Lekha Books

A+ A A-

உன் மனதை நான் அறிவேன் - Page 66

Unn Manadhai Naan Ariven

செய்தித்தாளில் 'பாவனா' எனும் பெயரைப் பார்த்ததும் பரபரப்பானான் வஸந்த். செய்தி முழுவதையும் படித்த அவனுக்கு அந்தத் தகவல்களும், நிகழ்வுகளும் எதிர்பாராதவையாக இருந்தன. பெண் பிள்ளை போல கண்ணீர் விட்டு அழுதான். கூடவே கோபமும் எழுந்தது. 'எந்த உதவி வேணும்ன்னாலும் கேள்'ன்னு சொல்லியிருந்தேனே... இப்பிடி தன்னந் தனியா செயல்பட்டு உயிரையை பலி குடுக்கும்படி ஆயிடுச்சே...'

அவன் அழுவதையும், அதிர்ச்சியில் திகைத்து நிற்பதையும் பார்த்த அவனது தாய் விசாலம் பதறிப் போனாள்.

''என்னப்பா வஸந்த்து... என்ன ஆச்சு...''

''அம்மா... என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச பாவனாவை கொலை பண்ணிட்டங்கம்மா.''

விசாலத்தின் வயோதிகம், அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டது. தட்டுத் தடுமாறி பேசினாள்.

''ஏம்ப்பா... கொலையாகற அளவுக்கு அவளுக்கு என்னப்பா பிரச்னை...?''

''அவ நல்ல பொண்ணுதான்மா. பணக் கஷ்டத்துன்னால, பணத் தேவைக்காக சிக்கல்ல மாட்டிக்கிட்டா.''

''அதைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாதாப்பா?''

''என்கிட்ட எதுவும் சொல்லலைம்மா. அவ அழுத்தக்காரி... ஆனா நல்லவ.''

விலாவாரியாக பாவனாவின் கடந்த காலம் பற்றி எதுவும் சொல்லாமல், விசாலத்திற்கு பாவனாவின் மீதிருந்த நல்ல அபிப்ராயம் மாறிவிடாமல் பதில் கூறினான் வஸந்த்.

'உயர் கல்வி இல்லாததுனாலதான் அவளுக்கு வறுமையும், ஏழ்மையும்ன்னு என்கிட்ட புலம்பினா. வருத்தப்பட்டா. அவளுக்கு இப்பிடி ஒரு முடிவு வரும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையேம்மா...''

''அந்தப் பொண்ணு பாவனாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததுப்பா. நாம குடுத்து வச்சது அவ்ளவுதான்.''

பாவனாவின் உடல், 'போஸ்ட்மார்ட்டம்' செய்வதற்காகக் கொண்டு போகப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றான் வஸந்த். அங்கே அவளது உடலை வாங்குவதற்காக பாவனாவின் அப்பாவும், தங்கையும் ஓரிரு உறவினர்களோடு வந்திருந்தனர்.

பாவனாவின் உடல் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு மருத்துவமனை ஊழியர்களால் கொண்டு வரப்பட்டது. அதைப் பார்த்த பாவனாவின் அப்பாவும், தங்கையும் கதறி அழுதனர். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத வஸந்த், மானசீகமாக பாவனாவின் ஆத்மாவிற்கு அஞ்சலி செலுத்தினான். கனத்துப் போன இதயத்தோடு அங்கிருந்து வெளியேறினான்.

வீட்டின் ஹாலில் உள்ள கம்ப்யூட்டரில் ஒரு ஸி.டி.யை போட்டான் அபிலாஷ். அங்கே மௌனமாக கண்ணீர் வடித்தபடி உட்கார்ந்திருந்தாள் சரிதா. திரையில் சுதாகரும், சரிதாவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஒளிபரப்பாயின. அவற்றைப் பார்த்த சரிதா திகைத்தாள். அவளது இதயம் அதிர்ந்தது. எழுந்து வந்து அபிலாஷின் காலடியில் சரிந்தாள்.

அவளை அள்ளி அணைத்து, தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான் அபிலாஷ்.

''இந்த ஸி.டி.யை நான் என்னிக்கோ பார்த்துட்டேன். நீ... உன் மனசுல இருந்து அவனைத் தூக்கி எறிஞ்சுட்டன்னு எனக்கு நல்லா தெரியும். உன் மனசு நான் அறியாததா ? நீ அப்பப்ப வித்யாசமா நடந்துக்கறப்பவெல்லாம் நீ ஏதோ சிக்கல்ல மாட்டி இருக்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். உன்னோட குழப்பத்திற்குரிய அடையாளம் ஏதாவது கிடைக்குதான்னு உன்னோட ரூம்ல, ஷெல்ஃப்ல தேடிப் பார்த்தேன். நான் நினைச்சது போல உன்னோட பீரோவுல கீழ்த்தட்டுல ஸீக்ரெட்லாக்கர்ல இந்த ஸி.டி.க்களை மறைச்சு வச்சிருந்த. எடுத்துப் பார்த்தேன். இதுவும் உன்னோட மாறுபட்ட நடவடிக்கைக்கு காரணம்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா ஒரு பாவனா... சும்மா வாய் வார்த்தையா ஏத்திவிட்டதைக் கூட நீ புரிஞ்சுக்கலை. உன்னோட பிரச்னையை உனக்கு தெரியாமலே முடிச்சுடணும்னுதான் எனக்கு ரொம்ப வேண்டிய ஒரு ப்ரொட்யூஸரோட உறவுக்காரர் பெரிய போலீஸ் அதிகாரி மூலமா உன்னைத் தொந்தரவு செய்யற ஆள் யார்னு கண்டுபிடிக்கச் சொல்லி இருந்தேன். துரதிர்ஷ்டவசமா அந்த போலீஸ் அதிகாரி, ஒரு கலவரத்துல பாதுகாப்புக்கு போனப்ப சுட்டுக் கொல்லப்பட்டுட்டார். என்னோட ஸ்டூடியோ வேலைகள்ல்ல, வேற போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள ரொம்பவே லேட்டாகிடுச்சு. இதுக்கு நடுவுல, உன் மனசை பாவனா கெடுத்ததுனால நீ என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. இதுதான் என்னை நிலை குலைய வச்சுடுச்சு. இசைங்கற ஒரு தெய்வீகம் என்னோட வாழ்க்கையில இணையலைன்னா உன்னோட சந்தேகத் தீ என்னை பொசுக்கி இருக்கும்...''

அவனது வாயைத் தன் கைகளால் மூடினாள் சரிதா.

''தப்பு முழுசும் என் மேலதான்ங்க. என்னை மன்னிச்சுடுங்க. உங்ககிட்ட எதையுமே மறைக்காத நான் 'நீங்க என்னைத் தப்பா நினைச்சுடுவீங்களோன்னு இந்த விஷயத்தை சொல்லாம விட்டுட்டேன். பண விஷயத்துல நீங்க எனக்கு குடுத்த சுதந்திரத்தை நான் தவறான முறையில பயன்படுத்திட்டேன். அந்தக் கயவனுக்கு பணம் குடுத்ததை உங்களுக்கு தெரியாம மறைச்சுட்டேன்...'''

''என் பணம். உன்னோட பணம். அதை செலவு பண்ற உரிமை, சுதந்திரம் உனக்கு எப்பவும் உண்டு....''

''ஸாரின்னு சாதாரணமா சொல்லி என்னோட பாவத்தைக் கழுவ முடியாதுங்க. எப்பிடி... என்ன... சொல்லி உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்கறதுன்னு தெரியலிங்க... கல்யாணத்துக்கு முன்னால நடந்த அந்த விஷயமும் தப்பு. அதை நான் உங்ககிட்ட சொல்லாததும் தப்பு... ''

''இங்க பாரு சரிதா. காதல்ங்கறது குற்றம்ன்னோ... மன்னிக்க முடியாத பாவம்ன்னோ நினைக்கற மோசமானவன் நான் இல்லை. அதை அறவே நீ மறந்துடு. இந்த நிமிஷத்துலயே மறந்துடு. உன் மனசுல கள்ளம் இல்லை. களங்கம் இல்லை. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். என் மேல உயிரையே வச்சு நேசிச்சதுனாலதான் சட்டுன்னு, பாவனா தூண்டிவிட்டதும் சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. என் மேல உள்ள அளவற்ற அன்பினாலதான் அதுன்னு எனக்குத் தெரியும். ஆனா நம்ம கயல்விழியை நீ சந்தேகப்பட்டது மட்டும் என்னால தாங்க முடியல... நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ அந்த அளவுக்கு அவ உன்னை நேசிக்கறா... நீ கூடத்தான் அவளை உயிருக்குயிரான தோழியா அன்பு செலுத்தின...''

''ஆமாங்க. சந்தேகக் கீறல் விழுந்த என்னோட மனசுல கயல்விழியையும் உதாசீனப்படுத்திட்டேன். அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாத்தான் என் மனசு நிம்மதியாகும்...''

''தப்பை உணர்ந்தாலே போதும். பெரிய பாவத்துல இருந்து ரட்சிப்பு கிடைக்கும்ன்னு நம்ம ஃபாதர் சொல்லி இருக்கார்ல...''

மறுபடியும் அபிலாஷின் கால்களில் விழுந்தாள் சரிதா.

அவளைத் தூக்கினான் அபிலாஷ்.

''இங்க பாரு சரிதா. இன்னொரு தடவை நீ என் கால்ல விழக்கூடாது. நடந்தது அத்தனையும் ஒரு கனவா, மாயமா மறைஞ்சு போகட்டும். நீ என் உயிர்.''

''உங்களுக்கு மட்டும்தான் அவ உயிரா? எனக்கும் அவ உயிர்'' என்று கூறியபடியே அங்கே வந்தாள் கயல்விழி.

அவளது காலில் விழுந்து கதறினாள் சரிதா.

''நோ... நோ....'' என்றவாறே அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டாள் கயல்விழி.

''அபிலாஷ் சொன்னது போல நடந்தது எல்லாமே ஒரு கனவுதான். மறந்துடு. கதவைத் திறந்துவிட்ட வத்சலாம்மாகிட்ட சூடா ஃபில்ட்டர் காபி கேட்டிருக்கேன். நீ இன்னிக்கு எனக்குப் பிடிச்ச பால் பாயாஸம் பண்ணித் தரப் போறியாம்.''

'நடந்தது எதையுமே மனசுல வைச்சுக்காம... வெள்ளந்தியாய், வெண்மையான உள்ளத்தோடு எப்பிடி இவளால பேச முடியுது' என்ற எண்ணத்தில் கயல்விழியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள் சரிதா.

கயல்விழி, அபிலாஷ் இருவரது மனதையும் சரிதா அறியாவிட்டாலும் அவர்கள் இருவரும் சரிதாவின் மனதை அறிந்திருந்தனர். இப்போது அனைத்தையும் அறிந்து கொண்டாள் சரிதா. புரிந்து கொண்டாள்.

'உன் மனதை நான் அறிவேன்' என்ற உணர்ச்சியின் குதூகலத்தில் அங்கே பாசம் பரிமளித்தது.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel