
வீட்டிற்கு வந்து, தன் அறையில் படுக்கை மீது 'தொப்' என்று விழுந்த சரிதாவிற்கு நெஞ்சம் நடுங்கியது. பருந்தைக் கண்டு பயப்படும் புறாவைப் போல அவளது உடம்பு முழுவதும் நடுங்கியது.
'என் கணவர் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்... எத்தனை பணம்!.. எவ்ளவு நகைகள்! ராத்திரி பகலா ம்யூஸிக் மட்டுமே சிந்தனையா இருந்து சம்பாதிச்சாரே... எனக்கு அவர் குடுத்திருக்கற சுதந்தரத்தை இப்பிடி துஷ்பிரயோகம் பண்ணிட்டேனே... என்னை எவ்ளவு நம்பறார்... எந்தப் பணத்தையும் பத்தி அவர் கேக்கறதே இல்லை. 'எதுக்காக இவ்ளவு பணம் எடுத்த'ன்னு ஒரு நாளாவது ஒரு வார்த்தையாவது கேட்டிருப்பாரா? அவருக்கு நான் செஞ்ச இந்த துரோகம்... கடவுளுக்கே பொறுக்காதே... நான் அவரை சந்தேகப்பட்டு பேசினப்பகூட அவர் கோபப்படலியே... ஆறுதலா, ஆதரவா என்னை அள்ளி அணைச்சு தூங்க வச்சாரே...'
சுதாகருக்கு பணம் கொடுத்தது பற்றி நினைத்து அழுதாள்.
'இந்தப் பக்கம், இந்த சுதாகர் பணம் பறிக்கறதுக்காக ப்ளாக் மெயில் பண்ணிக்கிட்டிருக்க, இன்னொரு பக்கம் அபிலாஷ் பத்தின பிரச்னை என் மனசை பாதிக்க... கடவுளே... நான் என்ன செய்வேன்?' அவளது அழுகை வலுத்தது.
அவளது அறைக் கதவை தட்டும் ஓசை கேட்டது. கண்ணீர் வடிந்து கொண்டிருந்த கண்களைத் துடைத்துவிட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
அங்கே வத்சலாம்மா நின்று கொண்டிருந்தாள்.
''என்னம்மா இது? கண்ணெல்லாம் இப்பிடி சிவந்து கெடக்கு?!''
''அதெல்லாம் ஒண்ணுமில்ல வத்சலாம்மா... கண்ல ஏதோ பிரச்னை. அதுக்குத்தான் கண் டாக்டர்ட்ட போயிட்டு வந்தேன்.''
பொய்களை உண்மை போல பேசினாள் சரிதா.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook