Lekha Books

A+ A A-

சோதனைக்கூடம் - Page 10

Sodhanaikoodam

ஆனால், அவளுடைய மனதிலும் உடலிலும் நினைத்துப் பார்க்க முடியாத வசீகரத்தையும் வெப்பத்தையும் அவளுக்கே தெரியாமல் அள்ளித் தெளித்த ஒரு உருவம்... அந்த மனிதனிடம் இருந்த ஆண்மைத்தனம் அவளுடைய மனதை மிகவும் தொட்டது. தன்னுடைய மகளும் எதிர்ப்பு காட்ட முடியாத அந்த உணர்ச்சி மொழிக்கு அடிமையாவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை நினைத்தபோது அவளுக்கு சிறிதும் மன அமைதி உண்டாகவில்லை. இளமையின் இறுதி கட்டம்தான் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தானது. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அந்தக் காலத்தில் அறிவை நோக்கிய தணியாத ஒரு தேடலில் இருந்தாள் அவள். ஆனால், சோஹினியின் மனம் அப்படிப்பட்ட பாடங்களுக்கு ஏற்ற விளை நிலமாக இல்லாமலிருந்தது. எல்லா பெண்களுக்கும் இப்படிப்பட்ட படிப்பு தரும் அறிவுமீது ஆர்வம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீலாவும் அந்த அளவிற்கு விழிப்புணர்வு கொண்டவளாக இருக்கவில்லை.

படிகளின் வழியாக நீலா மெதுவாக ஏறி வந்தாள். வெயில் கொழுந்துகள் அவளுடைய நெற்றியில் பரவி விழுந்திருந்தன. அவளுடைய தலை முடியில் விழுந்து அவை பிரகாசித்துக் கொண்டிருந்தன. புடவையில் இருந்த பொன் நிறத்தைக் கொண்ட தையல் வேலைப்பாடுகள் அந்த வெயில் கொழுந்துகள் பட்டு மின்னின. ரேபதி அவளை ஓரக் கண்களால் பார்த்தான். அடுத்த நிமிடமே அவன் தன் கண்களைப் பின்னால் இழுத்துக் கொண்டான்.

இளம் வயதிலிருந்தே அவனுக்கு கிடைத்திருந்த பயிற்சி அப்படிப்பட்டதாக இருந்தது. இதயம் கவர்ந்த, அழகான இளம் பெண்களைப் பார்ப்பதிலிருந்து அவனுடைய கண்களுக்கு அத்தையின் அச்சத்தை உண்டாக்கக்கூடிய விரல்கள் விலக்கு உண்டாக்கியிருந்தன. அதனால் அந்த வகையில் முதல் முறையாக அப்படிப்பட்ட ஒரு புண்ணிய தரிசனத்தின் நறுமணத்தை நுகர்வதற்கு வாய்ப்பு கிடைத்தபோது, அவசர அவசரமான ஒரு பார்வையை மட்டும் வெளிப்படுத்திவிட்டு அவன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதிருந்தது. அவனை மனதில் திட்டிக் கொண்டே சோஹினி அமைதியாக முணுமுணுத்தாள்: "பார்... பார்... நல்லா பார்!''

ரேபதி பதைபதைப்புடன் தலையை உயர்த்திப் பார்த்தான்.

"டாக்டர் ஆஃப் சயின்ஸ்... பார்... அவளுடைய புடவையின் நிறமும் அந்த இலைகளின் நிறமும் எந்த அளவிற்கு அழகாக ஒன்று சேர்கின்றன..." சோஹினி சொன்னாள்.

"அற்புதம்!''- ரேபதி சற்று சந்தேகத்துடன் சொன்னான்.

"ம்.... இவனால் பிரயோஜனமே இல்லை." சோஹினி தனக்குத் தானே கூறிக் கொண்டாள். தொடர்ந்து அவள் உரத்த குரலில் கேட்டாள்: "நீல நிறங்களுக்கு மத்தியில் தெரியும் இளம் மஞ்சள்... அது எந்தப் பூவை ஞாபகப்படுத்துகிறது?''

அந்த அளவிற்குப் பெரிய அளவில் உற்சாகம் கிடைத்தவுடன், ரேபதி அவளைக் கூர்ந்து கவனித்தான். "நான் மலரைப் பற்றி சிந்திக்கிறேன். ஆனால், அதன் இதழ்களின் நிறம் நீல நிறத்தில் அல்ல.... அதற்கு தவிட்டு நிறம் இருக்கிறது.'' அவன் சொன்னான்.

"அது என்ன பூ?''

"கமேலினா...'' ரேபதி சொன்னான்.

"ஓ யெஸ்... அதற்கு ஐந்து இதழ்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மஞ்சள்... மீதி நான்கும் கறுப்பு...''

ரேபதிக்கு ஆச்சரியம் உண்டானது. "பூக்களைப் பற்றி உங்களுக்கு இந்த அளவிற்கு அறிவு எப்படிக் கிடைத்தது?''

சோஹினி சிரித்தாள். "தெரிந்திருக்க முடியாதவை என்று எனக்கு தெரியும், குழந்தை. பூஜைக்குப் பயன்படுத்தக் கூடிய பூக்கள், நமக்கு எந்தவொரு காரணமும் இல்லாமல், எந்தவொரு அறிமுகமும் இல்லாமல் இருக்கும் அறிமுகமற்றவர்களைப் போன்றவை...''

நீலா மெதுவாக பூத்தட்டுடன் அங்கு வந்தாள். "வெட்கப்பட்டுக் கொண்டு நிற்காமல் உள்ளே வா. அவருடைய கால்களைத் தொட்டு வணங்கு...'' சோஹினி தன் மகளிடம் கூறினாள்.

"வேண்டாம்... கூடாது... கூடாது...''- மிகுந்த பதைபதைப்பு அடைந்ததைப்போல ரேபதி கத்தினான். அவன் சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தான். அவனுடைய பாதங்களைக் கண்டுபிடிப்பதற்கு அவள் தேடிப் பார்க்க வேண்டியதிருந்தது. அவள் தொட்டவுடன், ரேபதியின் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவளுடைய பூத்தட்டில் அபூர்வமான ஆர்க்கிட்களும், ஒருதட்டு நிறைய இனிப்புப் பலகாரங்களும் இருந்தன. முந்திரிப் பருப்பைப் பயன்படுத்தி தயார் செய்த அபூர்வமான இனிப்புப் பலகாரமும், பிஸ்தாவும் தேங்காய்ப் பாலும் சேர்ந்து உண்டாக்கப்பட்ட இனிப்புப் பலகாரமும், ஆவி பறந்து கொண்டிருக்கும் வெண்ணெய்யும் அவற்றில் இருந்தன.

"இவை அனைத்தும் நீலா உண்டாக்கியவைதான்.'' சோஹினி சொன்னாள்.

அது முழுக்க முழுக்க பொய். அப்படிப்பட்ட சமையல் விஷயங்களில் நீலாவிற்கு ஆர்வமோ ஆற்றலோ இல்லவே இல்லை.

சோஹினி சொன்னாள்: "குழந்தை, நீ அதிலிருந்து கொஞ்சமாவது சாப்பிடணும். உனக்காக அவள் அதை கஷ்டப்பட்டு தயாரித்திருக்கிறாள்.''

உண்மையாகச் சொல்லப்போனால் புரா பஸாரில் நல்ல பெயரைப் பெற்றிருக்கும் ஒரு பேக்கரியிலிருந்து தனிப்பட்ட முறையில் ஆர்டர் செய்து கொண்டு வரப்பட்டவையே அவை.

"நான் இந்தச் சமயத்தில் எதுவும் சாப்பிடுவதில்லை. நீங்கள் சம்மதிப்பதாக இருந்தால், நான் இதை வீட்டிற்குக் கொண்டு செல்கிறேன்.'' ரேபதி கைகளைக் கூப்பியவாறு சொன்னான்.

"அது நல்ல விஷயம்.'' சோஹினி கூறினாள்.

"ஆட்களைக் கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பது என்ற விஷயத்திற்கு என்னுடைய கணவர் எப்போதும் எதிரானவர். மனிதர்கள் பெரிய பாம்புகள் அல்ல என்று அவர் கூறுவார்.'' சோஹினி கூறினாள். பெரிய ஒரு அடுக்குப் பாத்திரத்தை எடுத்து அந்தப் பலகாரங்களை ஒவ்வொன்றாக ஒவ்வொரு அடுக்கிலும் அடுக்கி வைத்து விட்டு, அவள் அதை சேர்த்து மூடினாள். பூக்களைத் தட்டில் ஒழுங்காக வைத்து அவள் தன் மகளிடம் கூறினாள்: "அந்த பூக்களை ஒன்றாக மேலே வை!''

அந்த விஞ்ஞானியின் கண்கள் ஒரு கலையை நேசிக்கும் மனிதனின் ஆழம் நிறைந்த கண்களாக மாறின. அளவுகளும் எடைகளும் நிறைந்த அந்த மேலோட்டமான உலகத்திற்கு அப்பால் இருக்கும் வேறுபட்ட ஒரு உலகமாக அது இருந்தது. பல வகைப்பட்ட வண்ணங்களில் இருந்த அந்த மலர்களுக்கு மேலே நீலாவின் அழகான விரல்கள் தாளகதியில் நகர்ந்து கொண்டிருந்தன. ரேபதிக்கு அதிலிருந்து கண்களை விலக்கி எடுக்கவே முடியவில்லை. இடையில் அவ்வப்போது அவன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். பவளமும் இந்திர நீலமும் முத்தும் மரகதமும் பதிக்கப்பட்ட அழகான ஒரு மாலை அவளுடைய கூந்தலில் ஒரு வானவில்லைப் போல பரவிக் கிடந்தது. அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்ட சோளியின் அழகு வெளியே தெரிந்தது. இனிப்புப் பலகாரங்களை அடுக்கி வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சோஹினிக்கு அதிகமாக ஒரு மூன்றாவது கண்ணும் இருந்தது. தனக்கு முன்னால் மாயக் காட்சிகளை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய கணவனிடமிருந்து பெற்ற அனுபவங்களின் மூலம் அவள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டிருந்தாள்.

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel