Lekha Books

A+ A A-

சோதனைக்கூடம் - Page 7

Sodhanaikoodam

"பல யுகங்களாக பெண்கள் எப்படி பிரச்சினைகளைக் கடந்து வாழ்ந்தார்கள்? பெண்களின் கபடம் நிறைந்த தந்திரங்களுக்கு சரியான திட்டங்கள் தேவைப்படுகின்றன- ஒரு போருக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்வதைப் போல. ஆனால், அதற்கு மேலே எது எப்படி இருந்தாலும் கபடம் நிறைந்த தேனைத் தடவ வேண்டுமே! அதுதான் ஒரு பெண்ணின் இயல்பான போர் நீதி!''

"அங்கு நீங்கள் மீண்டும் என்னைத் தவறாக நினைத்திருக்கிறீர்கள். நாங்கள் விஞ்ஞானிகள். நீதிபதிகள் அல்ல. இயற்கையின் போக்குகளை உணர்ச்சிவசப்படாமல் கூர்ந்து கவனிக்கிறோம். அந்த விளையாட்டின் பலன் அதன் இயல்பான வளர்ச்சிதான். உங்களுடைய விஷயத்தில் அதன் பலன் நீங்கள் எதிர்பார்த்ததுதான். அதன் பரிசு உங்களுக்கு உரியதுதான் என்று நான் கூறினேன் அல்லவா? நான் ஒரு பேராசிரியர்.... வெறும் ஒரு க்ளார்க் அல்ல என்ற வேறுபாடு என்னைக் காப்பாற்றுவதற்காக இருக்கிறது. புதன் சூரியனிடமிருந்து விலகிச் சென்றது அந்த கிரகத்திற்கு நல்லதாகி விட்டது. அது கணித அறிவியலின் ஒரு பகுதியும்கூட. அதில் நல்லதோ மோசமானதோ இல்லை. அப்படிப்பட்ட காரியங்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்.''

"நான் படித்திருக்கிறேன். கிரகங்கள் ஈர்ப்பு, விலகல் விதிகளைத் தானே பின்பற்றுகின்றன? எல்லாரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் அது.''

"இன்னொன்றையும் நான் வெளிப்படையாகக் கூற விரும்புகிறேன். உங்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் நான் மனதில் இன்னொரு கணக்குக் கூட்டலில் ஈடுபட்டிருந்தேன். கணக்கேதான். சிந்தித்துப் பாருங்கள். எனக்கு பத்து வயதுகளாவது குறைவாக இருந்திருந்தால், இப்போது நான் தேவையற்ற ஏடாகூடமான விஷயங்களில் போய் மாட்டிக் கொண்டிருந்திருப்பேன். ஒரே ஒரு வேறுபாட்டில் அங்கு மோதுவது இல்லாமற்போய்விட்டது. எனினும், எனக்குள் ஒரு காற்று மேலே எழுகிறது. சிந்தித்துப் பாருங்கள். உண்மையிலேயே இந்த படைப்பு என்பது கணித அறிவியலால் உண்டான விடுகதைதானே!''

"முழங்காலில் கையால் அடித்துக் கொண்டு சவுதரி உரத்த குரலில் சிரித்தார். எது எப்படியோ, ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள அவர் மறந்து விட்டிருந்தார்- தன்னைப் படைத்த கடவுளைக்கூட தோல்வியடையச் செய்வதைப் போல, அலங்காரம் செய்து கொள்வதற்காக சோஹினி இரண்டு மணி நேரத்தைச் செலவிட்டாள் என்ற விஷயத்தை.

4

றுநாள் பேராசிரியர் வந்தபோது சோஹினி எலும்பும் தோலுமாக இருந்த நாயைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.

"இந்தக் கேடுகெட்ட உயிரினத்தின்மீது நீங்கள் இந்த அளவிற்கு அக்கறை செலுத்துவது எதற்காக?'' -அவர் கேட்டார்.

"நான் இவனைக் காப்பாற்றினேன். அதனால்தான் இவனை நான் குளிப்பாட்டுகிறேன். ஒரு கார் விபத்தில் இவனுடைய கால் முறிந்துவிட்டது. அந்த முறிவைச் சரி பண்ணி நான் இவனை குணப்பத்தினேன். இப்போது இவனுடைய வாழ்க்கையில் எனக்கு ஒரு முக்கிய பங்கு கிடைத்து விட்டிருக்கிறது!''

"தினமும் இந்தப் பாழாய்ப் போன உயிரினத்தைப் பார்க்கும் போது உங்களுக்கு மனக் கவலை உண்டாவதில்லையா?''

"இவனுடைய பார்வையைப் பார்த்துக் காப்பாற்றுவதற்காக நான் இவனை வளர்க்கவில்லை. மரணத்துடன் நேருக்கு நேராக நின்ற பிறகு, வாழ்க்கைக்கு அவன் திரும்பி வந்த முறையைத்தான் நான் பார்க்கிறேன். வாழக்கூடிய அவனுடைய உரிமையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மத நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக ஒரு ஆட்டுக் குட்டியை காளிக்கு முன்னால் பிடித்து இழுத்துக் கொண்டு போய் நிறுத்த வேண்டிய கேடு கெட்ட செயல் எதுவும் எனக்கு இல்லை. கண் தெரியாத, ஊனமான கால்களைக் கொண்ட நாய்களுக்கும் முயல்களுக்கும் உங்களுடைய பயாலஜி லேப்பில் நான் ஒரு மருத்துவமனையை ஆரம்பிக்கப் போகிறேன்.''

"மிசஸ் மல்லிக்... உங்களை நெருக்கமாக அறிய அறிய எனக்கு ஆச்சரியம் உண்டாகிறது!''

"இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ளும்போது அதற்கும் மாற்றம் உண்டாகும். ரேபதி பாபுவைப் பற்றி மேலும் தகவல்களைத் தெரிந்து கொண்டு வருவதாக நீங்கள் கூறினீர்களே! அதைப் பற்றிக் கூறுங்கள்.''

"நாங்கள் தூரத்து உறவினர்கள். அதனால் அவனுடைய குடும்பத்தைப் பற்றிய சில விஷயங்கள் எனக்குத் தெரியும். ரேபதி பிறந்தவுடன் அவனுடைய தாய் இறந்துவிட்டாள். தந்தையின் சகோதரிதான் அவனை எடுத்து வளர்த்தாள். அந்த அத்தை மிகவும் கண்டிப்பானவள். சிறிய ஒரு விஷயத்திற்குக்கூட அவள் அந்த வீட்டையே ஒரு வழி பண்ணி ஆர்ப்பாட்டம் பண்ணி விடுவாள். அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்குக்கூட அவள்மீது பயம் இல்லாமல் இல்லை. அத்தையின் போக்கு காரணமாக ரேபதிக்கு தைரியம் சிறிது கூட இல்லாமற் போனது. பள்ளிக் கூடத்திலிருந்து வருவதற்கு ஐந்து நிமிடங்கள் தாமதமானால், அதற்கு அவன் இருபத்து ஐந்து நிமிடங்கள் விளக்கம் கூற வேண்டும்.''

"அடக்கம் உண்டாக்குவதுதான் ஒரு ஆணின் பொறுப்பு என்றால், அன்பாக இருப்பதும் கொஞ்சுவதும் பெண்களின் வேலைகளாக இருக்கின்றன. இந்த காரியங்கள்தான் பெண், ஆண் தன்மைகளை நிலை நிறுத்துகின்றன என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்'' -சோஹினி கூறினாள்.

"பெண்கள் அன்னப் பறவையைப் போல துள்ளிக் கொண்டு நடக்கிறார்கள். அவர்கள் சலனமற்ற தன்மையுடன் இருப்பதில்லை. அவர்கள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குச் சாய்கிறார்கள். எனக்கு வருத்தம் இருக்கிறது மிஸஸ் மல்லிக்... ஆனால் இந்த விஷயத்திலும் சில ஆச்சரியங்கள் இருக்கின்றன. தலையை உயர்த்திக்கொண்டு நடக்ககூடிய பெண்களும் இல்லாமலில்லை. அதாவது...''

"அதிகமாகப் பேச வேண்டாம். இப்படிப்பட்ட பெண்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் சமீப காலமாக வளர்த்துக் கொண்ட ஒரு குணத்தைப் பற்றிக் கூறட்டுமா? "வயது குறைந்த இளைஞர்களை வலை வீசிப் பிடிப்பது" என்ற குணம். இல்லாவிட்டால் உங்களைப் போன்ற ஒரு மனிதரை இப்படி சிரமப்பட வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லையே!''

"இல்லை... அப்படிக் கூறாதீர்கள். உங்களுக்குத் தெரியுமா? நாளைய வகுப்புகளுக்கான ஆயத்தங்களைக்கூட ஒதுக்கி வைத்து விட்டுத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். என்னுடைய கடமைகளை மறந்துவிட்டு நான் முதல் முறையாக சந்தோஷப்படுவது இப்போதுதான்.''

"ஒருவேளை பெண் இனத்தின்மீது பொதுவாகவே உங்களுக்கு மென்மையான அணுகுமுறை இருக்கலாம்.''

"அசாத்தியம் இல்லாத ஒரு விஷயம். ஆனால், அங்கு சில வேறுபாடுகள் இருக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி நாம் வேறொரு நேரத்தில் பேசுவோம்!''

சோஹினி சிரித்துக் கொண்டே சொன்னாள்: "ஒருவேளை அப்படிப் பட்ட சூழ்நிலையே வராமல் போகலாம்... சரி... நீங்கள் இப்போது சொன்ன விஷயத்தை முழுமை செய்யுங்கள். ரேபதி பாபு திறமைசாலியாக ஆனது எப்படி?''

"அவன் அப்படி ஆவதற்கான எந்தவொரு சூழ்நிலையும் இல்லாமலிருந்தது. ஆராய்ச்சி சம்பந்தமாக அவன் ஏதாவது மலைப் பகுதிக்குச் செல்ல வேண்டியதிருந்தது. அவன் பத்ரிநாத்திற்குச் செல்லத் தீர்மானித்தான். நடுக்கமும் பயமும்! அவனுடைய அத்தையின் தாய் பல வருடங்களுக்கு முன்னால் பத்ரிநாத்திற்குப் போகும் பாதையில் தான் மரணத்தைத் தழுவினாள். அந்த நினைவை தூசி தட்டி எடுத்து அத்தை, "நான் உயிருடன் இருக்கும் வரை நீ மலையில் ஏறுவதற்குச் செல்லக் கூடாது. அந்தக் காலத்திலிருந்தே நான் பிரார்த்தனை செய்யும், மனதில் ஆசைப்படக்கூடிய விஷயங்களைக் கூறாமல் இருப்பதே நல்லது. நாம் அந்த விஷயத்தை விட்டு விடுவோம்" என்று கூறிவிட்டாள்.

"ஆனால், அத்தைகளை மட்டும் எதற்காக நாம் குறை சொல்ல வேண்டும்? அவர்களுடைய அருமை மருமகன்களுக்கு தைரியம் கிடையாதா என்ன?''

"நான் உங்களிடம் இதற்கு முன்பே சொல்லவில்லையா, மருமக்கத்தாயம் அவர்களுடைய ரத்தத்தில் ஊறிப்போய் விட்டிருக்கிறது என்று. அது அவர்களுடைய மூளையை பாதித்துவிட்டிருக்கிறது. அதனால் அவர்கள் எப்போதும் மாமா என்றுதான் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெட்கம் கெட்ட மொழி. அதுதான் முதல் காட்சி. பிறகு ஒரு சமயம் கேம்ப்ரிட்ஜுக்கு மேற்படிப்பிற்குப் போவதற்காக ரேபதிக்கு ஒரு ஸ்காலர்ஷிப் கிடைத்தபோது, அந்த அத்தை கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணி மீண்டும் தன்னை வெளிக்காட்டினாள். அவன் அங்கு சென்றால் ஏதாவதொரு வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விடுவான் என்று அவள் பயந்தாள். அப்போது நான் கேட்டேன்- "அவன் அப்படிச் செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிறகு என்ன செய்வது?" என்று. "எல்லாம் நாசமாகி விடும். மனதில் நினைத்திருக்கும் அந்த பயம் அன்று ஒரு உண்மையாகிவிடும். அவன் வெளிநாட்டிற்குச் சென்றால் நான் தூக்கில் தொங்கி இறந்து விடுவேன்" என்று அவள் பயமுறுத்தினாள். ஒரு நாத்திகனாக இருந்ததால் தூக்கில் தொங்கி இறப்பதற்கான கயிற்றை உண்டாக்குவதற்கு எந்தக் கடவுளிடம் வேண்டிக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவளுக்கு அதை வாங்கிக் கொடுப்பதற்கும் என்னால் முடியவில்லை. முட்டாள், தைரியமில்லாதவன், ஊர் சுற்றி என்றெல்லாம் நான் ரேபதியைப் பார்த்து சத்தம் போட்டுச் சொன்னேன். அவ்வளவுதான். இப்போது ரேபு ஏதோ ஒரு மில்லில் எண்ணெய் ஆட்டும் வேலையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான்.''

அதைக் கேட்டபோது சோஹினிக்கு சுவாரசியம் உண்டானது. "என்னுடைய மூளை சுவரில் மோதிச் சிதறுவதைப் போல எனக்குத் தோன்றுகிறது. ஒரு பெண் ரேபதியை கடலை நோக்கி பிடித்து இழுத்துக் கொண்டு போனாள். இனிமேல் வேறொரு பெண் அவனை கரைக்கு இழுத்துக் கொண்டு வருவாள். நான் உறுதியான குரலில் கூறுகிறேன்.''- அவள் சொன்னாள்.

"மேடம்... உண்மையைச் சொல்லட்டுமா? அப்படிப்பட்ட உயிரினத்தின் தலையைப் பிடித்து மூழ்க வைத்துக் கொல்லக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட பிறவிகளின் வாலைப் பிடித்துத் தூக்கக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. நீங்கள் அதைப் பழகியபிறகு செய்வதுதான் நல்லது. ஒரு விஷயத்தைக் கேட்கட்டுமா? அறிவியல் மீது உங்களுக்கு இந்த அளவிற்கு அதிகமாக ஆர்வம் தோன்றுவதற்குக் காரணம் என்ன?''

"வாழ்நாள் முழுவதும் அறிவியல்மீது அளவற்ற ஈடுபாட்டை என்னுடைய கணவர் கொண்டிருந்தார். என்னுடைய கணவருக்கு அளவற்ற ஆர்வம் இரண்டே விஷயங்களில்தான் இருந்தன. பர்மா சுருட்டு மீதும், தன்னுடைய சோதனைக் கூடத்தின் மீதும். பல நேரங்களில் அவர் என்னை அந்த சுருட்டில் பற்ற வைத்து ஒரு பர்மாக்காரியாக ஆக்க முயற்சித்திருக்கிறார். ஆண்கள் அதை இயல்பற்ற ஒரு விஷயமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்து நான் அதைத் தவிர்த்து விட்டேன். தன்னுடைய இரண்டாவது ஈடுபாட்டின் மீதும் அவர் என்னை ஆர்வம் கொள்ளச் செய்திருந்தார். பொதுவாக ஆண்கள் பெண்களின் வலையில் போய் சிக்கிக் கொள்வதுதானே வழக்கமாக நடக்கக் கூடியது? இங்கு அதற்கு மாறாக நடந்தது. இரவும் பகலும் எனக்கு அறிவியல் உண்மைகளைப் பற்றிய அறிவைச் சொல்லிக் கொடுத்து அவர் என்னை வலையில் சிக்க வைத்த காரியம்தான் நடந்தது. சவுதரி மசாய், மனைவியிடமிருந்து கணவனுக்குத் தன்னுடைய தவறுகளை மறைத்து வைக்கத் தெரியாது என்ற விஷயம் உங்களுக்குத் தெரியும் அல்லவா? ஆனால், ஒரு விஷயத்தைக் கூறாமல் இருக்க முடியாது. அவருடைய தோற்றத்திலோ நடவடிக்கைகளிலோ சிறிதுகூட களங்கத்தைக் கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை. மிகவும் அருகில் இருந்து பார்க்கும்போதுகூட அவர் எனக்கு ஒரு மகானாகவே தோன்றினார். சற்று தூரத்தில் நின்று பார்க்கும்போது அவர் அதைவிட பெரிய மகானாக இருப்பதைப் போல எனக்கு தோன்றியிருக்கிறது.''

"அவருடைய மிகப் பெரிய பலம் என்ன என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறது?''- சவுதரி கேட்டார்.

"நான் அதைக் கூற வேண்டுமா? அவருடைய மிகப் பெரிய அறிவு அல்ல- அறிவுமீது கொண்டிருந்த முழுமையான வழிபாடும் ஈடுபாடும்தான் அவருடைய மிகப் பெரிய பலம். அவரைச் சுற்றி எப்போதும் வழிபடக்கூடிய ஒரு சூழல் இருந்தது. எங்களைப் போன்ற பெண்களுக்கு வழிபடுவதற்கு பார்க்கக் கூடிய ஒரு பொருள் வேண்டும். அதனால்தான் அவருடைய சோதனைக்கூடம் என்னுடைய கடவுளாக ஆனது. சில நேரங்களில் அதற்கு உள்ளே விளக்கை ஏற்றி எரிய வைக்க வேண்டும், சந்தனத் திரியைப் புகையச் செய்ய வேண்டும், சங்கை முழங்கச் செய்ய வேண்டும், வாத்திய கோஷங்களை எழச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால், என்னுடைய கணவருக்கு அவை எதுவும் பிடிக்காமல் போய்விடுமோ என்று நான் பயந்தேன். அவர் இங்கு தினமும் வழிபாடு செய்து கொண்டிருந்த போது, அவர் கூறுவதைக் கேட்பதற்காக மட்டுமே கல்லூரி மாணவர்கள் நிறையப் பேர் வந்து குழுமியிருப்பார்கள். நானும் அவர்களுக்கு மத்தியில் போய் உட்காருவது வழக்கம்.''

"அந்த மாணவர்களுக்கு அவர் கூறுவதைக் கேட்க முடிந்ததா?''

"கவனித்துக் கேட்க முடிந்தவர்களை, நான் தனியாகக் கூர்ந்து பார்த்திருக்கிறேன். அவர்களில் முழுமையான சில சந்நியாசிகளை என்னால் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் சில புத்திசாலி இளைஞர்கள் அவர் கூறுவதை எழுதுவதைப் போல நடித்துக் கொண்டு மிகவும் அருகில் உட்கார்ந்தவாறு தங்களின் அழகுக் காதலிக்கு காதல் கடிதம் எழுதி தங்களுடைய ரசனையை வெளிப்படுத்துவார்கள்.''

"உங்களுக்கு அது பிடித்திருந்ததா?''

"உண்மையைச் சொல்லட்டுமா? அது எனக்குப் பிடித்திருந்தது. என்னுடைய கணவர் வேலைக்குச் செல்வார். அப்போது காதலர்கள் அங்கு சுற்றிச் சுற்றி நின்று கொண்டிருப்பார்கள்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel