
"இல்லீங்க சார். ரத்தம் நிறைய வருது. ஆஸ்பத்திரிக்குப் போய் ஒரு டி.டி. போட்டுடலாங்க சார்..." என்று கூறியபடியே சுற்றும், முற்றும் பார்த்தான். சற்று எதிர்ப்புறமாக 'நலம் மருத்துவனை எனும் போர்டைத் தாங்கியபடி இருந்த கட்டிடத்தைப் பார்த்தான்.
"இதோ பக்கத்துலயே பெரிய ஆஸ்பத்திரி இருக்குங்க ஐயா. வாங்கய்யா போகலாம்." என்றவன் அவரை காரில் உட்கார வைத்து நலம் மருத்துவமனைக்குள் காரை செலுத்தினான். மருத்துவமனையின் பக்கத்தில் வந்த பிறகே அந்தக் கட்டிடத்தையும், அதன் பெயரையும் நன்றாகப் கவனித்தார் கோபால்.
"இது... இது... அர்ஜுன் பிறந்த நர்ஸிங்ஹோம் ஆச்சே... முன்ன சின்னதா இருந்துச்சு. இப்ப இவ்வளவு பெரிசா இருக்கே..." நினைத்தபடியே காரை விட்டு இறங்கினார் கோபால்.
அவசர சிகிச்சைப் பிரிவு டாக்டர் வந்து கோபாலுக்கு டி.டி. ஊசி போட்டார். நர்ஸ் மேரி வந்து, அவரது காயங்களைத் துடைத்து மருந்து போட்டு, கட்டு போட்டு விட்டார்.
'சற்று காற்று வாங்கலாம்’ என்று தளர் நடையுடன் வெராண்டாவை நோக்கி வந்துக் கொண்டிருந்த நர்ஸ் ரேச்சலை தற்செயலாய் பார்த்தார் கோபால். ரேச்சலின் நடு நெற்றியிலிருந்த ஆழமான வடு, அவருக்கு அவளை மிகத் தெளிவாக நினைவுபடுத்தியது.
"சிஸ்டர்..." ரேச்சலைக் கூப்பிட்டார்.
"நீங்க... நீங்க.. ரேச்சல் சிஸ்டர்தானே? என்னை ஞாபகமிருக்கா சிஸ்டர்...?"
கூர்ந்து கவனித்த ரேச்சலுக்கு அவரைப் புரிந்து விட்டது.
நெஞ்சிற்குள் இனம் புரியாத உணர்வு! 'இயேசுவே... இயேசுவே’ அவளது மனம் பதறியது. உதடுகள் இயேசுவை அழைத்தன.
"நீங்க... நீங்க.. உங்க.. மனைவியோட பிரசவம் இங்கேதானே நடந்துச்சு? அவங்க பேர் பிரபா... சரிதானே?"
"ஆமா சிஸ்டர். பிரபாவோட ஹஸ்பண்ட் கோபால்தான் நான். நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே..."
"உங்களோட அன்பான, பண்பான பேச்சையும், செயலையும் மறக்க முடியுமாங்க..."
"அது சரி, நீங்க ஏன் இவ்வளவு களைப்பா இருக்கீங்க? உடம்புக்கு என்ன?"
"ரத்தப் புற்று நோய். அது இருக்கட்டும். நீங்க சொல்லுங்க. உங்க மனைவி பிரபா, குழந்தையெல்லாம் நல்லா இருக்காங்களா...?"
"குழந்தை அர்ஜுன் நல்லா இருக்கான். பிரபாதான் சீக்கிரமாகவே இறந்துப் போயிட்டா..."
"என்ன, பிரபா இறந்துடுச்சா...?" ரேச்சல் இந்த செய்தியை எதிர் பார்க்கவில்லை. சோகத்துடன் சில நிமிடங்கள் மௌனம் காத்தாள்.
மௌனத்திலிருந்து விடுபட்ட ரேச்சல், நெற்றியிலிருந்த வடுவைத் தடவியபடியே கோபாலைப் பார்த்தாள்.
"தம்பி... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..."
"முதல்ல நீங்க உட்காருங்க."
இவர்கள் பேசியதிலிருந்து அவர்தான், ரேச்சல் சந்திக்கத் துடித்துக் கொண்டிருந்த நபர் என்று புரிந்துக் கொண்ட மேரி மகிழ்ந்தாள். கூடவே பயந்தாள். அன்று நடந்த உண்மையை இன்று தெரிந்து கொண்டபின் கோபால் என்ன சொல்வாரோ என்று யோசித்தபடியே ரேச்சலுக்கு நாற்காலி எடுத்துப் போட்டு உட்கார வைத்தாள்.
உடன் நின்றிருந்த டிரைவர் சேகரை வெளியே காத்திருக்கும்படி பணித்தார் கோபால்.
குரல் தழுதழுக்க, இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை விவரித்தார் ரேச்சல்.
முழுவதையும் கேட்ட கோபாலுக்கு அந்த விஷயங்கள் யாவும் அதிர்ச்சியை அளித்தன.
'என் மகன் அர்ஜுன் என்னோட மகன் இல்லியா? வேற யாரோ ஒரு தந்தைக்கும், தாய்க்கும் பிறந்தவனா என் மகன்? அப்போ... அவனோட பிறப்புக்குக் காரணமான தகப்பன் எப்படிப்பட்டவன்? பெற்றுப் போட்ட தாய் எப்படிப்பட்டவள்?... மூணு வருஷம், தன்னோட சொந்தக் குழந்தையா நினைச்சு வளர்த்த பிரபா நிம்மதியா போய் சேர்ந்துட்டா. இருபது வருஷம் பார்த்து பார்த்து வளர்த்த நான் அவனைப் பத்தின உண்மை தெரிஞ்சு... ஏதேதோ நினைக்கத் தோணுதே... இவ்விதம் சிந்தித்துக் கொண்டிருந்த கோபாலின் மௌனத்தை ரேச்சல் கலைத்தாள்.
"என்னை மன்னிச்சுடுங்க தம்பி. இயேசுவிடம் மன்றாடி கேட்டு பிரார்த்தனை பண்ணி இருக்கேன். நன்மைகளை மட்டுமே நடத்தச் சொல்லி நான் பண்ற பிரார்த்தனை வீண் போகாது தம்பி..." உடையின் வண்ணத்தில் மட்டும் வெள்ளை அல்லாமல் உள்ளத்தின் உணர்விலும் வெள்ளையாக, களங்கமில்லாமல் பேசும் ரேச்சல் சிஸ்டரின் வார்த்தைகள் அவரது மனதைத் தொட்டன.
மரணத்தின் மடியில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் ரேச்சலின் கண்களில் தென்பட்ட கருணை அவரது மனதை பாதித்தது. ரேச்சல் தொடர்ந்தார்.
"தம்பி, குழந்தை இல்லாத எத்தனையோ தம்பதிகள் தத்து எடுத்து வளர்க்கறாங்க. உங்களுக்கு குழந்தை பாக்யம் இருந்தும் கூட அந்தக் குழந்தைக்கு நீங்க பெத்தவரா இருந்து வளர்க்கற பாக்யம் கிடைக்கல. கண்ணை மூடிடுச்சு. யாரோ பெத்த குழந்தையை உங்க குழந்தைங்கற உணர்வுலயே இருபத்து நாலு வருஷமா வளர்த்துக்கிட்டிருக்கீங்க. இப்ப திடீர்னு அது உங்க குழந்தை இல்லைன்னு சொன்னதும் அதிர்ச்சியாயிட்டீங்க. இது சாதாரண மனித இயல்பு. ஆனா... உங்க பிள்ளையாவே வளர்ந்துட்ட அந்தக் குழந்தையை வெறுத்துடாதீங்க தம்பி. வெறுத்துடாதீங்க. நான் செஞ்ச தப்புக்கு அந்த அறியா ஜீவனுக்குத் தண்டனை குடுத்துடாதீங்க தம்பி. இந்த உண்மையை சொல்றதுக்காகத்தான் ஆண்டவர் என்னை இத்தனை நாள் உயிரோட வச்சிருக்கார்.... பிறப்பு எங்கே இருந்தாலும் யாரால இருந்தாலும் நம்மளோட வளர்ப்புதான் தம்பி பிள்ளைகளோட குணநலனையும், நடத்தையையும் மேன்மைப்படுத்தும். நீங்க நல்லவர். பண்பானவர். நிச்சயமா நீங்க வளர்த்த அந்தப் பையன் நேர்மையானவனா, நல்ல குணமுள்ளவனாத்தான் இருப்பான்..."
ரேச்சலின் வார்த்தைகளிலிருந்த உண்மைகள், கோபாலின் புலன்களுக்கு தெளிவை அளித்தன.
'என் அர்ஜுன்? பணக்கார சூழ்நிலையில வளர்ந்தும் அடக்கமானவனா இருக்கான். அப்பாங்கற சொல்லுக்கு மறு சொல் சொல்லாத பிள்ளையா இருக்கான். அவனுக்காக மறு கல்யாணம் கூட பண்ணிக்காம அவனை உயிருக்குயிரா கவனிச்சு வளர்த்த பலனுக்கு அவன் ஒழுக்கமானவனா இருக்கான். அவன்கிட்ட என்ன குறை? என்னை ஒரு தோழனா நினைச்சு எல்லா விஷயத்தையும் சொல்றான். எந்த ஒளிவும், மறைவும் இல்லாம பண்போட வளர்ந்திருக்கான் அர்ஜுன். அவன் யாருக்கு பிறந்திருந்தாலென்ன? யாரோட வயித்துல உருவானவனா இருந்தா என்ன? அவன் நான் வளர்த்த வளர்ப்புக்குக் கொஞ்சமும் குறைவு வைக்காம நல்ல பையனா, புத்திசாலியா, பண்பாடு நிறைஞ்சவனா வளர்ந்து நிக்கறான். அது போதும். அவன் யாரா இருந்தாலும் என் மகன். என் மகன்தான்..’பிரபா இறந்த பிறகு, அர்ஜுனை, தான் வளர்த்தது பற்றியும், அவன் வளர்ந்த விதம் பற்றியும் நினைத்துப் பார்த்துத் தெளிவு அடைந்தார்.
'இந்தத் தெளிவிற்காகத்தான் என்னை தெய்வம் இங்கே வரவழைத்ததா? காரிலிருந்து என்னை விழ வைத்ததா? ரேச்சல் சிஸ்டர் சொன்னது போல எல்லாமே நன்மைக்குத்தானா...’ கோபாலின் முக பாவத்தில் பரிதவித்த உணர்வைப் புரிந்துக் கொண்ட ரேச்சல் சிரித்தார் மலர்ச்சியாய்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook