கல. அப்படின்னா மனிதனோட வேலைக்கு ஒரு பயனும் இல்லைன்னு அர்த்தமா?"

கரண்டியில் பானையில் கொதித்துக் கொண்டிருந்த பருக்கைகளில் கொஞ்சத்தை எடுத்து வெந்துவிட்டதா என்று பார்த்தவாறு அந்தப் பெண் சொன்னாள்:

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. அந்த நிலத்தைப் பாருங்க. அங்கே தங்கமே விளைஞ்சிக்கிட்டு இருக்கு. மனிதனின் உழைப்புக்கு மதிப்பு இல்லைன்னு யார் சொன்னது?"

"ஆமாம்... ஆமாம்... ஆனால், எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லாமப் போச்சு."

"ம்... அதை அந்த ஆளு ஏமாற்றிப் பிடுங்கிக்கிட்டாரு."

"ஆமாம் மகளே! நான் வேலை செய்ததெல்லாம் உங்களுக்காகத்தான் ஒரு கூரைக்குக் கீழே கிடந்து சாகணும்ன்றதுக்காகத்தான். ஆனால்... ஆனால்... என் பிள்ளைகளுக்கு என்மீது கோபம் உண்டாகுதா?"

"அப்பா, என்ன கேள்வி கேக்குறீங்க?"

"என் பிள்ளைகளுக்கு என் மேல கோபம் வருதா? நான் இப்படியெல்லாம் ஆகும்னு நினைக்கல."

கிழவனின் இதயம் சுக்கு நூறாக நொறுங்கியது. அவன் கெஞ்சுகிற குரலில் மன்னிப்புக் கேட்டான். என்ன தவறு செய்துவிட்டோம் என்று நினைத்து அதைக் கூறினானோ? திரும்பவும் அவன் சொன்னான்-

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel