Lekha Books

A+ A A-

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 7

en thathavukku oru yanai irunthathu

ஆதியில் படைப்பிற்குப் பிறகு எல்லா உயிரினங்களின் ஆத்மாக்களிடமும் அல்லாஹ் கேட்டார்:

“உங்களைப் படைச்சது யார்?”

எல்லாம் கூறின:

“எங்களை யாரும் படைக்கல...”

அல்லாஹ் எல்லாவற்றையும் தண்டித்தார். பல்வேறு விதங்களிலும் தண்டித்தார். பல வருடங்கள் தண்டித்தார்.

அதற்குப் பிறகும் அவை சம்மதிப்பதாக இல்லை.

கடைசியில் எல்லாவற்றிற்கும் ரப்புல் ஆலமீன் தம்புரான் பசி என்ற கொடும் தண்டனையைக் கொடுத்தார். அன்று முதல்தான் பசி என்ற ஒன்றே உண்டாகத் தொடங்கியது. அன்று பசி என்ற தண்டனையைத் தந்தவுடன், எல்லாம் சம்மதித்தன.

“அல்லாஹுதான் எங்களைப் படைச்சார்!”

அன்று அவை சம்மதித்ததை அல்லாஹ் ஒரு கல்லுக்குள் வைத்தார். இனி அந்தக் கல் “க்யாமம்” என்று சொல்லப்படும் கடைசி நாளன்று ஆத்மாக்களை ஆராயும்போது சாட்சியாக எடுக்கப்படும். அந்தக் கல்லின் பெயர்தான் ஹஜருல் அஸ்வத். அந்தக் கறுப்புக் கல் மக்காவிலுள்ள கஅபவில் இருக்கிறது. அது க அபவைச் சுற்றி வருகிறபோது எத்தனை முறை சுற்றியிருக்கிறோம் என்பதைக் காட்டும் வெறும் ஒரு அடையாளம் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஹஜ் யாத்திரைக்குப் போவோர் அந்தக் கல்லைத் தொட்டு முகத்தோடு சேர்த்து ஒற்றிக் கொள்ளத்தான் போகிறார்கள். குஞ்ஞுப்ôத்தும்மாவால் ஹஜ் யாத்திரைக்குப் போகவும், அந்தக் கல்லை ஒற்றிக்கொள்கிறார்கள் என்பதென்னவோ உண்மை. குஞ்ஞுபாத்தும்மாவின் தாயும் தந்தையும்கூட அதைத் தொட்டு முகத்தோடு ஒற்றிக்கொள்ளவும் முடியுமா? ஏதாவது குழப்பம் உண்டானால் அது இப்லீஸ் என்ற பகைவனின் வேலையாகத்தான் இருக்கும். தெய்வத்திற்கு பலம் பொருந்திய ஒரு எதிராளி! அவன் மனித குலத்தை கெட்ட பாதையை நோக்கி செலுத்துகிறான். அழிவை நோக்கி... அவன் அடிக்கடி குழப்பங்களை உண்டாக்கத் தான் செய்கிறான்.

“ரப்புல் ஆலமீன் தம்புரானே!” குஞ்ஞுபாத்தும்மா தொழுவாள்: “இப்லீஸ் என்ற கொடியவனின் பிடியில் இருந்து எங்களைக் காப்பாற்றணும்....!”

3

நான்... நான் என்று ஆணவமாகச் சொல்லிய

மன்னர்களும் மற்றவர்களும் எங்கே?

குஞ்ஞுபாத்தும்மா தன்னை அழகுபடுத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். கையிலும் காலிலும் மைலாஞ்சி இட்டு சிவப்பாக்கி- கண்களில் மை இட்டு கறுப்பாக்கி யாரையோ எதிர்பார்த்து அங்கே அமர்ந்திருக்கிறாள்.

“யார் வர்றது?”

முதலில் திருமணம் என்பது ஒரு விளையாட்டுபோலத்தான் அவளுக்குத் தோன்றியது. வெற்றிலை போட்டு உதடுகளைச் சிவப்பாக்கிக் கொண்டு “குடும்பஸ்தி” ஆகலாம். காதுகளில் தங்கத்தால் ஆன கம்மல் அணியலாம். தாய்- தந்தையுடன் சேர்ந்து ஹஜ் யாத்திரை போகலாம். ஆனால், அதற்கு... வரப்போகும் ஆண் சம்மதம் தர வேண்டுமே!

என்ன இருந்தாலும் திருமணம் செய்ய வரப்போகிற ஆண் யாரும் யானை மக்காரின் அன்பு மகளின் அன்பு மகளுக்கு இணையானவனாக இருக்கப் போவதில்லை. சிலருக்கு அவ்வளவு வசதி இருக்காது. சிலரின் குலம் அவ்வளவு மேன்மைப்பட்டதாக இருக்காது.

இப்படி நாட்கள் கடந்துக்கொண்டிருந்தன. குஞ்ஞுபாத்தும்மா விற்கு வயது ஏறிக்கொண்டே வந்தது. அப்போது அவளின் மனதில் ஒரு சிறிய ஆசை தோன்றியது. அது அப்படியொன்றும் பெரிய ஒரு விஷயமில்லை. அவளின் மனதில் ஒரு சின்ன மனக்குறைபோல அது இருந்தது. தன்னை மணக்கப்போகிற ஆணின் முகத்தை தான் முன்கூட்டியே ஒருமுறை பார்க்க வேண்டும். அது ஒன்றுதான் அவளின் மனதில் இருந்த ஆசை.

இருந்தாலும், தன் மனதில் இருந்த ஆசையை அவள் யாரிடமும் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி பெரிய அளவில் ஏதாவது பிரச்சினை வந்துவிட்டால்...? முஸ்லிம் பெண்கள் மத்தியில் பொதுவாக நடைமுறையில் இல்லாத வழக்கம் அது. இருந்தாலும், அவள் மனதிற்குள் நாளுக்கு நாள் அந்த ஆசை வளர்ந்து கொண்டிருந்ததென்னவோ உண்மை. வெறுமனே அமர்ந்து மனதிற்குள் கனவு கண்டு கொண்டிருக்கலாமே தவிர, அவளால் என்ன செய்ய முடியும்? வீட்டில் ஐந்தாறு வேலைக்காரிகள் இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் ஒரே ஓசை மயமாகவே இருக்கும். அவ்வப்போது அவளின் தாயின் மிதியடி எழுப்பும் “க்டோ க்டோ” என்ற சத்தம் வேறு கேட்டுக் கொண்டே இருக்கும். வெளியே அவளின் தந்தையின் குரல். அங்கே நிறைய ஆண்கள் கூடியிருப்பார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள்?

அவளுக்குப் புரியக்கூடிய விஷயங்கள் அல்ல அவை. நீதிமன்றம், வக்கீல்கள், எதிர்சாட்சிகள், லஞ்சம்- இப்படி எவ்வளவோ விஷயங்கள் அங்கு பேசப்படும். சில நேரங்களில் அவளின் கல்யாண விஷயமும் பேசப்படும். அந்த மாதிரியான நேரங்களில் அவளின் ஒவ்வொரு அணுவும் அதைப்பற்றி விழிப்பாக இருந்து கேட்க முயற்சிக்கும். ஆனால், அவளால் அசையக்கூட முடியாது. குஞ்ஞுபாத்தும்மா அசைந்தால், அது உலகத்திற்கே தெரிய வரும். அதைப்பற்றி அவளுக்கே வெட்கமுண்டு. அவள் மூச்சுவிட்டால்கூட “க்லோ” என்று ஒலி உண்டாகும். நடந்தால்... பிறகு சொல்லவே வேண்டாம். “க்லோ! ச்லோ... ப்லோ...” என்று சத்தம் உண்டாக ஆரம்பித்துவிடும். இவ்வளவு நகைகள் உடம்பில் எதற்கு? இவற்றை யாருக்குக் காட்டுவதற்காக அவள் அணிந்திருக்கிறாள்? வேண்டுமென்றால் சில நகைகளை உடம்பிலிருந்து நீக்கி வைக்கலாம். ஆனால், பெண்ணைப் பார்க்க வருகிற பெண்கள் எப்போது வீடேறி வருவார்கள் என்பதைச் சொல்லவே முடியாது. தங்க நகைகள் குறைவாக இருப்பதைப் பார்த்தால், விஷயம் அவ்வளவுதான்.

வந்த பெண்கள் அனைவரும் தங்கத்தில் மூழ்கிப்போய் வந்தார்கள். எல்லாருமே குடும்பப் பெண்கள்தாம். என்ன கேள்விகளெல்லாம் அவர்கள் கேட்கிறார்கள்! சந்தேகங்கள்... சந்தேகங்கள்... சிலர் அவளின் வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார்கள். பற்கள் எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்பதைப் பார்க்கத்தான். உள் பற்கள் எதையும் புழு தின்றிருக்கிறதா என்பதையும் காணத்தான்.

அவளின் பற்களுக்கு எந்தவித கேடும் உண்டாகவில்லை. பற்கள் அனைத்தும் ஒழுங்காக- அழகாகவே இருக்கின்றன.

பிறகு சில பெண்களுக்கு குஞ்ஞுபாத்தும்மா முட்டாளா என்பது தெரியவேண்டும். இல்லாவிட்டால் அவள் அறிவாளியா என்பது தெரிய வேண்டும். அதற்காக அவர்கள் ஒவ்வொரு கேள்வியைக் கேட்பார்கள்.

“நம்மளைப் படைச்சது யார்?” ஒருத்தி கேட்டாள்.

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“அல்லாஹ்!”

பிரபஞ்சங்களான பிரபஞ்சங்களையும் உயிரினங்களான எல்லா உயிரினங்களையும் படைத்தது அல்லாஹ்தானே!

“க்யாமத்தின் அடையாளங்கள் என்னென்ன?”

அதாவது- உலகம் முடிவதற்கான அடையாளங்கள் என்னென்ன என்பது இதன் அர்த்தம். இந்த உலகம் ஒருநாள் அழியும். அதை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு சில அடையாளங்கள் இருக்கின்றன. அதை குஞ்ஞுபாத்தும்மா விளக்கமாகக் கூறுவாள்... கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள். மேலே இருப்பவர்கள் கீழே போவார்கள். பொய்கள் பெருகும். தெய்வ நம்பிக்கை இல்லாமற் போகும். மதங்கள் இல்லாமற் போகும். தாய்- தந்தை சொல்வதைக் கேட்க மாட்டார்கள். குருக்களை வணங்க மாட்டார்கள். வயதானவர்களைக் கிண்டல் பண்ணுவார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel