Lekha Books

A+ A A-

சோதனைக்கூடம் - Page 4

Sodhanaikoodam

அவளை ஒரு "பெண் நந்த கிஷோ''ராக மாற்ற வேண்டும். ஒரு சாதாரண இளம் பெண்ணால் அது முடியாத விஷயம்'' என்பது அவனுடைய பதிலாக இருந்தது. அப்படியில்லையென்றால், சில நேரங்களில் அவனுடைய பதில் இப்படி இருந்தது: "நான் வேறு வேறு ஜாதிகளுக்கு இடையே திருமணம் செய்து கொள்வதற்கு ஆதரவாளன் இல்லை.''

"இப்படிக் கூறுவதன் மூலம் நீங்கள் என்ன கூற நினைக்கிறீர்கள்?''

"கணவன் ஒரு எஞ்ஜினியராகவும் மனைவி வீட்டில் உட்கார்ந்து கொண்டு உருளைக்கிழங்கின் தோலை உரித்துக் கொண்டிருக்கும் சாதாரண பெண்ணாகவும் இருப்பது... சட்டப்படி அது அனுமதிக்கக் கூடியதல்ல. நான் எப்போதும் அப்படிப்பட்ட திருமணங்களைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் எங்களுடைய ஜாதிகளுக்கிடையே ஒற்றுமை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஒரு மனைவிதான் வேண்டுமென்றால், மனைவியும் கணவனும் ஒரே நம்பிக்கை கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.''

2

மொத்தத்தில் கழுத்தை இறுக்கிய ஒரு அறிவியல் சோதனைக்கு மத்தியில் எப்போதோ, நடுத்தர வயதில் இருந்தபோது நந்த கிஷோரின் மரணம் நடைபெற்றது. சோஹினி அவனுடைய காரியங்களை மிகவும் ஒழுங்காகச் செய்து முடித்தாள். அப்பாவியான விதவைகளை ஏமாற்றுவதை மட்டுமே பழக்கமாகக் கொண்டிருக்கும் கேவலமான மனிதர்கள் அவளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். மிகவும் நெருக்கமான ரத்த உறவு கொண்டவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள்கூட அவளுக்கு எதிராக வழக்கு போட்டார்கள். அதன்மூலம் சட்டத்தின் மிகவும் முக்கியமான பகுதிகளைக்கூட சோஹினி மனப்பாடம் செய்து வைத்திருந்தாள். எல்லாவற்றுக்கும் மேலாக, சட்டம் தெரிந்தவர்களின் சமூகத்தில் அவள் பெண்ணுக்கே உரிய வசீகரத்தின் வலையை விரித்தாள். அந்த உலகத்தில் அவளுடைய திறமை மிகவும் கவனிக்கப்பட்டது. உறவுகளுடன் அவளுக்கு எந்தவொரு ஒட்டும் இல்லாமல் இருந்தது. ஒன்றிற்குப் பின்னால் ஒவ்வொன்று என்று அவள் வழக்குகளில் வெற்றி பெற்றாள். பொய்யான ஆதாரங்களை உண்டாக்கியதற்காக மிகவும் நெருக்கமான ரத்த உறவு கொண்ட ஒரு மனிதனை அவள் சிறைச்சாலைக்கு அனுப்பினாள்.

நீலிமா என்பது அவளுடைய மகளின் பெயர். நீலிமா என்ற பெயரை அவளே நீலா என்று மாற்றி வைத்துக் கொண்டாள். அடர்த்தியான நீல நிறத்தைக் கொண்ட ஒரு இளம் பெண்ணின் தாயும் தந்தையும் அவளுடைய நிறக் குறைவை மறைப்பதற்காக அந்தப் புனிதமான பெயரைச் சூட்டியிருக்கிறார்கள் என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது. அவள் மிகவும் பேரழகு படைத்தவளாக இருந்தாள். தங்களுடைய முன்னோடிகள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்று அவளுடைய தாய் பெருமையுடன் கூறினாள்.

காஷ்மீரின் வெள்ளைத் தாமரையைப் போல அவளுடைய தோல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவளுடைய கண்கள் நீலத் தாமரையின் இதழ்களைப் போல இருந்தன. அவளுடைய தலைமுடி தவிட்டு நிறத்தில், பொன்னைப் போல மின்னிக் கொண்டிருந்தது.

அவளைத் திருமணம் செய்து அனுப்பி வைக்க வேண்டிய நேரம் வந்தபோது, ஜாதியோ மதமோ உயர்குலமோ எதையும் கணக்கில் எடுக்க வேண்டிய பிரச்சினை எழவில்லை. ஏதாவதொரு இதயத்தைக் கவர்வது என்ற வழிமுறைதான் அவளுக்கு முன்னால் இருந்தது. புனித நூல்களில் கூறப்படும் விஷயங்கள் அனைத்தையும் அவளுடைய சிந்தனைத் திறமை தாண்டிச் சென்றது. முன்னோர்களின் மூலம் ஏராளமான சொத்துகள் உள்ள, நவீன கல்வியைக் கற்றிருக்கும் ஒரு மார்வாடி பையன், காமதேவன் உண்டாக்கிய கண்ணுக்குத் தெரியாத அந்த வலையில் விழுந்தான். ஒரு நாள் நீலா பள்ளிக்கூடத்தின் வெளிவாசலில் கார் வருவதை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்த போது, அந்தப் பையன் அவளைப் பார்க்க நேர்ந்தது. அதற்குப் பிறகு அந்தத் தெருவின் வழியாக அவன் பல முறை இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தான். இயல்பான பெண்களுக்கே இருக்கக்கூடிய உணர்வுகளைப் பின்தொடர்ந்து, அந்த இளம் பெண்ணும் சாதாரணமாக இருக்கக்கூடிய நேரத்தையும் தாண்டி அந்த வெளிவாசலில் நின்றிருந்தாள். அவளுடைய பார்வை மார்வாடி இளைஞனின் மீது மட்டுமல்ல- வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆண்பிள்ளைகளும் அங்கு சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மார்வாடி இளைஞன் மட்டும் கண்களை மூடிக்கொண்டு, திரும்பிச் செல்ல முடியாத அளவிற்கு அவள் விரித்த வலையில் மாட்டிக் கொண்டான்.

சிவில் சட்டப்படி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். சமூக சட்டங்கள் அவர்களை பாதிக்கவில்லை. ஆனால், அவர்களுடைய உறவு அதிக காலம் நீடித்து நிற்கவில்லை. மார்வாடி இளைஞனுக்கு விதி முதலில் மனைவியை அளித்தது. பிறகு, அந்த குடும்ப வாழ்க்கைக்கு மத்தியில் ஒரு நேர்கோட்டை வரைந்து, அவனுக்கு டைஃபாய்டு வரச் செய்தது. அதன் முடிவில் அவன் எல்லா பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை ஆனான்.

நல்லதும் கெட்டதுமான பல வகைப்பட்ட செயல்களின் மூலம் பிரச்சினைகளை உண்டாக்குபவர்கள் இருந்து கொண்டிருந்தார்கள். மகளுடைய குழப்பமான சூழ்நிலையின் ஆழத்தை சோஹினியால் புரிந்து கொள்ள முடிந்தது. இதே இளம் வயதில் தனக்கு இருந்த ஆவேசத்தைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். மகளுடைய காரியத்தைப் பற்றி சிந்தித்தபோது, அவளுக்கு கடுமையான பதைபதைப்பு உண்டானது. கல்வியை அளித்து, அவள் நீலாவைச் சுற்றிலும் கனமான வேலிகளை உண்டாக்க முயற்சி செய்தாள். அவளுக்குக் கல்வி கற்றுத் தருபவர்களில் ஆசிரியர் தேவையே இல்லை என்று அவள் முடிவெடுத்தாள். அதற்குப் பதிலாக மகளுக்கு ட்யூஷன் மூலம் கற்றுத் தருவதற்காக அவள் ஒரு ஆசிரியையை ஏற்பாடு செய்தாள். நீலாவின் வசீகரமும் அவளை பாதித்தது. ஆண்கள் மத்தியில் அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வெறித்தனமான நெருப்பை எழச் செய்தது. நீலாவின் ரசிகர்கள் அந்தத் தெருவில் வட்டமிட்டு நடந்து கொண்டிருந்தார்கள் என்றாலும், அந்தக் கதவு என்னவோ மூடியேதான் கிடந்தது. நீலாவிடம் நட்பு உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மற்ற பெண்கள் அவளை தேநீர் பருகுவதற்கும் டென்னிஸ் விளையாடுவதற்கும் திரைப்படம் பார்ப்பதற்கும் அழைத்தார்கள். ஆனால், அந்த அழைப்புகள் எதுவும் செயல் வடிவத்திற்கு வரவில்லை. தேனின் வாசனை நிறைந்த காற்று ஏராளமான காதலர்களை ஈர்த்தது. ஆனால், அந்த பாவம் நிறைந்த காதலர்களுக்கு சோஹினியிடமிருந்து விஸா கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அந்த இளம் பெண் சூழ்நிலை எதுவும் பொருந்தக்கூடிய விதத்தில் இல்லை என்பது தெரிந்தும், நல்ல ஒரு வாய்ப்பிற்காக சுற்றிலும் பார்த்தாள். பாடநூல் குழு அனுமதிக்காத பாட நூல்களை அவள் படித்தாள். ஓவியர்களுக்காக மட்டுமே உள்ளவை என்று ஒதுக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்து அவள் அவற்றைச் சேகரித்து வைத்தாள். இவை போன்ற விஷயங்கள் அவளுடைய புதிய ட்யூஷன் ஆசிரியைக்குப் பிடித்திருந்தன.

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel