
சூஸனின் கவலைகள் அவ்வப்போது வெளியே தெரிந்தது அவளுடைய கவிதைகள் மூலம்தான். முதல் தடவையாக போபன் அந்தக் கவிதைகள் மீது ஆர்வம் செலுத்தினான். ஒரு கவிதையை அவளை வற்புறுத்தி பிரசுரம் செய்வதற்காக அவன்தான் அனுப்பி வைக்கச் செய்தான். அது பிரசுரமாகி வந்த வார இதழுடன் போபன் வீட்டிற்கு வந்தான். அவனுடைய உற்சாகத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது.
‘‘ஐ ஆம் ப்ரவுட் ஆஃப் யூ” - அவன் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டேயிருந்தான். அன்று எந்த விருந்திற்கும் அவன் செல்லவில்லை. மதியத்திற்குப் பிறகு விடுமுறை எடுத்துவிட்டு, அவன் அவளையும், அன்னமோளையும் அழைத்துக் கொண்டு சுமார் முப்பது கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பெரிய நகரத்திற்குப் போய் திரைப்படம் பார்த்தான். நகரத்தில் இருப்பதிலேயே பெரிய ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டார்கள். இதற்கிடையில் அவனுடைய பழைய குறும்புத்தனம் வெளியே வந்தது.
‘‘ஒவ் யூ ஹேவ் கம் டு தி பாய்ண்ட் - இதுதான் கவிதை. முன்பு இருந்த ஒன்றுமே இல்லாத கவிதை இல்லை. இதில் மனிதன் இருக்கிறான். அவனை எப்போதும் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. முன்பு இருந்த நிலவும் மென்மையான காதல் விஷயங்களும் மாறியிருக்கின்றன!”
அன்று இரவு அவன் மது அருந்தவேயில்லை.
ஆனால், படிப்படியாக அவனுடைய ஆர்வம் குறைந்து கொண்டே வந்தது. கவிதையின் தரம் குறையவில்லை. அது அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவனுக்கு வாசிப்பதற்கு நேரம் கிடைக்க வேண்டாமா? அவனுக்கு அலுவலகத்தில் நிறைய வேலைகள் இருக்கின்றனவே? மீண்டும் விருந்துகள் இல்லையா? பிசினஸ் இல்லையா? சமுதாயத்தில் அந்தஸ்தை உயர்த்த வேண்டாமா? அவனுடைய ஈடுபாடு குறைந்ததை அவளும் உணரவே செய்தாள். ஆனால், அது அவளுடைய படைப்பாற்றலைச் சிறிதுகூட பாதிக்கவில்லை. அவள் மேலும் அதிகமாக எழுதினாள். முன்பு இருந்ததைவிட நன்றாக எழுதினாள். அவளுடைய அழுத்தப்பட்ட வேதனைகளுக்கு வடிகாலாக இருந்தது அது மட்டும்தானே! அவளுடைய ஒட்டுமொத்த நிம்மதியே அன்னமோளும் கவிதைகளும்தான். எனினும் அவளுடைய மனக்கவலை அப்படியே தான் இருந்தது. சில நேரங்களில் அவள் நீண்ட நேரம் எதுவுமே பேசாமல் அமைதி நிலையில், இனம்புரியாத ஆழமான கவலையில் மூழ்கிவிடுவாள்.
போபனின் தங்கை லிஸியின் படிப்பு முடிந்து திருமணமும் முடிந்தது. திருமணம் போபன் விரும்பியதைப்போல மிகவும் ஆடம்பரமாகவே நடந்தது. வரதட்சணையாக ஒரு மிகப்பெரிய தொகையும் ஒரு காரும் தரப்பட்டன. அதற்கு மிகவும் முன்பே போபன் ‘ஸ்டேட்டஸ் சிம்பல்’ என்ற முறையில் கார் வாங்கியிருந்தான். தன் கணவனுடைய கார் என்றாலும்கூட அதில் பயணம் செய்யும்போது சூஸனுக்கு தாங்க முடியாத ஒரு குற்ற உணர்வு - தவறு செய்கிறோம் என்ற எண்ணம் என்றுகூட கூறலாம் - உண்டானது. வேறு யாரோ ஒருவருடைய கார் அது என்ற எண்ணம் அவளுக்கு உண்டாகும்.
லிஸியின் திருமண நேரத்தில் போபன் சூஸனுக்காகவும் சில தங்க நகைகளை வாங்கினான். அது அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.
‘‘எனக்கு இது எதுவும் தேவையில்லை” - அவள் எப்போதும் போல உற்சாகம் இல்லாமல் சொன்னாள்: ‘‘எனக்கு இப்போ இருக்குறதே போதும்.”
‘‘போதாதுன்னு நான் நினைச்சேன்.”
‘‘எனக்கு அப்படித் தோணல.”
‘‘சூஸன்...” - அவன் குரலை உயர்த்தினான். அவள் குழந்தையை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். அவர்கள் இருவருக்குமிடையில் வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு விரிசல் உண்டானது அன்றுதான்.
லிஸியின் திருமணத்திற்குக்கூட அந்த நகைகளை அணிய அவள் விரும்பவில்லை. போபன் அதை ஒரு ‘இன்ஸல்ட்’ ஆக எடுத்துக் கொண்டிருக்கலாம். அப்படிக் கூறுவதைவிட எடுத்துக் கொண்டான் என்றுதான் அவளுக்குத் தோன்றியது.
‘எடுத்துக் கொள்ளட்டும்’ - அவள் தனக்குத்தானே கூறிக் கொண்டாள்: எடுத்துக் கொள்ளட்டும். எனக்கும் கொஞ்சம் பிடிவாதம் இருக்கு. எனக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. தனித்துவம், கருத்து... இவை ஒரு ஆளுக்கு மட்டும் சொந்தம் இல்லையே!”
இப்படி தனக்குள் ஒரு நியாயத்தை அவள் கூறிக்கொண்டாலும், பிறகு அவளுக்கு ஒரு வருத்தம் உண்டாகவே செய்தது. போபன் மிகவும் சங்கடப்பட்டிருப்பான். அவள் மீண்டும் கவலை படர்ந்த மவுனத்தில் மூழ்கினாள்.
போபன் உற்சாகமாக இருந்த ஒரு நேரத்தில் அவள் தன்னுடைய செயலுக்காக வருத்தம் தெரிவித்தாள்.
அவன் அதற்காகக் கோபப்படவில்லை. வருத்தப்படவும் இல்லை.
‘‘நீ கவலைப்படாதே. நான் அந்த விஷயத்தைப் பெருசா எடுத்துக் கொள்ளவே இல்லை” - அவளை இறுக அணைத்துக்கொண்டு அவன் சாந்தமான குரலில் சொன்னான்: ‘‘அதைவிட நான் ஃபீல் பண்ணுற ஒரு விஷயம் இருக்கு. நீ என்னுடன் சேர்ந்து பார்ட்டிகளுக்கு வர கொஞ்சமும் ஆர்வம் காட்டுறது இல்ல. இவ்வளவு காலத்துல இரண்டோ மூணோ முறைகள் மட்டுமே நீ பார்ட்டிகளுக்கு வந்திருக்கே. பார்ட்டிக்கு வர்ற எல்லோரும், குறிப்பாகப் பெண்கள் சூஸன் எங்கே... சூஸன் எங்கேன்னு கேட்பாங்க. அப்போ நான் அவமானத்துல தலை குனிஞ்சு நின்னுடுவேன்.”
அவன் கவலைப்படுவது அவனைப் பொறுத்தவரையில் நூறு சதவிகிதம் சரிதான் என்பதை அவளும் உணர்ந்தாள். ஆனால், இந்த விஷயத்தில் அவனுக்கு உதவ தன்னால் முடியாது என்பதையும், முயற்சித்தால் கூட முடியாது என்பதையும் அவள் நினைத்துப் பார்த்தாள். அந்த மாதிரியான பார்ட்டிகள் அவளுடைய எண்ணத்தில் பிணவறைக்கு ஈடாகத் தெரிந்தன. வாழ்க்கையின் பிரகாசம் எதுவும் இல்லாத பிணப் பைகள். நாகரீகம் என்ற பெயரில் ஆபாசமாக ஆடைகள் அணிந்து காட்சியளிக்கும் சில பெண்கள்... சூட்டும் கோட்டும் அணிந்து ஜோக் புத்தகங்களை வாசித்து நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருக்கும் சில பெண் சபலக்காரர்கள்... புட்டிகள், கோழி, பன்றி, ஆடு, மாடு... தாங்கள் தின்று முடிக்கும் பறவைகள், மிருகங்களுக்கு இருக்கும் சுயஉணர்வுகூட இல்லாமல், இருக்கும் சுய உணர்வையும் புட்டிகளுக்குள் மூழ்கச் செய்துவிட்டு, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் தற்பெருமைக்காரர்களின் உயிரற்ற ஒரு உலகம்... அது உயர்வானது என்றும், அது உண்மையானது என்றும், அதுதான் வாழக்கையின் ஆனந்தம் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அது ஒரு சுடுகாடு என்பதையும் தாங்கள் அனைவரும் வெறும் பிணங்கள் என்பதையும் அவர்கள் சிறிதும் உணர்வதில்லை, உணரப்போவதும் இல்லை.
அந்தக் கூட்டத்தைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் சூஸனுக்கு வேடிக்கையும் வெறுப்பும் உண்டாவதைவிட பரிதாபமும் வருத்தமும் தான் அதிகமாக உண்டாயின. ‘பாவங்கள்...’ என்று அவள் மனதிற்குள் கூறிக்கொள்வாள். ஆனால், அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக இருக்க அவள் தயாராக இல்லை.
‘‘என் போபன், வருத்தப்படக்கூடாது...” - அவள் சொன்னாள்: ‘‘போபன், நான் உங்களை வேண்டுமென்றே சிரமத்திற்குள்ளாக்கவோ வேதனைப்படுத்தவோ இல்லை. அப்படிப்பட்ட கூட்டங்களில் நான் கொஞ்சம்கூட பொருந்தாமல் இருப்பேன்னு எனக்கு நல்லா தெரியும். அதைவிட அன்னமோள்கூட எதையாவது பேசிக்கொண்டு, இவளுக்கு பழைய கதைகள் எதையாவது கூறிக்கொண்டு இந்த பால்கனியில உட்கார்ந்திருக்கிறது எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது தெரியுமா? இல்லைன்னா, இந்த ஒற்றையடிப் பாதைகள் வழியா காலாற நடந்து தேயிலைகளைப் பறிக்கிற ஏழைத் தமிழ்ப் பெண்கள் கூட பேசிக் கொண்டு இருப்பதில் எவ்வளவு சந்தோஷம் இருக்கு!”
போபன் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. எனினும், ஒரு நீண்ட மவுனத்திற்குப் பிறகு அவன் ஒரு கேள்வியைக் கேட்டான்: ‘‘சரி, சூஸன்... நீ இந்த அளவுக்கு சொல்லிட்டேல்ல... என் நண்பர்களை உனக்கு நல்லா தெரியும். பெரும்பாலானவர்கள் இங்கே வந்திருக்காங்க.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook