Lekha Books

A+ A A-

நான் நடிகன் ஆன கதை - Page 19

naan nadigan aana kathai

வீட்டிற்குத் திரும்ப வந்தபோது, நாங்கள் பசியின் காரணமாக மிகவும் தளர்ந்து போயிருந்தோம். கொஞ்சம் மாட்டு மாமிசத்தைத் தவிர, அங்கு வேறு எதுவும் இல்லை. என் தாயின் கையில் ஒரு பெனி கூட இல்லை. இருந்த இரண்டு பெனிகளை சிட்னிக்கு மதிய உணவிற்காக கொடுத்திருந்தார். என் தந்தையின் உடல் நலக் குறைவு, மருத்துவமனைக்குப் போய் வந்தது ஆகிய காரணங்களால் என் தாயால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. சிட்னியின் அந்த வார சம்பளம் முழுவதையும் செலவழித்தாகிவிட்டது. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அந்த நேரத்தில் பழைய சாமான்கள் வாங்கக் கூடிய ஒரு மனிதன் அந்த வழியே வந்தான். பழைய ஒரு மண்ணெண்ணெய் அடுப்பை நாங்கள் அரை பெனிக்கு அவனுக்கு விற்றோம். அரை பெனிக்கு ரொட்டி வாங்கி, மாட்டு மாமிசத்தைச் சேர்த்து சாப்பிட்டோம்.

என் தந்தையின் சட்ட ரீதியான மனைவி என் தாய்தான். அதனால் மருத்துவமனையிலிருந்த என் தந்தையின் பொருட்களை வாங்குவதற்காக மறுநாள் என் தாயை மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தார்கள். இரத்தத் துளிகள் விழுந்திருந்த கருப்பு நிற சூட், உள்ளாடை, சட்டை, கருப்பு நிற டை, பழைய ஒரு கவுன், வீட்டில் பயன்படுத்தும் செருப்பு- இவைதான் என் தந்தையின் சொத்துக்கள். வீட்டுக்கு வந்தவுடன் அந்தச் செருப்புகளை என் தாய் வெறுமனே குடைந்தார். திடீரென்று அதற்குள்ளிருந்து அரை டாலர் கீழே விழுந்தது. உண்மையாகவே கடவுள்தான் அதை அனுப்பியிருக்க வேண்டும்!

வாரக் கணக்கில் கையில் ஒரு துக்க சின்னத்தைக் கட்டிக் கொண்டு நான் நடந்து திரிந்தேன். ஒரு சனிக்கிழமை மாலை நேரம். நான் கொஞ்சம் பூக்களை விற்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றேன். அந்த துக்கச் சின்னம் என் மலர் விற்பனைக்கு மிகவும் உதவியாக இருந்தது. என் தாயிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டு நான் ஒரு ஷில்லிங் கடன் வாங்கினேன். அதைக் கொண்டு ஒரு குலை பூக்களை வாங்கி, ஒரு பெனிக்கு விற்கக் கூடிய சிறு சிறு கட்டுகளாக ஆக்கினேன். எல்லாம் விற்று முடிந்தபோது நூறு சதவிகிதம் லாபமாகக் கிடைத்தது.

உணவு விடுதிகளுக்குள் நுழைந்து எதிர்பார்ப்புடன் பெண்களிடம் மலர்களுடன் போய் நிற்கும்போது, என் கையிலிருந்த கட்டைப் பார்த்து அவர்கள் கேட்பார்கள்: ‘யார் மகனே, இறந்தது?’

‘என் தந்தை’- நான் குரலைத் தாழ்த்திக் கொண்டு முணுமுணுப்பேன். அவர்கள் அப்போது பரிசாக எனக்கு ஏதாவது தருவார்கள். சனிக்கிழமைகளில் நான் மலர் வியாபாரம் செய்வதை வாடிக்கையாக்கி விட்டிருந்தேன். ஒரு நாள் மாலை நேரத்தில் நான் வீட்டிற்கு வந்தபோது, என் கையில் ஐந்து ஷில்லிங்கிற்கும் அதிகமாக இருந்தது. அதைப் பார்த்து என் தாய் ஆச்சரியப்பட்டார்.

ஒருமுறை மது கடைக்குள் பூ விற்பதற்காக நான் சென்று வெளியே வருவதை என் தாய் பார்த்துவிட்டார். அது என் தாயின் கிறிஸ்தவ தத்துவங்களுக்கு எதிரானதாக இருந்தது. ‘குடிப் பழக்கம்தான் உன் தந்தையை அழிச்சது. அப்படி வர்ற காசு நம்ம கஷ்டத்தை மேலும் அதிகமாக்கவே செய்யும்’ என்றார் என் தாய். அதற்குப் பிறகு ஒரு நாள் கூட பூ வியாபாரம் செய்ய என் தாய் என்னை அனுமதிக்கவில்லை.

எனக்குள் ஒரு வியாபாரியின் பலமான அம்சம் இருந்தது. நான் எப்போதும் ஒவ்வொரு வியாபார தந்திரங்களைப் பற்றியும் மனதில் அசைபோட்டுக் கொண்டே இருப்பேன். காலியாக இருக்கும் கடைகளைப் பார்த்தால் அங்கு நான் என்ன வியாபாரம் செய்ய முடியும் என்று யோசிப்பேன். மீன், பலகாரங்கள், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களைத்தான் நான் வியாபாரத்திற்காக மனதில் தேர்வு செய்து வைத்திருந்தேன். எனக்கு தேவையாக இருந்தது வியாபாரம் ஆரம்பிப்பதற்கான மூலதனம் மட்டுமே. ஆனால், அது எங்கே கிடைக்கும்? இறுதியில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு ஒரு வேலையைத் தேட நான் என் தாயிடம் அனுமதி பெற்றேன்.

நான் பல வகைப்பட்ட வேலைகளையும் செய்து அவற்றின் மூலம் ஏராளமான அனுபவங்களைப் பெற்ற ஒருவனாக ஆனேன். ஒரு மெழுகுவர்த்தி விற்பனை செய்யும் மனிதனுக்காக செய்திகளைக் கொண்டு போய் சேர்க்கும் வேலையை நான் முதலில் செய்தேன். பிறகு த்ரோமார்ட்டன் அவென்யூவிலிருந்த ஒரு டாக்டரிடம் பணி புரிந்தேன். முன்னால் சிட்னி அங்கு வேலை செய்தான். வாரத்திற்கு பன்னிரெண்டு ஷில்லிங் வருமானம் வந்து கொண்டிருந்த லாபமான வேலையாக அது இருந்தது. சோதனை செய்கிற நேரத்தில் ரிஸப்ஷனிஸ்ட்டாகவும், எல்லோரும் போன பிறகு சுத்திகரிப்பு செய்யும் மனிதனாகவும் நான் அங்கு வேலை செய்தேன். ரிஸப்ஷனிஸ்ட் வேலையை நான் மிகவும் நன்றாகச் செய்தேன். அங்கு காத்திருக்கும் நோயாளிகள் எல்லோரையும் மகிழ்ச்சியுடன் இருக்கும்படி செய்தேன். ஆனால், அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் வேலை எனக்கு சிறிது கூட ஏற்றதாக இல்லை. சிட்னி என்னைவிட பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிறுநீர் உள்ள புட்டிகளை காலி செய்து கழுவி வைப்பது என்பதை நான் ஒரு பிரச்னையாக எடுக்கவில்லை. ஆனால், பத்தடி உயரம் கொண்ட ஜன்னல்களைத் துடைத்து சுத்தம் செய்வது என்பது மிகவும் கஷ்டமான ஒரு வேலையாக இருந்தது. அதனால் அலுவலகம் படிப்படியாக தூசு உள்ள ஒன்றாக ஆகிவிட்டது. கடைசியில் அந்த வேலையைச் செய்யுமளவிற்கு எனக்கு வயது வரவில்லை என்று சொல்லி அவர்கள் என்னை வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள்.

அந்த தகவலைக் கேட்டு நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். என் அழுகையைப் பார்த்து டாக்டர் கின்ஸி டெய்லருக்கு என் மீது இரக்கம் தோன்றியது. என்னைத் தன்னுடைய வீட்டில் வேலைக்காரனாக ஆக்குவதாக அவர் சொன்னதால் நான் அமைதியானேன். அவருடைய மனைவி மிகவும் வசதி படைத்தவள். அவர்களின் ஆடம்பரமான மாளிகையில் வேலைக்காரனாக ஆவது என்பது மதிப்புமிக்க ஒரு விஷயம்தான். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அங்கு வேலை பார்ப்பது சந்தோஷத்தைத் தரக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அங்கு வேலை செய்த பணியாட்கள் எல்லோரும் என் மீது நிறைந்த அன்பு செலுத்தினார்கள். அவர்கள் என்னை ஒரு குழந்தையைப் போல எண்ணினார்கள். இரவு தூங்கச் செல்லும்போது, ‘இனிய இரவு’ என்று கூறி எல்லோரும் என்னை முத்தமிடுவார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel