Lekha Books

A+ A A-

நான் நடிகன் ஆன கதை - Page 17

naan nadigan aana kathai

பதினான்கு வயது ஆன சிட்னி இப்போது ஸ்ட்ரான்ட் தபால் அலுவலகத்தில் தந்தி ஊழியராக வேலை செய்து கொண்டிருந்தான். சிட்னியின் வருமானமும் என் தாயின் தையல் வேலைகள் மூலம் கிடைத்த வருமானமும் கொண்டு நாங்கள் ஏதோ வாழ்ந்து கொண்டிருந்தோம். ஒரு கடையிலிருந்து வெட்டிக் கொடுத்திருந்த ரவிக்கைகளைத்தான் என் தாய் தைத்தார். ஒரு டஜன் ரவிக்கைகளுக்கு ஒரு ஷில்லிங் ஆறு பென்ஸ் கூலியாக கிடைத்தது. மேலும் அதிகமாக ரவிக்கைகள் தைப்பதற்காக என் தாய் சிறிது கூட ஓய்வு என்பது இல்லாமல் வேலை செய்தார். வாரத்திற்கு ஐம்பத்து நான்கு ரவிக்கைகள் கூட அவர் தைத்திருக்கிறார்.

என் தாய் வேலை செய்வதைப் பார்த்தவாறு சில இரவு வேளைகளில் நான் கண் விழித்துக் கொண்டு படுத்திருப்பேன். தையல் இயந்திரத்தை நோக்கி குனிந்து கொண்டு, களைப்பால் உதடுகள் சற்று பிரிந்திருக்க, மண்ணெண்ணெய் விளக்கொளியில் மிகவும் கவனம் செலுத்தி துணி தைத்துக் கொண்டிருக்கும் என் தாயைப் பார்த்துக் கொண்டே நான் தூங்கி விடுவேன். தவணை முறையில் பணம் செலுத்த வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்ததால்தான் என் தாய் இப்படி கஷ்டப்பட வேண்டி வந்தது.

இந்தச் சூழ்நிலையில் எங்களுக்கு இன்னொரு இக்கட்டான கட்டம் உண்டானது. சிட்னிக்கு ஒரு புதிய சூட் தேவைப்பட்டது. ஞாயிற்றுக் கிழமையையும் சேர்த்து எல்லா நாட்களிலும் அவன் தந்தி அலுவலகத்தின் சீருடையைத்தான் அணிந்து கொண்டிருந்தான். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அவன் அந்த சீருடையை அணிந்து சென்றபோது அவனுடைய நண்பர்கள் அவனைக் கிண்டல் பண்ணினார்கள். அவர்கள் செய்த கேலிகளைப் பொறுக்க முடியாமல் வார இறுதிகளில் வெளியே செல்லாமல் அவன் வருத்தத்துடன் வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்திருந்தான். என் தாய் எப்படியோ பதினெட்டு ஷில்லிங் உண்டாக்கி ஒரு புதிய சூட் வாங்கிக் கொடுக்கும் வரையில் இதுதான் எங்களின் நிலைமையாக இருந்தது. அது எங்களின் பொருளாதார நிலைமையை மிகவும் மோசமாக ஆக்கியது. இறுதியில் என் தாய் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தார். திங்கட் கிழமை சிட்னி சீருடை அணிந்து வேலைக்குப் போய்விட்டால் புதிதாக உண்டாக்கிய நீல நிற சூட்டை என் தாய் ஒரு கடையில் கொண்டு போய் அடகு வைப்பார். அதற்கு ஏழு ஷில்லிங் கிடைக்கும். அதிகமாக வேலை செய்து எப்படியாவது பணம் உண்டாக்கி சனிக்கிழமை அதை அவர் திரும்ப வாங்கிவிடுவார். ஞாயிற்றுக் கிழமை சிட்னி அதை பயன்படுத்திய பிறகு மீண்டும் திங்கட் கிழமை அதைக் கொண்டு போய் என் தாய் பணயம் வைப்பார். இந்த வழக்கம் ஒரு வருட காலம் விடாமல் தொடர்ந்தது. இறுதியில் ஒரு திங்கட் கிழமை கடைக்காரன் நாங்களே அதிர்ந்து போகிற அளவிற்கு அந்த தகவலைச் சொன்னான்:

‘மன்னிக்கணும், திருமதி. சாப்ளின். இனிமேல் இந்த ஆடைக்கு ஏழு ஷில்லிங் தர முடியாது. இந்த ட்ரவுசர் நூல்கள் பிரிஞ்சு நாசமாயிடுச்சு.’

என் தாய் அந்த ஆளிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்து பார்த்தும் கோட்டுக்கும் வெயிஸ்ட் கோட்டுக்கும் சேர்த்து அதிக பட்சம் மூன்று ஷில்லிங்குகள்தான் தர முடியும் என்று அவன் உறுதியான குரலில் கூறி விட்டான்.

அதைக் கேட்டு அழுது கொண்டே என் தாய் வீட்டிற்கு திரும்பி வந்தார். ஒரு வார காலம் வாழ்வதற்கு அந்த ஏழு ஷில்லிங் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

என்னுடைய ஆடைகளின் நிலைமையும் அப்படியொன்றும் சிறப்பாக இல்லை. லங்காஷயர் சங்கத்தில் இருக்கும்போது அணிந்திருந்த சூட்டின் முழங்கையிலும் ட்ரவுசரிலும் ஷூவிலும் எல்லா இடங்களிலும் துண்டு துணிகள் வைத்து தைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஒரு நாள் ஸ்டாக்வெல்லிலிருந்த பக்கத்து வீட்டு சிறுவனை நான் கென்னிங்டன் சாலையில் பார்த்தேன். என்னுடைய தோற்றத்தைப் பார்த்து அவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான். அதிகமாக எதுவும் பேசாமல் நான் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு பிரிந்து வந்து விட்டேன்.

ஒரு நாள் நானும் என் தாயும் ப்ராம்ப்டன் மருத்துவமனைக்குப் போய் விட்டு திரும்பி வரும்போது ஒரு சம்பவத்தைப் பார்க்க நேர்ந்தது. தலைமுடியை முழுமையாக கத்தரித்து, அவலட்சணமான தோற்றத்துடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சுற்றிலும் நின்று கொண்டு சில சிறுவர்கள் அவளைப் பார்த்து என்னவோ சொல்லி கேலி செய்து கொண்டு, அவளை ஒவ்வொருவரும் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். என் தாய் அதைப் பார்த்து வேகமாகச் சென்று சிறுவர்களைத் தடுத்தார். அந்த அப்பிராணி பெண் பயந்து நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். திடீரென்று அவள் என் தாயை அடையாளம் தெரிந்து கொண்டதைப் போல ‘லில்’ என்று அழைத்தாள். என் தாய்க்கு நாடக மேடையில் வழங்கிய பெயர் அது. ‘உனக்கு நான் யார்னு தெரியலையா? நான்தான் ஈவா லெஸ்ட்டாக்’ என்றாள் அவள்.

அந்த நிமிடமே என் தாய் அவளை அடையாளம் தெரிந்து கொண்டார். முன்பு அவள் என் தாயுடன் நாடகங்களில் நடித்திருக்கிறாள். என்னைக் சுட்டிக் காட்டியவாறு என் தாய் கேட்டார்: ‘சின்ன சார்லியை ஞாபகத்துல இருக்குதா?’

‘ஞாபகத்துல இருக்கான்னா கேக்குற? நல்ல கதைதான். இவனை எப்படி மறக்க முடியும்? சின்ன பிள்ளையா இருந்தப்போ இவனை நான் எத்தனை தடவை தூக்கி நடந்திருக்கேன்!’

அழுக்கு பிடித்த, வெறுப்பு உண்டாக்கக் கூடிய தோற்றத்துடன் இருந்த அந்தப் பெண்ணுடன் பேசியவாறு நாங்கள் நடந்து செல்வதை ஆட்கள் வெறித்து பார்த்தார்கள்.

அழகும் சுறுசுறுப்பும் சேர்ந்து இருந்ததால் ‘குதிரைக்குட்டி’ என்றுதான் ஈவாலெஸ்ட்டாக் நாடக உலகில் எல்லோராலும் அறியப்பட்டாள். உடல் நலம்  பாதிக்கப்பட்டு சில நாட்கள் மருத்துவமனையில் இருந்ததாக அந்தப் பெண் என் தாயிடம் சொன்னாள்.  அங்கிருந்து வெளியே வந்தவுடன் கடைகளின் திண்ணைகளிலும் கிறிஸ்தவ பாதுகாப்பு இயக்கத்தின் கருணை இல்லத்திலும் அவள் தன் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறாள்.

என் தாய் அவளை ஒரு பொது குளியலறையில் குளிப்பாட்டினார். பிறகு நானே நடுங்கிப் போகிற அளவிற்கு அவளை எங்களின் சிறிய அறைக்கு என் தாய் அழைத்துக் கொண்டு வந்தார். அவளின் இப்போதைய நிலைமைக்குக் காரணம் நோய் மட்டும்தானா என்பது தெரியாது. எது எப்படி இருந்தாலும் அவள் சிட்னியின் படுக்கையில் படுத்து உறங்கியது சற்று ஜீரணிக்க முடியாத விஷயம் என்பதென்னவோ உண்மை. என் தாய் தன்னுயை மோசமில்லாத ஒரு ஆடையை அவளுக்குக் கொடுத்திருந்தார். மூன்று நாட்கள் எங்களுடன் தங்கியிருந்து விட்டுத்தான் அவள் வெளியேறினாள். ‘குதிரைக் குட்டி’யான ஈவாலெஸ்ட்டாக்கை அதற்குப் பிறகு நாங்கள் பார்க்கவேயில்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel