
லட்சுமி கவனமாகக் கேட்டாள்.
‘‘ம்....”- ஒரு தாங்க முடியாத முனகல்.
லட்சுமி எழுந்தாள். அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். வண்டியை நிறுத்தும் ‘ஷெட்’டுக்குப் பக்கத்தில் நிலவு வெளிச்சத்தில், ஒரு உருவம் இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தது. அவள் அதையே கூர்ந்து பார்த்தாள்.
‘‘ம்...”- அந்த உருவம் கையைச் சுருட்டிக் காற்றில் வீசியது.
அவள் கதவைத் திறந்து வெளியே வந்தாள். அவள் மெதுவாக நடந்தாள்.
‘‘யார் அது?” அவள் துணிச்சலை வரவழைத்துக் கேட்டாள்.
‘‘ம்....”
‘‘மாமா நீங்களா?”- அவள் அருகில் சென்றாள்: ‘‘மாமா நீங்க ஏன் இங்கே நிக்கிறீங்க? ஏன், தூங்கலையா?”
அவன் மவுனமாக நின்றிருந்தான். அவள் அவனுடைய கையைப் பிடித்தாள். ‘‘மாமா, நீங்க ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கறீங்க? அப்படியென்ன உங்களுக்குக் கவலை? என்கிட்ட இருந்து ஏன் விலகியே போறீங்க?”
‘‘குழந்தை...” - அந்த அழைப்பில் ஒரு பதைபதைப்பு இருந்தது. ‘‘குழந்தை... நானல்ல விலகுறது. நீங்கதான் விலகுறீங்க. நீயும் உன் தாயும்.”
‘‘நாங்க விலகல, மாமா. நாங்க விலகவும் மாட்டோம். எனக்கு மிகவும் நெருக்கமே மாமா, நீங்கதான்.”
‘‘இல்ல குழந்தை.... இல்ல. நீயும் உன் தாயும் என்கிட்ட இருந்து விலகிப் போயிட்டீங்க. நீங்க என் பிடியில இருந்து விலகிப் போயிட்டீங்க. நீங்க என் கண்கள்ல இருந்து மறைந்து போயிட்டீங்க...” அவன் முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதான்.
எத்தனையெத்தனை ஆண்மகன்கள், எத்தனையெத்தனை பலம் பொருந்திய வீரர்கள் தேம்பித் தேம்பி அழுதிருப்பார்கள்? அழாத மனிதன் பிறக்கவில்லை. அழாத மனிதன் மனிதனல்ல.
லட்சுமியும் தேம்பித் தேம்பி அழுதாள். அவள் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ‘‘என் மாமா, நீங்க என்னைக்கும் என் மாமாதான். யாரை விட்டு பிரிந்தாலும், மாமா, உங்களை விட்டு நான் பிரியமாட்டேன். நான் நன்றியுள்ளவள்.”
ஒரு மின்னல்! அவனுடைய அழுகை நின்றது. உடலிலிருந்த நடுக்கம் நின்றது. அவன் சிலையென நின்றான்! உணர்ச்சிவசப்பட்ட சில நிமிடங்கள்!
அவன் முகத்திலிருந்து கையை எடுத்தான். அவன் நிமிர்ந்து நின்றான். ‘‘நன்றி! நன்றி!” அந்தச் சத்தம் எங்கோ தூரத்தில் எதிரொலித்தது. ‘‘நன்றியை எதிர்பார்த்து இருக்குற நாய் இல்லை நான்.”
அவன் அவளுடைய பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பின்னோக்கி நகர்ந்து நின்றான். அந்த எலும்புக்கூடு மிகப்பெரிய மலையைப் போல கம்பீரமாக உயர்ந்து நின்றது. அந்த உயரமான மலைக்குக் கீழே ஒரு புழுவைப்போல அவள் நின்றிருந்தாள்.
‘‘ம்.... போ....” - அவன் கட்டளையிட்டான்.
அவள் தயங்கி நின்றாள்.
‘‘போ இங்கேயிருந்து....”
அவள் திரும்பினாள்.
‘‘போகச் சொன்னேன்ல...”
அவள் நடந்தாள்.
திருமண நாள். அதிகாலையில் கல்யாணி லட்சுமியை எழுப்பினாள்.
‘‘மாமா எங்கே?” என்று கேட்டவாறு அவள் பாதித் தூக்கத்திலிருந்து எழுந்தாள்.
‘‘அம்மா, மாமா எங்கே?” - அவள் மீண்டும் கேட்டாள்.
‘‘அங்கே படுத்திருக்காரு. எழுந்திரிக்கல...”
லட்சுமி வடக்குப் பக்கம் இருந்த அறைக்குச் சென்றாள். பப்பு கண்களை மூடி கால்களை நீட்டி எந்தவிதமான அசைவும் இல்லாமல் படுத்திருந்தான். அவன் உறங்கவில்லை. அவள் அவனுடைய கால் பக்கம் போய் நின்றாள். அழைப்பதற்கு அவளுக்கு தைரியம் இல்லை. அவள் மெதுவாக ஒருமுறை இருமினாள். அவன் கண்களைத் திறந்தான். முந்தைய நாள் இருந்த மிடுக்கு எதுவும் அப்போது அந்த முகத்தில் இல்லை. அதற்குப் பதிலாகச் சிந்தனை வயப்பட்ட ஒரு அமைதித் தன்மை அங்கு குடி கொண்டிருந்தது.
‘‘மாமா!” - அவள் அழைத்தாள்.
‘‘குழந்தை!” - அந்த அழைப்பில் பாசம் முழுமையாகக் கலந்திருந்தது. அவன் மெதுவாக எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான். ஒரு துறவியைப் போல அவன் புன்னகைத்தான். ‘‘குழந்தை, பக்கத்துல நில்லு....”
அவள் அருகில் நின்றாள்.
‘‘உனக்கு நல்லது நடக்கும்.” - அவன் அவளுடைய தலையைத் தொட்டு ஆசீர்வதித்தான்.
அவளுடைய தலை குனிந்தது. அவளுடைய கண்கள் அவன் பாதங்களை தொட்டன. அவள் அந்தப் பாதங்களைக் கண்ணீரால் கழுவினாள். அவன் அவளை எழுப்பினான். மீண்டும் தலையில் கை வைத்தவாறு அவன் சொன்னான்.
‘‘என் குழந்தைக்கு எப்போதும் நல்லது நடக்கும். குழந்தை, அம்மாவை எப்பவும் மறக்கக் கூடாது.”
அவள் என்னவோ சொல்ல முயன்றாள். எதையும் சொல்வதற்கான சக்தி அவளுக்கு இல்லாமல் போய்விட்டது.
அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்ட அவன் சொன்னான்: ‘‘சந்தோஷமா இருக்கணும். திருமணத்திற்குப் போறதுக்கு நேரமாயிடுச்சு. போயி குளிச்சிட்டு வா.”
அவள் குளித்து முடித்து ஆடைகளும் நகைகளும் அணிந்து பப்புவிற்கு அருகில் வந்தாள். அவன் அப்போது கட்டிலில் சப்பணமிட்டு அமர்ந்து கொண்டிருந்தான்.
‘‘குழந்தை இங்கே உட்காரு.”
அவள் கட்டிலில் உட்கார்ந்தாள்.
‘‘பாட்டுப் பாடு. அந்தப் பாட்டை இன்னொரு தடவை எனக்கு கேட்கணும் போல இருக்கு.”
அவள் பாடினாள். அந்தக் குடிசையில் கான தேவதை நடனமாடினாள்.
ஆனந்தக் கண்ணீர் விட்டவாறு அவன் மீண்டும் அவளுடைய தலையில் கையை வைத்து ஆசீர்வதித்தான்.
வெளியே காரின் ஹார்ன் சத்தம் ஒலி கேட்டது. மணப்பெண்ணை மணமகனின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக கார் வந்து நின்றது.
கல்யாணி குளித்து முடித்து புதிய ஆடைகள் அணிந்து தயாராக நின்றிருந்தாள். மகளை அழைத்துக் கொண்டு காரில் ஏறுவதில் அவள் பரபரப்பாக இருந்தாள்.
பப்பு எழுந்தான்: ‘‘குழந்தை, அம்மாவை அழைச்சிட்டுப் போ.”
‘‘மாமா...?” - அவள் சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்தினாள்.
‘‘நான் பின்னாடி வர்றேன்.”
‘‘மாமா, நீங்க இல்லாம....”- அவள் முழுமையாக முடிக்கவில்லை.
‘‘நான் இல்லாம? போ. நான் பின்னாடி வர்றேன்.” அந்த முடிவில் எந்த மாறுதலும் இருக்காது என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். எனினும், கெஞ்சுகிற மாதிரி அவள் அவனைப் பார்த்தாள்.
‘‘ம்... போ....”- அவன் கட்டளையிட்டான். தன் தாயின் கையைப் பிடித்தவாறு, அவள் காருக்குள் ஏறினாள்.
விருந்தினர்கள் எல்லாரும் வந்து விட்டார்கள். வாத்தியங்கள் முழங்கின. லட்சுமி கேட்டாள்: ‘‘அம்மா, மாமா எங்கே?”
‘‘நான் பார்க்கல மகளே.”
அவள் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள். கோபியும் பப்புவைத் தேடினான். பப்பு அங்கு எங்கும் கண்களில் படவில்லை. அவன் கல்யாணியிடம் கேட்டான். ‘‘மாமா ஏன் வரல?”
‘‘வருவார். வருவேன்னு சொன்னாரு.”
முகூர்த்த நேரம் வந்தது. மணமகனும் மணமகளும் திருமண மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். லட்சுமி அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பார்த்தாள். பப்புவைக் காணோம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook