Lekha Books

A+ A A-

நான் நடிகன் ஆன கதை - Page 12

naan nadigan aana kathai

ஆடியவாறு ஒரு பக்கம் விழும் நிலையில் இருந்த லூஸியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். ஏதாவது ஆபத்தில் சிக்கி அவளுடைய காலில் காயம் எதுவும் உண்டாகி விட்டிருக்குமோ என்று நினைத்து நான் பயந்தேன். ஆனால், சிறிது நேரம் கடந்த பிறகு எனக்கு விஷயம் என்னவென்பது புரிந்தது. மூக்கு முட்ட மது அருந்திவிட்டு அவள் வந்திருக்கிறாள். அவள் வீட்டிற்குள் செல்வது வரை நான் வெளியிலேயே நின்றிருந்தேன். சிறிது நேரம் சென்றதும் வீட்டுச் சொந்தக்காரர் அந்தப் பக்கம் போவதைப் பார்த்து, அவருடன் நானும் சென்றேன். எந்தவித ஓசையும் உண்டாக்காமல் படுக்கையில் போய் படுத்து விடுவோம் என்று எண்ணி நான் மெதுவாக படிகளில் ஏறினேன். ஆனால், லூஸி என்னைப் பார்த்துவிட்டாள்.

‘எந்த நரகத்துக்கு நீ போற? இது உன்னோட வீடு இல்லை...’- அவள் சொன்னாள்.

நான் இடி விழுந்ததைப் போல் நின்றுவிட்டேன். ‘இன்னைக்கு ராத்திரி நீ இங்கே உறங்கப் போறது இல்ல. நீங்க ரெண்டு பேரும் எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு. சீக்கிரமா இந்த இடத்தை விட்டு புறப்படு. நீயும் உன் அண்ணனும்... உங்களை உங்க அப்பா பார்த்துக் கொள்வார்.’

நான் அதிர்ச்சியடைந்து போய் படிகளில் இறங்கினேன். என்னிடமிருந்த களைப்பெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்து விட்டிருந்தது. என் தந்தையை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டுமென்று நான் தீர்மானித்தேன். என் தந்தை எப்போதும் வழக்கமாக போகக் கூடிய ஒரு இடம்- ப்ரின்சஸ் சாலையிலிருந்த க்வீன்ஸ் ஹெட் மதுச்சாலை. அங்கு போய் பார்க்கலாம் என்று நினைத்தேன். சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு எனக்கு நேர் எதிரில் ஒரு மனிதர் நடந்து வருவதைப் பார்த்தேன். அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அது என் தந்தைதான்.

‘அவங்க என்னை உள்ளே விடமாட்டேங்குறாங்க. நல்லா குடிச்சிருக்காங்க’- சிணுங்கி அழுதவாறு நான் என் தந்தையிடம் சொன்னேன். வீட்டை நோக்கி ஆடியவாறு நடந்து கொண்டிருந்த என் தந்தை சொன்னார்: ‘நானும் தெளிவா இல்ல...’

அவர் நல்ல சுய உணர்வுடன்தான் இருக்கிறார் என்பதைக் காட்ட நான் முயன்றேன். ‘இல்ல... நான் குடிச்சிருக்கேன்’- அவர் முணுமுணுத்தார்.

முன்னறையின் கதவைத் திறந்து நாங்கள் உள்ளே நுழைந்தோம். குளிர் காயும் கனப்பிற்குப் பக்கத்திலிருந்த திண்ணையைப் பிடித்து ஆடியவாறு நின்றிருந்தாள் லூஸி. அவளை வெறித்துப் பார்த்தவாறு என் தந்தை கேட்டார்:

‘நீ ஏன் இவனை உள்ளே விடல?’

‘நீங்களும் போங்க... நரகத்துக்குப் போய் தொலைங்க. எல்லாரும் போங்க...’ – லூஸி முணுமுணுத்தாள்.

அதைக் கேட்டு என் தந்தைக்கு கோபம் வந்துவிட்டது.  அவருக்கருகில் இருந்த தரையைச் சுத்தம் செய்யும் நீளமான ப்ரஷ்ஷை எடுத்து லூஸியின் மீது வீசி எறிந்தார். அது பலமாக அவளுடைய முகத்தில் போய் விழுந்தது. அடுத்த நிமிடம் லூஸி மயக்கம் போட்டு தரையில் விழுந்தாள்.

என் தந்தையின் அந்தச் செய்கை என்னை நிலைகுலையச் செய்தது. அத்தகைய செயல்கள் நான் அவர் மீது வைத்திருந்த மதிப்பைக் குறைக்கச் செய்தன. அதற்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி எனக்கு சரியாக ஞாபகத்தில் இல்லை. சிட்னி வந்தபோது எங்கள் இருவரையும் படுக்கையில் தூங்க வைத்துவிட்டு என் தந்தை வெளியே போய்விட்டார் என்பது மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது.

என் தந்தையின் பண வசதி படைத்த சகோதரர் ஸ்பென்சர் சாப்ளினின் வீட்டிற்குப் போவது குறித்து அன்று காலையில் லூஸி என் தந்தையுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அங்கு என் தந்தை செல்வதை சிறிதுகூட லூஸி விரும்பவில்லை. என் தந்தை மட்டும் தனியாக அங்கு போனதற்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் அன்று முழுவதும் லூஸி வெளியே போய் எங்கோ தன் நேரத்தைச் செலவிட்டிருக்கிறாள்.

என் தந்தையும் லூஸியும் பல நேரங்களில் மிகவும் அன்புடன் நடந்து கொள்வதும் உண்டு. என் தந்தை நாடக சாலைக்குப் புறப்படும் போது அவர்கள் இருவரும் மிகுந்த அன்புடன் ஒருவருக்கொருவர் ‘நல் இரவு’ கூறிக் கொள்வார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து காலை உணவு சாப்பிடும்போது என் தந்தை தனனுடைய நாடக உலக அனுபவங்களை விளக்கிக் கூறியதை நாங்கள் எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு கழுகைப் போல நான் என் தந்தையின் ஒவ்வொரு அசைவையும் எனக்குள் எடுத்துக் கொண்டிருந்தேன்.

நாடக சாலைக்குப் போவதற்கு சற்று முன்பு, இரவு கிட்டத்தட்ட ஏழு மணி ஆகும்போது என் தந்தை ஆறு பச்சை முட்டைகளை எடுத்து மதுவில் கலந்து குடிப்பார். அதுதான் அவருடைய முக்கிய உணவாக இருந்தது. எப்போதாவது ஒரு முறைதான் அவர் வீட்டிற்கே வருவார். முக்கியமாக வீட்டிற்கு வருவது அதிகமாக மது அருந்தி விட்டு தூங்குவதற்காகத்தான் இருக்கும்.

சிறுவர்- சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமைச் செயல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான ஒரு அமைப்பு அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன் உறுப்பினர்கள் ஒருமுறை லூஸியைப் பார்க்க வந்தார்கள். லூஸியின் கோபம் அதற்குப் பிறகு மேலும் அதிகமானது என்பதுதான் உண்மை. அவள் எங்களை வெளியே போகச் சொன்ன ஒரு இரவு நேரத்தில், அதிகாலை மூன்று மணிக்கு நானும் சிட்னியும் ஒரு காவல் அறைக்கு அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த போலீஸ்காரர்கள் எங்களை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். போலீஸ்காரர்கள்தான் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தகவலைக் கூறியிருக்கிறார்கள்.

அப்படியே சில நாட்கள் கடந்தன. என் தந்தை நாடக சாலையில் இருந்தார். ஒரு நாள் லூஸி பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. என் தாய் மன நோய் மருத்துவமனையிலிருந்து வந்து விட்டார் என்ற செய்தி அதில் இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னையும் சிட்னியையும் எதிர்பார்த்துக் கொண்டு ஒரு பெண் வெளியே நின்று கொண்டிருக்கிறார் என்ற செய்தியை வீட்டு உரிமையாளர் சொன்னார்.

‘உங்க அம்மாதான்....’- லூஸி சொன்னாள்.

ஒரு நிமிடம் நாங்கள் மன ரீதியான குழப்பத்திற்கு ஆளாகிவிட்டோம். திடீரென்று சிட்னி கீழே ஓடினான். என் தாயின் கைகளில் போய் அவன் விழுந்தான். நானும் அதையேதான் செய்தேன். புன்னகை ததும்ப பாசத்துடன் எங்களை இறுக தழுவிக் கொண்டது பழைய, அன்புமயமான அதே தாய்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel