Lekha Books

A+ A A-

நான் நடிகன் ஆன கதை - Page 11

naan nadigan aana kathai

சனிக்கிழமை அரை நாள் விடுமுறை நாளாக இருந்தது. ஆனால், சனிக்கிழமை வருவதை நான் எப்போதும் விரும்பியதேயில்லை. காரணம்- அன்று தரையை சுத்தம் செய்வது, கத்திகளைச் சுத்தம் செய்வது என்று எனக்கு நிறைய வேலைகள் இருக்கும். அது மட்டுமல்ல, லூஸி அன்று சிறிதும் நிறுத்தாமல் மது அருந்திக் கொண்டே இருப்பாள்.

ஒரு சனிக்கிழமை லூஸி ஒரு சினேகிதியுடன் சேர்ந்து மது அருந்தியவாறு முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கத்திகள் சுத்தம் செய்து கொண்டிருந்த என்னைச் சுட்டிக் காட்டியவாறு அவள் தன் சினேகிதியிடம் சொன்னாள்: ‘இவனால எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனால், இன்னொருவன் இருக்கானே! அவனாலதான் பிரச்னையே. ஏதாவதொரு சீர்திருத்தப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைக்க வேண்டிய ஆள் அவன். அது மட்டுமல்ல... அவன் சார்லியின் மகனே இல்லை.’

சிட்னியைப் பற்றி இப்படி கடுமையான குரலில் லூஸி கூறியதைக் கேட்டு எனக்கு வருத்தமும் பயமும் உண்டாயின. அன்று மிகுந்த கவலையுடன்தான் நான் படுக்கையிலேயே படுத்தேன். பயம் காரணமாக எனக்கு தூக்கமே வராமல் நீண்ட நேரம் இப்படியும் அப்படியுமாக புரண்டு கொண்டேயிருந்தேன். அப்போது எனக்கு எட்டு வயது கூட ஆகவில்லை. என் வாழ்க்கையில் மிகவும் நீளமான, மிகுந்த கவலைகள் நிறைந்த நாட்கள் அவை.

சில சனிக்கிழமைகளில் இரவு நேரத்தில் கவலையுடன் படுத்திருக்கும்போது பின்னாலிருக்கும் ஜன்னலுக்கு வெளியே நடந்து கொண்டிருக்கும் பாடகர்கள் கூட்டத்தின் மகிழ்ச்சி நிறைந்த பாடல்களை நான் கேட்பேன். என்னுடைய அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றதாக அது இல்லையென்றாலும், அவர்களின் குரல் நீங்கி நீங்கி கடைசியில் முற்றிலும் இல்லாமற் போகும்போது என் மனதில் வேதனை உண்டாகும். மூன்று கட்டிடங்களைத் தாண்டி இருந்த மது அருந்தும் இடத்திலிருந்து, அது அடைக்கப்படும் நேரத்தில் வாடிக்கையான குடிகாரர்களின் பாட்டுச் சத்தத்தையும் நான் கேட்பேன். அதை ரசிக்க என்னால் முடியவில்லையென்றாலும், என்னுடைய தனிமைக்குக் கிடைத்த ஒரு நட்பாக, ஒரு தாலாட்டாக மாறி அது என்னை உறக்கத்திற்குக் கொண்டு செல்லும்.

சிட்னி இரவில் மிகவும் தாமதமாகத்தான் வீட்டிற்கே வருவான். படுப்பதற்கு முன்பு அவன் சாப்பிடுவதற்காக சமையலறையில் போய் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பான். அதைப் பார்த்து லூஸிக்கு பயங்கரமாக கோபம் வரும். அவள் ஒரு நாள் இரவு, உறங்கிக் கொண்டிருந்த சிட்னிக்கு அருகில் வந்தாள். அவள் அப்போது நன்கு குடித்திருந்தாள். சிட்னி மூடியிருந்த போர்வையை வேகமாக இழுத்து, அவனை வெளியே போகும்படி சொன்னாள். ஆனால், சிட்னி நல்ல முன்னெச்சரிக்கையுடன் இருந்தான். அவன் திடீரென்று தலையணைக்கு அடியிலிருந்து ஒரு வெட்டுக்கத்தியை வேகமாக எடுத்தான்.

‘என் பக்கத்தில் வந்து பார்... உன்னை ஒரே குத்துதான்’- அவன் சொன்னான். அவ்வளவுதான்- லூஸி பயந்து போய் பின்னோக்கி நகர்ந்தவாறு உரத்த குரலில் கத்தினாள்: ‘இந்த அசிங்கம் பிடிச்ச பய என்னைக் கொல்ல வர்றான்.’

‘ஆமா... நான் உன்னைக் கொல்லத்தான் போறேன்’- சிட்னி மிடுக்கான குரலில் சொன்னான்.

‘உன் அப்பா வருவது வரை நீ இரு.’

ஆனால், என் தந்தை அபூர்வமாகத்தான் வீட்டிற்கே வருவார். இதற்கிடையில் ஒரு சனிக்கிழமை நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தபோது, வீட்டில் யாரும் இல்லை. சிட்னி வழக்கம்போல கால்பந்து விளையாட போயிருந்தான். லூஸியும் அவளுடைய மகனும் காலையிலேயே எங்கோ போவதைப் பார்த்ததாக வீட்டுச் சொந்தக்காரர் சொன்னார். தரையையும் கத்திகளையும் சுத்தம் செய்ய வேண்டியதில்லையே என்ற அளவில் எனக்கு நிம்மதியாக இருந்தது.

மதிய உணவு நேரம் கடந்து நீண்ட நேரம் ஆன பிறகும் யாரையும் பார்க்காமல் இருந்தபோது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஒருவேளை, அவளும் என்னை வேண்டாமென்று ஒதுக்கி விட்டாளோ? அதை நினைத்தபோது எனக்கு கவலையாக இருந்தது. வீட்டிற்குள் இருந்த பேரமைதி என்னை அச்சம் கொள்ளச் செய்தது. நல்ல பசியும் களைப்பும் எனக்கு இருந்தன. சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்குமா என்று நான் சமையலறையில் தேடினேன். அங்கு எதுவுமே இல்லை. நீண்ட நேரம் வீட்டில் தனியாக இருக்க பிடிக்காமல் நான் வெளியே வந்தேன். அருகிலிருந்த கடை வீதியில் நடந்து சென்றேன். உணவு விடுதிகளின் கண்ணாடி கூடுகளுக்கு உள்ளே இருந்த சுவையான பலகாரங்களை வேட்கையுடன் பார்த்து நின்றேன். தெரு வியாபாரிகள் வார்த்தை ஜாலங்களுடன் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து நின்றதில், சிறிது நேரத்திற்கு நான் என்னுடைய பசியையும் சோர்வையும் கூட மறந்து போய் விட்டேன்.

இரவு நேரம் வந்ததும் நான் திரும்ப வீட்டிற்கு வந்தேன். அப்போதும் அங்கு யாரும் இல்லை. மீண்டும் நான் வெளியே சென்றேன். கென்னிங்டன் தெருவின் ஒரு மூலையில் இருந்த கல்லின் மீது போய் உட்கார்ந்தேன். அங்கு உட்கார்ந்திருந்தால் வீட்டிற்கு யாராவது வந்தால், அங்கிருந்தே அதைப் பார்க்க முடியும். சிட்னி எங்கு போயிருக்கிறான் என்பதைப் பற்றி ஒரு நிச்சயமும் இல்லை. உட்கார்ந்து உட்கார்ந்து நள்ளிரவு நேரம் ஆகிவிட்டது. தெருவில் அலைந்து கொண்டிருந்த ஒன்றிரண்டு ஆட்களை விட்டால், தெரு பெரும்பாலும் வெறுமையாகத்தான் இருந்தது. இரண்டு மூன்று கடைகளைத் தவிர, மீதி கடைகளில் விளக்குகள் அணைந்தன. மொத்தத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு இசை புறப்பட்டு வந்தது. அதைக் கேட்டபோது எனக்கு சிறிது நிம்மதியாக இருந்தது. ஒயிட் ஹார்ட்டிலிருந்த மது கடையிலிருந்துதான் அந்த இசை முழங்கிக் கொண்டிருந்தது. ஹார்மோனியமும் க்ளாரிநெட்டும் சேர்த்து வாசிக்கப்பட்ட அந்த இசை மிகவும் இனிமையாக இருந்தது. நான் என்னுடைய விரக்தியை முழுமையாக மறந்து சாலையைக் கடந்து, பாட்டு பாடிக் கொண்டிருந்தவர்களிடம் சென்றேன். ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர் கண் பார்வை தெரியாதவராக இருந்தார். மிகவும் சாந்தமான ஒரு முகத்தைக் கொண்டிருந்தார் க்ளாரிநெட் வாசித்துக் கொண்டிருந்தவர்.

சிறிது நேரம் சென்றதும் இசை நின்றது. பாட்டு பாடிக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து மறைந்தார்கள். இரவு மேலும் துக்கம் நிறைந்ததாக ஆனது. மிகவும் களைத்துப் போயிருந்த நான் வீட்டை நோக்கி நடந்தேன். எப்படியாவது படுக்கையில் போய் விழுந்தால் போதும் என்றிருந்தது எனக்கு. திடீரென்று எனக்கு முன்னால் தோட்டத்தின் வழியாக யாரோ மேல் நோக்கி ஏறிப் போவதை நான் பார்த்தேன். அது லூஸிதான். அவளுடைய மகன் அவளுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel