Lekha Books

A+ A A-

சோதனைக்கூடம் - Page 20

Sodhanaikoodam

"மிகுந்த தன்னம்பிக்கையுடன் உண்மையை வெளியே கொண்டு வர முடியவில்லை என்பதுதான் டாக்டர் பட்டாச்சார்யாவின் பிரச்சினையே.'' நீலா சொன்னாள்: "இவர் ஏதாவது வேலையின் காரணமாக இங்கே வரவில்லை. சுத்த முட்டாள்தனம். இவரால் என்னை விட்டு இருக்க முடியவில்லை. அதனால்தான் இவர் இங்கே வந்திருக்கிறார். அதுதான் உண்மை. கேட்பதற்கு சுவாரசியமான உண்மை. என்மீது கொண்டிருக்கும் முழுமையான மோகத்தின் காரணமாக இவர் என்னுடைய நேரம் முழுவதையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அங்குதான் இவருடைய ஆண்மைத்தனம் இருக்கிறது. இவருடைய அசாதாரணமான கிராமத்து பழக்கவழக்கங்களுக்கு முன்னால் நீங்கள் எல்லாரும் தோற்றுப் போகிறீர்கள்.''

"அப்படியென்றால் சரி... நாங்கள் எங்களுடைய சக்தி முழுவதையும் வெளிப்படுத்துகிறோம். இன்று முதல் அவேக்னர்ஸ் க்ளப்பின் உறுப்பினர்கள் பெண்களை பலத்தைப் பயன்படுத்தி அடிமையாக்குவதைப் பழகப் போகிறார்கள். புராணகாலத்தை நாங்கள் திரும்பவும் கொண்டு வருவோம்.''

"இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.'' நீலா சொன்னாள்: "ஆக்கிரமிப்பு" என்ற வார்த்தை "அடிபணிதல்" என்ற வார்த்தையைவிட மிகவும் இனிமையாக இருக்கிறது. ஆனால், நீங்கள் அதை எப்படி செயல்படுத்துவீர்கள்?''

"இல்லை... அதை நான் நேரில் காட்ட வேண்டும் என்றா நீ கூறுகிறாய்?'' ஹால்தார் கேட்டார்.

"இப்போதே?''

"இதோ... இப்போதே காட்டுகிறேன்.''

அவர் அவளைக் கைகளில் வாரி எடுத்தார். கிளுகிளுப்பு அடைந்து குலுங்கிச் சிரித்த நீலா அவருடைய உடலுடன் ஒட்டிக் கொண்டாள்.

ரேபதியின் முகம் கோபத்தால் கறுத்தது. ஆனால், அந்தச் செயலைத் தடுப்பதற்கோ ஏற்றுக் கொள்வதற்கோ உள்ள ஆற்றல் அவனுக்கு இல்லாமலிருந்தது. அவனுக்கு ஹால்தாரின்மீது இருப்பதைவிட நீலாவின் மீதுதான் அதிகமான கோபம் உண்டானது. அவள் எதற்காக இப்படிப்பட்ட காதல் சேட்டைகளை உற்சாகப்படுத்துகிறாள்?

"கார் ரெடி...'' ஹல்தார் சொன்னார்: "நான் உன்னை டயமண்ட் ஹார்பருக்கு அழைத்துக் கொண்டு செல்கிறேன். டின்னர் பார்ட்டிக்கு முன்னால் உன்னை திரும்பவும் கொண்டு வந்து விடுவேன். எனக்கு வங்கியில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அது அங்கே இருக்கட்டும். பாவம்... டாக்டர் பட்டாச்சார்யா எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் வேலையைச் செய்யட்டும். உன்னைப்போல வேலைக்குத் தடையாக இருப்பவர்களை அகற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் சரியான விஷயம். அவர் இதற்காக என்னிடம் நன்றியுள்ளவராக இருப்பார்.''

அவருடைய கையிலிருந்து விலகி வர நீலா முயற்சிக்கவில்லை என்ற விஷயத்தை ரேபதி கவனித்தான். காதல் வயப்பட்டு இறுகப் பிடித்துக் கொண்டு அவள் அவருடைய நெஞ்சில் சாய்ந்து கிடந்தாள். "பயப்பட வேண்டாம் விஞ்ஞானி சார்...'' வெளியேறுவதற்கு மத்தியில் அவள் உரத்த குரலில் சொன்னாள்: "ஆக்கிரமிப்பு பற்றிய ஒரு ரிகர்சல் மட்டுமே இது. நான் இலங்கைக்கு எதுவும் போகவில்லை. டின்னருக்கான நேரம் ஆகும்போது திரும்பி வருவேன்.''

அவன் தன் கையில் வைத்திருந்த தாள்களைத் துண்டுத் துண்டாகக் கிழித்தான். ஹால்தாரின் உடல் பலமும், காரியங்களை அடையக்கூடிய முறையும் ரேபதியின் பண்டிதத் திறமையை முற்றிலும் சர்வ சாதாரணமான பொருளாக மாற்றிவிட்டிருந்தன.

மிகவும் புகழ் பெற்ற ஒரு ரெஸ்ட்டாரண்டில்தான் அன்று சாயங்கால டின்னருக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ரேபதி பட்டாச்சார்யாதான் அன்று முக்கிய விருந்தாளி. அவனுக்கு மிகவும் அருகில் நீலா உட்கார்ந்திருந்தாள். பெயர் பெற்ற ஒரு திரைப்பட நட்சத்திரம் பாட்டு பாடிக் கொண்டிருந்தாள். டோஸ்ட் கூறுவதற்காக பங்கு பிஹாரி எழுந்து நின்றார். ரேபதியைப் பற்றிய புகழ் மாலைகளுடன் சேர்த்து நீலாவின் புகழையும் அவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வெறும் சாதாரண பெண்களல்ல என்பதைக் காட்டுவதற்காக, யாருடனோ கொண்ட கோபத்தைத் தீர்ப்பதைப்போல அங்கு குழுமியிருந்த பெண்கள் சிகரெட்டை இழுத்துப் புகைத்துக் கொண்டிருந்தனர். தாராளமாக இருப்பதைப் போன்ற முகமூடியை அணிந்து கொண்டு, நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்கள் இளம் வயது பையன்களை அந்தப் பந்தயத்தில் தோற்கடித்தே ஆவது என்பதைப் போல ஆடிக் குழைந்து கொண்டிருந்தார்கள். தங்களுடைய நிலையிலிருந்து தவறி, கைகயையும் விரலையும் காட்டி அவர்கள் உரத்த குரலில் உரையாடிக் கொண்டும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டும் இருந்தார்கள்.

திடீரென்று சோஹினி அந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கு குழுமியிருந்தவர்களுக்கு மத்தியில் பேரமைதி நிலவியது. "எனக்கு இவரைத் தெரியவில்லை. டாக்டர் பட்டாச்சார்யாதானே இது?'' சோஹினி ரேபதியிடம் கேட்டாள்: "ஏதோ தேவைக்காக பணம் வேண்டும் என்று கூறி எனக்குக் கடிதம் எழுதியிருந்தாய் அல்லவா? அதற்கு பதிலாக கடந்த வெள்ளிக்கிழமை நான் உனக்குப் பணம் அனுப்பினேன். உனக்குப் பணம் சம்பந்தமாக எந்தவொரு குறைவும் இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீ உடனடியாக என்னுடன் வரவேண்டும். சோதனைக் கூடத்திலிருக்கும் ஒவ்வொரு பொருளின் ஸ்டாக்கையும் இப்போதே எடுக்க வேண்டும்.''

"நீங்கள் என்மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்களா?''

"இதுவரை நான் உன்னை நம்பாமல் இருந்ததில்லை. ஆனால், உனக்கு வெட்கம் என்ற ஒன்று இருந்தால் "நம்பிக்கை" என்ற சொல்லை இனி எந்தச் சமயத்திலும் பயன்படுத்தாதே!''

ரேபதி எழுந்திருக்க முயற்சித்தான். நீலா அவனுடைய சட்டையைப் பிடித்து இழுத்து கீழே உட்கார வைத்தாள். "நண்பர்களிடம் வரச்சொல்லி, அவர்கள் வந்திருக்கிறார்கள்.'' அவள் சொன்னாள்: "முதலில் அவர்கள் போகட்டும். அதற்குப் பிறகு மட்டுமே நீங்கள் போனால் போதும்.''

அவள் சொன்ன வார்த்தைகளில் கூர்மையான முள் இருந்தது. சர் ஐஸக் அவளுடைய அன்னையின் விருப்பத்திற்குரிய மனிதனாக இருந்தான். இதைவிட அதிகமாக ஒரு நபரை அவள் நம்பியதே இல்லை. அதனால்தான் சோதனைக் கூடத்தின் பொறுப்பை ஒப்படைப்பதற்கு வேறு யாரையும் விட ரேபதிதான் சிறந்தவன் என்று அவள் தீர்மானித்தாள். அந்த காயத்திற்கு எரிச்சல் உண்டாக்குவதைப் போல நீலா தன்னுடைய நெருப்பு வார்த்தைகளைத் தொடர்ந்தாள்: "அம்மா, இன்று இரவு இங்கு எத்தனை ஆட்களை நாங்கள் அழைத்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா? அறுபத்தைந்து பேர்களை. எல்லாரும் இங்கு இருக்க முடியாததால் பாதி பேர் அடுத்த அறையில் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுடைய ஆரவாரத்தைக் கேட்கிறீர்கள் அல்லவா? குடித்தாலும் குடிக்கவில்லையென்றாலும் இருபத்தைந்து ரூபாய். காலி டம்ளர்கள் எஞ்சி இருக்கும்போது நிறைய பணம் வேண்டும். அந்தப் பணத்திற்கான கணக்கைக் கேட்டால் எல்லாரின் முகமும் வெளிறிப் போய்விடும்.''

அந்த நாகரீக மனிதனின் தாராள குணத்தைப் பார்த்ததும், வங்கி இயக்குனரின் கண்கள் பிரகாசமாயின. அவர் சொன்னார்: "அந்த திரைப்பட நடிகைக்கு அவர் எவ்வளவு பணம் தந்தார் என்று தெரியுமா? இந்த ஒரே ஒரு இரவுக்கு நானூறு ரூபாய்.''

உயிருடன் முதுகு ஒடிந்த ஒரு விரால் மீனைப்போல ரேபதியின் இதயம் துடித்தது. அவனுடைய வாய் வறண்டது. அவனால் எதையும் பேச முடியவில்லை.

"இன்றைய கொண்டாட்டத்திற்கான நோக்கம் என்ன?'' சோஹினி கேட்டாள்.

"ம்... அது உங்களுக்கு தெரியாதா? அசோசியேட்டட் ப்ரஸ்ஸில் அந்த செய்தி வந்திருக்கிறது. இவர் இப்போது அவேக்னர்ஸ் க்ளப்பின் தலைவர். வாழ்நாள் உறுப்பினராக இருப்பதற்காக இவர் தன் வசதிக்கேற்ப நானூறு ரூபாய் தருவார்.''

"அது நீண்ட காலம் நீடித்து நிற்காது.''

ரேபதியின் இதயத்திற்குள் ஒரு நீராவி இயந்திரம் தரையைக் குலுக்கிக் கொண்டு வேகமாகச் சென்றது.

"அப்படியென்றால் உன்னால் எழுந்திருக்க முடியவில்லை. அப்படித்தானே?'' சோஹினி கேட்டாள்.

ரேபதி நீலாவைப் பார்த்தான். அவளுடைய வளைந்த புருவங்கள் அவனுடைய தன்மானத்தைத் தொட்டு எழுப்பின. "இங்கு இவ்வளவு அதிகம் ஆட்கள் இருக்கும்போது, நான் எப்படி...'' அவன் திக்கித் திக்கி சொன்னான்.

"சரி... நான் இங்கேயே காத்திருக்கிறேன்.'' சோஹினி சொன்னாள்.

"அது நடக்காத விஷயம், அம்மா.'' நீலா சொன்னாள்: "நாங்கள் சில ரகசியங்களைப் பற்றி விவாதிக்க வேண்டியதிருக்கிறது. அந்தச் சமயத்தில் நீங்கள் இங்கே இருக்கக்கூடாது.''

"நீலா, விளையாட்டுகள் விஷயத்தில் நீ ஒரு ஆரம்பக்காரி மட்டுமே. அதில் உன்னால் என்னைத் தோற்கடிக்க முடியாது. நீங்கள் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறீர்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியாது என்றா நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த ஒரே காரணத்திற்காக இன்று இரவு முழுவதும் நான் இங்கேயே இருப்பேன்.''

"நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள்? உங்களிடம் யார் இவற்றையெல்லாம் சொன்னது?''

"புதிய புதிய பொய்களைக் கண்டுபிடிப்பது, பொந்தில் இருக்கும் பாம்பைப் பிடிப்பதைப் போன்றது. உனக்கு அங்கு மூன்று வக்கீல்கள் இருக்கிறார்கள். சோதனைக் கூடத்தின் பெயரைச் சொல்லி ஏதாவது பணத்தை ஏமாற்றி எடுக்க முடியுமா என்று அவர்கள் எல்லாரும் எப்படி எப்படியோ முயற்சித்துப் பார்த்தார்கள். அப்படித்தானே நடந்தது நீலு?''

"அது உண்மைதான். ஒரு தந்தை எவ்வளவோ பணத்தையும் சொத்தையும் மீதி வைத்து விட்டுப் போகிறார். அவருடைய மகளுக்கு அதில் எந்தவொரு பங்கும் இல்லை. இது முற்றிலும் எங்கும் நடக்காத  ஒரு விஷயம் அல்லவா? அதனால்தான் இந்த விஷயத்தில் எல்லாரும் சந்தேகப்படுகிறார்கள்.''

சோஹினி எழுந்து நின்றாள். "சந்தேகப்படுவதற்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கு இன்னும் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.'' அவள் சொன்னாள்: "உன் தந்தை யார்? யாருடைய சொத்தில் நீ உரிமை கேட்கிறாய்? அப்படிப்பட்ட ஒரு மனிதரின் மகள் என்று கூறுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா?''

நீலா வேகமாக எழுந்தாள்: "அம்மா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

"உண்மையைச் சொல்கிறேன். வேறு என்ன? அவரிடம் ரகசியம் எதுவும் இல்லை. அவருக்கு அனைத்தும் தெரியும். என்னிடமிருந்து அவர் எதிர்பார்த்தவை அனைத்தும் அவருக்கு கிடைத்தன. எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அது கிடைக்கும். வேறு எதுவும் அவருக்குத் தேவையில்லை.''

வழக்கறிஞர் கோஷ் இடையில் புகுந்து கேட்டார்: "உங்களுடைய இந்த வெறும் வார்த்தைகள் எதுவும் அதற்கான சான்றாக இருக்காது.''

"அதைப் பற்றி அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதனால் அவர் அதை ஒரு ஆதாரமாக ஆக்கி பதிவு செய்தார்.''

"பங்கு! நேரமாகிறது. இனி ஏன் நாம் இங்கு காவல் காத்துக் கொண்டு இருக்க வேண்டும்? நாம் புறப்படுவோம்!''

பெஷாவரில் இருந்து வந்திருந்த அந்த காவலாளியின் மரியாதைக்குறைவான வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்த அறுபத்தைந்து பேருக்கும் வெளியே செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை உண்டானது.

அந்தச் சமயத்தில் ஒரு சூட்கேஸுடன் சவுதரி அங்கு வந்தார். "உங்களுடைய தந்தி கிடைத்ததும், நான் வேக வேகமாகப் புறப்பட்டேன். ரேபி பேபி, என்ன இது? உன் முகம் என்ன எண்ணெய் தேய்த்த தாளைப்போல இருக்கிறதே? குழந்தை, உன்னுடைய பால்புட்டி எங்கே?''

"இதோ... அதைக் கொடுக்கும் ஆள் இங்கே இருக்கிறாள்.'' நீலாவைச் சுட்டிக் காட்டியவாறு சோஹினி சொன்னாள்.

"ஹோ... என் தங்கமே! அப்படியென்றால், நீதானா பால்காரி?''

"அவள் ஒரு பால்காரனைத் தேடிக் கொண்டிருக்கிறாள். பாருங்க... அதுதான் அவளுடைய சுரங்கம்.''

"எது எப்படி இருந்தாலும், அது நம்முடைய ரேபியாக இருக்காது. அது மட்டும் உறுதி.''

"இந்த முறை என் மகள் என்னுடைய சோதனைக் கூடத்தைக் காப்பாற்றி விட்டாள். ஆனால், இந்த ஆளை முழுமையாகப் புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை. நான் இந்த சோதனைக் கூடத்தை ஒரு தொழுவமாக ஆக்கிவிட்டிருக்கிறேன் என்பதை அவள் புரிந்து கொண்டாள். மேலும் சற்று இப்படி முன்னோக்கிப் போயிருந்தால், இந்த சோதனைக் கூடம் ஒரு சாணக்குழியாகவும் ஆகிவிட்டிருக்கும்.''

"எது எப்படியோ, இந்த எதுவுமே தெரியாத பையனைக் கண்டு பிடித்தது நீங்கள்தான். அதனால் இந்த அப்பிராணியின் பொறுப்பை நீங்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.'' பேராசிரியர் சொன்னார்: "அறிவைத் தவிர வேறு எல்லா விஷயங்களிலும் இவன் கொடுத்து வைத்தவன்தான். ஆனால், நீங்கள் உடனிருந்தால், யாராலும் அதன் குறைபாட்டை புரிந்து கொள்ள முடியாது. முட்டாள்களான ஆண்களை மூக்கைக் கொண்டு தரையில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளைப் படிக்க வைப்பது என்பது எவ்வளவு எளிதான விஷயம்!''

"சர் ஐஸக் நியூட்டன், நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?'' நீலா கேட்டாள்: "திருமண பதிவாளருக்கு நீங்கள் கடிதம் கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா? அதைத் திரும்ப வாங்க வேண்டும் என்று உங்களுக்கு இப்போது தோன்றுகிறதா?''

"எந்தக் காலத்திலும் இல்லை.'' மார்பின்மீது ஊதிக்கொண்டே அவன் சொன்னான்.

"அப்படியென்றால் அந்த திருமணம் வெறும் சந்தர்ப்பத்திற்காக என்று இருக்காது.''

"இல்லை... அது நடக்கும்... நடக்கும்.''

"ஆனால், சோதனைக் கூடத்திலிருந்து மிகவும் தூரத்திலிருக்கும் ஒரு இடத்தில்...'' சோஹினி சொன்னாள்.

"மை டியர் நீலு...'' பேராசிரியர் சொன்னார்: "இவன் ஒரு படு முட்டாள். அதற்காக எதற்கும் லாயக்கில்லாதவன் என்றில்லை. அந்த பாதி உறக்கத்திலிருந்து இவன் வெளியே வர்றப்போ, இவனுடன் இருப்பது சிரமமான ஒரு விஷயமாக இருக்காது.''

"சர் ஐஸக்... நீங்கள் மேலும் ஒரு நல்ல தையல்காரனைத் தேடுவது நல்லது. இல்லாவிட்டால், உங்களுடைய கண்களுக்கு முன்பே, நான் என்னுடைய முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும்.''

திடீரென்று அந்தச் சுவரில் ஒரு நிழல் தோன்றியது. ரேபதி பட்டாச்சார்யாவின் அத்தை அவனுக்கு முன்னால் வந்து நின்றாள்.

"ரேபி, என்னுடன் வா.'' அவள் கட்டளையிட்டாள்.

மிகவும் தளர்ந்து போன ஒரு மனிதனைப்போல அவன் மெதுவாக... மிகவும் மெதுவாக தன் அத்தையின் பின்னால் நடந்தான். ஒருமுறைகூட அவன் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

ஓநாய்

March 5, 2016

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel