Lekha Books

A+ A A-

நான் நடிகன் ஆன கதை - Page 9

naan nadigan aana kathai

சமையலறையில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், தண்டனை நிறைவேற்றப்பட்ட நாளன்றுதான் அதைப் பற்றிய தகவலே சிட்னிக்குத் தெரிய வந்திருக்கிறது. மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து வரிசையில் மார்ச் செய்து வந்து நின்ற அவன் டெஸ்க்கிற்குப் பின்னால் என் தலையைப் பார்த்ததும் பதைத்துப் போய் விட்டான். என்னை அடிப்பதைப் பார்த்து தான் அழுது விட்டதாக பின்னால் அவன் சொன்னான்.

சிட்னியின் தம்பி நான் என்ற முறையில் மனதிற்குள் ஒரு சிறு பாதுகாப்பு இருப்பதைப் போல் நான் உணர்ந்தேன். சாப்பாட்டு அறையை விட்டுச் செல்லும்போது நான் அவ்வப்போது அவனைப் பார்ப்பேன். சமையல் வேலைகளுக்கு மத்தியில் அவன் ஒரு பெரிய வெண்ணெய் துண்டை ரொட்டி மீது தடவி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எனக்கு தருவான். நான் அதை சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வெளியேறுவேன். பிறகு அதை என் நண்பனுடன் பங்கு வைத்து நான் சாப்பிடுவேன். அது பசி இருக்கிறது என்ற காரணத்தால் அல்ல. கூடுதலாக வெண்ணெய் சாப்பிட முடிகிறதே என்ற சந்தோஷமே அதற்குக் காரணம். ஆனால், அது அதிக நாட்கள் நீடிக்கவில்லை. எக்ஸ்மவுத் பயிற்சிக் கப்பலில் சேர்வதற்காக சிட்னி ஹான்வெல்லை விட்டு வெளியேறினான்.

பதினொரு வயது வந்து விட்டால், அனாதை இல்லத்திலிருக்கும் சிறுவர்கள் தரைப் படையிலோ, கப்பல் படையிலோ சேரலாம். கப்பல் படை என்றால் எக்ஸ்மவுத்திற்கு அனுப்புவார்கள். போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லையென்றாலும், ஒரு வேலை வேண்டும் என்று சிட்னி விருப்பப்பட்டான். அந்த வகையில் ஹான்வெல்லில் என்னைத் தனியாக விட்டு விட்டு அவன் பயணமானான்.

சிறுவர்களைப் பொறுத்தவரையில் தனித்துவத்தின் ரகசிய வெளிப்பாட்டுப் பகுதி என்று தலைமுடியைச் சொல்லாம். முதல் தடவையாக முடியை வெட்டும்போது சிறுவர்கள் வாய் விட்டு அழுவார்கள். குட்டையானதாகவோ சுருண்டதாகவோ நீளமானதாகவோ- தலைமுடி எப்படி இருந்தாலும், அதை வெட்டி வேறு வகையில் மாற்றம் செய்யும்போது தங்களின் தனித்துவத்தின் ஒரு பகுதி வெட்டப்படுவதைப் போல் அவர்கள் உணர்வார்கள்.

அந்தச் சமயத்தில் சில சிறுவர்களுக்கு புழு காரணமாக ஒரு வகை தொற்று நோய் உண்டானது. அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் முதல் மாடியில் மைதானத்திற்கு எதிரே இருந்த தனி பகுதிக்கு மாற்றினார்கள். பரிதாபப்படும்படியான நிலையிலிருந்த அந்தச் சிறுவர்கள் எந்த நேரமும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றிருப்பார்கள். சவரம் செய்து மினுமினுத்துக் கொண்டிருந்த அவர்களின் தலை அயோடின் தேய்க்கப்பட்டு தவிட்டு நிறத்தில் இருக்கும். அது அருவருப்பு உண்டாக்கும் ஒரு காட்சி என்பதால் நாங்கள் வெறுப்புடன் அந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருப்போம்.

ஒரு நாள் சாப்பாட்டு அறையில் வேலை பார்த்த ஆட்களில் ஒருவர் என் தலை முடியைக் கையால் பிரித்துக் கொண்டே சொன்னார்: ‘புழு...’ அடுத்த நிமிடம் நான் உரத்த குரலில் அழ ஆரம்பித்து விட்டேன்.

அதற்கான சிகிச்சை பல வாரங்கள் நீண்டு கொண்டிருந்தபோது அது சீக்கிரம் முடியாதா என்று நான் நினைக்க ஆரம்பித்துவிட்டேன். என் தலையை வழுக்கை ஆக்கி, அதன்மீது அயோடினைத் தடவினார்கள். அது போதாதென்று தலையை ஒரு துணியால் சுற்றி கட்டி விட்டார்கள். மொத்தத்தில்- என்னைப் பார்க்கும்போது நான் பருத்தி சேகரிக்கும் ஒரு மனிதனைப் போல இருந்தேன். மற்ற சிறுவர்கள் வெறுப்புடன் என்னைப் பார்ப்பார்கள் என்ற உண்மை எனக்கு தெரியுமாதலால் நான் ஒருமுறை கூட ஜன்னல் பக்கத்திலேயே போனதில்லை.

புழுக்கடி பாதிப்பிற்கு ஆளான அந்தச் சமயத்தில் ஒரு நாள் என் தாய் என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அனாதை இல்லத்தை விட்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாகத் தங்கலாம் என்ற சில திட்டங்களுடன் என் தாய் அங்கு வந்திருந்தார். என் தாயைப் பார்த்தது ஒரு பூச்செண்டைப் பார்த்த சந்தோஷத்தைத் தந்தது. நல்ல பிரகாசமான முகத்துடனும் அழகான தோற்றத்துடனும் அவரைப் பார்த்த போது எனக்கு என் தோற்றத்தைப் பார்த்து வெட்கம் வந்துவிட்டது.

‘அவனோட அசிங்கமான முகத்தைப் பார்த்து நீங்க எதுவும் நினைக்காதீங்க’- நர்ஸ் என் தாயிடம் சொன்னாள்.

அதற்கு என் தாய் விழுந்து விழுந்து சிரித்தார். பிறகு என்னை கட்டிப் பிடித்து முத்தம் தந்தவாறு என் தாய் சொன்ன வார்த்தைகளை நான் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்: ‘உன் எல்லா அசிங்கங்களுடனும் உன் மீது நான் இப்போதும் அன்பு வைத்திருக்கிறேன்.’

சிறிதும் தாமதமில்லாமல் சிட்னி எக்ஸ்மவுத்தை விட்டும் நான் ஹான்வெல்லை விட்டும் தாயுடன் சென்றோம். கென்னிங்டன் பூங்காவிற்குப் பின்னாலிருந்த ஒரு அறையில்தான் நாங்கள் வசித்தோம். எங்களைச் சிறிது காலம் வைத்து பார்க்க மட்டுமே என் தாயால் முடிந்தது. சில நாட்களிலேயே நாங்கள் மீண்டும் அனாதை இல்லத்திற்கு வந்து விட்டோம்.

என் தாய்க்கு ஒரு வேலை கிடைப்பதிலிருந்த கஷ்டமும் என் தந்தைக்கு நாடக உலகில் வேலை இல்லாமற் போனதும்தான் நாங்கள் திரும்பவும் அனாதை இல்லத்திறகு வந்ததற்கான காரணங்கள். நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக வாழ்ந்த அந்தக் குறுகிய கால கட்டத்தில் பல தடவைகள் எங்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டேயிருந்தோம். கடைசி மாற்றம் அனாதை இல்லமாக இருந்தது.

நாங்கள் வசித்தது புதிய ஒரு இடமாக இருந்ததால் வேறொரு அனாதை இல்லத்திற்கு இந்த முறை எங்களை அனுப்பினார்கள். அங்கிருந்து நார்வுட் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். ஹான்வெல்லை விட இருட்டாக இருந்தது அந்த இடம். பாதைகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சந்தோஷமில்லாத ஒரு சூழல் அங்கு நிலவிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது சிட்னியை இரண்டு நர்சுகள் வந்து அழைத்திருக்கிறார்கள். என் தாய்க்கு திடீரென்று மன நிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்றும், கெயின்ஹில் மனநோய் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றும் அவர்கள் அவனிடம் கூறியிருக்கிறார்கள். எந்தவித உணர்ச்சி மாறுதலும் உண்டாகாமல் சிட்னி திரும்பப் போய் விளையாட்டைத் தொடர்ந்திருக்கிறான். ஆனால், விளையாட்டு முடிந்த பிறகு அவன் தனியாக அமர்ந்து நீண்ட நேரம் அழுதிருக்கிறான்.

அவன் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அழவில்லை. ஆனால், பதைபதைப்பான ஒரு விரக்தி உணர்வு என்னை வந்து தழுவிக் கொண்டது. என் தாய்க்கு என்ன நேர்ந்தது? எப்படி அவர் மனநோயால் பாதிக்கப்பட்டார்?

தன்னுடைய சொந்த மனதை விட்டு தப்பித்து என் தாய் எங்களை தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டதைப் போல் நான் உணர்ந்தேன்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel