Lekha Books

A+ A A-

ஹோ சி மின் சிறை டைரி - Page 5

ho cie minh's prison diary

உறக்கமில்லாத இரவு

முதல் யாமம் கடந்து செல்கிறது... இரண்டாம் யாமம்... மூன்றாம் யாமம்

நான் திரும்பியும் புரண்டும் படுக்கிறேன்,

எழுந்து நடக்கிறேன், தூக்கம் வரவில்லை.

நான்கு... ஐந்து... கண்களைச் சிறிதுதான் மூடியிருப்பேன்

ஐந்து முனையுள்ள நட்சத்திரம் கனவுகளில் மின்னி ஒளிர்கிறது.

 

*****

 

நண்பனின் நினைவு

அன்று நீ என்னுடன் சேர்ந்து நதிக்கரை வரை வந்தாய்.

‘நீ என்று திரும்புவாய்?’என்று நீ கேட்டாய்.

‘புது விளைச்சல் பழுத்து ஆடும்போது’ என்று நான் சொன்னேன்.

ஆனால், விளைச்சல் அறுவடையாகி எவ்வளவோ நாட்களாகி விட்டன.

நான் இப்போதும் அன்னிய நாட்டின் சிறைக்குள் இருக்கிறேன்.

சிறை நண்பனுக்காக வேண்டுகோள்

ஒரே படகில் செல்பவர்கள்

ஒருவருக்கொருவர் உதவ வேண்டி வரும்.

உங்களுக்காக இதோ நான் இந்த வேண்டுகோளை எழுதுகிறேன்.

சரியென்று கருதப்படும் வார்த்தைகளை எடுத்து பயன்படுத்துகிறேன்.

‘அதனால் மேலிடத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்து...’

இப்படி இப்படி.

இப்படிப்பட்ட உத்திகள் எனக்கு பழக்கமில்லை.

எனினும், வேலையைச் சரியாக செய்து முடிக்கும்போது நீங்கள் காட்டும் நன்றி!

 

*****

 

சொறி

சிவப்பு நீல சொறி படர்ந்த நாங்கள்

ஜரிகை பட்டு மூடியதைப் போல.

சிதார் வாசிப்பதைப் போல சொறிவது தொடர்ந்து நடக்கிறது.

நாங்கள் இங்கு சிறப்பு விருந்தாளிகள்.

ஒரே மொழியில் நாங்கள் ஒன்றாகப் பாடுகிறோம்.

 

*****

 

அரிசி பொடியாவது

உலக்கைக்குக் கீழே அரிசியின் துன்பம் கடினம்தான்

எனினும், பொடியாகி முடியும்போது

அது பஞ்சைப் போல வெள்ளையாக வெளியே வருகிறது.

பூமியில் மனிதர்களின் விஷயமும் அதைப் போலத்தான்.

துன்பமென்னும் உரல் அவர்களை

மாணிக்கக் கல்லாக ஒளிர வைக்கிறது.

 

*****

 

நவம்பர் பதினொன்று

1

முன்பெல்லாம் நவம்பர் பதினொன்று வரும்போது

ஐரோப்பா முழுவதும் முதல் உலக போர் முடிவு

கொண்டாடப்படும்.

இன்று பூ கண்டங்கள் ஐந்திலும்

குருதி கொட்டும் போர்கள் நடக்கின்றன.

முதல் குற்றவாளிகள் நாஸிகள்தான்.

2

சைனாவின் பகைப் போர் தொடங்கி வருடம் ஆறாகிறது.

அவளுடைய வீரச்செயல்கள் உலகமெங்கும் பரவியிருக்கிறது.

வெற்றி அவளின் கைப்பிடியில் இருக்கிறது.

எனினும் எதிர் தாக்குதல் தொடர முயற்சி இனியும் வேண்டும்.

3

ஆசியா முழுவதும் ஜப்பானுக்கெதிரான கொடிகள் பறக்கின்றன.

அவை அனைத்தும் ஒரே மாதிரி இல்லை. பெரியவை உண்டு.

சிறியவை உண்டு.

நமக்கு பெரிய கொடிகள் வேண்டும்.

அதே நேரத்தில், நமக்கு சிறிய கொடிகளும் வேண்டும்.

 

*****

 

விமான தாக்குதலைப் பற்றி முன்னறிவிப்பு

எதிரி விமானங்கள் வானத்தில் சீறி நெருங்குகின்றன.

மக்கள் அனைவரும் அபயம் தேடி ஓடுகிறார்கள். இப்போது இடம் காலி.

விமான தாக்குதலையொட்டி எங்களை வெளியே விடுகிறார்கள்.

விமானங்கள் தாக்கினால் என்ன,

சிறைக்கு வெளியே நாங்கள் சந்தோஷப்படுகிறோம்.

 

*****

 

சத்திரம்

சட்டப்படி சிறையில் புதிய விருந்தாளிகள்

ஓடைக்கு அருகில் தூங்க வேண்டும்.

யாருக்காவது இரவில் சுகமாக உறங்க வேண்டுமென்ற

கட்டாயம் இருந்தால்

ரொக்கப் பணம் முன்கூட்டியே தர வேண்டும்.

 

*****

 

இளம் வெயில்

அதிகாலை வேளையில் இளம் வெயில் சிறைக்குள் கடந்து வருகிறது.

அது புகை படலத்தை இல்லாமற் செய்கிறது.

மூடு பனியைப் போகச் செய்கிறது.

உயிரின் மூச்சு பிரபஞ்சம் முழுவதும் நிறைகிறது.

கைதிகளின் முகங்கள் புன்னகையில் ஒளிர்கிறது.

 

*****

 

வாக் லீலை

1

‘சிறை’என்பதற்கான ஓவிய எழுத்திலிருந்து

‘மனிதன்’என்பதற்கான எழுத்தை எடுத்து விடுங்கள்.

‘செய’லின் சின்னத்தை அதில் சேருங்கள்-

‘அரசு’க்கான வார்த்தையாக.

‘துரதிர்ஷ்ட’த்தின் தலையை எடுத்து மாற்றினால்

‘நம்பிக்கை’ஆகி விடும்.

‘மனித’னுடன் கவலையைச் சேர்த்தால் ‘மகத்துவம்’ ஆகி விடும்.

‘சிறை’யிலிருந்து மேற்கூரையை மாற்றினால் ‘ட்ராகன்’ ஆகி விடும்.

2

சிறைக்குள்ளிருந்து வெளியே வரும் மனிதர்கள்

நாடு உண்டாக்க முடியும்.

துரதிர்ஷ்டமானது மக்களின் நம்பிக்கையைச் சோதித்துப் பார்ப்பது.

அநீதிக்கு எதிராக போராடுபவர்கள்தான்

உண்மையிலேயே உயர்ந்தவர்கள்.

சிறைக்கதவு திறக்கும்போது

தனி ட்ராகன் வெளியே வரும்.

 

*****

 

வியட்நாம் ஜாக்கிரதை!

அடிமைத்தனத்தை விட நல்லது மரணம்.

என்னுடைய நாடு முழுவதும் செங்கொடிகள் பிறகும் பறக்கின்றன.

ஆ... இப்படிப்பட்ட ஒரு காலத்தில் சிறைக் கைதி ஆவது என்பது எவ்வளவு கொடுமையானது!

போரில் என்னுடைய பங்கைச் செலுத்த

என்னை எப்போது வெளியே அனுப்புவார்கள்?

 

*****

 

சைனாவில் ஒரு பிரிட்டிஷ்

பிரதிநிதி சங்கம்

அமெரிக்காக்காரர்கள் போய் விட்டார்கள்; இப்போது

பிரிட்டிஷ்காரர்களின் முறை.

அவர்களின் பிரதிநிதிகளுக்கு எங்கும் வரவேற்பு.

நானும் சைனாவிற்கு நட்பு முறையில் விஜயம் செய்த பிரதிநிதிதான்.

ஆனால், எனக்கு கிடைத்த சூடான வரவேற்பின் தன்மையே வேறு.

 

*****

 

அவ்மீங்கிற்கு திரும்புதல்

அவர்கள் என்னை நானிங்கிற்கு மாற்றினார்கள்.

பிறகு அவ்மீங்கிற்கு திரும்ப கொண்டு வந்தார்கள்.

இடம் மாற்றத்துடன் இடம் மாற்றம்.

பயணத்திற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.

எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

 

*****

 

பவ்ஸியாங்கில் நாய் கறி

க்வோத்தேயில் அவர்களுக்கு புதிய மீன் கிடைக்கிறது.

பவ்ஸியாங்கில் நாய் கறிதான் உணவு.

காவலாளிகளுக்குக் கூட சில நேரங்களில்

அபூர்வ உணவுகள் கிடைக்கின்றன.

 

*****

 

சாலை பணியாளர்கள்

மழையில் நனைந்து சுருங்கி, காற்றின் சாட்டையடி ஏற்று

முதுகு நிமிர்த்தாமல் நீங்கள் வேதனையுடன் வேலை செய்கிறீர்கள்.

பாதையை நன்றாக ஆக்கும் உங்களிடம்

பாதையில் போகும் நடைப் பயணிகள்.

குதிரைச் சவாரிக்காரர்கள், வண்டிப்பயணம் செய்பவர்கள்- இவர்களில்

எத்தனை பேருக்கு நன்றி இருக்கிறது?

 

*****

 

காவலாளி பிரம்பைத் திருடியபோது

என்னுடன் சேர்ந்து இருந்த காலம் முழுவதும் நீ

தன்னம்பிக்கை கொண்டவனும்

நம்பிக்கைக்கு உரியவனுமாக இருந்தாய்.

நாம் ஒன்றாகச் சேர்ந்து இமயத்தின்,

மூடுபனியின்

பருவங்களைக் கடந்தோம்.

நம்மைப் பிரித்த திருடன் அழிந்து போகட்டும்!

நாம் இருவருக்கும் அவன் உண்டாக்கிய

துன்பங்களுக்கு முடிவு வருமா?

 

*****

 

மைல் கல்

உயரம் இல்லாமல், தூரத்தில் இல்லாமல்,

அரசனாக இல்லாமல், சாம்ராட்டாக இல்லாமல்

தெருவின் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நிற்கின்ற நீ

ஒரு சாதாரண மைல்கல் மட்டுமே.

எனினும் இந்த வழியே போகின்ற பயணிகளுக்கு நீ

உடனடி தரிசனம் தருகிறாய்.

அவர்கள் வழி தவறிப் போகாமல் வழி நடத்துகிறாய்.

இனியும் போக வேண்டிய தூரம்

எவ்வளவு என்பதைத் தெரிவிக்கிறாய்.

உன் சேவை சாதாரணமானதல்ல, மக்கள் என்றும்

உன்னை நினைவில் வைத்திருப்பார்கள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பூனை

பூனை

November 1, 2012

நிராசை

நிராசை

May 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel