
ஆனா நான் என்னோட அப்பா மேல வச்சிருக்கற அன்பை மாதிரி வேற யாருமே வச்சிருக்க மாட்டாங்க. எங்க அம்மா என்னை விட்டு இறந்து போனப்பிறகு, அவரோட சொந்த சுகங்களுக்காக இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்காம என்னை உயிருக்குயிரா நேசிச்சு வளர்த்தவர் எங்கப்பா..."
"அப்பாடா... அப்பா புராணம் ஆரம்பிச்சாச்சா? இந்த கதையெல்லாம் நீங்க சொல்லிதான் எனக்கு தெரியணுமா? இப்ப எதுக்காக போன் பண்ணீங்க. முதல்ல அதைச் சொல்லுங்க."
"நீ உன் ஃப்ரெண்டு ரங்கநாயகியோட ஊருக்குப் போறதா அத்தை சொன்னாங்க..."
"செய்தி ஒலிபரப்பாயிடுச்சா? ரங்கநாயகிக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு. அமெரிக்க மாப்பிள்ளை. கல்யாணம் ஆன மூணாவது வாரத்துல அமெரிக்காவுக்கு பறந்துடுவா... அதனால அவ கூட போயி ஒரு நாலு நாள் இருந்துட்டு வரலாம்னு கிளம்பியிருக்கேன்."
"ரங்க நாயகியை நான் ரொம்ப கேட்டதா சொல்லு."
"அதெல்லாம் சரி. மாமா உங்களை அமெரிக்காவுக்குப் போய் ட்ரெய்னிங் எடுத்துட்டு வரச் சொன்னாராமே!"
"ஆமா கவி. உன்னைப் பிரிஞ்சிருக்கணுமேன்னு நினைச்சா போகவே பிடிக்கலை."
"சீச்சி... அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. மாமா சொல்றதைக் கேட்டு, புறப்படற வழியைப் பாருங்க."
"புறப்படறதுக்கு ஏற்பாடெல்லாம் நடந்துக்கிட்டுதான் இருக்கு. உன்னை மிஸ் பண்றது மட்டும்தான் யோசனையா இருக்கு."
"யோசிக்கவே வேண்டாம். உங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணும், அவரோட பிஸினஸ்ஸை நீங்க செஞ்சு அவரை மாதிரியே திறமைசாலியா வரணும்னுதானே மாமா எல்லா ஏற்பாடும் செய்யறார்.. அவரும் இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருப்பார்? ஓய்வு வேண்டாமா?"
"சரிம்மா தாயே. உன் புத்திமதிக்கு ரொம்ப நன்றி. ஹாவ் எ நைஸ் ட்ரிப்."
"அர்ஜுன், உங்க கிட்ட மட்டும் ஒரு விஷயம் சொல்லணும். நீங்கதான் என்னைப் புரிஞ்சிக்கிட்டு, என்னைத் தடுக்காம இருப்பீங்க. அதனாலதான் சொல்றேன். நான், ரங்கநாயகியை பார்க்கறதுக்காக மட்டும் அவ ஊருக்குப் போகலை. என்னோட பிறப்புக்குக் காரணமான என்னோட அப்பா, அவ ஊருக்குப் பக்கத்துல இருக்கற ஊர்லதான் இருக்காராம். அவரைப் போய் பார்க்கணுங்கறதுக்காகவும்தான் இந்த ட்ரிப்...."
"நீ அங்கே போய் அவரைப் பார்க்கறது சரிதானா கவிதா? நல்லா யோசிச்சியா? அவங்க குடும்பத்துல உன்னால குழப்பம் வந்துடக்கூடாது..."
"அப்படியெல்லாம் என்னால அங்கே எந்த பிரச்னையும் ஏற்படாது. என்னை யார்னு அடையாளம் காட்டிக்காமலே என்னோட அப்பாவை நான் பார்த்துட்டு வரணும். ஒரு தடவை, சும்மா பார்க்கணும். அவ்வளவுதான். மத்தபடி உரிமை கொண்டாடியோ, பழங்குப்பையைக் கிளறவோ நான் அங்கே போகலை..."
"கவனம் கவிதா. ஏற்கெனவே உன் மனசுல ஒரு பூகம்பம் உருவாகி, அடங்கி இருக்கு. மறுபடியும் புதுசா எந்த சிக்கல்லயும் நீ மாட்டிக்காத, அந்தக் குடும்பத்தினர்க்கும் சிக்கலை உண்டாக்கிடாத. உன்னை எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன். ஜாக்கிரதையா போயிட்டு வா. நீ வர்றதுக்குள்ள நானும் அமெரிக்காவுக்கு கிளம்பிடுவேன். டேக் கேர்."
"ஓ.கே. அர்ஜுன் தேங்க் யூ." ரிஸீவரை வைத்து விட்டு மீண்டும் பெட்டியில் துணிகளை அடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள் கவிதா.
'நலம்’ மருத்துவமனையின் கட்டிடம் நவீன கட்டட அமைப்பில் கம்பீரமாகக் காணப்பட்டது. அனைத்து மருத்துவ வசதிகளையும், மருத்துவப் பரிசோதனை சாதனங்களும் அமையப் பெற்றிருந்தது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு மிகச் சிறியதாகவும், எளிமையாகவும் ஆரம்பிக்கப்பட்ட அந்த மருத்துவமனை, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, தற்போது மிக உயர்தரமான மருத்துவமனை எனும் பெயரையும், புகழையும் பெற்றுத் திகழ்ந்தது.
பொது வார்டில் இருந்த கட்டிலில் மிக மெல்லிய தேகத்துடன், ஒளி மங்கிய கண்களுடன் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் ரேச்சல். அவளது கை விரல்கள் அவளது நெற்றியின் நடுவே இருந்த ஆழமான பெரிய தழும்பைத் தடவிக் கொண்டிருந்தது. சிறிய வயதில், கீழே விழுந்து கல்குத்தியதால் ஏற்பட்ட காயத்தின் தழும்பை அடிக்கடி விரல்களால் தடவுவது அவளது வழக்கமாகிப் போனது.
ரேச்சல், 'நலம்’ மருத்துவமனையின் முன்னாள் தலைமை நர்ஸ். ஆரம்ப காலத்திலிருந்தே அந்த மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து, மருத்துவமனையின் முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைத்தவள்.
மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் செங்குட்டுவன், ரேச்சலின் உண்மையான உழைப்பைப் பார்த்து அவள் மீது அதிக மதிப்பும், அக்கறையும் கொண்டார். எனவே அவளது திருமணம், குழந்தைகளின் படிப்பு போன்ற குடும்பப் பொறுப்புகளுக்கு உதவி செய்து வந்தார். கணவன், குழந்தைகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள் ரேச்சல். வயது முதிர்ந்ததும் எந்த நோயும் தாக்கப்படாமல் திடீரென உயிரை விட்டார் அவளது கணவர். கஷ்டப்படாத அமைதியான மரணம் அடைந்த கணவனின் மறைவு தந்த துன்பத்தைத் தன் சேவைகளில் ஓரளவு மறந்தாள். அவளது மகன்கள் இருவரும் உயர்கல்வி கற்று வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டனர்.
அங்கே சென்று பெருவாரியாக சம்பாதித்த பிறகு ரேச்சலை தங்களுடன் வெளிநாட்டிற்கு வந்துவிடும்படி அவர்கள் அழைத்தும் மருத்துவமனையை விட்டு நிரந்தரமாக போவதில் உடன்பாடு இல்லாத ரேச்சல், மகன்களின் ஆசையை மதித்து ஒரு முறை அவர்கள் இருக்கும் வெளிநாடுகளுக்கு சென்று வந்தாள். வெளிநாடுகளில் அவளது மனம் எதிலும் லயிக்கவில்லை. மருத்துவமனையும், அதன் சேவையுமே தன் வாழ்வாக உணர்ந்த ரேச்சல், இந்தியாவில்தான் மன நிறைவைப் பெற்றாள்.
வயோதிகம் அவளுக்கு உடல் தளர்ச்சியை அளித்தது. அவளது ரத்தத்தில் ஏதோ குறைபாடு கண்டனர் மருத்துவர்கள். பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின் அவர்கள் கண்டறிந்த கசப்பான உண்மை, ரேச்சலுக்கு ரத்தப்புற்று நோய் என்பதாகும்.
டாக்டர் செங்குட்டுவனும் வயதின் முதிர்ச்சி காரணமாக ஓய்வு பெற்று வீட்டிலிருந்த போதும், அவரது மகன் டாக்டர் இளங்கோ மூலமாக ரேச்சலுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகளை செய்து வந்தார்.
நல்லபடியாக, உடல்நலமுடன் இருந்து, மருத்துவமனை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் உயிர் பிரிந்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும், பிரார்த்தனையிலும் இருந்த ரேச்சல், தன்நிலை அறிந்து மனம் துவண்டாள். கவலை கொண்டாள்.
அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மேரி, ரேச்சலின் அருகே வந்தாள். ரேச்சலின் கைகளைப் பிடித்தாள்.
"என்ன ரேச்சல் அக்கா, சாப்பிட்டீங்களா இல்லியா? இந்த ஆஸ்பத்திரிக்கு நோய் நொடியோட வர்ற அத்தனை பேருக்கும் தைர்யம் சொல்லி, அதனால அவங்க சீக்கிரமா குணமாகி, சந்தோஷமா வீட்டுக்குத் திரும்பிப் போயிட்டிருக்காங்க. நீங்க என்னடான்னா இப்பிடி சோர்ந்து போய், எப்பவும் கவலையாவே இருக்கீங்க?..."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook