Lekha Books

A+ A A-

பிச்சைக்காரர்கள் - Page 24

Pichaikkarargal

கேசுவிற்கு முன்னால் ஒரு கேள்வி எழுந்து நின்றது. அந்தப் பணக்காரன் அநியாயமாக ஏமாற்றி சேர்த்து வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பணத்தை என்ன காரணத்திற்காக இந்த விடுதலைப் போராட்டத்திற்குத் தரக்கூடாது? அவன் திருடியது தன்னுடைய சொந்தத் தேவைக்காக அல்ல. வர்க்க உணர்வு இல்லையென்றால், அந்தச் செயலை அவனைச் செய்யும்படி தூண்டியது வேறு என்ன? கேசுவிற்குப் புரியவில்லை. தலைவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்க வேண்டும்.

கெஞ்சுவதுதான் அவனுடைய குணமாக இருந்தது. அந்த வாழ்க்கைப் போராட்டத்திற்கு இடையில் அவன் தனியார் சொத்துடைமையை வெறுத்தான். அந்த வெறுப்பிலிருந்து உருவான திருட வேண்டும் என்ற எண்ணம் ஒருவேளை தவறானதாக இருக்கலாம். தன்னுடைய திருட்டு மீது கொண்டிருக்கும் ஆசை ஒரு குற்றமான விஷயமாக இருக்கலாம்.

இந்த விடுதலைப் போராட்டத்தில் தான் செய்ய வேண்டிய பங்கு என்ன? கேசுவிற்கு அது புரியவில்லை. அவனால் என்ன செய்ய முடியும்? இந்தப் பேராட்டத்திற்காக உயிரை விடுவதா? பிறகு அவனுடைய மருமகனுக்கு யார் இருக்கிறார்கள்? அது மட்டுமல்ல- எதற்காக இறக்க வேண்டும்?

சங்கத்தின் தலைமையில் நடந்த அந்த ஊர்வலம் போய்க் கொண்டிருப்பதன் ஆரவாரம் தூரத்தில் கேட்டது. வரலாறு படைக்கும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி அது! பிச்சைக்காரர்கள் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் முயற்சிக்கு முன்னோடியாக வைக்கப்படும் கால் வைப்பு அது!

அந்தச் சிறிய குடிசையில் வெளியேற்றப்பட்ட ஒரு போர் வீரனைப் போல கேசு உட்கார்ந்திருந்தான். அந்தக் குழந்தை அவனுடைய மடியில் படுததுக் கொண்டு ஒரு ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கேள்விகளுக்கு பதில் கூற கேசுவால் முடியவில்லை. கேள்விகள் தொடர்ந்து கொண்டிருந்தன. என்ன தொல்லை அது! தன்னைப் பிணித்திருந்த ஒரு சங்கிலியைப் போல அவன் அந்தக் குழந்தையை தன்னிடமிருந்து அகற்றினான். அது தூரத்தில் போய் விழுந்தது.

மிகவும் பரிதாபமாக அது சத்தம் போட்டு அழுதது. கேசு அதிர்ந்து போய் விட்டான். அன்றுதான் முதல் தடவையாக அவன் தன்னுடைய மருமகனை அழ வைக்கிறான். அந்த அழுகையில் முன்பு எங்கோ கேட்டிருக்கும் பல சத்தங்கள் கலந்திருப்பதாக அவன் உணர்ந்தான். பல வருடங்களுக்கு முன்னாலிருந்த வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிய நினைவுகளில் அவன் மூழ்கிவிட்டான். அந்தக் குழந்தையின் அழுகையில் தன்னுடைய தாத்தா, பாட்டி, சகோதரி ஆகியோரின் சத்தங்களையும் அவன் கேட்டான். அந்தக் குழந்தை அவனுடைய ரத்தமும் சதையுமா என்ன?

தூரத்தில் போய் விழுந்த குழந்தை மீண்டும் அவனை நெருங்கி வந்தது. பிறகு அது எங்கே போகும்?

தேம்பித் தேம்பி அழுதவாறு கேசு அந்தக் குழந்தையை தன் மார்போடு சேர்த்து வைத்து அணைத்துக் கொண்டான்.

அந்த ஊர்வலம் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தில் சுவடு தவறாமல் அவனால் நடக்க முடியாது. அவன் வழிவிட்டு ஒதுங்கிவிடுவான். என்ன இருந்தாலும் அவன் பிச்சைக்காரன்தானே! யாசித்து வாழ்ந்தவன் தானே!

அந்தப் போராட்டத்தின் முன் வரிசையில் சிவப்பு நிறக் கொடியைப் பிடித்து அவனால் போக முடிவது எப்போது?

குழந்தை கண்ணீருக்கு மத்தியில் கேட்டது:

"மாமா, என்னை விட்டுட்டுப் போயிடுவீங்களா?"

கேசு அதற்குப் பதில் சொல்லவில்லை. தொடர்ந்து கேள்வி கேட்க அந்தக் குழந்தைக்கு தைரியமும் இல்லை; அது பயந்தது. 

"இந்தக் குழந்தையை வாங்க யாரும் இல்லையா?"

இதைத்தான் கேசு சிந்தித்தான். தன் சகோதரியின் உருவம் அவனுடைய மனக் கண்களுக்கு முன்னால் வந்து நின்றது.

"யாரும் இல்லையா?"

தன்னையே அறியாமல் அவன் உரத்த குரலில் கேட்டான்.

அந்த ஊர்வலம் அவனுடைய வீட்டுப் படியைத் தாண்டிச் சென்றது.

'இனியும் அந்த ஊர்வலம் வராதா?'

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel