Lekha Books

A+ A A-

நான் நடிகன் ஆன கதை - Page 5

naan nadigan aana kathai

என் தாய் முழுமையான மத நம்பிக்கை கொண்ட பெண்ணாக மாறினார். பிரார்த்தனை மூலம் எல்லாம் சரியாகும் என்று அவர் நம்பினார். எல்லா நாட்களிலும் தேவாலயத்தைத் தேடிச் செல்வார். அதற்குப் பிறகு நாடக உலகைச் சேர்ந்த நண்பர்கள் யாரையும் நாங்கள் பார்க்கவில்லை. அந்த உலகம் ஒரு ஞாபகம் மட்டுமே என்பது மாதிரி ஆகிவிட்டது. முதலிலிருந்தே நாங்கள் மோசமான பொருளாதார நிலையில்தான் இருந்து வந்திருக்கிறோம் என்பதை என்னால் உணர முடிந்தது. நடிப்பு என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது என்ற காரணத்தால் என் தாய்க்கு ஒரு வேலை கிடைப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. நாடகங்களில் நடிப்பதற்குத் தேவைப்படும் ஆடைகளை என் தாயே தைத்துக் கொள்வார். அந்த அனுபவங்கள் காரணமாக தேவாலயங்களிலிருக்கும் அனாதைகளுக்கு ஆடைகள் தைத்து சிறிது பணம் சம்பாதிக்க என் தாயால் முடிந்தது. மூன்று பேர்கள் சாப்பிட்டு வாழ அந்தப் பணம் போதுமானதாக இல்லை. மது அருந்துவதன் காரணமாக என் தந்தையின் வருமானம் குறைவாக வந்ததால் வாரத்தில் எங்களுக்கு அவர் தந்து கொண்டிருந்த பத்து ஷில்லிங் கூட நிரந்தரமில்லை என்றாகிவிட்டது.

என் தாயின் கை வசமிருந்த எல்லா ஆடைகளும் கிட்டத்தட்ட விற்கப்பட்டு விட்டன. இனி மீதமென்றிருந்தது நாடக சாலையில் பயன்படுத்திய ஆடைகள் அடங்கிய ஒரு பெட்டி மட்டுமே. அவ்வப்போது அதிலிருந்து ஒவ்வொரு ஆடைகளையும் எடுத்து அணிந்து என் தாய் எங்களுக்கு முன்னால் பல்வேறு கதாபாத்திரங்களையும் நடித்துக் காட்டுவார். ஒரு நீதிபதியின் வேடமணிந்து தளர்ந்து போன குரலில் என் தாய் பாட்டு பாடும் காட்சியை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நாடகத்தின் மீது ஈடுபாடு கொண்ட ஒருவருக்கு மட்டுமே புரிகிற மாதிரி என் தாய் பல விஷயங்களையும் அப்போது விளக்கி கூறுவார்.

நாங்கள் ஒக்லே தெருவிலிருந்த ஒரே ஒரு அறையில் வசித்துக் கொண்டிருந்த காலமது. நான் காய்ச்சல் வந்து படுத்துக் கிடந்தேன். சிட்னி இரவு பள்ளிக் கூடத்திற்குப் போயிருந்தான். ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு ‘புதிய ஏற்பாடு’ நூலை எனக்குப் படித்துக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார் என் தாய். நான் கேட்டதிலேயே மிகவும் அருமையான பைபிள் விளக்கத்தை எனக்கு அளித்தவர் என் தாய்தான். இயேசுவை சிலுவையில் அறைந்ததைப் பற்றியும் இறுதி நிமிடங்களைப் பற்றியும் விளக்கி கூறியபோது என் தாயின் கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டது. கடைசி நிமிடங்களில் மரண வேதனையுடன் ‘என் தெய்வமே என் தெய்வமே, நீ ஏன் என்னை கை விட்டு விட்டாய்?’ என்று இயேசு உரத்த குரலில் கதறி அழுததை வாசித்தபோது, நாங்கள் இருவரும் அழுதுவிட்டோம். அப்போது என் தாய் சொன்னார்: ‘இயேசு எந்த அளவுக்கு மனிதத்தன்மை உள்ளவராக இருந்திருக்கிறார் என்பதை நாம் பார்க்கணும். நம்மை மாதிரியே அவரும் சந்தேகத்துக்கு அடிமையாகியிருக்கிறார்.’

அவை எல்லாவற்றையும் கேட்டு அன்று இரவு உயிரைத் துறந்து இயேசுவிற்கு அருகில் போக வேண்டுமென்று நான் நினைத்தேன். ‘நாம் இங்கே வாழ்ந்து நம்முடைய கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென்று இயேசு கூறியிருக்கிறார்’- என் தாய் சொன்னார்.

ஓக்லே தெருவிலிருந்த அந்த இருண்ட அறையில் உட்கார்ந்து கொண்டு இந்த உலகத்தில் இருப்பதிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த கருணையின் ஒளியைப் பற்றி என் தாய் எனக்கு கூறினார். அன்பு, கருணை, மனிதாபிமானம் என்ற மதிப்பு மிக்க, உயர்ந்த விஷயங்கள் நாடக அரங்குகளுக்கும், இலக்கியத்திற்கும் அளித்த அதே கொடையை எனக்கும் அவர் வழங்கினார்.

2

ங்களைப் போல கீழான சூழ்நிலையில் வாழும்போது பொதுவாகவே பேசக் கூடிய மொழியையும், உச்சரிப்பையும் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால், நாங்கள் மொழியைத் தெளிவாக பேச வேண்டுமென்ற விஷயத்தில் என் தாய் மிகவும் கண்டிப்புடன் இருந்தார். அவர் அவ்வப்போது நாங்கள் பேசக் கூடிய வார்த்தைகளைத் திருத்துவார்.

கடுமையான வறுமையில் உழன்று கொண்டிருந்தபோது, சரியான சிந்திக்கும் திறன் இல்லாததால் நாடகத் துறைக்கு மீண்டும் போகாமல் இருந்ததற்காக சில நேரங்களில் நான் என் தாயைக் குறை கூறுவேன். அப்போது அப்படிப்பட்ட வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கும் என்றும் பிரச்னைகள் நிறைந்ததாக இருக்குமென்றும் அந்தச் சூழ்நிலையில் நாம் கடவுளை மிகவும் எளிதில் மறந்து விடுவோம் என்றும் ஒரு புன்சிரிப்புடன் என் தாய் கூறுவார். அது ஒரு பக்கம் இருந்தாலும், நாடக சாலையைப் பற்றி ஏதாவது கூறிவிட்டால் போதும், என் தாய் தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்ட நிலைக்குப் போய் விடுவார். பழைய நினைவுகளில் சிறிது நேரம் மூழ்கியிருந்துவிட்டு, சிறிது நாட்களுக்கு என் தாய் தையல் வேலைகளில் மூழ்கிப் போய் அமைதியாகி விடுவார். அந்த மாய உலகத்திலிருந்து மிகவும் தூரத்தில் இருக்கிறோம் நாங்கள் என்பதை நினைத்து மனக் கவலையுடன் நானும் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து விடுவேன். சிறிது நேரம் சென்றதும் நான் உட்கார்ந்திருக்கும் நிலையைப் பார்த்து என் தாய் எனக்குப் பக்கத்தில் வந்து எனக்கு ஆறுதல் கூறுவார்.

பனிக்காலம் ஆரம்பமானது. சிட்னிக்கு ஆடைகள் முற்றிலும் இல்லை என்ற நிலை உண்டானது. தன்னிடமிருந்த ஒரு பழைய வெல்வெட் ஆடையை வைத்து என் தாய் சிட்னிக்கு ஒரு கோட் உண்டாக்கினார். அதன் கைகளில் சிவப்பும் கறுப்பும் நீளமான கோடுகளும் இருந்தன. தோள் பகுதியில் இருந்த சுருக்கங்கள் தெரியாமல் இருக்க என் தாய் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதை அணிவதற்கு தந்தபோது சிட்னி மன வருத்தப்பட்டவாறு சொன்னான்: ‘மற்ற பையன்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க?’

‘மத்தவங்க என்ன நினைச்சாலும் அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? அது மட்டுமில்லை. இது ரொம்பவும் வித்தியாசமா வேற இருக்கு...’- இதுதான் அதற்கு என் தாய் சொன்ன பதில். கடைசியில் சிட்னி அதை அணிந்து கொண்டுதான் பள்ளிக் கூடத்திற்குச் சென்றான். அவனுடைய ஷூக்களும் என் தாய்க்குச் சொந்தமானவைதான். பள்ளிக் கூடத்திற்குப் போனதும் மாணவர்கள் எல்லோரும் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டு ஆரவாரம் செய்தார்கள். ‘ஜோசஃப்பும் அவனுடைய பல வர்ண ஆடையும்’ என்று கூறியவாறு அவர்கள் உரத்த குரலில் கத்தினார்கள். என் தாய்க்குச் சொந்தமான இறுக்கமான காலுறையை வெட்டி ஸ்டாக்கிங்க்ஸ் ஆக மாற்றி அணிந்து நடந்த என்னை ‘சர் ஃப்ரான்சிஸ் ட்ரேக்’ என்று மாணவர்கள் கிண்டலுடன் அழைத்தார்கள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel