Lekha Books

A+ A A-

நான் நடிகன் ஆன கதை - Page 4

naan nadigan aana kathai

என் தாயின் தந்தை சால்ஸ் ஹில் அயர்லாண்டிலிருந்து வந்து லண்டனில் நிரந்தரமாக தங்கிய ஒரு செருப்பு தைப்பவர். என் பாட்டி பாதி நாடோடி என்று கூறுவதே சரியானது. கொஞ்சியவாறு என்னுடன் பேசக் கூடிய என் பாட்டி எனக்கு ஆறு வயது நடந்தபோது மரணமடைந்துவிட்டார். என் தாய்க்கு கெய்ட் என்ற பெயரைக் கொண்ட ஒரு சகோதரி இருந்தார். என் தாயும் கெய்ட் பெரிம்மாவும் இளம் வயதிலேயே நாடகத்தின் மீது ஈர்ப்பு உண்டாகி வீட்டைவிட்டு போனவர்கள்.

தனக்கு பதினெட்டு வயது நடக்கும்போது என் தாய் நடுத்தர வயதைக் கொண்ட ஒரு மனிதரை திருமணம் செய்து ஆஃப்ரிக்காவிற்குச் சென்று விட்டார். தோட்டங்கள், வேலைக்காரர்கள் என்று படு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த அந்த காலத்தைப் பற்றி என் தாய் அவ்வப்போது கூறுவதுண்டு. அங்கு இருக்கும் போதுதான் சிட்னி பிறந்திருக்கிறான். சிட்னி பணக்காரரான ஒரு பிரபுவின் மகன் என்றும் இருபத்தொரு வயது வரும்போது அவனுக்கு இரண்டாயிரம் டாலர் வாரிசுப் பணமாக கிடைக்குமென்றும் யாரோ என்னிடம் கூறியிருந்தார்கள். அந்த விஷயம் என்னை ஒரு பக்கம் சந்தோஷம் கொள்ள வைத்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் கவலைப்படச் செய்யவும் செய்தது.

நீண்ட காலம் ஆஃப்ரிக்காவில் தங்கியிராத என் தாய் லண்டனுக்கே திரும்பி வந்து விட்டார். பிறகு என் தந்தையை அவர் திருமணம் செய்தார். மூன்று வருடங்களுக்குப் பிறகு நான் பிறந்தேன். எனக்கு ஒரு வயது நடக்கும்போது என் தாயும் தந்தையும் பிரிந்துவிட்டார்கள். என் தாய் ஜீவனாம்சம் எதுவும் கேட்கவில்லை. வாரமொன்றுக்கு இருபத்தைந்து டாலர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த ஒரு நடிகை என்ற நிலையில் எங்களை வளர்க்க என் தாயால் முடிந்தது. சிறிதும் எதிர்பார்க்காமல் கஷ்டங்கள் வந்து சேர்ந்தபோதுதான் வேறு வழியில்லாமல் என் தாய் செலவிற்கு இருக்கட்டும் என்று சட்ட நடவடிக்கைகள் எடுத்தார்.

என் தாய்க்கு அவ்வப்போது தொண்டையில் ஏதாவது பிரச்னைகள் வந்து கொண்டேயிருந்தன. ஒரு சாதாரண தலைவலியைத் தொடர்ந்து மூச்சுக் குழலில் அவருக்கு ஒரு வீக்கம் உண்டானதால்... அவருடைய குரல் பாதிக்கப்பட்டது. எனினும், என்தாய் தன்னுடைய வேலைகளைச் செய்து கொண்டுதான் இருந்தார். படிப்படியாக அவருடைய குரல் மோசமாகிக் கொண்டே வந்தது. அதை என்னால் நம்பவே முடியவில்லை. நாடகத்தில் பாடிக் கொண்டிருக்கும்போது இடையில் திடீரென்று குரலில் பிசிறு உண்டானதும், பிறகு குரலே வராமற் போய், நாடகம் பார்க்க வந்தவர்கள் கிண்டல் பண்ணி சிரித்ததும்... அவை ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்து என் தாயின் உடல் நிலை மிகவும் மோசமானது. அத்துடன் நாடக வாய்ப்புகள் அவருக்கு குறைந்தன. கடைசியில் நாடக கம்பெனியை விட்டு வெளியேற வேண்டிய நிலை அவருக்கு உண்டானது.

என் தாயின் குரலுக்கு ஏற்பட்ட அந்த விபத்தின் காரணமாகத்தான் ஐந்தாம் வயதில் நான் முதல் தடவையாக அரங்கத்தில் கால் வைத்தேன். அந்நாட்களில் என் தாய் நாடக சாலைக்குச் செல்லும்போது என்னையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். மேடையில் என் தாயின் குரலில் பிரச்னை ஏற்படுவதையும், தொடர்ந்து அது முணுமுணுப்பாக மாறுவதையும் நான் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரிப்பிலும், கிண்டல் பண்ணுவதிலும் இறங்கினார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எனக்கு தெளிவாக தெரியவில்லை. ஆரவாரம் அதிகமானதும் என் தாய் மேடையை விட்டு இறங்கி பின்னால் வந்தார். என் தாயின் தோழிகளுக்கு முன்னால் நான் வெளிப்படுத்தும் சில திறமைகளை நாடகத்தின் மேனேஜர் பார்த்திருக்கிறார். அவர் என்னை வற்புறுத்தி மேடைக்குக் கொண்டு போனார். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் சில வார்த்தைகளைச் சொல்லி என்னை தனியாக விட்டு விட்டு அவர் போய் விட்டார். அன்று புகழ் பெற்றிருந்த ஜாக்ஜான்ஸ் என்று ஆரம்பிக்கும் பாடலை இசைக் குழுவினரின் பங்களிப்புடன் நான் பாடினேன்.

பாதி பாடலைத்தான் நான் பாடியிருப்பேன்- மேடையில் நாணயங்கள் வந்து விழ ஆரம்பித்தன. அதைப் பார்த்த நான் பாட்டு பாடுவதை நிறுத்தி விட்டேன். நாணயங்களைப் பொறுக்கி எடுத்தால்தான் பாடலைத் தொடர்வேன் என்று நான் அறிவித்தேன். அதைக் கேட்டு அங்கு குழுமியிருந்தவர்கள் உரத்த குரலில் சிரிக்க ஆரம்பித்தார்கள். உடனே நாடகத்தின் மேனேஜர் ஒரு கைக்குட்டையுடன் வந்து நாணயங்களை அதில் எடுத்தார். அந்த நாணயங்களுடன் அவர் எங்கே ஓடி விடப் போகிறாரோ என்ற பயம் எனக்குள் உண்டானது. நான் அதை எனக்கு முன்னால் அரங்கில் உட்கார்ந்திருந்தவர்களிடம் கூறவும் செய்தேன். அதைக் கேட்டு அவர்கள் சிரித்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! நாணயங்களுடன் நடந்து சென்ற நாடகத்தின் மேனேஜருக்குப் பின்னால் ஓடிய என்னைப் பார்த்து அங்கிருந்தவர்கள் மீண்டும் சிரித்தார்கள். அந்த மனிதர் அந்த நாணயங்களை என் தாயின் கையில் கொடுத்த பிறகு, நான் மீண்டும் வந்து பாடலைத் தொடர்ந்தேன். சொந்த வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வுதான் அப்போது எனக்கு உண்டானது. நான் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் பேசினேன். நடனம் ஆடினேன். பல நடிகர்களும் நடிகைகளும் நடிப்பது மாதிரி நடித்துக் காட்டினேன். பிறகு என் தாய் பாடக் கூடிய ஐரிஷ் பாடலைப் பாடினேன். என் தாய் பாடியதையும் அவருடைய குரலில் பிசிறு உண்டானதையும் கள்ளங்கபடமே இல்லாமல் நான் நடித்துக் காட்டினேன். அதைப் பார்த்து அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் தலையே வெடிக்கிற அளவிற்கு சிரித்தார்கள். மேடையை நோக்கி மீண்டும் அவர்கள் நாணயங்களை எறிந்தார்கள். கடைசியில் என் தாய் வந்து என்னைத் தூக்கிக் கொண்டு போன போது, அரங்கம் முழுக்க பலத்த கைத்தட்டல் எழுந்தது. அந்த இரவு நாடக மேடையில் என் தாய்க்கு இறுதி நாளாக இருந்தது. என்னுடைய முதல் நாளும்.

விதி என் தாய் விஷயத்தில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டது. அவருக்கு பழைய குரல் மீண்டும் கிடைக்கவில்லை. நாட்கள் ஆக ஆக எங்களின் சூழ்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்தது. என் தாயின் கையில் மீதமிருந்த பணமும் நகைகளும் மறைந்தன. குரல் மீண்டும் சரியானால் அவற்றைத் திரும்பவும் சம்பாதித்து விட முடியும் என்ற எதிர்பார்ப்பில் பல பொருட்களையும் அவர் பணயம் வைத்தார். மூன்று அறைகளைக் கொண்ட வீட்டில் வாழ்ந்த நாங்கள் இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டிற்கும், பிறகு ஒரே ஒரு அறை உள்ள வீட்டிற்கும் மாறினோம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel