Lekha Books

A+ A A-

ஊஞ்சல் - Page 7

oonjal

கண்களைச் சுருக்கிக் கொண்டு அவள் சிரித்தாள். அதுதான் காரணமாக இருக்க வேண்டும்- அந்தக் கண்களின் வெளுத்த நிறத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அவை கறுத்து, எண்ணெய் பசையுடன் இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. நான் வேகமாக நடந்து சென்று என்னுடைய நனைந்த செருப்புகளுக்குள் கால்களை மனமில்லா மனதுடன் நுழைத்தேன். வெளியே மழை நின்று விட்டிருந்தது. ஆனால், வெளி வாசலை நோக்கிச் சென்ற நீளமான காங்க்ரீட்பாதையின் இரண்டு பக்கங்களிலும் வளர்ந்து நின்றிருந்த மரக்கிளைகளில்இருந்து நீர்த் துளிகள் ஒரே மாதிரியான தாளத்துடன் தரையில் தெறித்துவிழுந்து கொண்டிருந்தன. தலை குனிந்து நின்றிருந்த அசோகா மரமும், வேப்பமரமும், பலா மரமும், மாமரமும் கண்ணீர் சிந்தும் பெண்களை நினைவுக்குக் கொண்டு வந்தன. அழகானவளாக இருந்தாலும், சிந்தனையில் பழமையானவள் என்று தோன்றவைத்த வீட்டின் நாயகியின் காந்த வளையத்திற்குள்ளிருந்து முடிந்த வரையில் வேகமாக ஓடித் தப்பிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

ஒரு நீண்ட காலம் முழுவதும் ஒரு பெண்ணைக் காதலித்து, அந்தப் பெண்ணைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு தூங்குவதற்காக படுத்த ஒரு ஆளுக்கு, திடீரென்று ஒரு நாள் அந்தக் காதலியை மீண்டும் பார்க்கக்கூடிய சூழ்நிலை வந்தால், அவன்அனுபவிக்க நேரும் மனப்போராட்டங்களுக்கு இணையான ஒரு மன நிலைதான் நீண்டகாலஎதிரியைப் பார்க்கும் போதும் உண்டாகிறது. உண்ணித்தானை மீண்டும் பார்த்தபோது, என்னுடைய உடல் மனப் போராட்டத்தால் வியர்த்தது. என்னுடைய நெஞ்சின் துடிப்பு அதிகமானது. உடல் ஊனமுற்ற மனிதனாக ஆன பிறகும், தன்னுடைய சந்தோஷ வாழ்க்கையை கிட்டத்தட்ட தொடர்ந்து கொண்டிருந்த அந்த மனிதனைப் பார்த்து நின்றபோது, வெறுப்பு கலந்த கசப்பான நீர் என் வாயில் ஊறியது.அவனுடைய கழுத்தை நெறித்து, பிணத்தை நிலத்தில் எறிந்து அதன் மீது மிதிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டானது. பழிவாங்குவது மிகவும் இனிமையானஅனுபவமாக இருக்கும் என்பதை நான் அந்த நிமிடத்தில் சிந்தித்தேன்.

என் தாய் ஒரு முறை சொன்னாள்: “என் மகன் அப்பாவி. ஒரு எறும்புக்குக்கூட அவன் வேதனையை உண்டாக்க மாட்டான்.''

என் தாய் உயிருடன் இருந்திருந்தால், நான் அவளைப் போய் பார்த்துக் கூறியிருப்பேன்: “அம்மா, உங்களுக்கு மகனைப் பற்றித் தெரியவில்லை. கொலை செய்வதற்குக்கூட  தயங்காதவன்தான், உங்களின் சிவன்குட்டி.''

முதல் சந்திப்பிற்குப் பிறகு நான் உண்ணித்தானின் வீட்டிற்கு ஒரு வாரம் கழித்துச் சென்றேன். காலையில் நடை முடிந்து திரும்பி வரும் வழியில், நான் இரும்பு கேட்டைத் தள்ளித் திறந்து அவர்களுடைய தோட்டத்திற்குள் நுழைந்தேன். மண்ணில் கிடந்த நாளிதழை எடுத்துக்கொண்டு நான் காங்க்ரீட் பாதையின் வழியாக அதிகம் சத்தம் உண்டாக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியவாறு நடந்தேன். முன் பக்கத்திலிருக்கும் பெரிய ஜன்னல்களின் கதவுகள் திறந்து கிடந்தன. நான் மணி அடிக்காமல், கதவைத் தட்டவும் முயற்சிக்காமல், ஒரு ஜன்னலுக்குக் கீழே போய் நின்றேன். முன்னறையின் மேஜைமீது அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த உலோகத்தால் ஆன சிலைகளை ஒரு துணியைக் கொண்டு அழுத்தித்துடைத்து, அவற்றின் பிரகாசத்தைக் கூட்டிக் கொண்டிருந்தாள் திருமதி உண்ணித்தான். அவள் இளம் நீல நிறத்தைக் கொண்ட - அதிகமான மடிப்புகள் இல்லாதஒரு கவுனை அணிந்திருந்தாள்.

அவளுடைய தலைமுடி சற்று மேலேயே இறுகக் கட்டப்பட்டிருந்தது. அவள் அந்தத்தோற்றத்திலும் அழகாகவே இருந்தாள். பழிக்குப் பழி (?) வாங்க வேண்டும் என்ற ஆசை திடீரென்று எனக்குள் எழுந்து நின்றது. என்னுடைய தொண்டை வறண்டு போனது.அவளை அழைத்துக் கதவைத் திறக்கும்படி கூறுவதற்குக்கூட சக்தி இல்லாதவனாகநான் ஆனேன். என் கண்கள் தன் முகத்தில் காயம் உண்டாக்கிவிட்டது என்பதைப்போல திடீரென்று அவள் அதிர்ச்சியடைவதை நான் பார்த்தேன். அவளுடைய முகம்உயர்ந்தது. அந்தக் கண்கள் என்னுடைய முகத்தில் பதிந்து நின்றன.

“மிஸ்டர் சிவசங்கரன் நாயர்! இவ்வளவு சீக்கிரமாகவா? வாங்க... வாங்க... நான் கதவைத் திறக்கிறேன்'' என்று கூறியவாறு கதவைப் பாதியாக திறந்து என்னை உள்ளேவருவதற்கு அனுமதித்த பிறகு, அவள் தன்னுடைய ஆடை அணிந்திருப்பதைப் பற்றிமன்னிப்பு கேட்கிற தொனியில் சொன்னாள்.

“யாரும் இவ்வளவு சீக்கிரமா வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கவில்லை. இல்லாவிட்டால்இப்படிப்பட்ட தோற்றத்தில் நான் கதவைத் திறந்திருக்க மாட்டேன்'' – அவள் சொன்னாள்.

“என் தவறு.நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த பொருத்தமில்லாத நேரத்தில் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் உள்ளே வந்திருக்கக் கூடாது. சலவை செய்துகொண்டு வந்த சட்டையையும் வேட்டியையும் இங்கு வேலுப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டுப் போக வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய நோக்கமாகஇருந்தது. உங்களையோ உண்ணித்தானையோ இவ்வளவு அதிகாலையில் வந்து எழுப்பவேண்டும் என்று நான் நினைக்கவேயில்லை'' - நான் சொன்னேன்.

“அவர் நல்ல உறக்கத்தில் இருக்கிறார். எட்டு மணி வரை உறங்குவார். நான் சரியாக ஐந்தரை மணிக்கு எழுந்து விடுவேன். பிறகு காப்பி உண்டாக்கி விட்டு, வீட்டில் இருக்கும் தூசிகளைப் பெருக்குவது, தோட்ட வேலை என்று போகும். எட்டு மணி வரைநான் முழுமையான சுதந்திரத்தில் இருப்பேன்'' - அவள் சொன்னாள்.

நான் கதவை நோக்கித் திரும்பியபோது, அவள் என்னைத் திரும்பவும் அழைத்தாள்.

“தேநீரோ காப்பியோ குடித்துவிட்டுப் போகலாம். நடந்துவிட்டு வந்ததன் களைப்பு இருக்கும்'' - அவள் சொன்னாள்.

நான் ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்தேன்.

“வேலுப்பிள்ளை எழவில்லையா?'' - நான் கேட்டேன். என்னுடைய குரல் ஒரு அறிமுகமில்லாத மனிதனின் கரடுமுரடான குரலைப் போல இருந்தது. எனக்கு தொண்டை வலி உண்டானதோ? எனக்கு ஞாபகத்தில் இல்லை. அந்தப் பெண் என்னுடைய மடியில் வந்துவிழுந்ததும், நான் அவளை வாரி எடுத்து முத்தமிட்டதும் வெறும் ஒரு கனவா? திரும்பி வரும்போது நான் என்னிடமே கூறிக்கொண்டேன்.

"கனவாகத்தான் இருக்க வேண்டும். வெறும் கற்பனை. நான் அப்படிப்பட்டவன் இல்லை. நான் இன்னொரு ஆளின் மனைவியை முத்தமிட மாட்டேன். "

வீட்டைஅடைந்த பிறகும், என்னுடைய நாசித் துவாரங்களில் ஒரு பெண்ணின் வாசனை இருந்து கொண்டே இருந்தது. என்னுடைய ஈரமான பனியனிலும் கை விரல்களிலும் புழுவின் வாசனை பற்றிக் கொண்டிருப்பதை நான் கண்டுபிடித்தேன். என்னுடைய உதடுகளில் அவளுடைய பற்கள் பட்டு ரத்தம் வெளியே வந்த கறுத்த அடையாளங்கள் இருந்தன. என் கழுத்தின் இடது பக்கத்தில் ஒரு செந்தூரப் பொட்டைப் போல ஒரு சிவப்பு அடையாளம் இருப்பதை நான் கண்ணாடியில் பார்த்தேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel