Lekha Books

A+ A A-

ஊஞ்சல் - Page 8

oonjal

 அது ஒரு காதல் உறவின் ஆரம்பமாக இருந்ததோ? ஒரு பழிக்குப் பழி வாங்கும் செயலின் தொடக்கமாகத்தான் நான் அதைப் பார்த்தேன். "ஓமனா..” என்று அழைக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டும், நான் அந்த பெண் சொன்னபடி நடக்கவில்லை. ஓமனா என்ற பெயரை அவளுக்கு சிறு வயதில் வைத்த அவளுடைய தாய், தந்தையையும் நான் வெறுத்தேன். வெறுப்பில் இருந்து பிறந்ததால் இருக்க வேண்டும் – என்னுடைய காமம் அந்த அளவிற்கு குரூரமாக இருந்தது. ஒரு போர்க்களத்தில் எதிரியுடன் சண்டை போடுவதைப் போல படுக்கையறையில் நடைபெற்ற என்னுடைய ஒவ்வொரு ஆக்கிரமிப்பும் இருந்தது.

“முதலில் பார்த்தபோது நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று எனக்குத் தோன்றியது'' - அவள் சொன்னாள்.

“நல்ல மனிதர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாரே!'' -நான் சொன்னேன்.

அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“எனக்குள் பாவ உணர்வை நீங்கள் குத்திச் செலுத்துகிறீர்கள்'' -அவள் குறை சொன்னாள்.

அவள்தேம்பி அழுதபோது, அவளை சமாதானப்படுத்த நான் ஒருமுறைகூட முயற்சிக்கவில்லை.என்னால் கட்டுப்படுத்த முடிந்த- வெறும் ஒரு குழந்தை பொம்மையாக ஆன அந்தப் பாவப்பட்ட பெண்...

ஆரம்பத்தில்இருந்த தயக்கத்தை நான் முழுமையாக உதறி எறிந்துவிட்டு, உண்ணித்தான் கண்விழித்திருக்கும்போதும், கதவைத் தள்ளித் திறந்து, அவனுடைய மனைவியின்அறைக்குள் செல்ல எனக்கு சிரமம் தோன்றவில்லை. வேலுப்பிள்ளையும் நான் வருவதையும் போவதையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நல்ல உடல் நலத்துடன் இருக்கும், அழகும் சதைப்பிடிப்பும் கொண்ட வீட்டின் நாயகியைநான் முழுமையாக வசீகரித்துவிட்டேன் என்ற விஷயம் அந்தக் கிழவனுக்கும் புரிந்துவிட்டது. பல நேரங்களில் நான் உண்ணித்தான் என்ற உயிருள்ள பிணத்தின் முன்னால் போய் நின்று, அவனுடைய கண்களையே வெறித்துப் பார்த்தவாறு புன்னகைத்தேன். அவனுடைய கண்களில் கோபத்தால் உண்டான கலக்கத்தைக் காண நான் விரும்பினேன். பாதி செயல்படாமல் இருந்தாலும், அந்த மூளையில் மீதமிருக்கும் சக்தி என்னுடைய பழி வாங்கும் கதையை அவனுக்குக் கூறும் என்று நான் நினைத்தேன். ஒரு நாள் அவனுடைய மனைவியின் படுக்கையறைக்குள் இருந்து பாதிஉடலை மட்டும் மறைத்துக்கொண்டு நான் வெளியே வந்தபோது, கதவிற்கு அருகில் தன்னுடைய சக்கர நாற்காலியில் உண்ணித்தான் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு கேடு உண்டான இயந்திர மனிதனைப் போல சிறிது சாய்ந்தும் குழைந்தும்அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். அவன் இறந்து விட்டானோ? இதயத் துடிப்புகளைத் தேடி நான் அவனுடைய நெஞ்சில் என் வலது காதை வைத்தேன். இதயம் பலமாகத் துடிப்பதை நான் கேட்டேன். உண்ணித்தான் என்னுடைய தொடுகை காரணமாக திடுக்கிட்டான் என்று எனக்குத் தோன்றியது. கண்களை என்னுடைய முகத்தில்பதித்தவாறு எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த அந்த மனிதனை, சில நொடிகளுக்குள் மூச்சைவிட முடியாமல் செய்து கொல்ல வேண்டும் போல எனக்கு இருந்தது.

எனக்கு எதிராக சாட்சி சொல்ல ஓமனா எந்தச் சமயத்திலும் தயாராக இருக்க மாட்டாள். ஆனால், அந்தக் கொலையால் எனக்கு என்ன லாபம்? அரண்மனையைப் போன்ற ஒரு வீடும், சதைப்பிடிப்பான ஒரு மனைவியும். அவள் ரகசியமாகக் கூறியது உண்மையாக இருந்தால் இரும்பு அலமாரிக்குள் பாதுகாத்து வைத்திருக்கும் எட்டு லட்சம் ரூபாய்களும் எனக்குச் சொந்தமாக ஆகும். ஆனால், அதனால் நான் தேடிக்கொண்டிருந்த ஆனந்தம் எனக்கு இல்லாமற்போகும். ராஜுவுடன் சேர்ந்து வாழக்கூடிய குடும்ப வாழ்க்கைதான் என்னுடைய லட்சியம். கவலையில் இருக்கும் ராஜுவை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு நான் வரவேற்கும் அந்தக்காட்சியை எத்தனையோ தடவை உணர்ச்சிவசப்பட்டு நான் கற்பனை பண்ணிப் பார்த்துவிட்டேன்.

“அன்றைக்கு நீங்கள் சொன்னது உண்மைதான். தேவதாஸ் ஏமாற்றுப் பேர்வழியும், கெட்ட நடத்தைகள் கொண்டவனாகவும் இருந்தான். அவன் என்னை நாசமாக்கிட்டான்'' - ராஜுஎன் கால்களில் விழுந்து தொண்டை அடைக்க கூறப்போகும் வார்த்தைகள்... அவை அமிர்த ஓட்டத்தைப் போல என்னுடைய காதுகளில் வந்து விழும். நான் அவளை முதல் தடவையாக இறுக அணைத்துக்கொள்வேன். தொடர்ந்து நாங்கள் இருவரும் அந்த வீட்டின் வாசலில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு பாடுவோம். உண்ணித்தான் ஒரு காலத்தில் பாடக்கூடிய ஹிந்துஸ்தானி காதல் பாடல்களை நானும் ஆச்சரியப்படும் விதத்தில் பாடுவேன். க்ளப்பிலும் விருந்துகளிலும் சாலை சந்திப்புக்களிலும் எனக்கும் ஓமனாவுக்குமிடையே உள்ள காம உறவு பேச்சுக்கான விஷயமாக ஆகிவிட்ட பிறகும்,நான் கோபப்படவில்லை. என்னுடைய நண்பர்களும் என் நலனில் அக்கறை கொண்டவர்களும் என்று நடிக்கக்கூடிய சில முக்கிய மனிதர்கள் எனக்கு அறிவுரைகூற முயற்சித்தார்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அந்த இடத்திலேயே நல்ல உடல் நலத்துடன் இருக்கும், வயதான திருமணமாகாத பெண்ணின் ஜாதகத்தையும் புகைப்படத்தையும் சிலர் என்னுடைய வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தார்கள். “சொந்தத்தில் வீடு இருக்கும் பார்ட்டி. முப்பத்தைந்து சென்ட் நிலம் இருக்கு. சென்டிற்கு முப்பதுவைத்துப் பார்த்தால், கிட்டத்தட்ட பத்து லட்சம் விலை வரக்கூடிய பூமி. வீடுடெரஸ். தரை மொசைக்...''

பெண்ணின் அழகைப் பற்றிய தகவல்களுக்கு பதிலாக அவர்கள் அந்த பூமி, வீடு ஆகியவற்றின் சிறப்புகளைப் பற்றி திரும்பத் திரும்ப கூறி என்னை வெறுப்படையச் செய்தார்கள். என்னை ஒரு வயதான மணமகனாக ஆக்க நினைக்கும் அவர்களுடைய முயற்சிகளை நான் உற்சாகப்படுத்தவேயில்லை. சென்னையில் தியாகியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ராஜ்யலட்சுமிக்கு மட்டுமே என்னுடைய மனைவியாக ஆவதற்கான உரிமை இருக்கிறது என்று அவர்களிடம் கூறுவதற்கு மட்டும், என்னிடம் தைரியம்இல்லை.

என்னுடைய கெட்டநடவடிக்கைகள் பற்றிய கதைகளைக் கேள்விப்பட்டு உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டம் கிராமத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு அதிகாலையில் வரும் கண்ணூர் எக்ஸ்பிரஸில் வந்து சேர்ந்தார்கள். எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கு முதிர்ச்சியான குணமும், உயர்ந்த நிலையிலும் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை சோற்றானிக்கரை கோவிலுக்கு அழைத்துக் கொண்டுபோய், ஓமனா எனக்குத் தந்திருக்கக்கூடிய கை விஷத்தை வாந்தி எடுக்க வைக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள். சோற்றானிக்கரையில் பஜனம் பலிக்கவில்லையென்றால், எல்லாரும் சேர்ந்து மூகாம்பிகையிடம் அபயம் அடைவது என்று முடிவு செய்தார்கள். எனக்கு கடுமையான கோபம் வந்தது. நான் ஒரு "கூறுகெட்டவன்” என்று கருதப்பட்டு, என்னுடைய சொந்த வாழ்க்கைக்குள் தலையிடுவதற்கு அவர்கள் யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உரத்த குரலில்நான் சொன்னேன். நல்ல ஒரு திருமணமான பெண் என்றல்ல -ஒரு விலை மாதுவைக்கூட காதலியாக எற்றுக்கொள்ள எனக்கு சுதந்திரம் இருக்கிறது என்று நான் சொன்னேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel