Lekha Books

A+ A A-

ஊஞ்சல் - Page 6

oonjal

பெண்களுக்கே உரிய அழகை வெளிப்படுத்தக்கூடிய அந்தப் பெண்ணின் கண்களில் காமத்தின் மின்னல் பளிச்சிட்டதை நான் பார்த்தேனோ? என் மனதிற்குள் சக்கர நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மனிதன்மீது இரக்கம் உண்டானது. என் இதயம் பலமாக அடித்தது.

“இனி நான் போகட்டுமா? ஆடைகளை சலவை செய்து உலர வைத்து நாளைக்குக் கொண்டு வர்றேன்'' - நான் சொன்னேன்.

“மழை முழுவதுமாக நிற்கவில்லை'' -வீட்டின் தலைவி சொன்னாள். வேலுப்பிள்ளை ஒரு கப் தேநீரை என்னிடம் நீட்டினான். நான் திரும்பத் திரும்ப நன்றி கூறிக்கொண்டிருந்தேன்.

“என்ன இவ்வளவு அவசரம்? மழை முழுவதுமாக நின்றபிறகு போகலாம் அல்லவா? மணி ஆறுதான் ஆகியிருக்கு!'' - வீட்டின் தலைவி சொன்னாள். “ரொம்பவும் இருட்டா இருக்கு''- வேலுப்பிள்ளை சொன்னான். நான் வீட்டின் தலைவனைப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து வயது இருக்கும் என்று நான் நினைத்தேன். தலை முடியில் நரை விழுந்திருந்தது. அணிந்திருந்த கோடுகள் போட்ட சட்டையின் பொத்தான்கள் விழுந்ததால் இருக்க வேண்டும். நெஞ்சில் இருந்த முடிகளை என்னால் பார்க்க முடிந்தது. சிறு உரோமப் போர்வைக்குள் மூடப்பட்ட கால்களை கவனிக்கவில்லையென்றால், அவன் நல்ல உடல்நலத்துடன் இருக்கக்கூடிய ஒரு மனிதன் என்று யாரும் தவறாக நினைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. பலம் கொண்ட சதைகள்... அழகான உடலமைப்பு... நீளமான இமைகளைக் கொண்ட கண்கள்... உயர்ந்த நெற்றி... அழகை வெளிப்படுத்தும் மூக்கு.

“என்ன பெயர்?'' - நான் கேட்டேன்.

“அவருடைய பெயர் உண்ணித்தான்... தேவதாஸ் உண்ணித்தான்...''

என்னுடைய நாடிகள் தளர்வதைப்போல் நான் உணர்ந்தேன். இந்த உடல் ஊனமுற்ற மனிதன் என் ராஜுவை தட்டிக்கொண்டு சென்ற உண்ணித்தானா? என் ராஜுவை ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட குடிகாரனும் பெண் பித்தனுமான மனிதப் புழு இவன்தானா?

தன்னுடைய உதடுகளை அசைக்க உண்ணித்தான் முயற்சித்தான். ஆள் யார் புரிந்துகொண்டு விட்டதை அறிவிப்பதற்காக ஒரு வீணான முயற்சி.

“எழுத முடியுமா?'' -நான் இல்லத்தரசியிடம் கேட்டேன்.

“அய்யோ...எழுதவெல்லாம் முடியாது. கைவிரல்களுக்கு கொஞ்சம் கூட சக்தி இல்லை. மனதில்இருப்பதை மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்கு ஒரு வழியும் இல்லை. ஆனால், எல்லாம் புரிகிறது என்பது மாதிரி தோன்றும். கண்ணின் கருமணிகள் அவ்வப்போது அசைவதைப் பார்க்கலாம். இடையில் அவ்வப்போது அழுவதைப் போல ஒரு சத்தத்தை எழுப்புவார். வேதனை எதுவும் இல்லை என்று டாக்டர் சொன்னார். வெறுமனே ஒரு முனகல்...''

நான் குனிந்துநின்று உண்ணித்தானின் கண்களையே உற்றுப் பார்த்தேன். என் முகத்தின் பரவலான பிரதிபலிப்பை நான் அவற்றில் கண்டேன். என் மனதில் படிப்படியாக வெற்றிக் கொடிகள் உயர்வதையும் பறப்பதையும் நான் பார்த்தேன். கால்பந்து விளையாடும்போது மைதானத்திலிருந்து ஒரு காலத்தில் தொடர் மழையைப் போல உயர்ந்து கேட்ட வெற்றி ஆரவாரத்தை நான் மீண்டும் கேட்பதைப் போல எனக்குத் தோன்றியது. ஆனால், அந்த வெற்றி ஆரவாரமும் பாராட்டும் சந்தோஷமும் உண்ணித்தானுக்காக இல்லை. நான்தான் வெற்றி பெற்றவன். கொடிகள் எனக்காகப்பறந்து கொண்டிருந்தன.

“பல வருடங்களுக்கு முன்னால் அறிமுகமானது. நானும் சென்னையில் லயோலா கல்லூரியில் தான் படித்தேன்'' -நான் சொன்னேன்.

உண்ணித்தானின்தலை இரண்டு முறை குனியவும் நிமிரவும் செய்தது. நான் சொன்னதை அவன் கேட்டானா? கேட்டிருக்கும் பட்சம், அந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பானா?

“எதுவும் புரிகிறது என்று தோன்றவில்லை'' - மனைவி சொன்னாள்.

“நானும் உண்ணித்தானும் ஒன்றாகக் கல்லூரியில் படித்தோம். உண்ணித்தான் ஒரு வருடம் சீனியராக இருந்தார். கால்பந்து சேம்பியனாகவும் இருந்தார்'' – நான் சொன்னேன்.

“சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் அவர் முதல் மனைவியைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அவங்களை உங்களுக்குத்தெரியுமா? ராஜ்யலட்சுமி பணிக்கர்?''

“பார்த்திருக்கேன்'' - நான் சொன்னேன்.

“அமெரிக்காவில் ஒரு நர்ஸ் வேலை எனக்குக் கிடைத்தது- நியூஜெர்ஸியில் இருக்கும் வி.ஏ. மருத்துவமனையில். அங்குதான் நான் அவங்களைப் பார்த்தேன். பிரசவத்திற்காக வந்திருந்தாங்க. குழந்தை பிறக்கும் போதே இறந்து பிறந்தது. அந்தப் பெண் பாவம். இரண்டு நாட்கள் நிறுத்தாமல் அழுதாங்க. மயக்க மருந்து கொடுத்தும் தூக்கம் வரவில்லை'' - வீட்டின் நாயகி சொன்னாள்.

“பிறகு...விவாகரத்து எப்போ நடந்தது?'' -நான் ஆர்வமில்லாததைப் போல காட்டிக்கொண்டு,முக வெளிப்பாட்டில் எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் கேட்டேன்.

“அவர்களுக்கிடையே பொருத்தம் இல்லாமல் ஆகிவிட்டது. தெய்வத்தின் செயல். வேறு என்ன சொல்வது? அவர்கள் சண்டை போட்டுக் கொள்ளவில்லை. வழக்கு போடவும் இல்லை. செலவுக்குத் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவும் இல்லை. இன்னொரு நகரத்தில் போய் வேலை பார்த்து சுகமாக, மன அமைதியுடன் வாழ்ந்தாங்க. என்ன சொன்னாலும்அவங்களுடைய நல்ல மனதைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது'' – திருமதி உண்ணித்தான் சொன்னாள்.

“அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் எப்படி ஆரம்பமாயின? சென்னையில் எல்லாரும் அந்தக்காதல் உறவைப் பற்றி எப்போதும் ஆச்சரியத்துடனும் மதிப்புடனும் பேசுவார்கள்.ரோமியோவையும் ஜூலியட்டையும் போல அவர்கள் இருந்தார்கள்'' - நான் சொன்னேன்.

“அவங்க ஒரு தனிப்பட்ட குணம் கொண்ட பெண்ணாக இருந்தாங்க. விருந்துகளுக்கு இவருடன் செல்ல அவங்க மறுத்தாங்க. மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு பிசினஸ் பண்ணும் மனிதர் வெற்றிபெற முடியாதே! சென்னையில் வளர்ந்தும் அவங்க நடத்தையில் ஒரு கிராமப் பெண்ணைப் போலவே இருந்தாங்க. ஆண்களுடன் சேர்ந்து நடனமாடக்கூட அவங்க தயாராக இல்லை'' - திருமதி உண்ணித்தான் சொன்னாள்.

“இப்போ அவங்க எங்கே இருக்காங்க?'' -நான் கேட்டேன்.

இல்லத்தரசி தோள்களைக் குலுக்கிக் கொண்டு சொன்னாள்: “யாருக்குத் தெரியும்?இறந்திருப்பாங்க. அப்போதே ஒரு சயரோகம் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாங்க.எப்போதும் இருமிக்கொண்டே இருப்பாங்க. உடல் ஒரு எலும்புக் கூட்டைப் போலஇருந்தது.''

“நான் பார்க்குறப்போ ராஜ்யலட்சுமி நல்ல உடல் நலத்துடன் இருந்தாங்க.''

“அவங்களோட தாய் சயரோகம் பாதிக்கப்பட்டுத்தான் இறந்தாங்க. மகளுக்கும் அந்த நோய் வந்துவிட்டது. அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு?''

“ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ராஜ்யலட்சுமியை கல்லூரியின்அழகியாக எல்லாரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள்'' - நான் சொன்னேன்.

 “இதைக் கூறும் ஆளும் அவங்களோட ரசிகனாக இருந்தார் என்று தோன்றுகிறது'' - உரக்க சிரித்துக்கொண்டே திருமதி உண்ணித்தான் சொன்னாள்.

“எல்லாரும்விரும்பக்கூடிய ஒரு பெண்ணாக இருந்தாங்க ராஜ்யலட்சுமி பணிக்கர்!'' – நான் முணுமுணுத்தேன். குரூரமான குழிகளை வெளிப்படுத்தியவாறு அந்தப் பெண்சிரித்தாள். என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கண்கள் என்னை நிம்மதி இல்லாமல் ஆக்கின.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel