Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

திலகன் என்ற மகாதிலகம் - Page 2

thilakan endra magaathilagam

ஏன் அந்த சண்டை?

   -    மம்மூட்டி

   தமிழில்: சுரா

முப்பது நாட்களாக திலகன் அண்ணன் மருத்துவமனையில் மரணத்துடன் போராடிக் கொண்டு படுத்திருந்தார். மருத்துவமனையில் இருப்பது, விபத்துகள், மாரடைப்புகள்- இவை எதுவுமே திலகன் அண்ணனுக்கு புதிய விஷயமே அல்ல. அதனால் இந்த போராட்டத்திலும் வெற்றி பெற்று திலகன் திரும்பி வருவார் என்று நான் நினைத்தேன்.

ஆலுவா நதியின் கரையில் பி.ஜெ.ஆன்டனியின் ‘பெரியார்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும்போதுதான் மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டு நான் திலகனை முதல் தடவையாக பார்க்கிறேன். அப்போது நான் நடிகன் அல்ல.

கெ.ஜி. ஜார்ஜின் ‘யவனிக’யில் நாங்கள் ஒன்று சேர்ந்தோம். புதிய அலை திரைப்படங்களில்தான் ஆரம்பகாலத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து நடித்தோம். ஒருமுறை பி.ஜி.விஸ்வம்பரனின் ‘ஒன்னாணு நம்மள்’ என்ற திரைப்படத்தில் என்னுடைய தந்தையாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்த நடிகர், நடிக்க வரவில்லை. நான்தான் திலகன் அண்ணனை அழைக்கும்படி கூறினேன். விஸ்வம்பரன் ‘அவர் கலைப் படங்களில் நடிப்பவராயிற்றே!’ என்றார். ஆனால், திலகன் அண்ணன் என்னுடைய தந்தையாக வந்தார்.

அப்போது திருவாங்குளத்தில் திலகன் அண்ணன் வசித்துக் கொண்டிருந்தார். எர்ணாகுளத்திலிருந்த வீட்டிற்குப் பயணிக்கும்போது, நான் அண்ணனை பல நேரங்களில் அங்கு ‘ட்ராப்’ செய்திருக்கிறேன். 85 காலகட்டத்தில் என்னுடைய திரைப்படங்கள் தோல்வியடைந்து கொண்டிருந்த நேரம்... நான் மனதில் கவலையுடன் இருந்தபோது, திலகன் அண்ணன் என்னிடம் ‘இதையெல்லாம் பார்த்து நீ கவலைப்பட வேண்டாம். நீ திரையுலகில் இருக்க வேண்டும் என்று விருப்பப்படும் காலம் வரையில், இங்கு இருப்பாய்’ என்றார். அந்த வார்த்தைகளில் இருந்த உறுதி என்னை எவ்வளவோ உயரத்திற்குக் கொண்டு சென்றது.

திலகன் அண்ணன் என்ன காரணத்திற்காக இடையில் அவ்வப்போது என்னுடன் சண்டை போட்டார் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘இனிமேல் சூப்பர் ஸ்டார்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்’ என்று அறிக்கை வெளியிட்ட சில நாட்கள் கடந்த பிறகு, ‘பழஸ்ஸி ராஜா’வில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நடித்தோம்.

‘அண்ணே... சூப்பர் ஸ்டார்களுடன் சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று நீங்கதானே சொன்னீங்க?’- படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது நான் கேட்டேன்.

‘அது... சூப்பர் ஸ்டார்களுடன் சேர்ந்து என்றுதானே நான் கூறினேன்! நீ சூப்பர் ஆக்டர் அல்லவா?’- இதுதான் அவருடைய பதிலாக இருந்தது.

‘தச்சிலேடத்து சுண்டன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் காலம். அண்ணன் வேலை முடிந்துவிட்டால், சற்று மது அருந்துவார். அறுவை சிகிச்சை முடிந்திருந்ததால், மது அருந்தக் கூடாது என்று டாக்டர்கள் கூறியிருந்த நேரமது. எனக்கு கோபம் வந்துவிட்டது. ‘இனி மது அருந்தினால், கொன்றுவிடுவேன்’ என்று நான் சற்று குரலை உயர்த்தி கூறினேன். ‘என் மகனின் கையால் மரணமடைந்துவிட்டேன் என்று நான் நினைத்துக் கொள்வேன்’ என்று அமைதியான குரலில் பதில் கூறினார். ‘இரண்டு பெக் அருந்துவதில் தவறில்லை என்று மருத்துவர் கூறியிருக்கிறார்’ என்று அவர் தன் பக்கத்தை நியாயப்படுத்தி கூறினார். அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பாஷியை நான் அழைத்தேன்.

இரவில் மீண்டும் திலகன் அண்ணனை அழைத்தேன். நான் கூறியதால் உண்டான பிடிவாதத்தில், எங்கே அதிகமாக மது அருந்திவிடப் போகிறாரோ என்பதுதான் என்னுடைய பயம். ‘உனக்கு கடுமையான வார்த்தைகளில் ஒரு கடிதம் எழுதி வைத்திருக்கிறேன்’ என்று கூறினார். ‘அய்யோ... அந்த கடிதத்தை அனுப்பி விடாதீர்கள். அன்பின் காரணமாகத்தானே நான் அப்படிச் சொன்னேன்!’ என்று நான் கூறியதும், எப்போதும்போல மனதில் சாந்தம் நிறைந்தவராக ஆகிவிட்டார்.

திருசூரில் இருந்த மருத்துவமனையில் படுத்திருந்தபோது, நான் அழைத்தேன். ‘ஒரு பிரச்னையும் இல்லை... நாளை டிஸ்சார்ஜ் ஆகி விடுவேன்’ என்றார். திருவனந்தபுரத்திற்குச் சென்றது கூட, கொஞ்சம் பேசுவோம் என்பதற்காகத்தான். முடியவில்லை. வேதனையுடன் திரும்பி வந்து விட்டேன். ‘திலகன்தானே! திரும்பி வருவார்...’ என்று வெறுமனே மனம் கூறியது.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version