Lekha Books

A+ A A-

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 3

en thathavukku oru yanai irunthathu

தன்னுடைய தந்தையிடம் அவள் அதைச் சொல்லவும் செய்தாள். அவள் அப்படிச் சொன்னதைக் கேட்டு அந்த ஆசிரியைகள் சிரித்தார்கள். அவர்களில் ஒருத்தி சொன்னாள்:

“குஞ்ஞுபாத்தும்மா பெரிய பொம்பளையா வரட்டும்!”

பெரிய பெண்ணாக வேண்டும்! அவளுக்கு அப்படியொரு ஆசை பிறந்தது. பெரிய பெண்ணாக வேண்டும்!

“எப்ப உம்மா நான் பெரிய பொம்பளையா ஆவேன்?” அவள் தன் தாயைப் பார்த்துக் கேட்டாள்.

விஷயம் என்ன என்று அவளின் தாய் கேட்டபோது, உண்மையான விஷயம் என்னவென்பதை தாயிடம் குஞ்ஞு பாத்தும்மா கூறவும் செய்தாள். அவளின் தாய் அவளை பயமுறுத்தினாள்:

“என் குஞ்ஞுபாத்தும்மாவே! காஃப்ரிச்சிங்க நல்லவங்க இல்ல. அவுங்க செய்றதை நாம செய்யக்கூடாது. அவுங்களுக்கு எதிரா நாம நிற்கணும்...”

“உம்மா சொல்றது உண்மைதான் மகளே...” அவளின் தந்தை சொன்னார்: “நமக்கு அது தேவையே இல்லை...”

தேவையில்லை என்றால் தேவையில்லைதான்! அவளின் தந்தையின் வார்த்தைக்கு அந்த வீட்டில் எதிர் வார்த்தை என்ற ஒன்று இருக்கிறதா என்ன! இஸ்லாமில் கூறப்பட்டிருக்கும் விதி முறைகளைப் பின்பற்றியல்லவா வாழ்க்கை போய்க் கொண்டிருக் கிறது! வட்டனடிமைக் காக்கா என்ற பெயரைச் சொன்னாலே நம்மை யும் மீறி அன்பும் மரியாதையும் அரும்பும். ஊரில் முக்கியமான மனிதர் அவர். பள்ளிவாசலில் அவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஆள். நல்ல உயரமாக இருப்பார். தலை எப்போதும் “மினு மினு”வென்று பிரகாசமாக இருக்கும். தாடியையும் மீசையையும் விதிமுறையை அனுசரித்து அளவாக கத்தரியால் கத்தரித்து விட்டிருப்பார். மீசையின் இரு முனைகளும் கம்பீரமாக உயர்ந்து நின்றிருக்கும். எப்போதும் முண்டு மட்டுமே கட்டுவார். சற்று நீளம் அதிகமுள்ள துண்டை அசால்ட்டாக தோளில் இட்டிருப்பார். சில நேரங்களில் அதன் ஒரு நுனி தரையில் கிடந்து புரளும். அப்படி நேர்ந்தால், அவருக்கு பின்னால் நடந்து செல்லும் நபர் அதை பயபக்தியுடன் கையில் எடுத்து உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பார். அவளின் அப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது. உடலை நிமிர்த்தி மிகவும் கம்பீரமாக அவர் நடந்து போவார். அவளின் தந்தை கை, கால், முகம், வாய், தலை, காது எல்லாவற்றையும் தண்ணீரில் கழுவி சுத்தமாக்கிய பிறகுதான் கடவுளைத் தொழுவார். தெய்வம் எப்போதும் எந்த இடத்திலும் இருக்கும். உலகங்களான எல்லா உலகங்களிலும். அந்த தெய்வத்தை வணங்க வேண்டும். நமஸ்கரிக்க வேண்டும். ஐந்து நேரங்களில் ஒரு நேரம்கூட கடவுளைத் தொழாமல் இருக்க மாட்டார். ரம்ஸான் மாதத்தில் முப்பது நாட்களும் அவளின் தந்தை ஆகாரம், தண்ணீர் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு நோன்பு இருப்பார். விதிமுறைகளை அப்படியே பின்பற்றுவார். அவளின் தந்தைக்கு ஹஜ் யாத்திரை போக வேண்டுமென்ற ஆசை இருக்கவே செய்தது. ஆனால், அது குஞ்ஞுபாத்தும்மாவின் திருமணத்திற்குப் பிறகு மட்டுமே சாத்தியமாகக்கூடியது.

திருமணக் காரியம் மிகவும் நெருங்கி வந்தது. வீட்டில் எப்போதும் விருந்துதான். கிட்டத்தட்ட எட்டு வெற்றிலைக் கட்டாவது கட்டாயம் வேண்டும். அவளின் தந்தை அப்படியொன்றும் அதிகமாக வெற்றிலை போடக்கூடியவர் இல்லை.

ஆனால், அவளின் தாய் நன்றாக வெற்றிலை போடக்கூடியவளே. அவளின் தாய்க்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் நூறு தளிர் வெற்றிலையாவது கட்டாயம் வேண்டும். வெற்றிலை போடுவதும், மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதும்தான் அவளின் அன்னைக்குப் பெரிய வேலையே. வெற்றிலைப் பெட்டிக்கு அருகில் அனைத்து ஆபரணங்களையும் அணிந்து, பட்டாலான ஆடைகளை அணிந்து, மெத்தைப் பாயில் அவளின் தாய் பந்தாவாக அமர்ந்திருப்பாள். நிலத்தில் கால் வைப்பதில்லை. மிதியடி இல்லாமல் அவளின் தாய் நடக்க மாட்டாள். தாத்தாவுக்குச் சொந்தமான யானையின் கொம்புகளைக் கொண்டு உண்டாக்கி யவைதான் அவள் தாயின் இரண்டு மிதியடிகளும். மிதியடிகள் எப்போதும் அவளுக்குப் பக்கத்திலேயே இருக்கும்.

வெற்றிலை போடுவதற்கும் அவளுடன் பேசிக் கொண்டிருப் பதற்கும் சதா நேரமும் பெண்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவளின் தாய் பேசிக்கொண்டே இருப்பாள். பேசுவதற்கு ஒன்றும் பெரிதாக விஷயங்கள் இல்லை. ஒன்று- குஞ்ஞுபாத்தும்மா வைப் பற்றி ஏதாவது பேசுவாள். இல்லாவிட்டால் குஞ்ஞு பாத்தும்மாவின் தந்தையுடன் பிறந்த ஏழு அத்தைகளைப் பற்றி பேசுவாள். பெரும்பாலும் குஞ்ஞுபாத்தும்மாவின் கன்னத்தில் இருக்கும் கறுப்பு மருவைப் பற்றித்தான் அவளின் பேச்சு இருக்கும்.

“இதுதான் அதிர்ஷ்ட மருன்றது.” அவளின் தாய் கூறுவாள்: “என்ன இருந்தாலும் சும்மா இந்த மரு வந்திருக்குமா? யானை மக்காரோட செல்ல மகளோட செல்ல மகளாச்சே!” அதோடு விடாமல் அவள் தொடர்ந்து சொல்லுவாள்: “அஞ்சு பேரைப் பெத்தேன். கடைசியில என்கிட்ட படைச்சவன் தங்க வச்சது ஒண்ணே ஒண்ணைத்தான்.” அதற்குப் பிறகு குஞ்ஞுபாத்தும்மாவின் ஆபரணங்களைப் பற்றி பேச ஆரம்பிப்பாள்: “சொல்லு பெண்ணே... இந்த கல்யாணத்தை நல்ல முறையில நடத்தணுமா இல்லியா?” தொடர்ந்து கொஞ்சம் கோபம் கலக்க பேசுவாள்: “பிறகு... கல்யாணத்துக்கு இங்கே வாப்பாவோட ஆளுங்க வரலைன்னாகூட குஞ்ஞுபாத்தும்மாவோட கல்யாணம் நல்லாவே நடக்கும். என்ன இருந்தாலும் யானை மக்காரோட செல்ல மகளோட செல்ல மகளாச்சே!” விஷயம் எப்படியோ ஒரு முடிவுக்கு வருகிறபோது, ஏதாவது கூறும்படி அவளின் தாய் பெண்களில் ஒருத்தியிடம் கூறுவாள்:

“சொல்லு பெண்ணே!”

பெண்கள் கூறுவார்கள். இவ்வாறு பெண்களிடமிருந்து குஞ்ஞுபாத்தும்மா ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். அந்த விஷயம் குஞ்ஞுபாத்தும்மாவை மிகவும் கவலை கொள்ளச் செய்தது. அவள் அதைக் கேட்டு மன வருத்தம் கொண்டாள். சொல்லப் போனால் அந்தச் செய்தியைக் கேட்டு அவள் கோபப்பட்டாள்.

குஞ்ஞுபாத்தும்மா கேட்டு வருத்தம் கொண்ட செய்தி இதுதான்:

பக்கத்திலும் அந்த ஊரிலும் உள்ள பெரும்பாலான வீடுகளில் நான்கும் ஐந்தும் வயதுடைய குழந்தைகள் இருந்தார்கள். ஒரு புதிய தலைமுறை இப்படி உருவாகி வளர்ந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி குஞ்ஞுபாத்தும்மா ஒன்றும் கூறுவதற்கில்லை. ஆனால், அவர்களின் பெயர்கள்! அதைக்கேட்டுத்தான் குஞ்ஞுபாத்தும்மா மிகவும் கவலை கொண்டாள். வெறும் சுமை தூக்குபவர்கள், மீன் பிடிப்பவர்கள், சாதாரண பிச்சைக்காரர்கள்- இவை எல்லாம் எதற்கு- ஊரில் இருக்கும் பெரும்பாலான முஸ்லிம் வீடுகளிலும் ஒவ்வொரு குஞ்ஞுபாத்தும்மாக்கள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு அடிமைமார்கள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு குஞ்ஞுதாச்சும் மாக்களும் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு மக்காருகளும் இல்லாமல் இல்லை.

எல்லா உலகங்களையும் படைத்த கடவுளே! என்ன செய்வது? வெட்கமும் மானமும் இருக்கும்பட்சம், அவர்களின் குழந்தை களுக்கு வேறு பெயர்கள் வைத்திருக்கக் கூடாதா? இருந்தாலும், குஞ்ஞுபாத்தும்மாவிற்கு ஒரு உலக ரகசியம் அப்போதும் சரியாகப் புரியவில்லை. பணமும் புகழும் உள்ளவர்களின் பெயர்களை அவை இரண்டும் இல்லாதவர்கள் உபயோகிப்பார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel