Lekha Books

A+ A A-

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 13

en thathavukku oru yanai irunthathu

கையில் கொஞ்சம் பணம் இருக்கும். தூரத்தில் எங்கோ இருக்கும் அந்தச் சந்தைக்குச் சென்று வாழைக் குலையோ, கிழங்கோ, சேனையோ, பாக்கோ, தேங்காயோ ஏதாவது வாங்கி விற்பதற்குத்தான்.

“செம்மீன் அடிமை பவுன் வாங்க போயாச்சாடி?” என்று கேட்டவாறுதான் அவளின் தாய் படுக்கையை விட்டே எழுந்திருப்பாள். பவுன்... முன்பு எவ்வளவோ பார்த்ததுதான். அவள் எழும்போது, காகங்கள் கரைந்துகொண்டிருக்கும். நேரம் வெளுத்து, வெயில் வர ஆரம்பித்திருக்கும். அவளின் தாய்க்கு கடவுள் மேல்கூட கோபம்தான். தொழுகை எதுவும் செய்வதே இல்லை. எதற்காகத் தொழ வேண்டும்?

“ஓ... எத்தனையோ முறை தொழுதாச்சு. இருந்தாலும் என்ன பிரயோஜனம்? அடியே, தண்ணியைச் சுட வச்சிட்டியா?”

தண்ணீர் சூடாகி தயாராக இருக்கும். குஞ்ஞுபாத்தும்மா சொல்வாள்:

“தண்ணீர் சூடு பண்ணி வச்சிருக்கேன்மா!”

சுடு நீர் இல்லையென்றால், அவளின் தாய் குளிக்க மாட்டாள். முன்பு நல்ல வசதியுடன் இருந்த காலத்தில் முழுக்க முழுக்க வென்னீரில்தானே அவள் குளித்தது! அதனால் ஒவ்வொரு நாளும் தவறாமல் குஞ்ஞுபாத்தும்மா அம்மாவிற்கு சுடு நீர் தயார் பண்ணி வைத்துவிடுவாள். இருந்தாலும், அதிலும் அவளின் தாய் குற்றம் கண்டு பிடிக்காமல் இருக்கமாட்டாள். ஒன்று- சூடு அதிகமாகிப் போய்விட்டது என்பாள். இல்லாவிட்டால் தண்ணீர் போதுமான அளவிற்கு சூடாகவில்லை என்பாள். குளித்து முடித்தால், அவளின் தாய் சலவை செய்யப்பட்ட ஆடையை அணிந்தாக வேண்டும். பாலும் சர்க்கரையும் போட்ட சுவையான தேநீர் அருந்தியாக வேண்டும். நெல் கலந்து செய்யப்பட்ட தடிமனான பத்திரி சாப்பிட்டே ஆக வேண்டும். ஆடைகளைப் பொறுத்தவரை தன்னுடைய தந்தையின், தாயின், தனது ஆடைகளை முதல் நாள் மாலை நேரத்திற்கு முன்பே உட்கார்ந்து தோய்த்து காயப் போட்டிருப்பாள். தாய் குளித்து முடித்தவுடன் அவளுடைய ஆடைகளை எடுத்து அவள் தந்துவிடுவாள். பிறகு... தேநீர், பலகாரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால்... பனம் சர்க்கரை கலந்த, பால் இல்லாத தேநீர் இருக்கும். தேநீரில் இனிப்புக்குப் பதிலாக உப்பு சேர்த்துக் குடிக்கலாம் என்பது குஞ்ஞுபாத்தும்மாவின் கண்டு பிடிப்பு. அவளின் தாய்க்கு இதெல்லாம் பிடிக்காது. வேறு எதுவும் இல்லாததால் “கெட்ட நேரத்துல பொறந்தவளே” என்று சொல்லியவாறு அதை அவள் குடிப்பாள். ஆரம்பத்தில் கையில் உள்ள சட்டியை மண்ணில் போட்டு உடைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் மண்சட்டி வாங்குவதற்கு பணத்திற்கு எங்கே போவது? அவளின் தந்தை ஒருநாள் சொன்னார்:

“இனிமேல் அவளுக்கு செரட்டையில கொடுத்தால் போதும்...”

அவளின் தாய் அன்று வாய்விட்டு அழுதுவிட்டாள். அவள் சொன்னாள்:

“மைதீனே... கடவுளே... உன் காதுல இது விழலியா? முத்நபியே... நீ இதைக் கேட்டியா? யானை மக்காரோட செல்ல மகளுக்கு செரட்டை போதுமாம்... சொல்றாரு!”

அதற்கும் குஞ்ஞுபாத்தும்மாவைத்தான் குறை சொல்லுவாள் அவளின் தாய்.

“நீ அதிர்ஷ்டமே இல்லாதவ. தோஷம் பிடிச்சவ. உன் கன்னத்துல இருக்குற மருதான் எல்லா கஷ்டங்களுக்கும் காரணம்!”

அவளின் கன்னத்தில் இருக்கும் அந்தக் கறுப்பு மருவைக் கிள்ளி வீசி எறிய முடியுமா?

இதைக் கேட்டதும் அவளின் தந்தையின் கண்கள் “ஜிவ்”வென்று சிவந்துவிடும். கடுமையான கோபத்துடன் மெதுவான குரலில், “அடியே குஞ்ஞுபாத்தும்மா!” என்று அழைப்பார். அந்த சத்தத்தில் ஒரு பயமுறுத்தல் இருக்கும். அவளின் தாய் எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பாள். தந்தை வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டவுடன் அம்மா ஆரம்பித்துவிடுவாள்:

“கெட்ட நேரத்துல பொறந்தவளே! அதிர்ஷ்டம் இல்லாதவளே! பீடை பிடிச்சவளே! உன்னை பாம்பு கடிக்கப்போகுது! உன்னை எந்த நிமிஷத்துல பார்த்தேனோ...”

இந்த விதத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக் கொண்டிருப்பாள் அந்த பெற்ற தாய். வழியில் நடந்து செல்லும் சிறுவர்கள் கூக்குரலிட்டு அழைப்பார்கள். குஞ்ஞுபாத்தும்மா சொல்லுவாள்:

“அம்மா... கொஞ்சம் மெதுவா...”

“சத்தமா சொல்லுவேன்டி... எனக்கு லெயினஸ் இருக்குடி சத்தமா பேசுறதுக்கு...”

இப்படித்தான் ஒருநாள் அவளின் தாய் உரத்த குரலில் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் காதில் வாங்கிய அவளின் தந்தை வெறுமனே அமைதியாக இருக்கும்படி தன் மனைவியிடம் கூறினார். ஆனால், அவள் அதைக் காதில் வாங்கினால்தானே! அவளின் தந்தை மீண்டும் கூறினார். பிறகு கண்கள் சிவந்த அவர் எழுந்து சென்றார்...

அதைப் பார்த்து கேலியுடன் அவளின் தாய் சிரித்தாள். கிண்டலான குரலில் அவள் சொன்னாள்:

“செம்மீனடிமை யானை மக்காரோட செல்ல மகளை பயமுறுத்தலாம்னு பார்த்தா நடக்குமா?” என்று அவள் முழுமையாக சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் ஒரு பயங்கர சம்பவம் நடந்தது.

அவளின் தந்தையின் வலது கை அவளின் தாயின் சங்குப் பகுதியைப் பிடித்தது. தொண்டைப் பகுதியில் இருந்த அந்தக் கை வேகமாக இறுகியது. அவளின் தாய் கண்களால் வெறித்தாள். பற்களைக் கடித்தவாறு அவளின் தந்தை சொன்னார்:

“நீ செத்துத் தொலை!” மனைவியும் கணவணும்!

ஒரு சிறு குழந்தையைத் தூக்குவதுபோல அவளின் தந்தை அவள் தாயின் கழுத்தை ஒரே கையால் பிடித்துத் தூக்கினார். அப்படியே தூக்கிய வேகத்தில் “பொத்” என்று போட்டார். தாயின் மிதியடிகள் இரண்டையும் மிதித்து வெளியே தூக்கிப் போட்டார். அவளின் தாய் அசைவே இல்லாமல் கிடந்தாள்!

இவ்வளவு விஷயங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. குஞ்ஞுபாத்தும்மா என்ன செய்வதென்று தெரியாமல் சிலை என நின்றுவிட்டாள். உலகமெல்லாம் இருண்டு போய் விட்டதைப்போலவும், ஒரு மிகப்பெரிய ஆழமான குழிக்குள் தான் விழுந்து கிடப்பதைப்போலவும் அவள் உணர்ந்தாள்... தன் தாயை தன் தந்தை கொலை செய்துவிட்டார்! அவளுக்கு நாக்கே அசையவில்லை. ஓசையே இல்லாமல் அவள் நின்று அழுதாள்.

அவளின் தந்தை சொன்னார்:

“மகளே... அழாதே!”

குஞ்ஞுபாத்தும்மாவால் அழுகையை அடக்க முடியவில்லை. அவள் தேம்பித் தேம்பி அழுதாள். இதயமே வெடித்துப்போகிற மாதிரி வாய்விட்டு அழுதாள். ரப்புல் ஆலமீன்! பிரபஞ்சங்களைப் படைத்த கடவுளே! இனி என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?

அடிக்கடி வீட்டில் ஏதாவது அசம்பாவிதமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. உதவிக்கு யாருமே வரவில்லை. தான் மட்டும் தனியாகிவிட்டதுபோல் அவள் உணர்ந்தாள். அம்மாவே போய்விட்டாள்... கொஞ்ச நேரத்தில் அப்பாவின் கையில் விலங்குகளைப் போட்டு போலீஸ்காரர்கள் அவரைக் கொண்டு போகப் போகிறார்கள்!

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு உலகில் உதவிக்கு என்று யாரும் இல்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel