Lekha Books

A+ A A-

சோதனைக்கூடம் - Page 6

Sodhanaikoodam

ரேபதியை அவனுடைய ஆராய்ச்சியின் இறுதிவரை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்றால், குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாய்களையாவது நீங்கள் செலவழிக்க வேண்டியது இருக்கும்.''

"இப்போதும் என்னுடைய கையில் பணம் மீதம் இருக்கிறது.''

"ஆனால், நீங்கள் சந்தோஷப்படுத்த முயற்சிக்கும் சொர்க்கத்தில் இருக்கும் அந்த மனிதர் இவற்றையெல்லாம் பார்த்து சந்தோஷப்படுவாரா? இறந்த ஆன்மாக்கள் அவர்களுக்கு விருப்பமான யாருடைய கழுத்தையாவது போய் பிடித்துக் கொள்வார்கள் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.''

"நீங்கள் பத்திரிகை படிப்பதில்லையா? ஒரு மனிதன் இறக்கும் போது, அவனுடைய நல்ல விஷயங்களும் புண்ணிய செயல்களும் தனித்தனியாகப் பிரித்துப் பட்டியல் போடப்பட்டு எழுதி வைக்கப்பட்டிருக்கும். அந்த மனிதனின் மதிப்பிற்கு மேலே சிறிது நம்பிக்கையையும் சேர்த்து வைப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை. எவ்வளவோ பணத்தைச் சம்பாதித்து மலையைப்போல சேர்த்து வைத்திருக்கும் மனிதன் நிறைய பாவங்களையும் சேர்த்து வைத்திருப்பான். அந்தப் பண மூட்டையைச் சற்று பிடித்துக் குலுக்கி பணத்தை வெளியே கொண்டு வரவோ, அந்தப் பாவச் சுமையைக் குறைக்கவோ முயற்சிக்காத மனைவிகள் பிறகு என்ன காரணத்திற்காக மனைவிகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்? பணம் நாசமாகப் போகட்டும். எனக்கு அதற்கான தேவை இல்லை!''

உணர்ச்சிவசப்பட்டு பேராசிரியர் எழுந்து நின்றார். "நான் என்ன கூறுவது? நாங்கள் சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பவர்கள். வேறு பல சேர்க்கைகளும் அதில் இருந்தாலும், அது தனித் தங்கம் தான். நீங்கள் மறைந்து கிடக்கும் தங்கக் கட்டி... இறுதியாக இப்போது இதோ நான் உங்களைக் கண்டு பிடித்திருக்கிறேன். சொல்லுங்க... இப்போ நான் என்ன செய்ய வேண்டும்?''

"அந்த இளைஞனின் சம்மதத்தைப் பெற்றுத் தரவேண்டும்!''

"நான் முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் அது அவ்வளவு எளிதான ஒரு விஷயமாக இருக்காது. உங்களுடைய இந்த ஆசை வாக்குறுதியில் வேறு யாராக இருந்தாலும் மயங்கி விழுந்து விடுவார்கள்!''

"இந்த விஷயத்தில் அவனுடைய பக்கத்தில் எப்படிப்பட்ட தடைகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது?''

"ஜாதகப்படி இளம் வயதிலிருந்தே ஒரு பெண் கிரகம் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. எந்தவொரு சுய உணர்வும் இல்லாததைப் போல இடையில் அவ்வப்போது அது அவனுடைய பாதையில் வந்து தடுப்பதுண்டு.''

"அப்படி எதையும் சுற்றி வளைத்துக் கூறாதீர்கள். உண்மையிலேயே விஷயம் என்ன?''

"அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடாது மிசஸ் மல்லிக். மருமக்கத்தாய முறையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட உறவு முறையில் ஆணைவிட பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம். அந்த திராவிட நாகரீகத்தின் சிறிய ஒரு அலை வங்காளத்திலும் ஒரு காலத்தில் பரவியிருக்கிறது.''

"ஆனால், அந்தப் பொன்னான காலகட்டம் ஒரு பழைய கதை...'' - சோஹினி சொன்னாள்: "அது இப்போது சில மனங்களில் ஆழத்தில் வேரூன்றி அலைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும். ஆனால், அதன் கடிவாளம் இப்போதும் ஆண்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள்தான் எங்களுடைய காதுகளில் இனிய வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் கன்னத்தில் அடித்து தகர்ப்பதும் அவர்கள்தான்.''

"உங்களுடைய வார்த்தைகள் அபாரமாக இருக்கின்றன! ஆனால், உங்களைப் போன்ற பெண்கள் மருமக்கத்தாய முறையை மீண்டும் கொண்டு வந்தால், உங்களுடைய புடவைகளைப் பற்றிய ஒரு அட்டவணையைத் தயார் பண்ணித் தர எனக்குத் தயக்கம் இல்லை. எங்களுடைய கல்லூரியின் முதல்வரை உங்களுடைய வீட்டில் சோளம் அரைக்க விடுவதற்குக்கூட நான் தயாராக இருக்கிறேன். வங்காளிகளின் சமூகத்தில் மருமக்கத்தாய முறை வெளிப்படையாகத் தெரியவில்லை என்று மனவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால், அது நம்முடைய குருதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. வேறு ஏதாவது வம்சத்தைச் சேர்ந்த ஆண்கள் கவலையுடன் "அம்மா... அம்மா..." என்று அழைப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? ரேபதியின் போதி மரத்திற்கு மிகவும் உயரத்தில், பயமுறுத்தக்கூடிய ஒரு பெண் உருவம் இருக்கிறது என்ற விஷயத்தை நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்!''

"அவனுக்கு ஏதாவது இளம் பெண்ணுடன் காதல்...?''

"அப்படியென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவனுடைய மனதிற்குள் தைரியம் இருக்கிறது என்று அதற்கு அர்த்தம் உண்டாகி விடுமே? ஒரு இளம்பெண்மீது காதல் வயப்பட்டு சுய உணர்வை இழந்த ஒரு இளைஞன்- இந்த வயதில் இருக்கும் இளைஞர்களுக்கு அது ஒரு மோகமான விஷயமாயிற்றே! ஆனால், அதற்கு பதிலாக அவன் வயதான ஒரு பெண்ணின் ஜெப மாலையில் ஒரு மணியாக மட்டுமே எஞ்சி நிற்கிறான். அவனுடைய இளமையாலோ திறமையாலோ அறிவியல் அறிவாலோ- எந்தவொன்றாலும் அவனை அந்தப் பொருளின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு வர முடியவில்லை.''

"ஒருநாள் நான் அவனை தேநீர் பருகுவதற்காக அழைக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம்மைப் போன்ற புனிதமற்ற பிறவிகளுடன் இருந்து தேநீர் பருகுவதற்கு அவன் தயாராக இருப்பானா?''

"நாம் புனிதமானவர்கள் இல்லையா? அவன் அதற்குத் தயாராகவில்லையென்றால், நான் அவனை அடித்து உதைப்பேன். கடுமையாக உலுக்கி எடுத்து விடுவேன். அத்துடன் அவனிடம் எஞ்சியிருக்கும் பிராமணிய உணர்வின் இறுதியான தொடர்பற்ற விஷயமும் தெறித்துப் போய்விடும். இனி இன்னொரு விஷயம்... உங்களுக்கு அழகான ஒரு மகள் இருக்கிறாள் அல்லவா?''

"இருக்கிறாள்... அந்த ஊர் சுற்றிப் பெண் நல்ல அழகு கொண்டவளாகவும் இருக்கிறாள். அந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை!''

"ஓ... வேண்டாம். என்னைத் தவறாக நினைக்காதீர்கள். அழகு வாய்ந்த இளம் பெண்களுக்காகத்தான் நானே இருக்கிறேன். எனக்கு அது ஒரு நோயைப்போல. என்னால் அதை விட முடியவில்லை. ஆனால் ரேபதியின் உறவினர்கள் நகைச்சுவை உணர்வு இல்லாத பிரிவைச் சேர்ந்தவர்கள். உங்களுக்குத் தெரியுமா? பார்வையில் அவர்கள் நம்மை பயமுறுத்தி விடுவார்கள்!''

"பயப்பட வேண்டாம். எங்களுடைய ஜாதியைச் சேர்ந்த ஒரு பையனுடன் நான் அவளுடைய திருமணத்தை நிச்சயம் செய்து விட்டேன்!''

அது ஒரு மிகப் பெரிய பொய்யாக இருந்தது.

"நீங்கள் ஜாதி மாறித் திருமணம் செய்தீர்கள் அல்லவா?''

"ஆமாம்... அதன் மூலம் எனக்கு எவ்வளவோ ஆட்களுடன் போராட வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது. என்னுடைய சொத்தைப் பத்திரமாகக் காப்பாற்றுவதற்காக சட்டப்போர் நடத்த வேண்டிய சூழ்நிலை எனக்கு உண்டாகியிருக்கிறது. அதில் எப்படி வெற்றி பெற்றேன் என்பதை நான் யாரிடமும் கூறியதில்லை!''

"அதைப் பற்றி நான் சில விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களையும் உங்களுடைய எதிரியின் க்ளார்க்கையும் இணைத்து ஆட்கள் பல வதந்திகளையும் பரப்பிவிட்டிருந்தார்கள். இறுதியில் நீங்கள் வழக்கில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். அந்த அப்பாவி மனிதன் தூக்கில் தொங்கி இறந்துவிட்டார்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel