Lekha Books

A+ A A-

ஹோ சி மின் சிறை டைரி - Page 4

ho cie minh's prison diary

உடனிருப்பவர்களின் தாள் போர்வை

பழையதும் புதியதுமான புத்தகத்தின் தாள்கள்

ஒட்டப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஒரு போர்வை இல்லாததை விட மேலானது தாள் போர்வை.

ஜரிகை துணி விரித்த மரகதக் கட்டில்களில் உறங்குபவர்களே,

உங்களுக்குத் தெரியுமா இருண்ட சிறையறைகளில்

எவ்வளவு பேர் கண்களை மூடாமல் இருக்கிறார்களென்று?

 

*****

 

தெருவில்

இவர்கள் என் கையையும் காலையும் கட்டி வைத்திருக்கிறார்கள்.

எனினும் மலைகளின் நான் கிளிகளின் பாட்டுகளைக் கேட்கிறேன்.

காடு முழுவதும் வசந்த மலர்களின் நறுமணம் நிறைந்திருக்கிறது.

இந்த நீண்ட பயணத்தின் தனிமையை சிறிதளவிலாவது

குறைக்கின்றன இவை எல்லாம்.

சுதந்திரத்தைக் கொண்டாடுவதிலிருந்து

என்னை யாரால் தடுக்க முடியும்?

 

*****

 

குளிர்ந்த இரவு

குளிர்ச்சியான இலையுதிர்கால இரவு; தலையணை இல்லை, போர்வைகளும் இல்லை.

முதுகை வளைத்து கால்களை மடக்கிச் சேர்த்து

நான் உறங்க முயற்சிக்கிறேன்; வெறுமனே

வாழைகளில் விழும் நிலவொளி குளிருக்கு ஆழம் கூட்டுகிறது.

ஜன்னல் கம்பிகள் வழியாக சப்தர்ஷி நட்சத்திரங்கள் உள்ளே

எட்டிப் பார்க்கின்றன.

 

*****

 

கட்டுகள்

என் கை கால்களில் ஒரு நீளமான வேதாளம் கட்டப்பட்டு கிடக்கிறது.

தோளில் தொங்கல் அணிந்த வெளிநாட்டு அதிகாரியா நான்?

அப்படியென்றால் அதிகாரிகளின் தொங்கல்கள்

ஜரிகை நூலில் செய்யப்பட்டவை.

என் தொங்கல்கள், கோணிச் சணலின் சுருளால் ஆனவை.

 

*****

 

ஒரு பல்லிற்கு விடை

தோழா, நீயொரு கடின இதயம் அகம்பாவம் பிடித்தவன்தான்.

நீ நாக்கைப் போல மென்மையான இதயம் கொண்ட ஒரு அடக்கமானவன் அல்ல.

நாம் ஒன்றாக எல்லா கசப்பையும் இனிப்பையும் பங்கு போட்டோம்.

ஆனால், இப்போது நீ மேற்கே செல்ல வேண்டும்.

நானோ, கிழக்குப் பக்கமாய்.

 

*****

 

ஓடிப்போன பட்டாளத்துக்காரனின் மனைவி

ஒரு நாள் நீ போய்விட்டாய், பிறகு திரும்பி வரவேயில்லை.

நம்முடைய அறையில் நான் மட்டும் தனியாக இருந்தேன்.

உடன் கவலை மட்டும்.

என் தனிமையைப் பார்த்து கவலைப்பட்ட அதிகாரிகள்

என்னை தற்காலிகமாக சிறைக்கு விருந்தாளியாக அழைத்தார்கள்.

 

*****

 

சிரிப்பதற்கு ஒரு விஷயம்

அரசாங்கத்தின் உபசரிப்பு, அரசாங்க அரண்மனையில் வாசம்

அரசாங்கத்தின் காவலாளிகள் மாறி மாறி சேவை

அரசாங்கத்தின் மலைகளையும் நதிகளையும் போதுமென்று

தோன்றும் வரை பார்த்து நிற்கலாம்.

அடடா, இவ்வளவு வசதிகளாலும் மூச்சு அடைக்கும்போது

மனிதன் தனி மனிதன்தான்.

 

*****

 

நானிங்கிற்குச் செல்லும் வழியில்

உறுதியான கயிறுக்கு பதிலாக இப்போது கறுப்பு இரும்புச் சங்கிலி.

அடிக்கடி அவை முத்து வளையல்கள் கிலுங்குவதைப் போல கிலுங்குகின்றன.

ஒற்றன் என்று பழி சொல்லி அவர்கள் என்னை சிறையில் அடைத்தார்கள்.

அதனால் என்ன, ஒரு திவானின்

மிடுக்குடன் என் நடவடிக்கைகள் இருக்கின்றன.

 

*****

 

பன்றியைச் சுமக்கும் சேவகர்கள்

1

நாங்கள் தெரு வழியே நடக்கிறோம்.

சேவகர்கள் பன்றிகளைச் சுமக்கிறார்கள்.

பன்றிகள் மனிதர்களின் தோள்களில் சவாரி செய்கின்றன.

மனிதர்களோ சங்கிலிகளில் இழுத்துச் செல்லப் படுகிறார்கள்.

பிறப்பிலேயே இருக்கும் சுதந்திரத்தைப் பணயம் வைத்தால்

மனிதனின் விலை பன்றியை விட குறைவுதான்.

2

இந்த பூமியில் மனிதர்களுக்கு பத்தாயிரம் துன்பங்கள்.

எனினும், சுதந்திரத்தை இழந்ததுதான்

இருப்பதிலேயே மிகப் பெரிய துயரம்.

அப்போது மனிதர்களுக்கு சொல், செயல் மறுக்கப்படுகின்றன.

குதிரைகளையும், மாடுகளையும் போல

நாம் மேய்க்கப்படுகிறோம்.

 

*****

 

தடுமாறி விழுதல்

இருட்டின் மூடுபடம் நீங்கவில்லை, அதற்கு முன்பே புறப்பட்டாகிவிட்டது.

வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் கல்லும் மலையும் குழியும்.

தடுமாறி விழ ஆரம்பிக்கும்போது, முன்னால் ஆபத்தான ஒரு குழி.

மிக அருகில் இருந்தது அது. அதிர்ஷ்டம் என்றுதான்

சொல்ல வேண்டும், நான் அதைத் தாண்டி கடக்கலாம்.

 

*****

 

நானிங்கிற்குச் செல்லும் படகில்

நீரோட்டத்தில் மல்லார்ந்தவாறு படகு நானிங்கிற்குச் செல்கிறது.

எங்களின் கால்கள் மரக்கட்டையில் இழுத்து கட்டப்பட்டிருக்கின்றன.

தூக்கு மரத்தில் ஏற்றியதைப் போல.

நதியின் இரு கரைகளிலும் பச்சைப் பிடித்து வரும்

செழிப்பான கிராமங்கள்.

நதியின் நடுவிலோ, வேகமாக பாய்ந்து செல்லும் மீனவர்களின் படகுகள்.

 

*****

 

நானிங் சிறை

இந்தச் சிறை கட்டப்பட்டிருப்பது புதுமையான முறையில்தான்.

இரவு முழுவதும் சுற்றிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின்சார பிரளயம்

ஆனால், சாப்பிட அமரும்போது ஒரு கிண்ணம் கஞ்சி மட்டும்.

வயிறு கோபத்தில் அடங்குவதே வழி.

 

*****

 

கவலை

போர் ஜுவாலைகள் உலகத்திற்கு நெருப்பு பற்ற வைத்திருக்கின்றன.

நான் முன்னால்... நான் முன்னால் என்று மனிதர்கள் போட்டி போடுகிறார்கள்.

சிறையில் கைதியின் மீது கனமான பாவம் மட்டும்.

அவனுடைய லட்சியங்களுக்கு ஒரு பைசா விலை இல்லை.

 

*****

 

கோழி கூவுவதைக் கேட்ட போது

நீ வெறுமொரு சாதாரண கோழிதான்.

எனினும் தினமும் காலையில் நீ அதிகாலையை

அறிவித்து கூவுகிறாய்.

‘கொக்கரக்கோ!’ என்று நீ மக்களை

தூக்கத்திலிருந்து தட்டி எழுப்புகிறாய்.

உன் தினசரி செயலை சாதாரணம் என்று யார் சொல்வார்கள்?

 

*****

 

மூன்று சீட்டு விளையாட்டுக்கு

சிறையில் அடைக்கப்பட்டவனின் மரணம்

மீதமிருந்தது எலும்பும் தோலும் மட்டும்.

குளிரும் பசியும் துயரமும் சேர்ந்து அவனை ஒரு வழி பண்ணிவிட்டன.

நேற்று இரவு அவன் என்னுடன் சேர்ந்து உறங்கினான்.

இன்று காலையில் இதோ, ஒன்பது வசந்தங்களின்

ஊருக்குப் பயணமாகி விட்டான்.

 

*****

 

இன்னொரு ஆள்

போயீயும் சு-த்ஸியும் சவ் இனத்தின் சோற்றை வேண்டாமென்றார்கள்.

இந்த மனிதனோ அரசாங்கத்தின் கஞ்சியை.

போயீயும் சு-த்ஸியும் யுயாங் மலையில் இறந்து விழுந்தார்கள்.

சிறையிலடைக்கப்பட்ட இந்த மூன்று சீட்டுக்காரனோ, தானிருக்கும் சிறை அறைக்குள்.

 

*****

 

புகை பிடித்தலுக்கு எதிர்ப்பு

இங்கு புகை பிடிப்பது கடுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது.

உங்களின் புகையிலை சிறை அதிகாரியின் பைப்பிற்கு

இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அவர் அதை பைப்பில் இட்டு இழுக்கிறார். அவருக்கு அது முடியலாம்.

ஆனால், நீங்கள் இனி புகைக்க

முயற்சித்தால், கை விலங்கு நிச்சயம்.

 

*****

 

மாலை

காற்று மாலைப் பாறைகளில் மோதி பலமாக வீசுகிறது.

குளிரின் ஈட்டி மரக் கிளைகளைப் பிளக்கிறது.

தூரத்தில் கோவில் கோபுரத்தின் மணியோசை

பயணியின் காலடிகளுக்கு வேகத்தை அதிகரிக்கிறது.

மாலை தாண்டியதும் எருமைகளை மேய்க்கும்

சிறுவர்கள் புல்லாங்குழல் ஊதுகிறார்கள்.

 

*****

 

நியாய விலை

ஒரு பிடி அரிசி வேக வைக்க அறுபது சென்ட்

ஒரு பானை வெந்நீருக்கு ஒரு ய்வான்;

அறுபது சென்ட் கொடுப்பதற்கு ஒரு முழு ய்வான் -

இதுதான் சிறையில் நியாய விலை!

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel