
ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு சென்ற அபிலாஷ், முன்தின இரவு நடந்த நிகழ்ச்சியைப் பற்றி நினைத்து உள்ளம் துவண்டான்.
'பாவம் சரிதா. என் மேல உள்ள அளவற்ற அன்பினால அப்பிடி பேசிட்டா' என நினைத்த அவன், சரிதாவின் மொபைலில் அவளது நம்பர்களை அழுத்தினான்.
மறு முனையில் சரிதா மொபைல் லைனை எடுக்கவே இல்லை.
சரிதாவின் மொபைலில் அபிலாஷின் நம்பர்கள் தென்பட்டதையும், அதை சரிதா அலட்சியப் படுத்தியதையும் கவனித்து, மனதில் குறித்துக் கொண்டாள் பாவனா.
முதல் முறையாக அபிலாஷின் அழைப்பை நிராகரித்தாள் சரிதா. அவளது மனதிற்குள் அபிலாஷின் மீதான கோபம் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது.
வலிந்து அழைத்தும் அதை அலட்சியப்படுத்திய சரிதா மீது மீண்டும் கோபம் துளிர்த்தது அபிலாஷிற்கு.
'வேண்டுமென்றே என் அழைப்பை ஏற்க மாட்டேங்கிறாளா... அல்லது தூங்கிக்கிட்டிருக்காளா... குளிச்சிக்கிட்டிருக்காளா...' யோசித்த அபிலாஷ், 'மிஸ்ட்கால்' பார்த்து கூப்பிடறாளா பார்ப்போம்' என்ற முடிவிற்கு வந்தான்.
இசை அமைப்பில் தன் கவனத்தை செலுத்தினான். முன் தின நாள் அவனது 'கீ போர்'டில் புதிய பாடலுக்குரிய ட்யூனை உருவாக்கி, அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்திருந்தான்.
பல்லவியின் ட்யூனைக் கேட்ட அவனுக்கு உற்சாகம் பிறந்தது. முன் இரவு நடந்த நிகழ்வு மறந்தது. அவனது உள்ளம் இசை எனும் தெய்வீகத்தில் மிதந்தது. உணர்வுகள் மகிழ்ந்தது. தன்னை மறந்தான். சூழ்நிலையை மறந்தான். இசை ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு இசைப் பயணத்தில் இன்பமாக பயணித்தான்.
இசையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவனுக்கு இந்த உலகமே தெரிவதில்லை. நேர்ந்த எந்தக் கலகமும் நினைவிற்கு வருவதில்லை. பணம், பொருள் எதைப் பற்றிய எண்ணமும் உருவாவது இல்லை. தான் போடும் ட்யூன் மிக சிறப்பாக வர வேண்டும். இயக்குநருக்குப் பிடிக்க வேண்டும், தயாரிப்பாளரின் மனம் குளிர வேண்டும். இவற்றைத் தவிர பிற எண்ணங்கள் இசை அமைப்பின் போது அபிலாஷின் உள்ளத்தில் தோன்றுவதில்லை. முழுமையான கவனத்தை இசையில் செலுத்தி வாழ்வதால் அவனது மனம் தெய்வீகமானதாக இருந்தது. அவனது உள்ளம் தெய்வம் வாழும் இல்லமாக இருந்தது.
இறை பணியில் ஈடுபட்டிருக்கும் பக்தர்களின் இதயம் நிம்மதியாக இருப்பது போல, இசைப்பணியில் ஈடுபட்டிருக்கும் அபிலாஷின் இதயமும் நிம்மதியாக இருந்தது.
அவனது அந்த நிம்மதியைக் குலைக்கும் விதமாக சரிதாவின் சந்தேக நடவடிக்கை ஆரம்பித்திருந்தது.
அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது பெரிய கேள்விக் குறியாக இருந்தது.
அதைப் பற்றியெல்லாம் சிந்தனை சிறிதளவும் இன்றி தன் பணியில் தன்னைப் பிணைத்துக் கொண்டான். இரவு பதினோரு மணி வரை ஸ்டூடியோவில் இருந்த அவன், வீட்டிற்கு கிளம்பும்பொழுது சரிதாவின் நினைவு வந்து, 'ஸைலன்ட் மோ'டில் போடப்பட்டிருந்த அவனது மொபைலில் சரிதாவின் நம்பர்கள் மிஸ்டு கால் பகுதியில் தென்படுகிறதாவென்று பார்த்தான். அவளது நம்பர் இல்லை. பெருமூச்சு விட்டபடியே காரைக் கிளம்பினான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook