Lekha Books

A+ A A-

நான் நடிகன் ஆன கதை - Page 8

naan nadigan aana kathai

ஹான்வெல்லில் நாங்கள் நன்கு நடத்தப்பட்டோம். எனினும், தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்ற ஒரு உணர்வு எங்களுக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது. அங்கிருந்த சூழ்நிலை கவலை நிறைந்ததாக இருந்தது. பாடசாலைக்கு வெளியே நடந்து செல்வதை நான் மிகவும் வெறுத்தேன். இரண்டு வரிசைகளாக ஒற்றையடிப் பாதைகள் வழியாக நடந்து சென்றபோது ஆட்கள் எங்களை கேவலமாக பார்த்தார்கள். ‘பைத்தியக்கார விடுதியில் தங்கியிருக்கும் அனாதைகள்’ என்றுதான் அவர்களுக்கு மத்தியில் நாங்கள் அறியப்பட்டிருந்தோம்.

பள்ளிக்கூடத்தில் விளையாடும் இடம் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்தது. அதைச் சுற்றியிருந்த ஒரே மாடியைக் கொண்ட செங்கற்களால் ஆன கட்டிடத்தில் அலுவலகம், பொருட்கள் வைக்கப்படும் அறை, டாக்டர்கள் மருந்து தரும் இடம், பல் மருத்துவரின் மருந்தகம், மாணவர்களின் ஆடைகள் வைக்கப்பட்டிருக்கும் அறை ஆகியவை இருந்தன. எல்லாவற்றையும் தாண்டி மூலையில் ஒரு காலியான அறை இருந்தது. இப்போது அதற்குள் ஒரு பதினான்கு வயதைக் கொண்ட ஒருவனை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று சற்று வயதான மாணவர்கள் கூறினார்கள். மாடியிலிருந்த ஜன்னல் வழியாக குதித்து பள்ளிக்கூடத்தை விட்டு ஓடி தப்பிக்க முயற்சித்தபோது, அவன் பிடிபட்டுக் கொண்டான். தன்னைப் பிடிக்க வந்த அதிகாரிகள் மீது அவன் கற்களை வீசி எறிந்திருக்கிறான்.

இப்படிப்பட்ட பெரிய குற்றங்களுக்கு தரப்படும் தண்டனை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உடற்பயிற்சி கூடத்தில் வைத்து நிறைவேற்றப்படும்.

வெள்ளிக் கிழமை காலையில் சுமார் முன்னூறு மாணவர்கள் வரிசையாக நடந்து சென்று ஒரு சதுரத்தின் மூன்று பக்கங்களிலும் ராணுவத்தில் நிற்பதைப் போல நின்றிருப்பார்கள். நான்காவது பக்கம் போடப்பட்டிருக்கும் ஒரு நீளமான டெஸ்க்கிற்குப் பின்னால் குற்றவாளி விசாரணையையும் தண்டனையையும் எதிர்ப்பார்த்து காத்து நின்றிருப்பான். டெஸ்க்கிற்கு முன்னால் ஒரு முக்காலி போடப்பட்டிருக்கும். அதன் ஒரு பக்கத்தில் நடக்கப் போகும் விபரீதத்தைக் காட்டுவதைப் போல் ஒரு பிரம்பு தொங்கிக் கொண்டிருக்கும்.

சிறிய குற்றங்களுக்கு குற்றவாளியை டெஸ்க்கில் குப்புற படுக்க வைப்பார்கள். கால்கள் இரண்டையும் ஒரு ஆள் பிடித்துக் கொள்வான். இன்னொரு ஆள் குற்றவாளியின் சட்டையை மேல் நோக்கியும் காற்சட்டையை கீழ் நோக்கியும் இழுப்பான். கப்பல் படையிலிருந்து ஓய்வு பெற்ற இரு நூறு ராத்தல் எடையைக் கொண்ட கேப்டன் ஹின்ட்ரன் ஒரு பிரம்புடன் அங்கு நடந்து நெருங்கி வருவார். ஒரு ஆளின் பெருவிரல் அளவிற்கு தடிமனும் நான்கடி நீளமும் இருக்கும் அந்த பிரம்பிற்கு. அந்த பிரம்பை வைத்து பின் பகுதியில் மூன்று அடிகள் கொடுப்பதுதான் இருப்பதிலேயே குறைவான தண்டனை. அதிகமாக ஆறு அடிகள். மூன்று அடிகளைத் தாண்டும்போது குற்றவாளியிடமிருந்து பயங்கரமான ஒரு அலறல் சத்தம் கேட்கும். பெரும்பாலும் அவன் அப்போது மயக்கமடைந்து விடுவான். அப்போது அவனைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு ஓரத்தில் படுக்க வைப்பார்கள். உண்மையாகவே அது ஒரு பயங்கரமான காட்சிதான்.

குற்றம் செய்யாத நிரபராதியாகவே இருந்தாலும் குற்றத்தை மறுக்காமல் இருப்பதுதான் நல்லது என்று பொதுவாக சற்று வயதான மாணவர்கள் கூறுவார்கள். எப்படியாவது குற்றம் செய்தவன்தான் என்பது நிரூபணமாகிவிட்டால், பிறகு அதற்குக் கிடைக்கக் கூடிய தண்டனை மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க பொதுவாக மாணவர்கள் யாருக்கும் முடிவதுமில்லை.

சற்று வயது அதிகமான மாணவர்கள் பகுதிக்கு மாற்றிய பிறகுதான் முதல் தடவையாக அந்தத் தண்டனையை நேரில் பார்த்தேன். அதிகாரிகள் நடந்து வருவதைப் பார்த்த கணத்திலேயே என்னுடைய இதயம் படு வேகமாக அடிக்க ஆரம்பித்துவிட்டது. பள்ளிக் கூடத்திலிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்த தைரியசாலியான குற்றவாளியை டெஸ்க்கிற்குப் பின்னால் நிறுத்தியிருந்தார்கள். அவன் மிகவும் இளையவனாக இருந்ததால் அவனுடைய தலையையும் தோளையும் மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது.

தலைமை ஆசிரியர் மிடுக்கான குரலில் குற்றப் பத்திரிகையை வாசித்தார். அதற்குப் பிறகு அவர் கேட்டார்:

‘குற்றத்தைச் செய்தாயா இல்லையா?’

குற்றம் செய்தவன் அமைதியாக- அதே நேரத்தில்- கம்பீரமாக நின்றிருந்தான். அந்த நிமிடமே அவன் முக்காலியை நோக்கி கொண்டு போகப்பட்டான். உயரம் குறைவாக இருந்ததால் ஒரு சோப்பு பெட்டிக்கு மேலே அவனை ஏற்றி நிறுத்தி அவனுடைய கைகளை முக்காலியுடன் சேர்த்து கட்டினார்கள். இந்த முறை எப்போதும் பயன்படுத்துவதிலிருந்து மாறுபட்ட முறையில் இருந்த பிரம்பை பயன்படுத்தினார்கள். மூன்று முறை அடித்த பிறகு இரண்டு பணியாட்கள் வந்து அவனைத் தூக்கிக் கொண்டு சிகிச்சை அறைக்குச் சென்றார்கள்.

வியாழக் கிழமைகளில் மைதானத்தில் ப்யூகிள் சத்தம் கேட்கும். அந்த நிமிடமே நாங்கள் வேலைகளை எல்லாம் நிறுத்திவிட்டு மூச்சை அடக்கிய சிலைகளைப் போல நின்று கொண்டு அதன் மீது கவனத்தைச் செலுத்துவோம். அப்போது கேப்டன் ஹின்ட்ரம் ஒரு ஒலி பெருக்கியில் வெள்ளிக் கிழமை தண்டனைக்கு வர வேண்டியவர்களின் பெயர்களைக் கூறுவார்.

ஒரு வியாழக் கிழமை ஒலிபெருக்கியில் கேட்ட பெயர் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அது என் பெயராக இருந்ததுதான் காரணம். நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எனினும், வாயால் சொல்ல முடியாத ஏதோ காரணத்தால் எனக்கு கோபம் வந்தது. ஒருவேளை, ஒரு நாடகத்தின் மைய கதாபாத்திரமாக நான் ஆக்கப்பட்டிருக்கிறேன் என்பது காரணமாக இருக்கலாம்.

விசாரணை செய்யப்பட்ட நாளன்று நான் முன்னோக்கி நடந்து சென்றேன். தலைமை ஆசிரியர் குற்ற பத்திரிகையைப் படித்தார்: ‘கழிப்பறையில் நீ எரித்தாய் என்பதுதான் நீ செய்த தவறு.’

அது உண்மையே அல்ல. சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து சில தாள்களை தரையில் குவித்து எரிய விட்டுக் கொண்டிருக்கும்பொழுது, நான் கழிப்பறையை பயன்படுத்தினேன் என்பதைத் தவிர, அந்த நிகழ்ச்சியில் எனக்கு எந்தவொரு பங்கும் இல்லை.

‘குற்றவாளியா இல்லையா?’- தலைமை ஆசிரியர் உரத்த குரலில் கேட்டார்.

‘குற்றவாளிதான்...’- ஏதோ சக்தி வந்ததைப் போல நான் சொன்னேன்.

டெஸ்க்கில் நிற்க வைத்து பின் பகுதியில் பிரம்பால் மூன்று முறை அடித்தபோது, அது ஒரு அநீதி என்ற உணர்வோ கோபமோ எதுவும் என்னிடம் இல்லை. அதற்கு பதிலாக பயமுறுத்தக் கூடிய ஒருவித தைரியம்தான் என்னிடம் இருந்தது. மூச்சே நின்றுவிடும் அளவிற்கு வேதனை இருந்தாலும் நான் அழவில்லை. வேதனை தாங்க முடியாமல் கீழே விழுந்தபோது அவர்கள் என்னை தூக்கி எடுத்துக் கொண்டு போய் படுக்க வைத்தார்கள். ஒரு வீரச் செயலில் வெற்றி பெற்று விட்டதைப் போல் நான் உணர்ந்தேன்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel