
“மனோமியைப் பார்க்காமல் அப்பாவால இருக்க முடியாது. அப்பாவின் பிள்ளைகளாலும் முடியாது”- வேதவல்லி முணுமுணுத்தாள்.
அந்த நேரத்தில் சுந்தரம் கதவைத் திறந்து கொண்டு சாப்பிடும் அறைக்குள் வந்தான். அவனுடைய முகத்தில் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் ஒரு புன்னகை வெளி்ப்பட்டது.
“நான் வெற்றி பெற்றுவிட்டேன்”- அவன் சொன்னான்: “நான் திரட்டி அனுப்பிய பணம் பழனிக்குக் கிடைச்சிடுச்சுன்னு வானொலி மூலம் தகவல் வந்திருக்கு.”
“யார் பழனி?”- சந்தீப் கேட்டான்.
அண்ணாதுரை
என் உயிலை நான் புதுப்பித்து எழுத நினைத்திருக்கிறேன் என்ற விஷயம் தெரிந்ததும் மனோமி இன்று என்னிடம் கோபப்பட்டாள்.
“நான் இங்கு வந்ததில் கெட்ட நோக்கம் இருக்கிறது என்ற அவர்கள் எல்லோருடைய நம்பிக்கையும் உண்மைன்றது மாதிரி ஆயிடும். அது வேண்டாம்...”
“ஆனால், உனக்கு வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பு நிலையை உண்டாக்கித் தர நான் தயாராக இல்லை என்றால், என்னுடைய மரண நேரத்திலும் அந்தச் சிந்தனை என் மன அமைதியைக் கெடுத்திடும்.”
“என்னுடைய பாதுகாப்பு என்பது என்னுடைய மனசாட்சியின் பாதுகாப்பு மட்டும்தான். நான் அன்பைத் தேடி வந்தேன். மாமா, உங்களுடைய பிள்ளைகளின் அன்பை என்னால் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்கிடையே சண்டை போட்டுக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதை நினைத்து நான் வெகு சீக்கிரமே இலங்கைக்குத் திரும்பிப் போறேன். உங்களை என்னுடன் அழைத்துச் செல்ல முடிந்ததை ஒரு மிகப் பெரிய கொடுப்பினையாக நான் நினைக்கிறேன்”- அவள் என் கட்டிலின் கால் பகுதியில் அமர்ந்திருந்தாள். தலையைக் குனிந்து கொண்டு என் கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். என்னுடைய மதிப்பிற்குரிய வளர்ப்பு மகள்... என் சொத்துக்களை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டவள்... அவளுடைய மண்டை ஓட்டிற்குக் கூட சந்தனத்தின் புனிதம் இருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்தேன். நகங்கள் சங்குகளைப் போல இருந்தன. சுந்தரம் அவளைக் காதலித்திருக்கக் கூடாதா என்று மீண்டும் என் மனம் முணுமுணுத்தது. அவள் என் மகனின் மனைவியாக ஆகியிருந்தால்...
“மாமா, வீணா மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. உங்களுக்கு இந்த இலங்கைப் பயணம் மகிழ்ச்சியானதாக இருக்கும். நாம இரண்டு பேரும் சேர்ந்து அனுராதபுரத்திற்குப் போவோம். ஒரு வாரம் நுவரேலியாவில் தங்கணும். இல்லையா, மாமா?” – அவள் கேட்டாள்.
நான் தலையை ஆட்டினேன். “எவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளுடன் நீ சென்னைக்கு வந்து சேர்ந்திருப்பே! என் பிள்ளைகளிடம் அன்பு இல்லாமல் போனது உன்னை ஆச்சரியப்படச் செய்திருக்கலாம்”- நான் சொன்னேன்.
“உங்க பிள்ளைகளை நான் குற்றம் சொல்லவில்லை. அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நானும் தகர்த்துவிட்டேனே!”
“நீ என்ன அப்படிச் சொல்றே?”
“அவர்கள் எதிர்பார்த்த பெண்ணாக நான் இல்லை. வெறுப்பதற்கும் பயிற்சி தேவைப்படுது. என்னுடைய அப்பிராணி தந்தை எனக்கு எப்படி வெறுக்க வேண்டும் என்ற பயிற்சியைத் தரவில்லை.”
அன்று மதிய நேரத்தில் பிரகாசம் என் அறைக்குள் வந்து கோபத்துடன் சொன்னான். “அப்பா, அந்த மலையாளி யூனியன் தலைவரை உங்களுக்கு ஞாபகத்துல இருக்குதா? கிருஷ்ணன்... அவன்தான் வேலை நிறுத்தத்துக்கான மூலகாரணமே... அவனுடைய வீட்டில் இருந்து மனோமி வெளியே வர்றதை நான் என் சொந்த கண்களால் பார்த்தேன். இது எவ்வளவு பெரிய அவமானம் நமக்கு! சுந்தரத்தைத் தாக்கி அவமானப்படுத்தின இந்தப் பெண் நம்ம தொழிலாளிகளில் ஒரு ஆளை ரகசியமாகப் போய்ப் பார்ப்பது என்பது சாதாரண விஷயமா? அவளை சீக்கிரமே திருப்பி அனுப்பி வைக்கிறதுதான் நல்லது.”
“அவள் போகத்தான் போறா. சுந்தரத்தை அவள் என்ன செய்தாள்? அவளைத் தாக்குற அளவுக்கு அப்படி என்ன நடந்தது?”
“சுந்தரம் அவளுடைய கையைப் பிடிச்சப்போ அவள் பெண் புலியைப் போல சுந்தரத்தின் கையைக் கடிச்சிட்டா. சுந்தரம் அவளைத் தொடக்கூடாது. ஆனால், தொழிலாளியான கிருஷ்ணன் அவளுக்கு பிரியமானவனா ஆயிட்டான். நாம அட்டையைக் கொண்டு வந்து மெத்தையில படுக்க வச்சிட்டோம்.”
தொடர்ந்து நான் மனோமியிடம் அதைப் பற்றி கேட்டதற்கு, தான் கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்றது உண்மைதான் என்று அவள் ஒப்புக் கொண்டாள். “வேலை நிறுத்தத்தை நிறுத்தும்படி கிருஷ்ணனிடம் நான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். மாமா, வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, உங்களை இலங்கைக்கு எப்படி அழைச்சிட்டுப் போக முடியும்?”- அவள் கேட்டாள்.
சுந்தரத்தை அவள் கடித்தாளா என்ற விஷயத்தைக் கேட்டதற்கு அவள் தயக்கத்துடன் சொன்னாள்: “ஒரு நிராயுதபாணியான பெண்ணுக்குத் தன்னுடைய பற்கள்தான் காவலாளிகள்.”
சுந்தரம் தன்னைக் கட்டிப் பிடிக்க முயற்சித்தான் என்றும், அன்பிலிருந்து பிறந்த காமத்தை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியும் என்றாலும், வன்முறையிலிருந்து பிறக்கும் காமத்தை தான் நிச்சயமாக வெறுப்பதாக மனோமி சொன்னாள்.
“நீ பெண் சாமியாராக விரும்புகிறாயா?”- நான் கேட்டேன் அவள் தலையை ஆட்டினாள். அவளுடைய கண்கள் ஈரமாயின.
என்னுடைய இனத்தவருக்கும் தமிழர்களுக்குமிடையில் நடக்கும் போராட்டத்திற்கு முடிவு உண்டாக்க ஒரேயொரு வழிதான் எனக்குத் தெரியுது. புத்த மதத்தை அசுத்தங்கள் நீக்கிப் பரிசுத்தமாக ஆக்குவதே அது. புத்த மதத்தை மேலும் சக்தி படைத்ததாக ஆக்க வேண்டும். வன்முறையைக் கைவிடுமாறு கூற அதற்கு தைரியம் உண்டாக வேண்டியதிருக்கிறது. அரசியல் பேசும் பிட்சுக்கள் அதை விட்டு விலகிப் போக வேண்டியதிருக்கிறது.
அந்தக் காலத்தில் சேரன் செங்குட்டுவன் ராஜசூய நடத்தியபோது, அவன் தன்னுடைய வலது பக்கத்தில் வணங்கி அமர வைத்த விருந்தாளி இலங்கையின் மன்னனான கஜபாகுதான். அதற்கு முன்னால் சிங்கபாகுவின் மகன் விஜயா, வங்கதேசத்திலிருந்து வந்து இலங்கையில் ராஜ வாழ்க்கை ஆரம்பித்தபோது, அவனுடைய காதலியான குவேணிக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படாமல், நல்ல குணங்களைக் கொண்ட ஒரு தமிழ் ராஜகுமாரியை பட்டமகிஷியாக ஆக்கினான். சிங்களனின் ரத்தத்தில் விஜயா, தமிழ்ப் பெண் ஆகியோரின் ரத்தம்தான் ஓடுகிறது. தந்தையின் இனத்தைச் சேர்ந்தவர்களும் தாயின் இனத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் பகைமையை வெளிப்படுத்துவதால் என்ன பயன்? ஒருவரையொருவர் எதிரியாகப் பார்க்கும் இந்தப் போக்கு முடிவுக்கு வர நேரமாகிவிட்டது.”
மனோமி நீண்ட நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தாள். சாயங்காலம் தேநீர் அருந்துவதற்காக உணவு அறைக்குச் சென்றபோது, வேதவல்லி சொன்னாள்: “உங்களைப் பார்க்க வக்கீல் வந்திருக்காரு. அலுவலக அறையில் இருக்கிறார்.” அவளுடைய மோசமான முனம் என் கண்களில் படாமல் இல்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook