
பட விழாவில் கலந்து கொண்ட ஏவி.எம்.சரவணன் சாட்சி கையெழுத்து போட்டார்!
சுரா
1987ஆம் ஆண்டு. நாகராஜன் என்ற திரைப்பட தயாரிப்பு நிர்வாகி, படங்களின் படப்பிடிப்பு நடக்கும் மந்தைவெளி 'சிங்கப்பூர் ஹவுஸ்'க்கு என்னை அழைத்துச் சென்றார். 'ஊமைக்குயில்' என்ற படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. பாக்யராஜைப் போலவே ஆடைகள் அணிந்து, கண்ணாடியை மாட்டிக் கொண்டு ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதை வசனகர்த்தா, கதாநாயகன் எல்லாமே அவர்தான். வசனம் பேசும் முறையில் கூட பாக்யராஜை அப்படியே பின்பற்றி நடித்துக் கொண்டிருந்த அவரை வியப்புடன் நான் பார்த்தேன். அவர்தான் எம்.ஆர்.யோகராஜ்.
பல்லாவரம் இங்கிலீஷ் எலெக்ட்ரிக்கல்ஸ் என்ற பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்த யோகராஜின் உண்மையான பெயர் பன்னீர்செல்வம். கதாநாயகனாக நடித்து, படங்களை இயக்க வேண்டும் என்பது அவருடைய மனதில் இருந்த மிகப் பெரிய விருப்பம். அந்தக் கால கட்டத்தில் பாக்யராஜ் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து புகழின் உச்சியில் இருந்தார். பாக்யராஜின் படங்கள் என்றால் பன்னீர் செவ்வத்திற்கு உயிர். அவரது பாணியிலேயே குடும்பக் கதையை நகைச்சுவை கலந்து சொன்னால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறலாம் என்று கணக்குப் போட்டார் அவர். இதற்கு ஆரம்பமாக தன் பெயரை யோகராஜ் என்று மாற்றிக் கொண்டார். யோகம், பாக்யம் இரண்டிற்கும் அர்த்தம் ஒன்றுதானே!
பாக்யராஜ் பாணியில் யோகராஜ் உருவாக்கிய கதைதான் ‘ஊமைகுயில்’. யோகராஜ், இளவரசி, தேவிஸ்ரீ ஆகியோர் அதில் நடித்தார்கள். பாக்யராஜின் ஜெராக்ஸ் பிரதியைப் போல யோகராஜ் நடித்துக் கொண்டிருந்ததை அரைமணி நேரம் பார்த்துவிட்டு நான் திரும்பி விட்டேன். அதற்குப் பிறகு இருபது நாட்கள் கழித்து யோகராஜ் அழைக்க, நான் மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்றேன். சாலிகிராமம் அருணாச்சலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜூடோ ரத்தினம் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணி புரிய, யோகராஜ் ஸ்டண்ட் வீரர்களுடன் சிலம்புச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
அதுவரை நடைபெற்ற காட்சிகளைப் புகைப்படங்களாக எடுத்து ஒட்டியிருந்த ஆல்பத்தை நான் பார்த்தேன். முதல் நாள் யோகராஜை சற்று கேலியாக பார்த்த நான், அந்த ஆல்பத்தைப் பார்த்ததும் மனம் மாறினேன். புகைப்படங்களைப் பார்த்தபோது, ‘படத்தில் ஏதோ ஒரு நல்ல கதை இருக்கிறது – யோகராஜ் நாம் நினைத்ததைப் போல சாதாரண ஆள் இல்லை’ என்று என் மனம் கூறியது. ஆல்பத்தைப் பார்த்தபோதே, அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று என் மனதில் பட்டது. அதை அப்போதே யோகராஜிடம் கூறவும் செய்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்பதை அவரின் முகமே கூறியது.
நாட்கள் கடந்தன. ‘ஊமை குயில்’ திரைக்கு வந்தது. யோகராஜ் இயக்கி, நடித்த அந்த முதல் படத்தைப் பார்த்த வினியோகஸ்தர்கள் முழுமையாக நம்பி வாங்கினார்கள். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் அப்படம் நன்றாக ஓடியது. படத்துறையைச் சேர்ந்த எல்லோரும் அந்தப் படத்தைப் பற்றி பேசினர். யோகராஜ் என்ற மனிதரின் தன்னம்பிக்கைக்கும், திறமைக்கும் கிடைத்த வெற்றி அது என்பதை நான் புரிந்து கொண்டேன்.
‘ஊமை குயில்’ தயாரிப்பில் இருந்தபோது, படம் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் யோகராஜ் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். ஒரு பைக்கில் அமர்ந்து கொண்டு பல இடங்களுக்கும் அவரே நேரில் போய், வேலைகளைச் செய்வார். பைக்கில் அவருக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு நான் பல ஸ்டூடியோக்களுக்கும் சென்றிருக்கிறேன். ‘ஊமை குயில்’ திரைக்கு வந்த பிறகு, ஒரு நாள் மாருதி காரில் சென்று கொண்டிருந்தார் யோகராஜ். என்னைப் பார்த்ததும் காரை நிறுத்தினார். உள்ளே உட்காரும்படி சொன்னார். இருவரும் பேசிக் கொண்டே சென்றோம். நான் நினைத்ததைப் போலவே ‘ஊமை குயில்’ வெற்றி பெற்று விட்டதைக் குறிப்பிட்டேன். படத்தில் தனக்கு நல்ல லாபம் கிடைத்ததாக யோகராஜ் சொன்னார்.
படத்தின் 50வது நாள் விழா நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக நாஞ்சில் மனோகரன், ஏவி.எம்.சரவணன், சிந்தாமணி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவைப் பார்க்க வந்திருந்தவர்களைப் பார்த்தால், படவுலகத்தைச் சேர்ந்தவர்களாக தெரியவில்லை. எல்லோரும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களாக தெரிந்தார்கள். அனைவரும் டிஃபன் பாக்ஸ் அடங்கிய பைகளுடன் காட்சியளித்தார்கள். கோட், சூட், அணிந்து ரோஜா மலரைக் கோட்டில் சொருகிக் கொண்டு பந்தாவாக நடந்து வந்த யோகராஜைப் பார்த்து ஒரே கூக்குரல். அப்போதுதான் அங்கிருந்த எல்லோருக்கும் தெரிந்தது- அவர்கள் அனைவரும் யோகராஜுடன் ‘பல்லாவரம் இங்கிலீஷ் எலெக்ட்ரிக்கல்ஸ்’ நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் என்பதே. அவர்களின் பணத்தை பயன்படுத்தித்தான் யோகராஜ் ‘ஊமை குயில்’ படத்தை எடுத்திருக்கிறார். கூறியபடி அவர்களுக்கு பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. யோகராஜை அவர்கள் பல இடங்களிலும் தேடியிருக்கிறார்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 50வது நாள் சுவரொட்டியைப் பார்த்திருக்கிறார்கள். வந்து விட்டார்கள்.
யோகராஜிடம் எல்லோரும் பணத்தைக் கேட்டார்கள். ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கேட்டு, பணத்தைக் கொடுத்து விடுவதாக அவர் சொன்னார். அதற்கு சாட்சிகளாக அங்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களான நாஞ்சில் மனோகரன், ஏவி.எம்.சரவணன், சிந்தாமணி முருகேசன் மூவரும் கையெழுத்துப் போட்டார்கள். வி.ஐ.பி.க்களாக வந்திருந்தவர்கள் ‘கட்டப் பஞ்சாயத்து’ நடத்தியதை இப்போது நினைத்தால் கூட எனக்குச் சிரிப்பு வருகிறது.
100 நாட்களைத் தாண்டி சென்னை கிருஷ்ணவேணி திரை அரங்கில் ஓடியது ‘ஊமை குயில்’. தொடர்ந்து யோகராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்க ‘எம் பொண்டாட்டி’ என்ற படம் ஆரம்பமானது. இதில் யோகராஜுக்கு ஜோடியாக ரஞ்சனி நடித்தார். கிட்டத்தட்ட 10 படங்களில் கதாநாயகனாக நடிக்க, யோகராஜ்க்கு வாய்ப்புகள் தேடி வந்தன. செந்தில்நாதன் இயக்கத்தில், வி.சி.குகநாதன் தயாரித்த ‘முந்தானை சபதம்’, ஜமீன்ராஜ் இயக்கத்தில் உருவான ‘காசு தங்க காசு’, ஜீவபாலன் இயக்கிய ‘சம்சாரமே சரணம்’ ஆகிய யோகராஜ் கதாநாயகனாக நடித்த படங்கள் திரைக்கு வந்து சரியாக ஓடவில்லை. அவர் நடித்த படங்கள் வர்த்தக ரீதியாக சரியாக ஓடாததால், மீதி படங்கள் பாதி முடிந்த நிலையில் அப்படியே நின்று விட்டன. சில படங்கள் தொடக்க விழாவுடன் நின்றுவிட்டன.
யோகராஜ் இயக்கிய ‘எம் பொண்டாட்டி’ இன்று வரை திரைக்கு வரவில்லை. சில வருடங்களுக்கு முன்னால் ஒரு நாள் என்னை அழைத்துச் சென்று அந்தப் படத்தை யோகராஜ் போட்டுக் காட்டினார். எடுக்கப்பட்ட காலத்தில் திரைக்கு வந்திருந்தால், அந்தப் படம் ஓடியிருக்கலாம். அதற்குப் பிறகு படவுலகில் எவ்வளவே வியக்கத்தக்க மாற்றங்கள் உண்டாகி விட்டனவே!
ஐந்து வருடத்திற்கு முன்னால், யோகராஜ் தானே கதாநாயகனாக நடித்து இயக்க இருந்த ஒரு படத்திற்காக பாடல்களை ‘ரெக்கார்ட்’ பண்ணினார். ஆனால், என்ன காரணத்தாலோ அந்த நிலையிலேயே அப்படம் நின்று விட்டது.
வாழ்க்கையில் சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். அது தொடரவும் செய்யும். வேறு சிலரின் வாழ்வில் அதிர்ஷ்டம் ஒரு மின்னலைப் போல சில நொடிகளுக்கு மட்டும் தோன்றி மறைந்துவிடும். எம்.ஆர்.யோகராஜின் வாழ்வில் அதுதான் நடந்திருக்கிறது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook