Lekha Books

A+ A A-

சோதனைக்கூடம் - Page 2

Sodhanaikoodam

ண்டன் பல்கலைக் கழகத்தில் பட்டம் வாங்கிய எஞ்ஜினியர் நந்தகிஷோர். ஒரு மாணவன் என்ற வகையில், அவன் மிகவும் திறமையானவனாக இருந்தான். அறிவாளி. பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலிருந்தே அவன் எல்லா தேர்வுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறக் கூடியவனாக இருந்தான்.

அவன் மிகவும் அறிவு படைத்தவனாக இருந்தான். அவனுடைய தேவைகள் எல்லையற்றவையாக இருந்தாலும், அவற்றை அடையக் கூடிய வழிகள் வரையறைக்குள் இருப்பவையாகவே இருந்தன.

ரயில் பாலங்கள் கட்டக்கூடிய இரண்டு பெரிய திட்டங்களில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அப்படிப்பட்ட திட்டங்களின் மூலம் தன்னுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும், செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும் அவனுக்கு முடிந்தது. ஆனால், அந்த மாதிரியான விஷயங்களை அவன் நிறைவேற்றிக் கொண்டது, முற்றிலும் நேர்மையான வழியில் தான் என்று கூறுவதற்கில்லை. அவன் அந்த விஷயத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி அள்ளினான். அப்போது மனசாட்சி அவனைக் குத்தவே இல்லை. லாப நஷ்டக் கணக்குகள், கம்பெனி என்று அழைக்கப்படும் உருவாக்கப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருந்தது. வேதனைகள் முழுவதையும் ஒரு தனி மனிதனின் கணக்கில் மட்டுமே கொண்டு போய் சேர்க்க முடிகிற ஒரு விஷயமல்ல அது.

தொழில் விஷயத்தில் ஆட்கள் அவனை ஜீனியஸ் என்று குறிப்பிட்டார்கள். அவனுடைய கணக்குக் கூட்டல்கள் அந்த அளவிற்கு சரியானவையாக இருந்தன. ஆனால், அவன் ஒரு சாதாரண வங்காளியாக இருந்ததால், கிடைக்க வேண்டிய வரவேற்போ கவனிப்போ அவனுக்கு கிடைக்கவில்லை. அவனைவிட திறமை குறைவாக இருந்த ஆங்கிலேயரான வெள்ளைக்காரர்கள் அவனுடைய மேலதிகாரிகளாக இருந்தார்கள். ஒரு கையை பேன்ட்டின் பாக்கெட்டிற்குள் நுழைத்துக்கொண்டு, கால்களைச் சற்று அகற்றி வைத்துக்கொண்டு, "ஹலோ மிஸ்டர் மல்லிக்" என்று கூறியவாறு நீண்டகாலமாக அறிமுகமானவர்களைப் போல அவர்கள் அவனுடைய முதுகை அன்புடன் தட்டினார்கள். அவனுக்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. அது வேறு காரணம் எதற்காகவும் இல்லை. வேலை செய்வது அவன். பணமும் பெயரும் கிடைப்பது வெள்ளைக்காரர்களுக்கு. அதனால் அவன் தனக்குக் கிடைக்கக்கூடிய பங்கைப் பற்றித் தனியாக இருக்கும்போது கணக்கு போட்டுப் பார்த்தான். கிடைக்காத பாகத்தை எப்படி உண்டாக்குவது என்ற விஷயத்தை அவன் நன்கு தெரிந்து வைத்திருந்தான்.

எப்படியெல்லாமோ எவ்வளவோ பணத்தை உண்டாக்கினாலும், வளைந்த வழிகளில் பணத்தைச் சம்பாதித்தாலும், நந்த கிஷோர் எந்தச் சமயத்திலும் ஒரு பணக்காரனைப் போல வாழ்ந்ததில்லை. சிக்தர் பாறையின் சிறிய தெருவில், ஒன்றரை மாடியை மட்டும் கொண்டிருக்கும் சிறிய ஒரு வீட்டில்தான் அவன் வசித்தான். தொழிற்சாலையில் அணியக்கூடிய அழுக்கு படிந்த ஆடையை மாற்றுவதற்கு அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. அதைப்பற்றி யாராவது அவனைப் பார்த்துக் கிண்டல் பண்ணினால், அவன் "தொழிலாளி என்ற உயர்வான மனிதனின் சேவையைக் காட்டும் ஆடை... அதுதான் என்னுடைய உடலை மூடியிருக்கும் ஆடை'' என்று கூறுவான்.

ஆனால், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக அவன் பெரிய ஒரு கட்டிடத்தைக் கட்டினான். ஓய்வு நேரத்தில் அந்த ஆர்வத்தைத் தூண்டக்கூடிய செயலில் அந்த அளவிற்கு அவன் தன்னைக் கரைத்துக் கொண்டான். ஆட்கள் அதைப் பற்றித் தாறுமாறாக நிறைய பேசிக் கொண்டாலும், அவன் அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. இவ்வளவு பெரிய கட்டிடம் எப்படி உண்டானது? அவனுக்கு எங்கிருந்து அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்தது?

சில செயல்கள் மது அருந்தும் பழக்கத்தைப் போல வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயங்களாக ஆகி விடுவதுண்டு. மனிதர்கள் கூறக் கூடிய விஷயங்களைப் பற்றி சிலர் செவியே கொடுப்பதில்லை. ஆட்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கக்கூடிய மனநிலையில் நந்த கிஷோர் இருந்தான். அறிவியல் அவனுக்கு ஒரு பைத்தியம் பிடிக்கச் செய்யும் விஷயமாக இருந்தது. ஏதாவது அறிவியல் மாத இதழையோ அட்டவணையையோ பார்த்துவிட்டால் போதும்- அவன் அதன் பக்கங்களைப் புரட்டியவாறு ஆர்வத்துடன் நாற்காலியின் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். ஜெர்மனியிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் அவன் விலை மதிப்புள்ள அறிவியல் கருவிகளை வரவழைத்தான். இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய பல்கலைக் கழகங்களில்கூட அத்தகைய கருவிகள் இருக்காது. அறிவைத் தேடி அலைந்து திரிந்த அந்த விஞ்ஞானியை மிகவும் கவலை கொள்ளச் செய்த விஷயம் அதுதான். வசதி படைத்த நாடுகளின் அறிவு விருந்தில் மிச்சம் மீதியாக இருப்பதை மட்டுமே வைத்துக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டிய நிலையில், அவனுடைய வறுமையின் பிடியில் சிக்கிய இந்த நாடு இருந்தது. வெளிநாடுகளில் இருக்கும் மிக உயர்ந்த கருவிகளைப் பயன்படுத்த முடியாத நம்முடைய இளம் விஞ்ஞானிகள், வறண்டு காய்ந்து போன பாட நூல்களிலிருந்து பெற்ற அறிவு மட்டுமே சொத்தாக இருந்தது. "நமக்கு மூளைப் பஞ்சம் சிறிதும் இல்லை. பணத்திற்கு மட்டுமே பஞ்சம்'' என்று அவன் வெறித்தனமாகக் கூறுவதுண்டு. அறிவியலின் மிகப் பெரிய சாலையை நம்முடைய இளைஞர்களுக்கு முன்னால் திறந்துவிடுவது என்பதுதான் அவனுடைய முக்கியமான விருப்பமாக இருந்தது. விலை மதிப்புள்ள இயந்திரங்களையும் கருவிகளையும் சேர்க்கும்போதெல்லாம், உடன் பணியாற்றுபவர்களின் மனசாட்சி அவனை நோக்கித் திரும்பியது. அப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில் ஆங்கிலேயரான அவனுடைய மேலதிகாரி அவனைக் காப்பாற்றினார். நந்த கிஷோரின் தொழில் திறமையைப் பற்றி அந்த மனிதருக்கு மிகவும் உயர்ந்த மதிப்பு இருந்தது. அதற்கும் மேலாக ரயில்வே சம்பந்தப்பட்ட பணம் எப்படியெல்லாம், எந்தெந்த வழிகளில் எல்லாம் புகுந்து எடுக்கப்படுகிறது என்ற விஷயமும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

வேலையை ராஜினாமா செய்வதற்கு நந்த கிஷோர் கட்டாயப் படுத்தப்பட்டான். மேலதிகாரியின் ஆதரவும் ஆசீர்வாதமும் இருந்ததால், ரயில்வே துறையிலிருந்து பழையனவாகிப் போன கருவிகளையும் இயந்திரங்களையும் குறைவான விலைக்கு வாங்குவதற்கும், அவற்றை வைத்து ஒரு தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கும் அவனால் முடிந்தது. முதல் உலகப்போர் ஐரோப்பா கண்டத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. சந்தையில் நல்ல விழிப்புணர்ச்சி நிலவிக் கொண்டிருந்த காலம். நந்த கிஷோரோ நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சாமர்த்தியம் கொண்டவனாக இருந்தான். லாபம் அதிகமாக வரக்கூடிய புதிய புதிய வழிமுறைகளை அவன் கண்டுபிடித்துக் கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில்தான் அவனுக்கு இன்னொரு ஆசை உண்டானது.

சிறிது காலம் அவன் பஞ்சாபில் வியாபாரத்தை நடத்தினான். அங்கு அவனுக்கு ஒரு இளம் பெண்ணுடன் நட்பு கிடைத்தது. ஒருநாள் காலையில் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த நந்த கிஷோருக்கு முன்னால் இருபது வயது மதிக்கக் கூடிய ஒரு அழகான இளம் பெண் தன்னுடைய காக்ரா சோளி ஓசை உண்டாக்க, தைரியத்துடன் வந்து நின்று கொண்டிருந்தாள்.

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel