
மனோமி
திருச்செல்வத்தின் காயங்கள் ஆறிவிட்டிருந்தன. கட்டுகளை அவிழ்த்து, வெந்நீரில் தொட்டுத் துடைக்கும்போது நான் அவனிடம் சொன்னேன்: “நான் இந்தக் கிழமை சென்னையை விட்டுப் புறப்படுறேன்.”
அவன் நீளமான இமைகளைக் கொண்ட தன்னுடைய கண்களால் என்னைப் பார்த்தான்.
“எதற்கு?”
“நான் திரும்பிச் செல்வதற்கு நேரம் வந்துவிட்டது.”
“எங்கே?”
“இலங்கைக்கு.”
“அய்யோ... இலங்கையில் சண்டை நடந்து கொண்டிருக்கிறதே? சிங்கள ராணுவம் உங்களுக்குத் தொல்லைகள் தரும்.”
“இல்லை. அவர்கள் எனக்குத் தொல்லை தரமாட்டார்கள் திருச்செல்வம். நான் சிங்களக்காரி ஆச்சே!”
“நீங்க சிங்களப் பெண்ணா?”- அவனுடைய தொண்டை இடறியது.
“ஆமாம். என் பெயர் மனோமி டென்னக்கூன். நான் அண்ணாதுரையின் வளர்ப்பு மகள்தான்.”
அவன் தன்னுடைய முகத்தை நான் பார்த்து விடக் கூடாது என்று நினைத்திருக்க வேண்டும் – பாயில் குப்புறப்படுத்துக் கொண்டான். அவனுடைய தோள்கள் அசைந்தன. “திருச்செல்வம், நீ அழுறியா?” – நான் கேட்டேன். அவளுடைய முதுகை இரண்டு தடவை தடவி விட்ட நான் அங்கிருந்து புறப்பட்டேன்.
“நில்...” – அவன் கட்டளையிட்டான். நான் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. இனத்தையும் அரசியலையும் தாண்டி ஒரு சக்தி எங்கே எங்களைத் தவறு செய்ய வைத்துவிடுமோ என்று நான் பயந்தேன்.
எங்களுடைய இளமை... அந்த இளைஞனைத் தொடும்போதெல்லாம் என் உடலில் சிலிர்ப்பு உண்டானதே! அந்த உதடுகளில் முத்தமிட நான் எத்தனை தடவை தயங்கினேன்! இல்லை... இனிமேல் ஒருமுறை கூட அவனை நான் பார்க்கக் கூடாது. நான் எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன். என்னுடைய போதி பயணத்திற்குத் தடையாகவும் விலங்காகவும் அந்த அழகான உடல் காரணமாக இருந்துவிடக் கூடாது. உடலின் புனிதத் தன்மை எப்போதும் பாழாகாமல் இருக்கட்டும்.
விமான நிலையத்திற்கு எங்களை அனுப்பி வைப்பதற்காக ஒரு பெரிய ஜனக் கூட்டமே வந்திருந்தது. மாமா அன்புடன் எல்லோரிடமும் விடை பெற்றார். ராஜம்மாவும் வேதவல்லியும் ரூபாவும் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள்.
“தாத்தா எப்போ திரும்பி வருவார்?”- சந்தீப் கேட்டான்.
“போர் முடிந்த பிறகு திரும்பி வருவேன்”- மாமா சொன்னார்.
“என்ன போர்?”- பிரதீப் கேட்டான்.
“எல்லா போர்களும் முடிந்த பிறகு நான் திரும்பி வருவேன்”- மாமா சொன்னார். குழந்தைகள் அவரை இறுக அணைத்துக் கொண்டனர்.
“அப்பா, நீங்க உயிலை மாற்றி எழுதவில்லை என்று சண்முகம் சொன்னார். உங்களை அன்னைக்கு வேதனைப்பட வைத்ததற்காக நான் வருத்தப்படுறேன்.”- பிரகாசம் தாழ்வான குரலில் சொன்னான்.
“நானும்...” - சுந்தரம் சொன்னான்.
“நீ இந்தியாவுக்கு வந்ததால் உனக்கு ஒரு பயனும் உண்டாகவில்லை மனோமி”- ரூபா சொன்னாள்.
“உன் பயணம் ஒரு நட்டம் உண்டான வியாபாரமாக ஆகிப் போச்சு!”- மூர்த்தி உரத்த குரலில் சிரித்துக் கொண்டே சொன்னான்.
“தரம் தாழ்ந்த நகைச்சுவையை வெளிப்படுத்தாமல் இருக்கணும்”- ரூபா அவனிடம் கோபத்துடன் சொன்னாள்.
விமானம் தரையை விட்டு உயர்ந்தபோது மாமா சொன்னார்: “உன் மீது எனக்கு என்னவென்று கூற முடியாத அளவிற்கு நன்றி இருக்கு.”
அந்த நன்றியைக் கூறியதற்கு பதில் கூற நான் முயற்சிக்கவில்லை. அவருடைய கண்களின் பிரகாசத்தைப் பார்த்துக் கொண்டே நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன். மாமாவையும் அழைத்துக் கொண்டு கால்ஃபேஸ் கடற்கரையில் நடந்து செல்லப் போவதை நான் கனவு கண்டு கொண்டிருந்தேன். ரத்த நிறத்தில் இருக்கும் சூரியன் மறைவதையும்....
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook