Lekha Books

A+ A A-

நீ எங்கே? என் அன்பே !

1

“மவராசன் அந்த ராம்கொமாரு சிரிக்கறதைப் பாருடி அந்த படத்துல, என்ன... அளகு... என்ன அளகு...”

“ஏம் பாட்டி வயித்துக்கு இல்லைன்னாலும் இந்த வயசான காலத்துலயும், ராம்குமார் சினிமான்னா முதநாளே வந்துடறியே!”

“அடி போடீயம்மா அந்த மவராசன் முகத்தைப் பார்த்தாலே போதும். பசி ஆறிடும். எம்பேரன் இன்னிக்குக் காலையில, ரொட்டியும், டீயும் வாங்கிக்கன்னு பத்து ரூவா குடுத்தான். அதை அப்பிடியே வச்சிருந்து இங்க வந்து நின்னுட்டேன், டிக்கெட் வாங்க.”

“காலையில இருந்து கால் கடுக்க நின்னுட்டிருக்கோம். இன்னும் டிக்கெட் குடுக்கற கவுண்டர் திறந்த பாடில்ல!”

“தொறக்கறப்ப தொறக்கட்டும். இன்னிக்கு இந்த சினிமாவைப் பார்த்துட்டுதான் வேற வேலை. ஆமா, நீ இன்னிக்கு கட்டிட வேலைக்குப் போகலியா?”

“இன்னிக்கு ராம்குமாரோட புது சினிமா ரிலீஸ்ன்னு தெரியுமே. அதான் நேத்து வாங்கின கூலியில செலவு போக மீதி காசை அப்படியே வெச்சிருந்தேன்.”

“அப்போ இன்னிக்கு மத்தியானம், ராத்திரிக்கு சாப்பாட்டு செலவுக்கு என்னடி செய்வ?”

“ம்... அது கெடக்கு. வீட்ல அம்மா பழையது வெச்சிருந்தா சாப்பிடறது. இல்லைன்னா போய் படுத்துக்க வேண்டியது. என் கூட வேலை பார்க்கறவளுக எல்லாம் இன்னிக்கு புது சினிமா பார்த்துடுவாளுக. நா மட்டும் பார்க்க வேணாமா.”

“அது சரிதான் புள்ள. இந்த ராம்கொமாரு சினிமாவுல காட்டற மாதிரியே நெசமாலுமே ரொம்ப நல்லவராமே? ஏழை, பாழைங்களுக்கெல்லாம் நெறய தருமம் பண்ணுவாராம்ல. கட்டைல போறதுக்குள்ள இந்த ராசாவை என் கண்ணால, நேர்ல ஒரு தடவை பார்த்துடணுண்டி.”

“ஐய, பாட்டிக்கு ஆசையைப் பாரு. ராம்குமாரை நேர்ல பார்க்கணுமாம்.”

“என் ஆசை, ஒனக்கேண்டி கேலியா இருக்கு...”

“பாட்டி, பாட்டி நகரு. டிக்கட் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அங்க பாரு கவுண்ட்டர் தொறந்துட்டாங்க.” பக்கத்து வீட்டு பருவப் பெண் பட்டுவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த பாட்டியையும் பரபரப்பு பற்றிக் கொண்டது. அவள் கண்களில் ஆர்வம் பொங்கியது.

“நம்ம தலைவர் ராம்குமாருக்கு எம்மாம் பெரிய கட்-அவுட் வச்சிருக்காங்க. பாருடா மச்சான். அடேங்கப்பா... இது வரைக்கும் வேற எந்த ஆக்டருக்கும் இம்மாம் பெரிய கட்-அவுட் வச்சதில்லப்பா.” சென்னையின் செந்தமிழ் அந்த விடலைகளிடம் விளையாடியது.

“அட நீ வேற மாப்பிள, நம்ம தலைவர் என்ன லேசுப்பட்ட ஆளா? சூப்பர் ஹீரோ கண்ணு அவுரு. ரசிகர் மன்றதுக்குக்காரனுக இன்னமாதிரி தியேட்டரை அலங்கரிச்சிருக்கானுங்க பாருடா.”

‘எங்க நாட்டுராசா’, ‘இளம் தென்றல்’ ராம்குமார், ‘நெருங்காதே நெஞ்சமே’ புதிய படத்தின் நாயகன் ராம்குமார் வாழ்க!- அகில இந்திய ராம்குமார் நற்பணி மன்றம்.

புகழ்வரிகள் எழுதப்பட்ட துணி பானர்கள்! வண்ணக் காகிதங்களின் தோரணங்கள், பிரமிக்க வைக்கும் கட்-அவுட்! அதில் போடப்பட்டிருந்த ஜிகினா மாலைகள். தியேட்டர் வளாகம் திருவிழாக் கோலமாக இருந்தது கண்டு வாயைப் பிளந்தான் அந்த ரசிகன்.

“செம கூட்டண்டா. அங்க பாரு. தாய்க்குலத்தை. கூட்ட நெரிசல்ல எவ்வளவு கஷ்டப்பட்டு நிக்கறாங்க.”

“தலைவர் படத்தைப் பார்க்கணுங்கறதுக்காக, வேகாத வெயில்ல நிக்கறாங்க. ஏன் மச்சான், அங்க இன்னா மச்சான் அம்மாம் ஜனம் நிக்குது?!”

“ஓ, நீ இன்னிக்குதான் எங்க ஏரியாவுல படம் பார்க்க வர்றியோ? மாப்பிள, இது ரெண்டு தியேட்டருங்க சேர்ந்தாப்ல இருக்கற பில்டிங். ஒரு தியேட்டர்ல நம்ம தலைவர் படம். அந்த தியேட்டர்ல நிரஞ்சன் இல்லை? அவரோட படம். அதுவும் புதுசா இன்னிக்குதான் ரிலீஸ் ஆகுது.”

“படம் பேரு இன்னா மச்சான்?”

“நிரஞ்சன் நடிக்கற படம் பேரா? ‘கண்ணுக்குள் மின்னல்’ ரெண்டு ஆக்டருங்களுக்கும் செம போட்டிடா மாப்ள. இவரோட மன்றத்துக்காரனுவ கலர் காயிதத்துல தோரணம் கட்டிட்டானுங்க. அவரோட ஆளுகளைப் பாரு, பூவாலேயே ஜோடிச்சுக்கிட்டிருக்கானுக. ஒருத்தன் போஸ்ட்ல ஏறிக்கிட்டிருக்கான் பாரு தோரணம் கட்டறதுக்கு. கீழே விழுந்தான்னா அதோ கதிதான். ”

ராம்குமாரின் புதுப்படத்தைப் பார்க்கவென்று வந்திருந்த அவனது விசிறிகள், தங்கள் தலைவரின் வீர பிரதாபத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

தியேட்டர் வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி, திணறிக் கொண்டிருந்தது. இரண்டு பிரபல ஹீரோக்களின் புதுப்பட ரிலீஸ் என்பதால் சமாளிக்க இயலாத கூட்டம். தங்கள் வேலை, உணவு எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் அபிமான நடிகர்களின் புதுப்படங்களைப் பார்த்து விடுவதே பிறவிப் பயன் என்பது போல வரிசையில் தடுமாறி, திண்டாடிக் கொண்டிருந்தது அலை மோதிய மக்கள் வெள்ளம்.

மாடியில் இருந்த அலுவலக அறையிலிருந்தபடி கண்ணாடி ஜன்னல் வழியாக மேனேஜர் நரசிம்மன் கீழே பார்த்துக் கொண்டிருந்தார். குழுமி இருந்த ஜனத்திரளைப் பார்த்துக் கவலை அடைந்தார்.

“என்னங்க, நரசிம்மன்! ரெண்டு டாப் ஹீரோவோட படங்களையும் வளைச்சுப் போட்டுக்கிட்டீங்க. எக்கச்சக்கத்துக்கும் வசூலாகும். நீங்க என்னன்னா சுரத்தே இல்லாம கவலையா இருக்கீங்க?” நண்பர் கேட்டதும் அவர் பக்கமாக திரும்பினார் நரசிம்மன்.

“இந்த இரண்டு ஹீரோக்களோட படத்துக்கும் வசூல் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். ஆனா அப்புறம் தியேட்டரை புதுப்பிச்சே ஆகணும். கோயிலுக்கு செய்யற திருப்பணி போல இது தவிர்க்க முடியாதது. படத்தைப் போட்டு, ஒழுங்கா பங்கு பிரிச்சுக் குடுத்துடுவோம்ங்கற நல்ல எண்ணம் எங்க தியேட்டர் மானேஜ்மெண்ட்டைப் பத்தி விநியோகஸ்தர்கள் கிட்ட இருக்கு. ஆனா... இந்த ரசிகர்கள், ஹீரோக்கள் மேல வச்சிருக்கற அன்பு, ஏன் வெறின்னு கூட சொல்லலாம் எங்களைப் போல தியேட்டர்காரங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. என் முதலாளிக்கு நிறைய பிஸினஸ் இருக்கு. இந்த தியேட்டர் மேனேஜ்மென்ட் பொறுப்பை என் கையில ஒப்படைச்சிருக்கார். என் மேல அவ்வளவு நம்பிக்கை. அந்த நிம்பிக்கையைக் காப்பாத்தணுமில்ல?”

“அது நியாயந்தாங்க. உங்க வேலை கொஞ்சம் சிக்கலானதுதான். ஹி... ஹி... வீட்ல பேரக்குழந்தைகள்லாம் ராம்குமார் படத்துக்கு பாஸ் வாங்கிட்டு வா; நிரஞ்சன் படத்துக்கு பாஸ் வாங்கிட்டு வான்னு சொல்லி அனுப்பிச்சாங்க. ஹி... ஹி... குடுத்தீங்கன்னா...”

“இந்த வாரம் போகட்டும் நாதன். புதுப்படம் ரிலீஸானா ஒரு வாரத்துக்கு யாருக்குமே பாஸ் குடுக்கறதில்ல. அடுத்த வாரம் வாங்க. கண்டிப்பா தரேன்.”

“சரிங்க. நான் வர்றேன்.”

கீழே இறங்கி வந்த நாதன், வெளியில் போக வழி இன்றி, ‘காட்சி துவங்கிய பின் போகலாம்’ என்றெண்ணி ஓர் ஓரமாக நின்று கொண்டார்.

“பார்த்தியாடா, எங்க தலைவர் ராம்குமார் படத்துக்குக் கூட்டத்தை? தலைவர் டாப் ஸ்டாருடா,” பீடித்துண்டின் கடைசிப் பகுதி வரை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தூக்கி எறிந்தான் ஒரு விடலை.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel