Lekha Books

A+ A A-

சோதனைக்கூடம் - Page 9

Sodhanaikoodam

"உண்மையாகத்தான் கூறுகிறேன். காலகட்டத்திற்கு ஏற்றபடி அசாதாரணமான கல்வியறிவைப் பெறுபவன்தான் உண்மையான பிராமணன் என்று என்னுடைய குரு எனக்கு கற்றுத் தந்திருக்கிறார்.''

இப்போது ரேபதி முழுமையான பதைபதைப்பில் இருந்தான். "என்னுடைய தந்தை பூஜைக்கான விதிகளைப் பின்பற்றி வாழ்ந்த பிராமணர். ஆனால் எனக்கோ பூஜையோ மந்திரமோ தெரியாது.''

"உன்னால் அதை எப்படிக் கூற முடியும்? இந்த உலகத்தை கீழ்ப்படியச் செய்வதற்கான மந்திரங்களைத்தான் நீ எனக்கு கற்றுத் தந்திருக்கிறாய். ஒரு பெண்ணால் இப்படியெல்லாம் பேசுவதற்கு எப்படி முடிகிறது என்று நீ நினைக்கலாம். நல்ல ஒரு ஆணிடமிருந்துதான் நான் இவற்றையெல்லாம் கற்றுக் கொண்டேன். என்னுடைய கணவர் தான் அந்த ஆள். அவருடைய வழிபாட்டு ஆலயத்தைப் பார்க்க வருகிறேன் என்று தயவு செய்து எனக்கு நீ வாக்குறுதி அளிக்க வேண்டும்.''

"நாளை காலையில் நான் ஃப்ரீயாக இருப்பேன். அப்போது நான் அங்கே வருகிறேன்.''

"உனக்கு செடிகளுடனும் தாவரங்களுடனும் மிகுந்த பிரியம் இருக்கிறது என்ற விஷயம் எனக்குத் தெரியும். எனக்கு அதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. தாவரங்கள்மீது என்னுடைய கணவர் கொண்டிருந்த ஈடுபாடு அவரை பர்மாவை நோக்கி இழுத்தது. அப்போது நானும் அவருடன் பர்மாவிற்குச் சென்றேன்.''

அவள் தன் கணவனுடன் பர்மாவிற்குச் சென்றதென்னவோ உண்மைதான். ஆனால், அது விஞ்ஞானத்தின்மீது கொண்ட ஆர்வத்தால் அல்ல. தன்னுடைய கற்பைப் பற்றிக் கொண்டிருந்த சந்தேகத்தைப்போல, அவளுக்கு தன் கணவனின் கற்பைப் பற்றியும் இருந்தது. அவனுடைய தலைமுடி வரை அவளுக்கு சந்தேகம் இருந்தது. ஒரு சமயம் உடல் நலம் பாதிக்கப்பட்டுப் படுத்திருந்தபோது, நந்த கிஷோர் தன் மனைவியிடம் கூறினான்: "மரணமடைவதன் மூலம் கிடைக்கக்கூடிய ஒரே நன்மை- இனிமேல் உன்னுடைய பார்வையையும் கூர்மையான ஆராய்ச்சியையும் அனுபவிக்க வேண்டியதில்லை என்பதுதான்.''

"ஆனால், நானும் உங்களுடன் சேர்ந்து பர்மாவிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.''- சோஹினி சொன்னாள்.

"அய்யோ! கடவுளே! நீதான் காப்பாற்ற வேண்டும்.''- சிரித்துக் கொண்டே நந்த கிஷோர் சொன்னான்.

"நான் பர்மாவிலிருந்து ஒரு விசேஷமான விதையைக் கொண்டு வந்திருக்கிறேன்.'' -சோஹினி ரேபதியிடம் கூறினாள்: "கொஸக் தனியேங் என்று அவர்கள் அதற்கு பெயரிட்டிருக்கிறார்கள். அதில் உண்டாகக்கூடிய மலர்கள் மிகவும் அழகானவையாக இருக்கும். ஆனால், என்னால் அந்த மலர்களை அதை மாதிரி இருக்கும்படி செய்ய முடியவில்லை.''

வாழ்க்கையில் முதல் முறையாக தன் கணவனின் நூலகத்திலிருந்து அந்தப் பெயரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு அவள் முயற்சித்தாள். அந்தச் செடியை அவள் எந்தச் சமயத்திலும் பார்த்ததுகூட இல்லை. அந்த ஞானியான இளைஞனை வலையில் விழச் செய்வதற்காக அவள் நூலறிவு என்ற வடிவத்திலிருந்த ஒரு வலையை விரித்தாள்.

ரேபதி அதில் விழுந்துவிட்டான்! "உங்களுக்கு அந்தச் செடியின் லத்தீன் மொழியில் இருக்கும் பெயர் தெரியுமா?''

"மிலெற்றியா.'' மிகவும் மெதுவான குரலில் சோஹினி சொன்னாள்.

அவள் தொடர்ந்து சொன்னாள்: "நம்முடைய பாரம்பரிய முறையில் இருக்கக்கூடிய ஒரு வகையான பாதுகாப்பு மையத்தை என்னுடைய கணவர் நடத்தவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை அவர் கண்களை மூடிக் கொண்டு நம்பினார். இயற்கையில் இருக்கும் அழகான பொருட்களை பெண்களால் தங்களுடைய மனதிற்குள் கொண்டு செல்ல முடிந்தால், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் அழகர்களாகவோ அழகிகளாகவோ இருப்பார்கள் என்பதுதான் அது. நீ அதை நம்புகிறாயா?''

நந்த கிஷோர் அத்தகைய ஒரு நம்பிக்கையை வைத்துக் கொண்டிருப்பவன் அல்ல என்ற விஷயத்தைக் கூற வேண்டியது இல்லையே!

"அந்த நம்பிக்கையை நிரூபிப்பதற்கான சான்றுகள் எதையும் நாங்கள் இதுவரை பார்த்ததில்லை.'' தலையைச் சொறிந்து கொண்டே அவன் சொன்னான்.

"ஆனால், என்னுடைய குடும்பத்திலேயே அதை நிரூபிக்கிற மாதிரி ஒரு சான்றை நான் பார்த்து விட்டேன்.''- சோஹினி சொன்னாள்: "என்னுடைய மகளுக்கு எங்கிருந்து இப்படியொரு அழகு கிடைத்தது? ஒரு இனிமையான வசந்தகால அழகுகளைப்போல- அவளைப் பார்க்கும்போது உனக்கு அது புரியும்.''

ரேபதிக்கு அவளைப் பார்ப்பதற்கு என்னவோபோல இருந்தது. நாடகத்தனமான எந்தவொரு அடையாளமும் அவனிடம் தங்கியிருக்கவில்லை.

சோஹினி பிராமணனான தன்னுடைய சமையல்காரனை ஒரு பூசாரியாக வேடம் அணிய வைத்தாள். அவனுடைய நெற்றியில் அருமையான சந்தனக் குறியையும், குடுமியில் செத்திப் பூவையும், பட்டாடைகளையும், சாயம் தேய்த்து மெருகு சேர்த்த பூணூலையும் அணிவித்து புரோகிதரின் மதிப்பைக் கூட்டினாள். "தாக்கூர்...'' சோஹினி அவனிடம் கூறினாள்: "நீங்க போயி நீலுவை அழைத்துக் கொண்டு வாங்க.''

வரவேற்பறைக்கு வெளியே நின்று கொண்டிருக்கும்படி சோஹினி தன் மகளிடம் கூறியிருந்தாள். ஒரு பூத்தட்டு நிறைய மலர்களுடன் அங்கு அவள் நுழைந்து வர வேண்டும். காலை நேர நிழலும் வெளிச்சமும் அவளுடைய தோற்றத்தை மேலும் அழகாக ஆக்கியது.

ரேபதியை தெளிவாகப் பார்ப்பதற்கு சோஹினி அந்த இடைப்பட்ட நேரத்தை மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டாள். அவனுடைய நிறம் கறுப்பு என்றாலும், சிவப்பு நிறம் கலந்த வெள்ளை நிறம் அவனுக்கு இருந்தது. அவனுடைய நெற்றி மிகவும் அகலமாக இருந்தது. தலைமுடியை மேல் நோக்கி கையால் நீவி ஒதுக்கிவிட்டிருந்தான். கண்கள் பெரியதாக இருந்தாலும், அவை மிகவும் பிரகாசமாக இருந்தன. உண்மையாகச் சொல்லப் போனால் அந்தக் கண்கள்தான் அவனிடம் இருக்கும் சிறந்த ஈர்ப்பு விஷயமாக இருந்தன. ஒரு இளம் பெண்ணின் முகத்தைப்போல மிகவும் மென்மையாகவும் வட்டமானதாகவும் அவனுடைய முகம் இருந்தது. ரேபதியைப் பற்றித் திரட்டிய விஷயங்களில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் சோஹினியை மிகவும் அதிகமாகக் கவர்ந்தது. இளம் வயதில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் ரேபதியிடம் ஒரு வகையான உணர்ச்சி ததும்பும் பாசம் இருந்தது என்பதே அது. பக்குவமற்ற ஆண்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் அமைந்த வசீகரத்தன்மை இல்லாதவனாக அவன் இருந்தான்.

சோஹினிக்கு சற்று அலட்சியம் தோன்றியது. ஒரு இளம் பெண்ணின் இதயத்தில் இடம் பிடிப்பதற்கு ஆணுக்கு அழகு அவசியமான விஷயம் இல்லை என்று சோஹினிக்குத் தோன்றியது. அறிவும் புத்திசாலித்தனமும் சிறிதும் முக்கியமற்ற விஷயங்கள். அவனுடைய நரம்புகளிலிருந்தும் சதைகளிலிருந்தும் அடையாள அலையைப் போல வெளிப்படும் ஆண்மை என்னும் காந்த வளையம்தான் மிகவும் முக்கியமான விஷயம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத மோகம் நிறைந்த ஆண்மைத்தனம் அவற்றின் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றன.

சிறுவயதில் இருந்த தன்னுடைய செயல்பாடுகளைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். அவளைக் கவர்ந்த அல்லது அவள் கவர்ந்த ஆண் அழகானவனாகவோ நிறைய படித்தவனாகவோ உயர்ந்த குலத்தில் பிறந்தவனாகவோ இல்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel