
சுதாகரைப் பிடித்த போலீஸார் கொடுத்த உபசாரத்தில் உடல் முழுதும் ரத்த களறியான சுதாகர் கையெடுத்துக் கும்பிட்டான்.
''உண்மையை சொல்லிடறேன்...'' என்று அவன் சரிதாவை காதலித்தது, ப்ளாக் மெயில் செய்து பணம் பறித்தது... அதன் பின் பாவனாவை அனுப்பி நாடகம் நடத்தி அபிலாஷ்- சரிதா இருவரையும் பிரித்தது... எல்லாவற்றையும் கூறினான்.
''டான்ஸர் கயல்விழி வீட்டுக்கு அந்த நேரத்துல ம்யூஸிக் டைரக்டர் அபிலாஷ் எதுக்கு வந்தார்? சரிதா எதுக்கு வந்தாங்க? இதைப்பத்தி நாங்க அந்த சரிதா மேடம்ட்டயும் கேட்போம். இப்ப நீ சொல்லு...''
''மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிக்கிட்டிருந்த அந்த நேரத்துல... மழையில மாட்டிக்கிட்ட நான், கயல்விழி வீட்டுக்குள்ள அவகூட அபிலாஷ் போறதைப் பார்த்தேன்.
இதுதான் நல்ல சான்ஸ்ன்னு பாவனாவை கூப்பிட்டு, சரிதாவுக்கு ஃபோன் பண்ணி, கயல்விழியோட வீட்ல, அபிலாஷ் இருக்கறதை சொல்லச் சொன்னேன். பாவனா மறுத்தா. அதுக்கேத்த மாதிரி சரிதாவோட லேண்ட் லைன், மொபைல் எதுவுமே கனெக்ட் ஆகலை. அதனால நேர்ல சரிதா வீட்டுக்குப் போகச் சொன்னேன். நான் அவளுக்கு இனி பணம் குடுக்கறதா இல்லைன்னு எப்பிடியோ தெரிஞ்சுக்கிட்ட அவ, 'சரிதா வீட்டுக்கு போகமாட்டேன்னு' முரண்டு பிடிச்சா. சரிதாகிட்ட நான் சொல்லச் சொன்ன மாதிரி 'அபிலாஷ் கயல்விழியோட வீட்ல இருக்கான்னு சொல்லமாட்டேன்'னு உறுதியா மறுத்தா. நீ போகலைன்னா... நானே அவ வீட்டுக்குப் போவேன்னு மிரட்டி அவளை சரிதா வீட்டுக்குப் போக வச்சேன். கயல்விழி வீட்ல அபிலாஷ் இருக்கறதை சரிதாட்ட சொல்ல வச்சேன். எனக்கு பயந்து நான் சொன்னதைக் கேட்ட பாவனா, அதுக்கப்புறம் மனசு மாறி, கயல்விழியோட வீட்டுக்கு, சரிதா பின்னாடியே போனாள். இதைப் பார்த்த எனக்கு என்னைக் காட்டிக்கொடுக்கத்தான் பாவனா அங்கே போறாள்ன்னு புரிஞ்சுப்போச்சு. கோபவெறி ஏறின நான், கயல்விழியோட வீட்டுக்குப் போய் அவளை சுட்டுட்டேன்'' தொடர்ந்து விலாவாரியாக சுதாகர் வாக்கு மூலம் கொடுக்க, அதைப் பதிவு செய்து கொண்டிருந்தனர் போலீஸார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook