
"ஐயா, ரேச்சல் அக்கா தன் மனசுக்குள்ள போட்டு சங்கடப்பட்டுக்கிட்டிருந்த கஷ்டத்தில இருந்து அவங்களுக்கு விடுதலை கிடைச்சிடுச்சு. ரொம்ப நன்றிங்க ஐயா." மேரி, கோபாலிடம் பணிவன்புடன் தன் நன்றியைத் தெரிவித்தாள்.
"தம்பி, உங்க பையன் அர்ஜுனுக்கு இருபத்திநாலு வயசாயிருக்கும்ல? கல்யாணம் பண்ணனும்னு ஏதாவது ஏற்பாடா? அல்லது இன்னும் நல்லா படிக்க வைக்கப் போறீங்களா?..." ரேச்சல் சிஸ்டர் கேட்ட கேள்வி, கோபாலின் தலையில் யாரோ அடித்தது போலிருந்தது.
'கல்யாணம்…?’கவிதாவை அர்ஜுனுக்கு மணமுடிப்பதென்று முடிவு செய்தது, கௌரி மதினி, கவிதா முறை தவறி பிறந்தவள் என்று தன் மனதைக் கலைத்தது, அதன் காரணமாக இரவுகளில் தூங்காமல் தவித்தது, அதன்பின் கவிதா மனநிலை பாதிப்புக்குள்ளாகியது, மனநலம் சரியாகும் தருணத்தில், அவள் கர்ப்பம் தரித்திருப்பதாக டாக்டர் கூறியது யாவும் அவர் உள்ளத்தில் மாறி மாறி தோன்றியது.
ரேச்சலிடம் தன் தங்கை விஜயாவின் குடும்பத்தில், கவிதாவுக்கு ஏற்பட்ட அவலங்கள் அனைத்தையும் கூறினார்.
"இயேசுவே..." நெஞ்சில் கை வைத்தபடி பதறினார் ரேச்சல்.
"இது விஷயமா வெளிநாட்டில இருந்து வந்து உங்க மகன் அர்ஜுன் என்ன சொல்றானோ, அவன் என்ன முடிவு எடுக்கறானோ அதுவே உங்க முடிவா இருக்கணும்ங்கறது என்னோட ஆசை தம்பி. இதுக்கு மேல நான் உங்களை வற்புறுத்தக் கூடாது..."
"நீங்க சொல்றதுதான் சரி ரேச்சல் சிஸ்டர். இந்த விஷயத்துல அர்ஜுனோட முடிவும்தான் என்னோட முடிவா இருக்கும்."
"ரொம்ப நன்றி தம்பி."
மேரியிடமும், ரேச்சலிடமும் விடை பெற்றுப் புறப்பட்டார் கோபால்.
"அம்மா... அம்மா..." பூஜையறையில் கடவுளிடம் மனம் ஒன்றியிருந்த விஜயாவிற்கு உடம்பு புல்லரித்தது. 'கவிதாவின் பழைய பாசமான குரல்! என் கவிதாவின் இனிமையான குரல்! ஓடினாள்.
"கவிதா.. என் கண்ணே.." உச்சி முகர்ந்து முத்தமிட்டாள். மனநல மருத்துவத்தில் நிபுணரான டாக்டர் மாதவனின் திறமையாலோ, விஜயாவின் இடைவிடாத பிரார்த்தனையோ அல்லது அனைத்தும் இணைந்தோ, குழந்தை பிறப்பதற்கு டாக்டர் குறித்த தவணைக்கு இரண்டு நாள் முன்னதாக கவிதாவிற்கு மனநிலை பாதிப்பு நீங்கி, முற்றிலும் குணமாகியது.
சிங்காரம்பிள்ளையும், விஜயாவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரித்தனர். தன்னை உணர்ந்தாள் கவிதா. தன் நிலை அறிந்தபோது? அவளது இதயத்தில் பலநூறு பட்டாம்பூச்சிகள் படபடத்தன.
'ரங்கநாயகியின் கிராமம்... ஸ்டேஷன்... இருட்டு... மழை... தனிமை... அடர்ந்த வயல் வெளி.... முகம் தெரியாத உருவம்... அதன் தொடர்ச்சியான பயம்.. மயக்கம்...’ அனைத்தும் நிழல் படமாய் விரிந்து, நடந்து முடிந்த நிஜங்களை உணர்த்தியது. நிஜத்தின் சாட்சியாய் உப்பிய வயிறு....’
"ஐயோ... அம்மா...." வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தினாள். விஜயா பதறினாள்.
"அழாதம்மா. உன்னோட இந்த நிலைமைக்குக் காரணம் யாரு?" விஜயாவின் மடி மீது படுத்து, கதறி அழுதபடி கிராமத்தில் தனக்கு நேரிட்ட அவலத்தைக் கூறி முடித்தாள்.
"தனியா போகாதேன்னு நீங்க சொன்னதைக் கேக்காம விட்டுட்டேனே... என் கதி இப்படி ஆயிடுச்சே அம்மா..."
கவிதாவை அணைத்து ஆறுதல் கூறியபடியே தானும் அழுதாள் விஜயா.
சர்ச் காம்பவுண்டிற்குள் காரை நிறுத்திய சிங்காரம்பிள்ளை, மதர் சுப்பீரியரின் அலுவலக அறைக்குச் சென்றார்.
"மதர்... அடி மேல அடியா... இடி மேல இடியா... எங்க கவிதாவின் நிலைமையைப் பார்த்தீங்களா? அமைதியான நதியா ஓடிக்கிட்டிருந்த எங்க குடும்ப நிம்மதி அப்படியே மூழ்கிப் போயிடும் போலிருக்கே மதர்... நிர்க்கதியா நிக்கறோம் மதர்..." சிங்காரம்பிள்ளை கவிதாவிற்கு ஏற்பட்ட நிலைமை அனைத்தையும் கூறினார்.
"உங்க நிலைமை இப்படி ஆகியிருக்கவே கூடாது மிஸ்டர் சிங்காரம் பிள்ளை. எவ்வளவோ நல்ல மனசு கொண்ட நீங்க, ஏழை எளியவங்களுக்கு உதவி செய்யற நீங்க இப்படி வேதனைப்படறதைப் பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு. கர்த்தரின் சோதனைன்னுதான் சொல்ல முடியும். வேற என்ன சொல்றது?..."
"எங்க வீட்ல கவிதாவோட சிரிப்பு சப்தம் கேக்கறதில்லை. மான் போல துள்ளி ஓடற அவளது துள்ளல் இல்லை. தனக்கு ஏற்பட்டிருக்கற இந்த கர்ப்ப நிலைமை அவளை சோகப்படுத்திக்கிட்டிருக்கு. குத்து விளக்கா இருந்த எங்க பொண்ணு கவிதா, ஒளி மங்கிப் போய் இருக்கா. முகம் அறியாத ஒருவனால ஏற்பட்ட கர்ப்பநிலை காரணமா வீட்டோட விட்டத்தை வெறிச்சுப் பார்த்தபடி படுத்தே இருக்கா. பழையபடி அவளோட மனநலம் பாதிச்சுடுமோன்னு கலக்கமா இருக்கு மதர்..."
"டாக்டர் மாதவனோட ட்ரீட்மெண்ட்லதானே கவிதா இருக்கா? சரியாடுச்சுன்னு ட்ரீட்மென்ட்டையோ அவரோட மருந்துகளையோ நிறுத்திடாதீங்க. கவனம்.."
"சரி மதர். நான் கிளம்பறேன்..."
"கர்த்தர் உங்களுக்கு மன ஆறுதல் குடுப்பார். அதுக்காக நான் பிரார்த்தனை பண்றேன். கவலைப்படாம கிளம்புங்க மிஸ்டர் சிங்காரம் பிள்ளை." மதர் சுப்பீரியரிடம் பேசியதில் சிங்காரம்பிள்ளைக்கு சற்று ஆறுதல் கிடைத்தது. காரில் ஏறப்போகும் சமயம் ஒரு சிறுவன் அவர் அருகே வந்தான்.
"ஐயா, உங்களை மதர் கூப்பிடறாங்க."
மறுபடியும் நடந்து மதர் சுப்பீரியரின் அலுவலக அறைக்குச் சென்றார் சிங்காரம்பிள்ளை.
"கவிதாவோட நிலைமை பற்றி மீரா கிட்ட சொன்னேன். இருபது வருஷமா எங்கேயும் வெளிய வராத மீரா, இப்ப கவிதாவை பார்க்கணும்னு சொல்றா. மறுபடி ஒருதடவை கவிதா தன்னை சந்திக்கவே கூடாதுன்னு நிபந்தனை விதிச்ச மீராவே இப்ப கவிதாவைப் பார்க்க விரும்பறா. ஏன், எதுக்குன்னு நான் கேட்கலை. இப்ப உங்க கூடவே கூட்டிட்டுப் போறீங்களா? நானும் கூட வரேன்."
"அதுக்கென்ன மதர். கூட்டிட்டுப் போறேன். நீங்களும் வாங்க மதர்." மீராவையும், மதர் சுப்பீரியரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார் சிங்காரம்பிள்ளை.
கட்டிலில் படுத்திருந்தாள் கவிதா. விஜயா கொண்டு வந்து கொடுத்திருந்த மதிய உணவு சாப்பிடாமல் வறண்டு போய் கிடக்க, அவளது கண்கள் மட்டும் வறண்டு போகாத நதியாய் கண்ணீரை உகுத்த வண்ணமிருந்தது.
"வரலாமா?" குரல் கேட்டது.
"வாங்க மதர், வா மீரா"
மீரா, கவிதாவின் அருகே சென்றாள்.
"இப்ப நீ வயித்துல சுமக்கற பாரம் உன்னோட பாவத்தின் சம்பளமா? இருமனம் கலந்து ஒருமித்த எங்க உறவுல பூத்த மலர் நீ. ஆனா நீ? முகமே தெரியாத எவனுடைய குழந்தையையோ சுமந்துக்கிட்டிருக்க. கன்னித்தாய்ன்னு சொல்லிக்க நீ என்ன மேரி மாதாவா? நெஞ்சுல என் குணாவையும், அவரோட அன்புச் சின்னமா உன்னை என் வயித்துலயும் சுமந்தப்ப நான் எத்தனை வேதனைப்பட்டிருப்பேன்?!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook