Lekha Books

A+ A A-

ஊஞ்சல் - Page 10

oonjal

கிட்டத்தட்டஒரு வருடம் கடந்திருக்கும். நான் சென்னைக்கு புதிய சூட்கேஸ், புதியஆடைகள், புதிய கைக்கடிகாரம், புதிய ஆசைகள் என்று புறப்பட்டபோது விமானநிலையத்தில் ஏற்கெனவே அறிமுகமான முகங்களிலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு, ஒரு நாளிதழால் முகத்தை மறைத்துக் கொண்டு, வாசிப்பில் மூழ்கியிருப்பதைப் போல காட்டிக்கொண்டு நான் அமர்ந்திருந்தேன். என்னுடைய குற்ற உணர்வை என் முகம் வெளிப்படுத்திவிடுமோ என்று நான் பயந்தேன். இறுதியில் சென்னையை அடைந்து அங்கு சோழா ஹோட்டலில் அறை எடுத்து, நான் இரண்டாவது தடவையாகக் குளித்தேன். என்னுடைய உடலின் வியர்வைக்கு பாவத்தின் கெட்ட நாற்றம் இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன். என்னுடைய பாவத்தைப் புனிதமானவளும் கள்ளங்கபடமற்றவளுமான ராஜு வாசனை பிடித்துத்தெரிந்துகொள்வாளோ? வாசனை பிடித்து தெரிந்து கொள்ளும்போது, அவள் என்னிடமிருந்து இரண்டாவது தடவையாக ஓடி மறைவாளோ? அல்லது என்னுடைய முற்பிறவி புண்ணியத்தின் காரணமாக அவள் என்ற புனித தீர்த்தத்தில் நீராடி நான் களங்கமில்லாதவனாகத் தோன்றுவேனா?

நான் அந்த வீட்டை அடைந்தபோது, நேரம் கிட்டத்தட்ட ஆறரை ஆகியிருந்தது. வீட்டின் தென்மேற்கு திசையில் வானத்தின் சாம்பல் நிறத்தில் ஒரே ஒரு நட்சத்திரம் வெளியே வந்துவிட்டிருந்தது. ராஜு எப்போதும் வணங்கக்கூடிய வியாழநட்சத்திரம். நான் பக்தியுடன் அதை வணங்கினேன். ராஜு முன்பு சொல்லித் தந்த சுலோகத்தை எத்தனை முறை ஞாபகப்படுத்திப் பார்த்தும் எனக்கு அதன் மூன்றுசொற்களைத் தவிர, வேறு எதுவும் ஞாபகத்தில் வரவில்லை.

“ரத்னாஷ்டாபதவக்த்ரராசி-'' -அந்தச் சொற்களை மட்டும் திரும்ப திரும்பஉச்சரித்துக்கொண்டே நான் முன் வாசலை நோக்கிச் சென்றேன். சாதாரணமாக தோட்டத்திலும் வாசலிலும் வேலை செய்தவாறு காட்சியளிக்கும் வேலைக்காரர்களை நான் பார்க்கவில்லை. பூச்சட்டியில் இருந்த பெரிய இலைகள் வழியாக நான்அவளைப் பார்த்தேன். பித்தளைக் கண்ணிகளைக் கொண்டு உத்திரத்தில் கட்டப்பட்டஅந்த ஊஞ்சலின் சத்தத்தையும் நான் கேட்டேன். ராஜுவிடம் எந்தவொரு மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை. அவளுடைய அழகிற்கு காலத்தாலும் அனுபவங்களாலும் மட்டுமே சம்பாதித்துத் தர முடியக்கூடிய ஒரு தனிப் பக்குவம் வந்து சேர்ந்துவிட்டிருப்பதை நான் பார்த்தேன். அலமாரியின் ஒரு பெட்டிக்குள், இருட்டில் பல வருடங்களாகப் பாதுகாத்து வைக்கப்பட்ட ஒரு பட்டாடையின் மங்கலான ஒளியை அவளுடைய தோல் அடைந்துவிட்டிருந்தது. அவள் தன்னுடைய வலது காலின் பெருவிரலை நிலத்தில் ஊன்றியவாறு ஆடிக்கொண்டிருந்தாள்- உணர்ச்சியற்ற முகத்துடன்.

“ராஜு...'' -நான் அழைத்தேன். அந்த அழைப்பில் என் தொண்டை தடுமாறியது. பாலைவனத்தில் கால்களால் நடந்து பயணித்துக் கொண்டிருக்கும் பயணியைப் போல கால்கள்குழைந்து, தொண்டை வறண்டு, நான் அவளுடைய கால்களில், அந்த சிவந்த தரைவிரிப்பில் தளர்ந்து விழுந்தேன். இரண்டு தடவை ஊஞ்சலின் ஓரங்கள் என்னுடைய தோள்களில் தட்டின.

“அய்யோ! இங்கே என்ன நடக்குது?'' - ராஜு கேட்டாள். அவள் ஊஞ்சலின் ஆட்டத்தை கட்டுப்படுத்தி நிறுத்தினாள்.

“நீங்களா?'' -அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். தன்னுடைய மெலிந்து போன கைகளால் அவள் என்னைப் பிடித்து எழ வைத்தாள்.

“நீங்க குடிச்சிருக்கீங்களா? இப்படி விழுந்ததுக்கு அர்த்தம் என்ன?'' -அவள் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டே கேட்டாள். அவளுடைய விரிந்த கண்களுக்கு முன்னால் நான் பயத்துடன் நின்றிருந்தேன். என்னுடைய சதைகள் தளர்வதைப் போல எனக்கு தோன்றியது.

“நான் எந்தச் சமயத்திலும் குடித்தது இல்லை, ராஜு'' –நான் முணுமுணுத்தேன்.

“நீங்க பார்க்குறதுக்கு எவ்வளவோ மாறிட்டீங்க. தெருவிலோ பொது இடத்திலோ வைத்து பார்த்திருந்தால், ஒருவேளை எனக்கு நீங்க யாருன்னு அடையாளமே தெரிஞ்சிருக்காது'' - அவள் சொன்னாள்.

“ராஜு, நீ தோற்றத்தில் மாறவே இல்லை'' - நான் சொன்னேன்.

காதுகளுக்குமேலே இரண்டு, நான்கு தலை முடி நரைத்து விட்டிருக்கின்றன என்பதைத் தவிர,வேறு என்ன மாற்றத்தைக் காலம் ராஜுவிடம் உண்டாக்கி இருக்கிறது? எதுவும் இல்லை.

“வெளியிலும் உள்ளேயும் எந்தவொரு மாறுதலும் இல்லை. மாற முடியாமல் இருப்பதும் ஒரு பலவீனம்தான்'' - அவள் சொன்னாள்.

“அது எப்படி?'' - நான் கேட்டேன்.

“மாறிக் கொண்டிருக்கும் காலத்துடன் சேர்ந்து மாற முடியாதவர்களுக்கு, இணைந்து போக முடியாது'' - அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

ஒரு வீட்டுத் தலைவியின் கடமைகள் ஞாபகத்தில் வந்ததைப் போல அவள் வேகமாகத் திரும்பி நடந்தாள். நான் முன்னறையில் இருந்த ஒரு சோபாவில் அமர்ந்தேன்.என்னுடைய இதயம் அடித்துக் கொண்டிருந்த பெரும் பறையில் வேறு எந்த சத்தத்தையும் என்னால் கேட்க முடியவில்லை. அழகான அவள் ஒரு கப் தேநீரை என்னை நோக்கி நீட்டும் நிமிடம் வரை நான் கண் விழித்திருந்தேனா அல்லது தூங்கிக்கொண்டிருந்தேனா என்பதுகூட எனக்குத் தெரியாது. உண்மையும் கற்பனையும் அந்த அளவிற்கு ஒன்றோடொன்று சேர்ந்திருந்திருந்தன. என் சிந்தனைகளில், என் அன்றாட கனவுகளில் எத்தனையோ தடவை நான் முத்தமிட்ட அந்த முகம், என்னுடைய கண்களுக்குமுன்னால் ஒரு முழு நிலவைப் போல் உதயமாவதை நான் பார்த்தேன்.

“என் ராஜு...'' - நான் காதல் பரவசத்துடன் அழைத்தேன். அதிர்ச்சியடைந்த அவள் அமைதியாக இருந்தபோது, உற்சாகம் கிடைத்ததைப் போல நான் அவளிடம் கெஞ்சினேன்:

“இனி ஒரே ஒரு நிமிடம் கூட என்னால் நீ இல்லாமல் வாழ முடியாது. என்னைத் திருமணம் செய்து கொள். என்னுடன் சேர்ந்து வாழ்.''

அவள் தேநீர் கப்பை மேஜைமீது வைத்துவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றாள்.

“உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு!'' - அவள் சொன்னாள். அவளுக்கும் எனக்கும் நடுவில் பெஞ்ச் போல நீளமான ஒரு காப்பி மேஜை இருந்தது. அதன் மீது பஞ்சலோகத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு நடராஜர் விக்ரகம் இருந்தது. ஒரு அடி உயரத்தில் இருந்த சிலை. எதையும் தொடவில்லை என்றாலும், அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லையென்றாலும், அந்தச் சிலையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி என்னைக் கொல்வதற்கு அவள் முடிவு செய்திருக்கிறாள் என்று என்னுடைய உள்மனது எனக்கு எச்சரிக்கை தந்தது.

“நான் உன்னை வழிபாடு செய்ய ஆரம்பித்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது ராஜு? உன்னை ஏமாற்றிய தேவதாஸை நான் பழிக்குப் பழி வாங்கிவிட்டு வந்திருக்கிறேன். இனி என்னை ஏற்றுக்கொள்'' - நான் சொன்னேன்.

“நீங்கள் தேவதாஸை என்ன செய்தீர்கள்?'' - ராஜு கேட்டாள்.

“அது ஒரு நீண்ட கதை. நம்முடைய தேனிலவின் போது நான் அந்த கதையை உன்னிடம் கூறுகிறேன்'' - நான் சொன்னேன். நான் மேஜையைச் சுற்றி நடந்து ராஜுவைத் தொடுவதற்காகக் கையை நீட்டினேன்.

“தொடாதீங்க...'' - அவள் உத்தரவிட்டாள்.

“தொட்டால்?''

“கண்ணன் உங்களைக் கொல்லுவான்.''

“கண்ணனா? நீ மீண்டும் திருமணம் செய்துகொண்டாயா?''

“கண்ணன் என்னுடைய டாபர்மென் நாய். அவனை நான் வாசலில் அவிழ்த்து விட்டிருக்கிறேன்.சத்தம் போட்டு அழைத்தால் அவன் ஓடி வருவான். உங்களுடைய தொண்டையை அவன் பாய்ந்து கடிப்பான்'' - ராஜு சொன்னாள்.

“நான் செய்தவை அனைத்தும் வீணாகிவிட்டனவா? உனக்காக உண்ணித்தானைப் பழிக்குப் பழி வாங்கியதும், பாவச் செயல்களில் பங்கெடுத்ததும் வீணா? நீ எந்தக்காலத்திலும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாயா?''

“இல்லை''-அவள் சொன்னாள். நான் தோட்டத்தைக் கடந்து, பின் பக்கம் பார்க்காமல் நடந்து வெளிவாசலை அடைந்தேன். வெளிக்கதவை நானே அடைத்தேன். அந்த நிமிடத்தில் முற்றத்தில் இருந்தோ வேறு இடத்தில் இருந்தோ நாய் ஒன்று குரைக்க ஆரம்பித்தது. அவன் குரைப்பதை நிறுத்தியபோது, நான் ஊஞ்சலின் அழுகையைக்கேட்டேன். அவள் அமைதியாக ஊஞ்சலின் அமர்ந்து ஆடிக்கொண்டிருக்கலாம். பித்தளைக்

கண்ணிகளின் அந்த அழுகைச் சத்தத்தை ஒரு விடைபெறும் வார்த்தைகளாக நான் எடுத்துக்கொண்டேன்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel