
“நீ தமிழர்களின் தோசையைத் தின்றவள்தானே? உனக்கு நான் ஹாப்பர் வாங்கித் தரமாட்டேன்” என்று நான் பல நேரங்களில் அவளுக்குக் கோபம் உண்டாக வேண்டும் என்பதற்காகக் கூறுவேன். கோபப்படும்போது மட்டுமே அவள் முழுமையான அழகு கொண்டவளாகத் தோன்றுவாள். கோபம் அவளுடைய கன்னங்களைச் சிவப்பாக்கும்.
என்னுடைய வீட்டிற்கும் மனோமியின் வீட்டிற்கும் எதிர்பக்கத்தில் அண்ணாதுரை முதலாளியின் வீடு இருந்தது. அவருடைய மகன் சுந்தரம் என்னுடன் சேர்ந்து கால்பந்து விளையாடுவது உண்டு. சுந்தரம் இலங்கையை விட்டுப் போகும்போது நானும் அவனும் சில பையன்களாக இருந்தோம். அவன் கறுப்பு நிறத்தில் தடிமனான ஒரு பையனாக இருந்தான் என்பது மட்டுமே இப்போது என்னுடைய ஞாபகத்தில் இருக்கிறது. மனோமி சுந்தரத்துடன் சென்னையில் போய் வசிக்கப் போகிறாள் என்ற விஷயத்தை நினைத்துப் பார்த்தபோது எனக்கு அது முதலில் ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அண்ணாதுரை அவளைத் தன்னுடைய மருமகளாக ஆக்கிக் கொண்டால், அதற்குப் பிறகு அவள் இலங்கைக்குத் திரும்பி வரமாட்டாள்.
மனோமி உள்ளே போன பிறகு, நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் அவளுக்கு விடைகூறி இருக்கலாம். என்னை அவள் நிச்சயமாக எதிர்பார்த்திருப்பாள். நான் மிகவும் தரம் தாழ்ந்தவன் என்றும்; கீழ்த்தரமான உணர்ச்சிகளுக்கு அடிமையானவன் என்றும் என் மனதில் பட்டது. விமானங்களின் இரைச்சல் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தபோது, நான் மனோமியின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தேன்.
‘எவ்வளவு முயற்சி செய்தாலும், யாரையும் வெறுக்க மனம் வரவில்லை.’
நோயாளியும், பலவீனம் அடைந்த நிலையில் இருந்தவருமான அவளுடைய தந்தையைக் கொன்ற புலியையும் அவள் வெறுக்கவில்லையா? கட்டரகாமாவில் வெடிகுண்டு எறிந்த கதிரேசன் என்ற புலியை வெளிக்கடை சிறையில் இருந்த கைதியே கொன்றான். ஆனால், அவனுடைய நண்பன் ஓடி மறைந்துவிட்டான். இடுப்பிற்குத் தேவைப்படும் வீரத்தை வெடிகுண்டுகளிலும், துப்பாக்கிகளிலும் வைத்துக்கொண்டு அலைந்து திரிபவர்கள்... அமைதியாக இருக்கும் சிங்களர்களைக் கொன்றவர்கள்... புத்த மதத்தைச் சேர்ந்த துறவிகளையும் குண்டுகளைப் பயன்படுத்திக் கொன்றவர்கள்... அவர்களில் சிலரின் தலைகளுக்கு இலங்கை அரசாங்கம் இரண்டு லட்சம் ரூபாய் பரிசாக அளிப்பதாக அறிவிப்பே வெளியிட்டிருந்தது. கந்தசாமி, பழனி, தாமோதரம், திருச்செல்வம், ராஜு... ‘அவர்களில் ஒருத்தனை நான் பார்த்தால், நான் என்னுடைய வெறும் கைகளைக் கொண்டு கழுத்தை நெறித்து, மூச்சுவிட முடியாமல் செய்து கொன்றுவிடுவேன்’ என்று ஒருநாள் நான் மனோமியிடம் சொன்னேன். கல்லூரியிலிருந்து தனியாக நடந்து வரும்போது, புலிகள் அவளை எங்கே வளைத்து விடப் போகிறார்களோ என்று நான் பயந்தேன். அதனால் எப்போதெல்லாம் கல்லூரி முடிகிறதோ, அப்போதெல்லாம் நான் அவளை என்னுடைய நீலநிற ஸ்கூட்டரில் ஏற்றி வீட்டில் கொண்டு போய் விடுவேன். ஒரு நாள் என் தாய் சொன்னாள்:
“நீ மனோமியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறாயா? அப்படி இல்லைன்னா, அவளைப் பின்னால் உட்கார வைத்து வண்டியை ஓட்டாதே. அதற்குப் பிறகு அவளுக்கு வேறொரு மணமகன் கிடைக்காமல் போயிடுவான். எல்லாரும் இப்பவே சொல்றாங்க- மனோமி உன் காதலின்னு.”
மனோமியின் தந்தைக்குப் பொருளாதார வசதி குறைவாக இருந்தாலும், அவள் கல்லூரியில் சேர்ந்து ஒரு பட்டதாரியாக ஆனாள். நான் படிப்பு விஷயத்தில் மோசமாக இருந்தேன். அதனால் இரண்டு முறை தோற்றதும், நான் கல்லூரியை விட்டு ஒரு மெக்கானிக் ஆவதற்கான பயற்சியைப் பெற்றேன். அந்தக் காரணத்தால் இருக்கலாம்- அவளுக்குப் பக்கத்தில் இருக்கும்போது ஒரு குற்ற உணர்வு என்னை எப்போதும் பாடாய்ப் படுத்திக் கொண்டேயிருந்தது.
“உன் மனதில் பலமாக வேரூன்றியிருக்கும் வெறுப்புணர்வை நீ அடியோடு இல்லாமல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீ எந்தச் சமயத்திலும் சுதந்திரமான மனிதனாக இருக்க மாட்டாய்”- மனோமி என்னிடம் சொன்னாள். எதிர்வீர சரத் சந்திராவின் ‘சிங்கபாகு’ என்ற நாடகத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் திரும்பி வந்து கொண்டிருந்தோம். இந்திய நாடகப் படைப்பாளியான காளிதாசனின் பாதிப்பில் அந்நாடகம் எழுதப்பட்டிருக்கிறது என்று அவள் சொன்னபோது நான் அவளை பலமாக எதிர்த்தேன்.
“இந்தியர்களை முழுமையாக நீ வெறுக்கிறாய் நிஸ்ஸாம்க. அது மட்டுமல்ல – நீ கறுப்பர்களைக் கேவலமாகப் பார்க்கிறாய். நாம் இருவரும் வழிபாடு செய்யும் புத்தர் இந்தியாவில் பிறந்தவர்தானே! புத்தர் ஒரு கறுப்பான மனிதராக இல்லை என்று என்னாலோ உன்னாலோ உறுதியாகக் கூற முடியுமா?”- மனோமி என்னைப் பார்த்துக் கேட்டாள்.
“புத்தர் வெள்ளை நிறத்தில்தான் இருந்திருக்க வேண்டும்” என்று நான் உரத்த குரலில் ஆவேசத்துடன் சொன்னேன். அவள் அதைக் கேட்டு சத்தமான குரலில் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“ஒரு மனிதன் தன் உள்ளுக்குள் காணும் வண்ணத்தைத்தான் தன் கடவுள் பற்றிய எண்ணத்திற்கும் கொடுக்கிறான்”- அவள் சொன்னாள்: “கறுப்பின மக்கள் கடவுளை கறுப்பு நிறத்தில் இருப்பவனாகத்தான் நினைப்பார்கள். புத்தரை வழிபாடு செய்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு அதிகமான நிறங்களும் உண்டு. அதற்குக் காரணம்- நான் பார்க்கும் சிவப்பு நிறத்திலிருந்து மாறுபட்டிருக்கும் நீ பார்க்கும் சிவப்பு.”
அவள் அந்த மாதிரி பேச ஆரம்பிக்கும்போது, நான் அமைதியாக இருந்து விடுவேன். என்னால் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களையும் அவள் எனக்குக் கற்றுத் தந்தாள். புரிந்து கொள்ள முடியவில்லையென்றாலும், அவை என் மனதில் தங்கி நின்றன என்பதென்னவோ உண்மை.
“நீயும் டென்னக்கூனின் மகளும் என்ன பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?”- ஒரு நாள் என் தாய் கேட்டாள்.
“அம்மா, அதெல்லாம் உங்களுக்குப் புரியாது.”
“இருந்தாலும் சொல்லேன்... எனக்கு புரியுமான்னு நான் தீர்மானிக்கிறேன்.”
“அவள் பொதுவா கடவுளைப் பற்றித்தான் பேசுறாள்.”
“அவளுடைய தாய் புண்ணியகாந்தியும் அப்படித்தான் இருந்தாள். தான் ஒரு பெண் சாமியாராக ஆகியிருக்க வேண்டியவள் என்று புண்ணியகாந்தி என்னிடம் பலமுறை கூறியிருக்கிறாள்.”
தமிழர்கள் கலாச்சாரம் மிகவும் பழமையானது என்றும்; அத்வைதத்தைப் பின்பற்றக்கூடியது என்றும் ஒருமுறை மனோமி என்னிடம் சொன்னாள். நாங்கள் கால்ஃபேஸ் ஹோட்டலுக்கு எதிர் பக்கத்தில் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தோம். ஐந்து மணி கடந்து விட்டிருந்தாலும், வெயிலின் அளவு தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. மனோமி தன்னுடைய நீலநிற சில்க் துணியாலான குடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டே நடந்தாள்.
“அப்படின்னா நம்ம சிங்களர்களின் கலாச்சாரம்...?”- நான் கேட்டேன். மனோமி அதைக் கேட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook