Lekha Books

A+ A A-

வருவேன் நான் உனது... - Page 26

“மிஸ்டர் ஏகாந்த்... அவசரப்படாதீங்க. போஸ்ட் மார்ட்டங்கற அடுத்த கட்டம் இருக்கு...” ப்ரேம்குமார் கூறியதும் மோகன்ராம் இடைமறித்துப் பேசினார்.

“இது மிருதுளாவேதான், இன்ஸ்பெக்டர். அதே உயரம். அதே மாதிரி சதைப் பிடிப்பான கைவிரல்கள். நைந்து போகாத கால் விரல்கள் கூட இது மிருதுளாதான்னு காட்டுதே.” அழுகை மாறாத குரலில் பேசினார் மோகன்ராம்.

“ ‘பாடி’யை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப் போறேன். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததும் உங்களைக் கூப்பிடறேன். இப்ப நீங்க மூணு பேரும் கிளம்பலாம்.”

“ஏற்கெனவே ரயில்ல அடிபட்டு என் பொண்ணோட உடம்பு இந்தக் கதியாயிருக்கு. இன்னும் ‘போஸ்ட் மார்ட்’டத்துல வேற என் பொண்ணோட உடம்பைக் கூறுபோடுவாங்களே!”

“என்ன மிஸ்டர் மோகன்ராம்... சட்டதிட்டங்கள் அப்படி இருக்கே. ஸாரி. உங்க நிலைமை எனக்குப் புரியுது. இன்னும் இது மிருதுளான்னு கன்ஃபர்ம் ஆகலியே... டி.என்.ஏ. ரிப்போர்ட் வந்துட்டா எந்தக் குழப்பமும் இல்லாம இது மிருதுளாவா இல்லையான்னு தெளிவாயிடும். கிளம்புங்க.”

ப்ரேம்குமார் கூறியதும் மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர். கார்களை நிறுத்தியிருந்த இடம்வரை மூவரும் பேசிக் கொண்டே போனார்கள்.

“சம்பந்தி... என் மக... என் மகளுக்கு இப்படி ஆயிடுச்சே சம்பந்தி... ஒரே பொண்ணுன்னு என் கண்ணுக்குள்ள வச்சு வளர்த்தேனே... மணக்கோலத்துல கண் குளிரப் பார்த்த என் மகளை இப்படிப் பிணமா பார்க்க வச்சுட்டானே, அந்த ஆண்டவன்...”

அழுகை வெடித்துக் கொண்டு வர, அதைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பெரும்பாடு பட்டார் மோகன்ராம்.

“கன்ட்ரோல் பண்ணிக்கோங்க சம்பந்தி. அது மிருதுளா தான்னு இன்னும் முடிவாகலியே...” கோபால் ஆறுதலாகப் பேசினார்.

“இல்லை சம்பந்தி. அது என் பொண்ணு மிருதுளாதான். முதல் இரவு கொண்டாடிய பொண்ணு... தொடர்ந்த இரவுகளையே பார்க்காம இப்படிக் கண்ணை மூடிட்டாளே... அவ ஏன் இப்படிப் பண்ணினா? யாரால அவளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுச்சு? எதுவுமே தெரியாம எனக்குத் தலை சுத்துது. நெஞ்சு வலிக்குது.” கதறிய மோகன்ராம், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தார்.

“மாமா... மாமா....”

சம்பந்தி... சம்பந்தி... ஏகாந்த்தும் கோபாலும் சாய்ந்துவிட்ட மோகன்ராமைப் பார்த்துப் பதறினர்.

ஏகாந்த் அவரைத் தூக்கி நிறுத்தினான். பக்கத்திலிருந்த குழாயிலிருந்து கைகளில் தண்ணீர் பிடித்து வந்து மோகன்ராமின் முகத்தில் தெளித்தார் கோபால். கண் விழித்தார் மோகன்ராம். மனம் ஓரளவு தெளிந்தார். தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சுதாரித்தார்.

“உணர்ச்சி வசப்படாதீங்க சம்பந்தி... வாங்க!” அவரது கையைப் பிடித்துச் சென்றார் கோபால். மெளனமாக அவர்களைப் பின் தொடர்ந்த ஏகாந்த், மனசுக்குள் அழுதான்.

‘என்னை நேர்ல பார்த்த முதல் தடவையிலயே அவளோட மனசை நான் டிஸ்டர்ப் பண்ணினதா சொன்னாளே. மனம் திறந்து பேசணும், ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும்னு எவ்வளவு தெளிவா சொன்னா? இப்ப அவளுக்கு என்ன நடந்ததுன்னே புரியாம தவிக்கிறேனே...’ ஏகாந்த்தின் மனம் அலை பாய்ந்தது.

‘சிதைந்து போன அந்த முகம்?... அந்த முகத்துக்கு உரிய உடல்... அது... என் மிருதுளாவா? இருக்காது. இருக்கக் கூடாது. ‘வருவேன் நான் உனது’ பாடலைப் பத்தி எனக்குத் தெரியாதுன்னு நான் சொன்னதை நம்பாம திரும்பிப் படுத்துக்கிட்டா. அந்தக் கோபத்துல... ச்சே... ச்சே... அந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டு வெளியே போற அளவுக்கு ஸென்ஸிடிவ்வான இயல்பு இல்லையே? புத்திசாலியான, தெளிவான சிந்தனை உள்ள பொண்ணாச்சே என் மிருதுளா?’ துன்ப ரேகைகள் அவனது முகத்தில் பிரதிபலித்தன.

காரின் அருகே வந்ததும், மோகன்ராம் அவரது காரில் ஏற முற்பட்டார்.

“மாமா... எங்க கார்ல வாங்க. நான் உங்களை உங்க வீட்ல விட்டுடறேன். இப்படி ஒரு நிலைமையில் நீங்க கார் ஓட்ட வேண்டாம் மாமா. யாரையாவது மெக்கானிக்கை அனுப்பி உங்க காரை எடுத்துக்கலாம்.”

“வேணாம் மாப்பிள்ளை. ஐ அம் ஆல்ரைட் நெள. கார் ஓட்ட முடியாத அளவுக்கு உடம்புக்குப் பிரச்னை ஒண்ணுமில்ல. மனசுதான் சரியில்ல. நான் சமாளிச்சுப் போய்க்குவேன். நீங்க கிளம்புங்க. வரேன் சம்பந்தி.” விடை பெற்றுக் காரில் ஏறிக் கிளம்பினார் மோகன்ராம்.

கோபாலும், ஏகாந்த்தும் தங்களது காரில் ஏறினர். கனத்துப்போன இதயத்துடன் ஏகாந்த் காரை இயக்கினான். கார் ஸ்டீயரிங் சுற்றுவது போல அவனது மனமும் சுற்றியது.

28

லக்ட்ரிக் பில்லிற்குப் பணம் கட்டி விட்டு வீட்டிற்குள் வந்த வருணாவை வாசலிலேயே வழி மறித்தாள் அகல்யா.

“என்னம்மா? ஏன் இவ்வளவு பதற்றமா இருக்கீங்க?” அகல்யாவின் முகம் பிரதிபலித்த பதற்றம், வருணாவை இவ்விதக் கேள்வி கேட்க வைத்தது.

“கல்யாணம் முடிஞ்ச மறுநாளே மிருதுளாவைக் காணோமாம். இப்ப என்னடான்னா மிருதுளாவோட வயசுல ஒரு பொண்ணோட பிணத்தைக் கண்டு பிடிச்சிருக்காங்களாம். போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து மாமாவுக்குத் தகவல் வந்துச்சாம். மாமாவும், ஏகாந்த்தும் ராயப்பேட்டை கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்களாம். அத்தை எனக்கு போன் போட்டு எல்லா விபரத்தையும் சொன்னாங்க. என்ன ஆச்சோ ஏது ஆச்சோ தெரியல. வா. நாம இப்ப உடனே மாமா வீட்டுக்குப் போகணும்.”

அகல்யா கூறியதைக் கேட்டதும் வருணாவின் அடி வயிற்றில் பய உணர்வு பிறாண்டி எடுத்தது. அவளுடைய இதயத் துடிப்பு அவளுக்கே ‘தொம் தொம்’ என்று கேட்டது.

‘திரிசூலியின் வேலை இப்படிக் கொலையில முடியும்னு எதிர்பார்க்கவே இல்லையே. ஏகாந்த் மச்சான் எனக்கு வேணும்னு திரிசூலிட்ட சொன்னேனே தவிர மிருதுளாவைத் துன்புறுத்தணும், கொலை பண்ணணும்னெல்லாம் நான் சொல்லவே இல்லையே. வசியம் பண்ணி ஏகாந்த் மச்சான் என்னைத் தேடி வரணும்னுதானே நான் அவகிட்ட சொன்னேன்... இப்படி மிருதுளாவைக் கொல்ற அளவுக்குப் போய், சிக்கல்ல மாட்டி விட்டுட்டாளே...’ நெஞ்சில் திகில் சூழ, விக்கித்து நின்ற வருணாவை அழைத்தாள் அகல்யா.

“என்னடி வருணா... நான் கிளம்பணும்னு சொல்லிக்கிட்டிருக்கேன்... நீ என்னடான்னா இப்படிப் பேயறைஞ்ச மாதிரி நிக்கற?” அதட்டினாள்.

“நீ... நீங்க... சொன்ன விஷயத்துல ரொம்ப ‘ஷாக்’ ஆயிட்டேன்மா. வாங்க கிளம்பலாம்.” சமாளித்துப் பேசினாள் வருணா. பணம் கட்டிய ரசீதை அலமாரியினுள் வைத்தாள்.

“வாங்கம்மா.”

இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு ஸ்கூட்டரில் கிளம்பினர்.

ஏகாந்த்தின் வீடு வந்ததும், ஸ்கூட்டரை நிறுத்தினாள் வருணா. அகல்யா இறங்கியதும், காம்பெளண்ட் கேட் அருகே கூட்டரை ‘பார்க்’ செய்துவிட்டு, பூட்டியபின் உள்ளே போனாள். கோபாலின் கார் வெளியே நின்றது.

 

+Novels

ராசலீலை

ராசலீலை

April 24, 2012

பேரழகி

பேரழகி

August 9, 2012

ரோகிணி

ரோகிணி

July 4, 2012

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

ரகசியம்

ரகசியம்

January 17, 2013

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel