
ஐரோப்பிய வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பணக்காரர்கள், பெரிய மனிதர்கள்.... நானோ? ராஜுவைத் திருமணம் செய்து இந்தச் சிறிய கிராமத்திற்கும் இந்த ஓலை வேய்ந்த குடிசைக்கும் அழைத்துக் கொண்டு வர என்னால் முடியுமா?'' – நான் ஆர்வத்துடன் கேட்டேன்.
“அவர்களும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாமும் நல்ல குடும்பத்தில் உள்ளவர்கள்தான். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பணம் என்றைக்கும் பிணம்தான். பணவசதி இல்லையென்றாலும் உனக்கு அறிவு இருக்கு. நல்ல குணம் இருக்கு. நல்ல உடல் நலம் இருக்கு. பிறகு ஏன் அவளுடைய கணவனாக உன்னை நினைக்கக் கூடாது?'' - என் தாய் கேட்டாள்.
டாக்டர் பணிக்கர், அவளுடைய மகள் ஆகியோரின் புகைப்படங் களை நான் என் தாய்க்கு அனுப்பி வைத்தேன். அவற்றில் இரண்டு புகைப்படங்களை எடுத்து மரச்சட்டங்கள் போட்டு எங்களுடைய வீட்டின் முன்னறையில் என் தாய் தொங்கவிட்டாள்.உறவினர்களிடமும் சினேகிதிகளிடமும் அவள் சற்று உரிமை உணர்வுடன் சென்னையில்இருக்கும் பணிக்கரின் குடும்பத்தைப் பற்றி பேசவும் செய்தாள். ராஜுவின் தலையில் கூந்தல் அடர்த்தியாக இல்லை என்று கூறி, தேங்காய் வெந்த- தேங்காய்எண்ணெய்யைத் தயாரித்து அவளிடம் தரும்படி ஒருமுறை என் தாய் கொடுத்தனுப்பினாள். அதைத் தலையில் தேய்த்தாளா என்று ராஜுவிடம் ஒரு நாள் கூட கேட்பதற்கு எனக்கு தைரியம் இல்லை.
ராஜுவிற்கு பதினேழு வயது கடந்திருக்கும். ஒருநாள் அவள் என்னுடைய ஹாஸ்டலுக்குத் தானே காரை ஓட்டிக் கொண்டு வந்தாள். மாலை நெருங்கிய நேரம். நான் பரபரப்பு அடைந்துவிட்டேன். ரகசியமாக சந்தோஷப்படவும் செய்தேன். என் நண்பர்கள் மத்தியில் பொறாமை உண்டாகிற மாதிரி ராஜு என்னுடைய வலது கையைப் பிடித்துக்கொண்டு, என்னுடன் நெருக்கமாக நின்று கொண்டு என் காதில் மெதுவான குரலில் சொன்னாள்:
“நீங்க எனக்கு ஒரு விஷயத்தில் உதவணும்.''
லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டியபோது அவளைத் தடுத்து நிறுத்தி போலீஸ்காரர்கள் கார்டு கொடுத்திருப்பார்களோ?
“என்ன ஆச்சு?'' - நான் கேட்டேன்.
“இந்த ஹாஸ்டலில் தங்கியிருக்கும் உண்ணித்தானிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கணும். தேவதாஸ் உண்ணித்தான்....'' - அவள் சொன்னாள்.
“ஃபுட்பால் ப்ளேயர் உண்ணித்தானா?''
“ஆமாம்...''
என்னுடைய சர்வ நாடிகளும் அந்த நிமிடத்தில் தளர்வதைப் போல எனக்குத் தோன்றியது.எனக்கு உண்ணித்தானைப் பிடிக்காது. இளம் பெண்களை ஏமாற்றிக் கொண்டும், பிறகு அவர்களைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டும், மூன்றாம் தரத்தைச் சேர்ந்தவர்களின் கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டுமிருந்த - ஒரு வாலிப முறுக்கில் சுற்றிக் கொண்டிருந்த மனிதன்தான் தேவதாஸ் உண்ணித்தான். அவனுடைய குணங்கள் எப்படிப்பட்டவை என்பதைத் தெரிந்த பிறகும், இளம்பெண்கள் அவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குக் காரணம் - அவன் வெள்ளை நிறத்தில் இருந்தான். நல்ல உடல் பலத்தைக் கொண்டவனாக இருந்தான். உயர்ந்த நெற்றியும் அழகான மூக்கும் வரிசை தவறாத பற்களும் அவனுக்கு இருந்தன. என் ராஜுவும் அவனுக்கு இரையாகி விடுவாளோ? நான் தயங்கித் தயங்கி சொன்னேன்: “அவன் நல்லவன் இல்லை, ராஜு!''
“தேவதாஸுக்கு ஒரு நடத்தைச் சான்றிதழ் தரும்படி நான் உங்களிடம் கூறவில்லை. இந்தக் கடிதத்தை யாருக்கும் தெரியாமல் அவரிடம் சேர்த்தால் போதும்'' – ராஜு சொன்னாள். அது ஒரு ராஜ குமாரியின் கட்டளையாக இருந்தது. நான் தலையைக் குனிந்து கொண்டேன்.
அன்றிலிருந்து காதலி - காதலனின் தூதுவனாக நான் ஆகிவிட்டேன். வாய் திறக்காத, கவலையுடன் இருந்த தூதுவன். உண்ணித்தான் என்னை அன்னப்பறவை என்று அழைக்க ஆரம்பித்தான்.அதையும் நான் பொறுத்துக் கொண்டேன். கால்பந்து விளையாட்டு நடந்து கொண்டிருக்கும்போது, உண்ணித்தானை உரத்த குரலில் பாராட்ட முன்னால் இருந்த காலரியில் ராஜுவும் வந்து உட்கார்ந்து கொள்வாள். சிறிதும் வெட்கமே இல்லாத அந்தச்
செயல் என்னை கோபம் கொள்ளச் செய்தது. ஆனால், அதைப்பற்றிச் சொன்னபோது, அவள் என்னைத் திட்டினாள்:
“என்னுடைய நடத்தையைப் பற்றி விமர்சிப்பதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?'' - அவள் கேட்டாள்.
அவளைப் பற்றி குரூரமாக, வெறுப்புடன் பேசிக் சிரிக்கும் இளைஞர்களிடம் நான் பல தடவை சண்டைக்குப் போயிருக்கிறேன்.
“ராஜ்யலட்சுமி நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. அவள் கள்ளங்கபடமில்லாதவள்'' – நான் அவர்களிடம் சொன்னேன். அவர்கள் உரத்த குரலில் அடக்க முடியாமல் சிரித்தார்கள்.
“அன்னப்பறவை சொல்றதைக் கேட்டீங்களா?'' - அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள். “அன்னப்பறவை என்றால் "பிம்ப்” என்று அர்த்தமா?'' – ஒருவன் கேட்டான். அதைக்கேட்டு எல்லாரும் சிரித்தார்கள். திறந்த வாய்கள் மட்டும் என்னுடைய கண்களில் தெரிந்தன. ஏராளமான வாய்கள். கேலி செய்யும் குகைகளின் வாசல்கள். நான் யாரிடம் என்றில்லாமல் என்னுடைய முஷ்டியை மடக்கிக் கொண்டு கத்தினேன்:
“அவளைப் பற்றி இனிமேல் ஒரு வார்த்தை சொன்னாலும் எல்லாரையும் நான் கொன்னுடுவேன். என்னை சிறையில் போட்டாலும், எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை.''
மாணவர்கள் வேகமாக அங்கிருந்து நகர்ந்தார்கள். விளையாட்டு நடைபெற்ற மைதானத்துக்குள் நான் மட்டும் தனியாக நின்றிருந்தேன். மறைய இருக்கும் சூரியனும் நானும் என்னுடைய பாழாய்ப் போன காதலும்...
பிறகு ராஜு தேவதாஸ் உண்ணித்தானுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டிற்கு ஓடியபோது, எல்லாராலும் அன்னப்பறவை என்று அழைக்கப்பட்டவனும் அதிர்ஷ்டம் இல்லாதவனுமான என்னை வாய்க்கு வந்தபடி பேசினார்கள். நான்தான் தன் மகள் ஓடியதற்கு மூலக் காரணம் என்று டாக்டர் பணிக்கர் சொன்னார். எல்லா விஷயங்களும் தெரிந்திருந்தும் தன்னிடம் ஒரு வார்த்தை கூறாமல் இருந்ததற்கு அவர் என்னைக் கூர்மையான வார்த்தைகளால் குற்றவாளி ஆக்கினார்.
“இனிமேல் நான் உன் முகத்தைப் பார்க்கவே விரும்பல'' - அவர் உரத்த குரலில் சொன்னார்.வெளியே வந்தபோது தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரனும் இரும்பு கேட்டை அடைத்துப் பூட்டிய காவல்காரனும் என்னை யாரென்று தெரியாத ஒருவனைப் பார்ப்பதைப்போல உயிரற்ற பார்வை பார்த்தார்கள். திடீரென்று நான் அவர்களுக்கு ஒரு அறிமுகமில்லாத மனிதனாக மாறிவிட்டேன். எதிரியாகவும்...
என் தாய் என்னுடைய கவலையை மாற்றுவதற்காகப் பல கல்யாண ஆலோசனைகளையும் கொண்டு வந்தாள். எனக்குத் திருமணம் செய்து கொள்ள எந்தவொரு ஆர்வமும் தோன்றவில்லை.என் இதயத்தில் ஒரு காலத்தில் குறும்புத்தனம் நிறைந்த ராஜு இருந்த இடத்தில், ஒரு சாதாரண பெண்ணைக் கொண்டு போய் உட்கார வைக்க எனக்கு மனம் வரவில்லை. நிலவைப் போல அழகான அந்த இளம்பெண் என்னுடைய சிந்தனைகளில் இருந்து எந்தச் சமயத்திலும் விலகிப் போனதே இல்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook