Lekha Books

A+ A A-

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 9

en thathavukku oru yanai irunthathu

இருந்தாலும் அவள் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் ஆகாயத்தையே பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பாள். அப்போது அவளின் தாய் அவளை உள்ளே அழைப்பாள். அங்கே அப்படி நின்று கொண்டிருக்கக் கூடாது! யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள்?

“ஆகாயத்துல யாரு உம்மா இருக்காங்க?”

அவளின் தாய் கூறுவாள்:

“இஃப்ரீத்தும், ஜின்னும், சைத்தானும்...”

ஆகாயத்தில் பறந்து போகிற ஏதாவது கண்ணுக்குத் தெரியாத உயிர் அவளைப் பார்த்துவிட்டால்...?

கண்ணால் காண்பதுபோல ஆகாயம் வெறுமனே இல்லை. மலக், ஜின்னு, இஃப்ரீத், சைத்தான்- இவை போதாதென்று இப்லீஸ் என்ற பகைவனும் ஆகாயத்தில் பறந்து திரிவார்கள். அப்படிப் போய்க் கொண்டிருக்கும்போது குஞ்ஞுபாத்தும்மாவை அவர்கள் பார்க்க நேர்ந்தால்- சிலர் மோகம் உண்டாகி அவளின் உடலுக்குள் புகுந்து கொள்வார்கள்.

அவள் உள்ளே போவாள்.

மனிதர்களோ, மலைகளோ, ஜின்னோ யாராக இருந்தாலும் தன்னைப் பார்ப்பதைப்பற்றி அவளுக்கொன்றும் இல்லை. இருந்தாலும் அவளொரு முஸ்லிம் பெண்ணாயிற்றே!

அவள் ஒரு கைதியைப்போல் ஆகிவிட்டாள். காற்றும் வெளிச்சமும் அவளுக்குக் கிடையாது. அவள் மனதிற்குள் அழுதாள். ஆடைகள் அவளையும் மீறி அவிழ்கின்றன. அவள் என்னவெல்லாமோ கனவுகள் கண்டு தூக்கம் நீங்கி எழுந்து விடுகிறாள். அந்தக் கனவுகளை யாரிடமும் சொல்ல முடியாது. அவளின் ஒவ்வொரு அணுவையும் அந்தக் கனவுகள் சூடு பிடிக்கச் செய்கின்றன. இப்படி கனவுகள் கண்டே குஞ்ஞுபாத்தும்மா இருபத்தொரு வயதை அடைந்து விட்டாள். அப்போது அவளின் வாழ்க்கையில் சில சம்பவங்கள் நடக்கின்றன.

அவள் அணிந்திருந்த தங்க நகைகள் அனைத்தையும் அவளின் தந்தை அவளிடமிருந்து வாங்கினார். அவளின் தாய்தான் அவை எல்லாவற்றையும் கழற்றியது. எல்லாவற்றையும் எடைபோட்டு விற்று வழக்கு நடத்தப்படுகிறது.

குஞ்ஞுபாத்தும்மாவின் காதுகளும், கழுத்தும், இடுப்பும், கைகளும், கால்களும் ஒன்றுமே இல்லாமல் ஆயின. எப்போது பார்த்தாலும் அவளின் தந்தையும், அவரைச் சுற்றியுள்ள கூட்டமும் நீதிமன்றமே கதி என்று இருந்தார்கள். வழக்கு நடந்துகொண்டே இருந்தது. கடைசியில் உடலையே நடுங்கச் செய்யும் அந்தத் தீர்ப்பும் கூறப்பட்டது. வழக்கு அவளின் தந்தைக்கு எதிராக முடிந்தது.

அவமானத்தையும், தோல்விகளையும் அவர்கள் சந்திக்க வேண்டிய நிலை உண்டானது. அவர்கள் போக வேண்டியதுதான்...

எங்கே?

ஒரு மாலை நேரம். அன்று சீக்கிரமே நிலவு உதித்து மேலே வந்தது.

பிறந்து வளர்ந்த வீட்டிடமிருந்து குஞ்ஞுபாத்தும்மா இறுதி விடை பெற்றாள். அவர்கள் புறப்பட்டார்கள். உயரமான, நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் அவளின் தந்தை முன்னால் நடக்க, தலையைக் குனிந்தவாறு அவளின் தாய் பின்னால் தொடர, எந்தவித உணர்ச்சியும் இல்லாமலே குஞ்ஞுபாத்தும்மா அவர்கள் பின்னால் நடந்தாள். மக்கள் அனைவரும் பார்க்க பொதுச் சாலையில் அவர்கள் இறங்கி பள்ளிவாசலைத் தாண்டி நதிக்கரையை அடைந்தார்கள்.

உலகத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால்... அவர்களின் இறந்த காலம், நிகழ்காலம்... எல்லாமே தகர்ந்துபோய் விட்டன. இருந்தாலும்... நிலவொளியில் நதியும் மணல் வெளியும் தெளிவாகத் தெரிந்தன... நீரில் ஆட்கள் குளித்துக்கொண்டிருந்தனர். மணல் பரப்பில் சிலர் கூட்டமாக அமர்ந்து சிரித்து மகிழ்ந்து உல்லாசமாக இருந்தனர். உலகத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால், வட்டனடிமையின், அவர் மனைவியின், அவர் மகளின் வாழ்க்கைதான் மொத்தத்தில் தகர்ந்துபோய்விட்டது.

உலகத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை.

குஞ்ஞுபாத்தும்மா தன் தாய், தந்தையை அடியொற்றி எங்கே போகிறோம் என்பதே தெரியாமல் நடந்து சென்றாள். அவளின் கால்கள் தளர்ந்தன. உடல் தளர்ந்தது. இருந்தாலும் அற்புதங்கள் நிறைந்த உலகம்... மக்கள் நடமாட்டமே இல்லாத சாலை.

நிலவொளியில் அவள் பின்னால் நடந்து சென்றாள். போகும் இடம் எது? இந்த இரவு முடியாதா?

4

ழைய இரண்டு மிதியடிகள்

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு எதற்கு என்று தெரியாமலே சந்தோஷம் உண்டானது. இந்த நிலைக்காக வருத்தப்படுவதா இல்லையா என்பதே புரியாமல் ஒரு மகிழ்ச்சி. நடந்திருப்பது ஒரு நடக்கக் கூடாத சம்பவம். இருந்தாலும் மக்களைக் காணலாம். சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். சூரிய வெளிச்சத்தில் நிற்கலாம். நிலவொளியில் நனையலாம், ஓடலாம், குதிக்கலாம், பாட்டு பாடலாம். பாட்டு எதுவுமே தெரியாது என்றாலும்- எல்லா விஷயங்களிலும் அவளுக்கு சுதந்திரம் இருக்கிறது. மலக், ஜின்னு, இஃப்ரீத், இன்ஸ்- யார்வேண்டுமானாலும் வரட்டுமே!

ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். யாருமே வரவில்லை! பணமில்லாதவர்களை யாருக்கு வேண்டும்?

அந்த விஷயத்தில் குஞ்ஞுபாத்தும்மாவால் ஆணித்தரமான முடிவுடன் இருக்க முடியவில்லை. பணமில்லையென்றாலும் அவளிடம் இளமை இருந்தது. அழகு இருந்தது. சில ஆண்கள் அவள் மீது விருப்பம் காட்டினார்கள். சிலர் அவளைப் பார்த்து கண்ணடிப்பார்கள். சிலர் நாணயங்களைக் காட்டுவார்கள்.

அது எதுவும் நல்லதிற்கில்லை என்பது அவளுக்குத் தெரியும். அழிவுப் பாதைக்கான அழைப்பு அது! அவர்களை என்ன செய்வது? அவள் யாருடைய பார்வையிலும் படாமல் புளிய மரத்தின் நிழலில் வந்து உட்கார்ந்திருப்பாள். அதுவும் இல்லாவிட்டால் தாமரைக் குளத்தின் அருகில் வந்து அமர்ந்திருப்பாள்.

குளத்தில் தண்ணீர் கடும் நீல நிறத்தில் இருக்கும். ஏராளமாக வெள்ளை, சிவப்பு நிறங்களில் தாமரைப் பூக்கள் மலர்ந்திருக்கும். நீரோடு சேர்ந்து பச்சை நிறத்தில் உள்ள அகலமான இலைகள் ஒளிர்ந்து கொண்டிருக்கும். மலர்ந்து நிற்கும் பூக்களை குளிர்ந்த காற்று தாலாட்டிக் கொண்டிருக்கும்.

அவள் அங்கேயே உட்கார்ந்திருப்பாள். முடிவற்ற ஆகாயம். பெரிய உலகம்.

வீடு பக்கத்திலேயே இருந்தது. அது வீடு என்று குஞ்ஞு பாத்தும்மாவுக்குத் தோன்றியதே இல்லை. தோலை நீக்கியது மாதிரி வெறும் செங்கல்லாலான பழைய ஒரு சிறு வீடு. இரண்டு அறைகளும் ஒரு அடுக்களையும் அதில் இருந்தன. வீட்டின்மேல் வைக்கோல் வேயப்பட்டிருந்தது. கூரையில் ஆங்காங்கே நெற்கள் முளைத்து பச்சையாக நின்றிருந்தன.

வீட்டுக்குள் பொருட்கள் அப்படியொன்றும் அதிகமாக இல்லை. இரண்டு மூன்று பாய்களும் தலையணைகளும் இருந்தன. எல்லாருடைய ஆடைகளையும் வைக்கக்கூடிய ஒரு பெட்டி. பிறகு... இரண்டு மூன்று மண்ணெண்ணெய் விளக்குகள்.

சமையலறையில் இரண்டு மூன்று மண் பாண்டங்களும், குழம்பு வைப்பதற்கான சில சட்டிகளும். உண்பதற்கும் கஞ்சி குடிப்பதற்கும் பயன்படுத்தப்படும் தொப்பி சட்டிகள்.

அந்தச் சிறிய அறைக்குள்தான் குடிக்கவோ, சாப்பிடவோ செய்ய வேண்டும்.

பழைய வீட்டிலிருந்து எதையும் கொண்டு வரவில்லை. வெறுங்கையோடுதான் அவர்கள் வந்ததே. இருந்தாலும் தாத்தாவுக்குச் சொந்தமான அந்தப் பெரிய ஆண் யானையின் கொம்பால் செய்யப்பட்ட இரண்டு மிதியடிகளையும் அவளின் தாய் எப்படியோ இங்கு கொண்டு வந்துவிட்டாள். வரும்போது தன் தாயின் கையில் அது இருந்ததா என்பதை குஞ்ஞுபாத்தும்மா கவனிக்கவில்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel