Lekha Books

A+ A A-

ஹோ சி மின் சிறை டைரி - Page 2

ho cie minh's prison diary

டயரியின் முதல் பக்கம்

கவிதை எழுதுவது என் பழக்கங்களில் ஒன்றில்லை.

ஆனால், இந்த சிறைக்குள் நான் வேறு என்ன செய்வது?

இந்த சிறையிலிருக்கும் நாட்களை நான்

கவிதைகள் எழுதி கழிப்பேன்.

அவற்றைப் பாடிப் பாடி விடுதலைக்கான நாள்

நெருங்கி நெருங்கி வரும்.

 

*****

 

செல்வ தெருவில் கைது

செல்வத்தின், புகழின் தெருவில்

என் பயணம் தாமதமாகும் வண்ணம்

அவர்கள் என்மீது அவமரியாதை கூறினார்கள்.

தெளிந்த மனசாட்சி உள்ள நம்பக்கூடிய மனிதன் நான்.

எனினும், காரணம் எதுவுமே இல்லாமல்

அவர்கள் என்னை ஒற்றன் என குற்றம் சாட்டினார்கள்.

 

*****

 

த்ஸிங்ஸி மாவட்ட சிறையில்

இருண்ட அறையில் ஏற்கெனவே இருப்பவர்கள்

புதிய விருந்தாளிகளை வரவேற்கிறார்கள்.

வானத்தில் வெள்ளிமேகங்கள்

கார்முகில்களை துரத்தியடிக்கின்றன.

இரண்டும் அதோ பார்வைக்கப்பால் போய் மறைந்துவிட்டன.

பூமியில் சுதந்திரமாக திரியும் மக்களை சிறையறைகளுக்குள்

தள்ளி விடுகிறார்கள்.

 

*****

 

வாழ்க்கையின் பாதை கடுமையானது

1

செங்குத்தான மலைகளுக்கு மேலே

உயர்ந்த மலைச்சிகரங்களின் உச்சியில் ஏறி விட்ட நான்

சமவெளிகளில் பெரிய ஆபத்துகளை

எப்படி எதிர்பார்ப்பேன்?

மலைகளில் நான் புலிகளுடன் சண்டை போட்டு

காயமின்றி வெளியே வந்தேன்.

சமவெளிகளில் நான் மனிதர்களிடம் மோதி

சிறையறைக்குள் எறியப் பட்டேன்.

2

ஒரு முக்கிய மனிதரைப் பார்க்க சீனாவிற்குப் போனபோது

நான் வியட்நாமின் ஆளாக இருந்தேன்.

அமைதியாக இருந்த பாதையில் திடீரென்று கடுமையான காற்று வீசியது.

ஒரு மதிப்பு மிக்க விருந்தாளியாக

என்னை சிறைக்குள் தள்ளி விட்டார்கள்.

3

குற்ற உணர்வு இல்லாத, ஒழுக்கமும் நேர்மையும் உள்ள மனிதன் நான்.

எனினும் என்னை ஒரு சீன ஒற்றன் என்று பழி சுமத்திவிட்டார்கள்.

அதனால், வாழ்க்கை சுகமான ஒன்றல்ல.

இப்போது நிகழ்காலம் எழுந்து நிற்கும் முட்களுடன்

சிரமங்களைச் சந்திக்கிறது.

 

*****

 

அதிகாலை

1

எல்லா அதிகாலைகளிலும்

சூரியன் சுவருக்கு மேலே உயர்ந்து வந்து

மூடிய வாசற் கதவுக்கு நேராக

வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

ஆனால், வாசற் கதவு மூடியேதான் இருக்கிறது.

சிறை அறைகள் இருளில் மூடிக் கிடக்கின்றன.

எனினும், வெளியே உதயசூரியன் பிரகாசித்து நிற்பது

எங்களுக்கு நன்றாகவே தெரிகிறது.

2

கண் விழித்த பின் எல்லோரும் பேன் வேட்டையில் இறங்கி விடுகிறார்கள்.

எட்டு மணிக்கு காலை உணவுக்காக மணி அடிக்கிறார்கள்.

வாருங்கள், போகலாம்... எதுவும் பேசாமல் காலை உணவில் உட்காருவோம்.

நம்முடைய பொறுமைகள் வீணாகாது.

நல்ல காலம் நிச்சயமாக வரும்.

 

*****

 

மதியம்

சிறையறைக்குள் மதிய தூக்கம் எத்தனை சுகமானது!

மணிக் கணக்கில் அமைதியான தூக்கம்

எங்களை எங்கோ கொண்டு செல்கிறது.

ட்ராகனின் முதுகில் ஏறி சொர்க்கத்திற்கு

சவாரி செய்வது போல்

நான் கனவு காண்கிறேன்...

கண் விழிக்கும்போது, பயணத்தை முடிக்காமலே

நான் திரும்பவும்

சிறைக்குள் எறியப் படுகிறேன்.

 

*****

 

பிற்பகல்

மணி இரண்டு.

நல்ல காற்று வருவதற்காக சிறையறையின்

கதவு திறக்கப்படுகிறது.

வானத்தை ஒரு தடவை பார்ப்பதற்காக

எல்லோரும் தலைகளை உயர்த்துகிறார்கள்.

விடுதலையின் வானத்தைப் பார்ப்பதற்காக ஏங்கும்

சுதந்திர ஆத்மாக்களே,

உங்களுக்குத் தெரியுமா,

உங்களின் சொந்த இனம் சிறையறைக்குக்குள் தளர்ந்து விழுவது!

 

*****

 

மாலை

உணவு முடியும்போது சூரியன் மேற்கில் இருக்கிறது.

அப்போது எல்லா மூலைகளிலிருந்தும்

இசையும் நாடொடிப் பாடல்களும் திடீரென்று கிளம்பி வருகின்றன.

பழைய த்ஸிங்ஸி சிறை ஒரு கலை மையமாக வடிவமெடுக்கிறது.

 

*****

 

சிறை உணவு

ஒவ்வொரு உணவும் கறி இல்லாமல் உப்பு இல்லாமல்

ஒரு உருண்டை கோணி அரிசிச் சோறு மட்டும்.

வெளியிலிருந்து உணவு கிடைப்பவர்கள்

சில நேரங்களில் வயிறு நிறைய உண்ணலாம்.

ஆனால், நாங்கள் வெளியிலிருந்து எந்த உதவியும் இல்லாமல்

பட்டினியில் கிடக்கிறோம்.

 

*****

 

கைதியின் புல்லாங்குழல்

திடீரென்று ஒரு புல்லாங்குழல் இதயத்தைத் தொடும் ஒரு இசையைப் பிறப்பிக்கிறது.

வேதனையுடன் பாடல் ஒலிக்கிறது.

அதன் ராகம் ஒரு அழுகை.

ஆயிரம் மைல்களுக்கப்பால், மலைகளுக்கும் நதிகளுக்கும் அப்பால்

பயணம் சிரமங்கள் நிறைந்த துயரம்.

யாரோ திரும்பி வருவதை உற்று பார்ப்பதற்காக

ஏதோ தூர கோபுரத்திற்கு

ஒரு பெண் ஏறிச் செல்வதைப் பார்ப்பதைப் போல.

 

*****

 

சங்கிலிகள்

1

பிசாசைப் போல பசியில் திறந்த வாயுடன்

ஒவ்வொரு இரவிலும் சங்கிலிகள் மனிதப் பாதங்களை விழுங்குகின்றன.

அவற்றின் தாடை எலும்புகள் சிறைக் கைதியின்

வலது காலில் இறுக பிடிக்கின்றன.

இடது காலுக்கு மட்டுமே மடக்கவும் நிமிரவும் சுதந்திரமிருக்கிறது.

2

எனினும் இந்த பூமியில் அதைவிட வினோதமான ஒன்றுண்டு.

கால்களில் சங்கிலி இடுவதற்காக ஆட்கள் அங்கு ஓடிச் செல்கின்றனர்.

ஒருமுறை தன்னைத் தானே சங்கிலியில் பூட்டிக் கொண்டால்

அவர்கள் நிம்மதியாக உறங்கலாம்.

இல்லாவிட்டால் அவர்களுக்கு தலை சாய்க்க இடம் இருக்காது.

 

*****

 

சதுரங்க விளையாட்டு

1

நேரத்தைப் போக்க நாங்கள் சதுரங்கம் விளையாடுகிறோம்

ஆயிரமாயிரம் குதிரைகளும் காலாட்களும்

ஒருவரையொருவர் பின் தொடர்கின்றனர்.

திடீரென்று செயலில் இறங்குகின்றனர்.

தாக்குவதிலும் பின் வாங்குவதிலும்

சாமர்த்தியமும் கால்வேகமும் எங்களுக்கு அதிக பலத்தைத் தருகின்றன.

2

கண்கள் முன்னாலிருக்கும் தூரத்தைப் பார்க்க வேண்டும்.

சிந்தனைகள் ஆழத்தில் யோசித்து உருவாக்கப்பட வேண்டும்.

போர் புரிதலில் தைரியசாலியாக இருக்கவேண்டும்.

இடைவிடாமல் தொடர வேண்டும்.

நினைத்தது தவறிப் போனால் இரண்டு ரதங்கள் வீண்.

சரியான நிமிடம் வந்தால் ஒரே ஒரு பந்தயத்திலும் வெற்றி பெறலாம்.

3

இரு பக்கங்களிலும் அணிகள் சமபலம் கொண்டவை.

எனினும் வெற்றி ஒரு பக்கத்திற்கே கிடைக்கும்.

ஆக்கிரமியுங்கள், பின் செல்லுங்கள்- தவறு உண்டாகாத தந்திரத்துடன்.

அப்போது நீங்கள் மிகப் பெரிய படைத் தலைவன் ஆகலாம்.

 

*****


நிலவு

கைதிகளுக்கு மது இல்லை, மலர்கள் இல்லை.

எனினும் எப்படி நாங்கள் இரவை இனிமையாக கொண்டாடுவோம்?

நான் கதவு ஓட்டை வழியாக நிலவை உற்று பார்க்கிறேன்.

கதவு ஓட்டை வழியாக நிலவு கவிஞனைப் பார்த்து புன்னகைக்கிறது.

 

*****

 

நீருக்கு ரேஷன்

எங்கள் ஒவ்வொருவருக்கும் அரைப்புட்டி நீர் ரேஷன்.

முகம் கழுவலாம். இல்லாவிட்டால் தேநீர் தயாரிக்கலாம் - விருப்பம்போல.

முகம் கழுவ வேண்டுமெனில் தேநீர் வேண்டாமென்று முடிவெடுக்க வேண்டும்.

தேநீர் வேண்டுமெனில், முகம் கழுவாமல் இருக்க வேண்டும்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel