
அப்பா, உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? தம்பி மனோமியைக் கொல்லாமல் இருந்தாலே பெரிய விஷயம். அவளுடைய முகத்தைப் பார்க்கவே தம்பி சம்மதிக்க மாட்டான்.”
“சிங்களர்கள் தமிழர்களின் பிறவிப் பகைவர்களாக எப்போதிருந்து ஆனார்கள்? நான் இலங்கையில் வசித்தபோது சிங்களர்கள் என்னுடைய நண்பர்களாக இருந்தார்கள் என்னுடன் சேர்ந்து தைப்பூசத் திருவிழாவின்போது அவர்கள் முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக வருவார்கள். ‘வேஸாக்’ கொண்டாடும்போது, நான் கலைனியாவில் இருக்கும் புத்தர் ஆலயத்திற்குச் சென்று அங்கிருக்கும் சிலைக்கு முன்னால் தாமரை மலர்களைக் கொண்டு போய் வைப்பேன். நீயும் உன் சகோதரர்களும் சிங்களர்களின் பாதுகாப்பில்தான் வளர்ந்தீர்கள். உங்கள் மூன்று பேரையும் குளிப்பாட்டி, உணவு ஊட்டி, தாலாட்டு பாடித் தூங்க வைத்த காந்திஹாமி என்ற ஆயாவை நீ மறந்துட்டியா? உனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தப்போ, அவள் தூக்கத்தைக்கூட மறந்துட்டு உன் கட்டிலின் கால் பகுதியில் உட்கார்ந்திருந்ததை நீ மறந்துட்டியா? ராஜம்மா உன்னைப் பார்த்துக்க வந்தப்போ நீ காந்திஹாமியை நினைச்சு அழுதே! பிஸாக்கா பாட சாலையில் தானே நீ படிச்சே? உனக்கும் உன் சகோதரர்களுக்கும் ட்யூஷன் மாஸ்டராக இருந்தவர் தர்மபந்து.... அவரையும் நீ மறந்துட்டியா? தர்மபந்து மகாத்மா என்று உரத்த குரலில் அழைத்தவாறு நீ அவருக்குப் பின்னால் ஓடினதை நான் இன்னைக்கும் ஒரு வண்ணப் படத்தைப் போல மனதில் பார்க்கிறேன். நம்முடைய பக்கத்து வீட்டிலிருந்த புண்ணிய காந்தி உனக்காக கிரிபாத் உண்டாக்கிக் கொண்டு வந்ததை நீ மறந்துட்டியா? அய்யோ... ரூபா, வேறு யார் சொன்னாலும் என்னால் பொறுத்துக்க முடியும். ஆனால், நீ சிங்களக்காரர்களைப் பிறவி பகைவர்கள் என்று கூறுவதைக் கேட்கக்கூடிய சக்தி எனக்கு இல்லை.”
“பயணிகள் இறங்க ஆரம்பித்து விட்டார்கள்”- மூர்த்தி எங்களுக்கு ஞாபகப்படுத்தினான். அவன் திறந்திருந்த வாசல் பக்கமாக ஓடினான்.
“மூர்த்தி ஏன் முன்னால் ஓடுகிறான்? அவனுக்கு மனோமியை அடையாளம் தெரியாது”- நான் சொன்னேன்.
விமானத்திலிருந்து இறங்கிய பெண்கள் தங்களுடைய புடவையின் நுனிகள் காற்றில் பறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டும் கீழே குனிந்து கொண்டும் நடந்தார்கள்.
முழங்காலை மட்டும் மறைக்கக்கூடிய நீலநிற ஆடை அணிந்த ஒரு இளம்பெண் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவள்தான் மனோமியாக இருக்க வேண்டும். ஆடை அணிந்திருந்தாலும், பழைய பாணியில் தலை முடியைப் பின்னியிருப்பவள்”- மூர்த்தி சொன்னான்.
“அவள் நிச்சயம் இந்தியப் பெண் அல்ல”- ரூபா சொன்னாள்.
“மனோமி!”- நான் அழைத்தேன். என் குரல் கரகரகவென்று முரட்டுத் தனமாக மாறிவிட்டிருந்தது.
நீலநிற ஆடை அணிந்த பெண் என்னைப் பார்த்து புன்னகையைத் தவழ விட்டாள். கம்பிக்கு அப்பால் நின்று கொண்டு அவள் என் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“மாமா, உங்களுக்கு என்னை எப்படி அடையாளம் தெரிஞ்சது?”- அவள் கேட்டாள்.
ரூபா அவளுடைய நிர்வாணமான முழங்கால்களைப் பார்த்து புருவத்தைச் சுருக்குவதை கவனித்ததால் இருக்க வேண்டும் – மனோமி சொன்னாள்: “புடவையை அணிந்து கொண்டு ஒரு இந்தியப் பெண்ணாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால்தான் இந்த ஆடைகளை அணிந்தேன்.”
“இந்த நீலநிற ஆடை உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கு”- நான் அவளுடைய கன்னத்தை ஒருமுறை தடவிக் கொண்டே சொன்னேன்: “நீ எவ்வளவு வளர்ந்திருக்கே! பார்த்தால் புண்ணியகாந்தியின் அதே வார்ப்பு... அதே நிறம்... அதே உயரம் அதே தலைவாரல்...”
“மனோமிக்கு அவளுடைய தாயின் நிறம் இல்லைன்னு சொன்னீங்களே அப்பா?”- ரூபா என்னிடம் கேட்டாள்.
“சிறு வயதில் மனோமிக்கு இந்த அளவுக்கு நிறம் கிடையாது” - நான் சொன்னேன்.
“பயத்தால் வந்த நிறம் இது மாமா...” - அவள் குலூங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
நிஸ்ஸாம்க
1987- ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி என்னுடைய இளம் பருவத்துத் தோழியான மனோமி இந்தியாவிற்கும் பயணமானாள். விமான நிலையத்திற்கு அவளுக்கே தெரியாமல் நான் சென்றிருந்தேன். பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்தில் சிவப்பு நிறத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அவள் மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டே தேயிலை விற்கக்கூடிய மூலையில் நான் நின்றிருந்தேன்.
மனோமி ஒரு நீலநிற ஆடையை அணிந்திருந்தாள். அந்த இடத்தில் உட்கார்ந்திருந்த மற்ற பெண்கள் எல்லோரும் புடவை அணிந்திருந்தார்கள். எல்லோரும் இந்தியர்கள் என்ற விஷயம் ஒரே பார்வையில் யாருக்கும் புரிந்துவிடும். இந்தியர்கள் என்பது மட்டுமல்ல- தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுகூட யாருக்கும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கக்கூடிய ஒரு விஷயமல்ல. அவர்களுடைய தலைமுடியில் எண்ணெய்யும் பூச்சரங்களும் இடம் பிடித்திருந்தன. நெற்றியில் சிவப்பு நிறத் திலகங்கள் இருந்தன. அவர்களில் முக்கால்வாசி பேர் கருப்பு நிறத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் மெலிந்துபோய், வெளுத்த நிறத்தில் மனோமி அமர்ந்திருப்பதைப் பார்த்த போது, என் மனதில் இருந்த கவலை மேலும் அதிகமானது. என்னுடைய எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அவள் இலங்கையை விட்டுப் புறப்பட்டுவிட்டாள். “அனாதையாக இருப்பதால் நான் அண்ணாதுரையின் வீட்டிற்குச் செல்கிறேன்” என்று அவள் ஒருநாள் சொன்னாள். அதைக் கேட்டு எனக்குத் தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது. அவள் எப்படி அனாதையாக இருக்க முடியும்,? நான் உயிருடன் இருக்கும்போது அவள் அனாதை அல்ல. ஆதரவு உள்ளவள்தான். “மனோமி, நீ என் மனைவியாக இலங்கையிலேயே இருந்துவிடு” என்று நான் சொன்னேன். சிறுவயதிலிருந்து நாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். பிஸாக்கா பாடசாலையை விட்டு அவள் வெளியே வரும்போது, எல்லா மாலை நேரங்களிலும் நான் ஃபோன் செக்காப்ளேஸில் மாணவர்களும் மாணவிகளும் பந்து விளையாடும் இடத்தில் நின்றிருப்பேன். நாங்கள் ஒன்று சேர்ந்து ஓடித்தான் பேருந்தையே பிடிப்போம். பல நாட்களிலும் நாங்கள் வகுப்பை `கட்’ பண்ணிவிட்டு, கால்பெட்டி மார்க்கெட்டிற்குச் சென்று பச்சை ஆப்பிள்களையும் துரியான் என்ற பழத்தையும் வாங்கித் தின்றிருக்கிறோம். துரியான் காம உணர்ச்சியை எழச் செய்யும் என்று என்னிடம் கடைக்காரன் சொன்னான். அவன் என்னுடைய வயதைப் பற்றிக் கிண்டல் பண்ணிப் பேசியபோது மனோமி அவனிடம் பொய் சொன்னாள்: “நிஸ்ஸாம்கவிற்கு இருபது வயது முடிந்துவிட்டது.” அப்போது எனக்கும் அவளுக்கும் பனிரெண்டு வயதுதான் ஆகியிருந்தது. நாங்கள் வீட்டிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு சில நேரங்களில் ஹாப்பர் வாங்கித் தின்போம். கோழிமுட்டை தடவப்பட்ட அப்பம் என்றால் மனோமிக்கு மிகவும் பிடிக்கும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook