
இந்த சொந்தமான மேய்ச்சல் இடங்களைக் காப்பாற்றுவதற்கு கனமான வேலிகள் அமைப்பது என்பது இந்த அறிவு ஜீவிகளின் ஒரு வழக்கமான விஷயமாக இருந்தது என்பதே அது. சாதாரண பசுக்களால் அங்கு நுழைய முடியாது. எனினும், அப்படிப்பட்ட எல்லா வேலிகளுக்கும் ஒரே மாதிரியான உறுதித்தன்மை இருக்காது என்பதை அவள் புரிந்து கொண்டாள். ஆனால், அந்த கண்டுபிடிப்பு அவளை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை.
மறுநாள் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று அவள் பேராசிரியரிடம் கூறினாள். "என்னுடைய சொந்த தேவைகளுக்காக நான் உங்களை வரவழைத்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் உங்களுடைய வேலைகள் தடைப்படுகின்றன என்று எனக்குத் தோன்றாமல் இல்லை.'' அவள் கூறினாள்.
"இடையில் அவ்வப்போது என்னை அழைப்பதில் எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை. அது ஏதாவது தேவைக்குத்தான் என்னும் பட்சம், எனக்கு அந்த விஷயத்தில் சந்தோஷமே. தேவைகள் எதுவும் இல்லாமல் என்னை அழைத்தாலும், எனக்கு சிறிதும் வருத்தம் இல்லை.''
"உங்களுக்குத் தெரியுமா? விலை மதிப்புள்ள இயந்திரங்களையும் கருவிகளையும் சேகரித்து வைப்பது என்னுடைய கணவருக்கு ஒரு விருப்பமான விஷயமாக இருந்தது. அடக்க முடியாத அந்த வெறியின் காரணமாக அவர் முதலாளிகளை ஏமாற்றினார். ஆசியாவிலேயே மிகச் சிறந்த சோதனைக்கூடம்- அதற்கான கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அவர். நானும் அந்த முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இவ்வளவு காலமும் என்னை உயிருடன் வாழ வைத்தது அந்த ஆசைதான். இல்லாவிட்டால் என்னுடைய தலை வெடித்துச் சிதறியிருக்கும். சவுதரி மஸாய், உங்களிடம் மட்டும்தான் இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் மனம் திறந்து கூறுவதற்கு என்னால் முடிகிறது. என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயங்களை உங்களிடம் கூறுவதன் மூலம் ஒருவித நிம்மதியை என்னால் உணர முடிகிறது.''
"ஒரு முழுமையான மனிதனைக் காணும்போது நீங்கள் உண்மையை மறைத்து வைக்க வேண்டியதேயில்லை. அபத்த உண்மைகள்தான் எல்லா நேரங்களிலும் வெட்கக்கேடான விஷயங்களை உண்டாக்குகின்றன. எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு எல்லா விஷயங்களையும் முழுமையாகப் பார்க்கக் கூடிய ஒரு குணம் இருக்கிறது!''
"மனிதர்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பு உள்ளதாக ஆக்குவதற்காக கடுமையாக உழைக்கிறார்கள் என்று என்னுடைய கணவர் கூறுவதுண்டு. ஆனால், வாழ்க்கை அப்படி பாதுகாத்து வைத்திருக்கக் கூடிய ஒரு பொருள் அல்ல. அதனால் வாழ்க்கையின்மீது கொண்ட மோகத்தின் காரணமாக வாழ்க்கையைவிட விலை மதிப்பு உள்ள ஒரு பொருளைத் தேடி மனிதர்கள் பறந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பொருளைத்தான் அவர் இந்த சோதனைக் கூடத்தில் பார்த்தார். என்னால் இந்த சோதனைக் கூடத்தை நல்ல முறையில் காப்பாற்ற முடியவில்லையென்றால், அது அவரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். கணவனைக் கொன்ற மனைவியின் குற்ற உணர்வை அப்போது நான் உணர்வேன். இந்த சோதனைக் கூடத்தைக் காப்பாற்றுவதற்கு எனக்கு ஒரு ஆள் வேண்டும். அதனால்தான்... நான் ரேபதியைக் குறிவைத்தேன்.''
"நீங்கள் அப்படியொரு முயற்சியைச் செய்து பார்த்தீர்களா?''
"ஆமாம்... நான் அதில் வெற்றி பெறுவேன் என்றுதான் நினைத்தேன். ஆனால், அதனால் பிரயோஜனம் உண்டாவது மாதிரி தெரியவில்லை.''
"ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?''
"அவன் என்னிடம் நெருக்கத்தைக் காட்டுகிறான் என்ற விஷயம் தெரிந்தால் போதும், அந்த நிமிடமே அவனுடைய அத்தை அவனை அபகரித்துக் கொண்டு போய் விடுவாள். அவனை என்னுடைய மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக நான் ஒரு வலையை விரித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவள் நினைக்கலாம்.''
"அதில் என்ன பிரச்சினை இருக்கிறது? அது நல்ல விஷயம்தானே? ஆனால், மகளை வேறு ஜாதியைச் சேர்ந்தவனுக்குத் திருமணம் செய்து தர மாட்டேன் என்று நீங்கள் சொன்னீர்களே?''
"இந்த விஷயத்தில் நீங்கள் வைத்திருக்கும் எண்ணங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அதனால் நான் பொய் சொன்னேன். ஆமாம்... அவர்களுக்கிடையே திருமணம் நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். ஆனால், நானும் ஆசையை விட்டெறிந்து விட்டேன்.''
"என்ன ஆச்சு?''
"என்னுடைய மகள் எந்த அளவிற்கு கழிக்கக்கூடியவளாக ஆவாள் என்பதை நான் நினைத்துப் பார்த்தேன். தொட்டவை அனைத்தையும் அவள் தகர்த்து எறிவாள்.''
"ஆனால், அவள்... உங்களுடைய மகள்.''
"உண்மைதான். அதனால் எனக்கு அவளின் அகமும் புறமும் தெரியும்.''
"பெண்கள் ஆண்களின் ஆர்வத்திற்குரியவர்களாக ஆக முடியும்.'' பேராசிரியர் சொன்னார்: "அதை மறந்து விடாதீர்கள்!''
"எனக்குத் தெரியும். மாமிசத்தையும் மீனையும் சேர்த்து ஆட்கள் உணவு தயாரிப்பதில்லையா? ஆனால், அதையும் தாண்டி மதுவை நோக்கி நகர்ந்தால், அத்துடன் எல்லாம் ஒரு வழி ஆகி விடுகிறதே! குவளைக்கு வெளியே ததும்பி வழியத் தயாராக இருக்கும் மதுவாக ஆகி விடுகிறாள் என்னுடைய மகள்...''
"பிறகு... என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''
"நான் என்னுடைய சோதனைக் கூடத்தை பொதுமக்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.''
"உங்களுடைய ஒரே ஒரு மகளை ஒதுக்கி வைத்து விட்டு...?''
"என்னுடைய மகளா? நான் சோதனைக் கூடத்தை அவளுக்குத் தந்தால், அவள் அதை எப்படிப்பட்ட பாதாளத்திற்குக் கொண்டு சென்று மூழ்கடிப்பாள் என்பது எனக்குத் தெரியாது. நான் ரேபதியை சோதனைக் கூடத்தின் அறக்கட்டளையின் தலைவராக ஆக்குவேன். அவனுடைய அத்தை ஒருவேளை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கலாம்.''
"பெண்கள் எதை எதிர்ப்பார்கள் என்பதைக் கூற முடிந்திருந்தால், நான் ஒரு ஆணாகப் பிறந்திருக்க மாட்டேன். ஆனால், ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு அவனை மருமகனாக ஆக்குவதற்கு விருப்பமில்லையென்றால், பிறகு எதற்கு நீங்கள் அவனை அறக்கட்டளையின் தலைவராக ஆக்க வேண்டும்?''
"நீங்கள் கூறுவது சரிதான்... இந்த இயந்திரக் கருவிகளால் என்ன பிரயோஜனம்? அந்தக் கருவிகளின் உயிர்நிலை பெற்று இருக்கச் செய்வதற்கு எங்களுக்கு ஒரு ஆள் வேண்டும். இன்னொரு விஷயமும் இருக்கிறது. என்னுடைய கணவரின் மரணத்திற்குப் பிறகு நாங்கள் எந்தவொரு புதிய கருவியையும் வாங்கவில்லை. பணமில்லாததால் அல்ல; தெளிவான திட்டம் இல்லாத காரணத்தால் அதை வாங்கவில்லை. ரேபதி காந்தத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவன் அத்துடன் தொடர்பு கொண்ட கருவிகளை வாங்கிக் கொள்ளட்டும். பணச் செலவைப் பற்றி அவன் கவலைப்பட வேண்டாம்.''
"நான் என்ன சொல்வது? நீங்கள் ஒரு ஆணாக இருந்திருந்தால் நான் உங்களை என்னுடைய தோளில் ஏற்றி நடனமாடி இருப்பேன். உங்களுடைய கணவர் ரெயில்வேயின் பணத்தைத் திருடினார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook