
ஜானகி அம்மா சுய உணர்வை இழந்தவளைப் போல மடியிலிருந்த ஒரு புட்டியை எடுத்து மேஜைமீது வைத்தாள்.
‘‘அந்த உயிர் சாகணும், மகளே!’’
அதைக் கேட்டு விஜயம்மா அதிர்ச்சியடைந்துவிட்டாள். ஒரு நிமிடம் அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை. பேசக்கூட முடியவில்லை. உரத்த குரலில் அவள் கேட்டாள்: ‘‘நீங்க... நீங்க... ஒரு பெண்தானே?’’
ஜானகி அம்மா மீண்டும் தன் கால்களில் பலமாக நின்றாள். அவள் எண்ணியது நடந்தது. அவள் சொன்னாள்: ‘‘ஆமா... குழந்தை... அந்த பாரத்தைச் சுமந்த பெண்! அப்படிப்பட்ட ஒருத்திக்கு மதிப்பே இல்லை, மகளே! சமுதாயத்தில் அவளுக்கு ஒரு இடமே இல்ல... அவ உத்தமியாகவே இருந்தாலும் உலகம் அவளைச் சந்தேகத்தோட தான் பார்க்கும். அந்தக் குழந்தையை நீ வச்சிருக்கக் கூடாது.’’
விஜயம்மா உறுதியான குரலில் சொன்னாள்: ‘‘வச்சிருக்கணுமா வச்சிருக்கக் கூடாதான்னு தீர்மானிக்க வேண்டியது நான். வச்சிருக்கணும்னு நீ நினைக்கக் கூடாது. இந்த ராத்திரி நேரத்துல நடக்குற சம்பவம் யாருக்கும் தெரியாது, குழந்தை...’’
விஜயம்மாவிற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவள் சொன்னாள்: ‘‘நான் நீங்க சொல்றதைக் கேக்குறதா இல்ல....’’
ஜானகி அம்மா வெற்றி பெற்றுவிட்டாள். அவளைத் தன்னுடைய வழிக்குக் கொண்டுவர முடியுமென்று அவளின் உள் மனம் சொல்லியது. அவளின் அறிவு கூர்மையாக வேலை செய்ய ஆரம்பித்தது.
‘‘நீ புத்திசாலித்தனமா நடக்கப் பாரு, மகளே! இந்தக் குழப்பமான நிலையில் இருந்து தப்பிக்கப் பாரு. இதுல சிந்திக்கிறதுக்கு என்ன இருக்கு? ஏன் இதைப் பற்றி பெருசா நினைக்கிற? புத்திசாலிப் பெண்கள் இப்படி மணிக்கணக்குல சிந்திச்சிக்கிட்டு இருக்க மாட்டாங்க. அவங்க உத்தமிகளா எந்தவித களங்கமும் இல்லாம சிரிச்சிக்கிட்டு வாழுவாங்க.’’
‘‘நீங்க பேசறதை தயவு செய்து நிறுத்துங்க.’’ விஜயம்மா வெறுப்புடன் சொன்னாள். ஆனால், ஜானகி அம்மா இப்போதும் தான் பேசுவதை நிறுத்தவில்லை. அவள் தொடர்ந்தாள்:
‘‘மகளே! நாம் பார்க்குற எவ்வளவு குடும்பப் பெண்களோட வாழ்க்கையில இந்த மாதிரி- இதை விடவும் மோசமான சம்பவங்களோட நினைவுகள் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கன்னு உனக்குத் தெரியுமா? புது வாழ்க்கையோட சந்தோஷத்துல அந்தச் சம்பவங்கள் காலாகாலத்துக்கும் மறக்கப்பட்டுவிடும்ன்றதுதான் உண்மை.’’
விஜயம்மாவின் வெறுப்பு பல மடங்கு அதிகமானது. அதற்குமேல் அவளால் சகித்துக் கொண்டு இருக்க முடியவில்லை. பற்களைக் கடித்துக் கொண்டுதான் அதுவரை அவள் எல்லாவற்றையும் கேட்டாள். வெறுப்பு கலந்த குரலில் அவள் சொன்னாள்: ‘‘இப்போ இங்கேயிருந்து போன அதிர்ஷ்டமில்லாத மனிதனை நினைச்சு நான் ஒண்ணும் சொல்லாம இருக்கேன். இல்லன்னா வாயில வர்றதைச் சொல்லிடுவேன்.’’
‘‘அப்படியா? பரவாயில்ல... நான் வாழ்க்கையில எவ்வளவோ அனுபவங்களைக் கடந்தவ. குழந்தை.... நான் சொல்றதைக் கேளு. நான் சொல்றதைக் கேட்டா போதும். தெளிவில்லாத விஷயங்கள் உண்மைகள் இல்ல... அதுதான் உலக நீதி. என்னோட நடத்தையை என் கணவர் சந்தேகப்படுறாரு. அதுக்குக் காரணம் என் தப்பு வெளிப்படையா தெரிஞ்சதால. வெளிப்படையா அது தெரியாமல் போயிருந்தா, நள்ளிரவு நேரத்துல அருமையான இருட்டுல அதை ஒண்ணுமே இல்லாம அழிச்சிருந்தா, என் வாழ்க்கை இப்படி ஒரு தோல்வியா ஆகியிருக்காது.’’
அதைக் கேட்டு விஜயம்மாவிற்கு கோபம் வந்தது. ஆனால், அவள் எதுவும் பேசவில்லை.
‘‘அப்படி அதை அழிக்காம விட்டுட்டதுனால வாழ்க்கையில எனக்கு அது எவ்வளவு பெரிய தொந்தரவா போச்சு தெரியுமா, மகளே?’’
விஜயம்மாவிற்கு இப்போது வார்த்தைகள் கிடைத்தன.
‘‘ஏன் அதை ஒரு தொந்தரவுன்னு நினைக்கிறீங்க? நல்லதுன்னு நினைக்க வேண்டியதுதானே! நான் அதை அழிக்கிறதுக்குத் தயாரா இல்ல. இது ஒரு புனிதமான உறவோட அடையாளச் சின்னம். ஒரு நிமிட தொந்தரவுன்னு நாம ஏன் நினைக்கணும்? எனக்கு ஒரு பெரிய நிதி கிடைச்ச மாதிரி இருக்கு. என் பெண்மையைப் பற்றி, இதய மலர்ச்சியின் முழுமைமேல எனக்கு உயர்ந்த மதிப்பு இருக்கு.’’
ஜானகி அம்மாவின் வாய் அத்துடன் மூடப்பட்டுவிடும் என்று விஜயம்மா கருதினாள். ஆனால், ஜானகி அம்மா மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
‘‘அது நீ நினைக்கிறது... திருமணமாகாத உன்னோட மதிப்பும் மற்றவங்க உன்னைப் பற்றி கவுரவமா நினைக்கிறதும் அதுக்குப்பிறகு இல்லாமற் போகும்.’’
‘‘கல்யாணம்ன்றது எனக்கு பெரிசு இல்ல. நான் ஒரு மனிதனைக் காதலிக்கிறேன்னு சொல்றதுக்கு என்கிட்ட தைரியம் இருக்கு. நான் பிள்ளை பெத்துக்குவேன். அந்தக் குழந்தையோட தந்தைக்கு நான் எல்லாத்தையம் சமர்ப்பணம் செஞ்சாச்சு!’’
தீவிரமான சிந்தனையுடன், உண்மையான ஈடுபாட்டுடன் ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘நீ அவனை நரகத்தைப் போல வெறுப்பே.’’
வெளியே ஒரு பலவீனமான அழுகைச் சத்தம் கேட்டது. ஒரு இதயம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது. குற்ற உணர்வாலோ, வாழ்க்கையில் பிரியமான ஏதோ ஒன்று அழியப் போகிறது என்பதாலோ, அளவுக்கதிகமான ஏமாற்றம் காரணமாகவோ எதற்காக அந்த அழுகை என்பதைச் சொல்ல முடியவில்லை. இதயம் வெடித்து வெளிவரும் அழுகை அது. கண்ணீரால் அது ஈரமாகாது. அதையும் தாண்டிய ஒன்று அது கண்ணீர் வழிவதைத் தாண்டி நிறைந்திருக்கும் துக்கம்! இனிமேலும் அந்த உயிர் வாழப் போவதில்லை!
‘‘யார் அது?’’- விஜயம்மா உரத்த குரலில் கேட்டாள். ஒரே நிசப்தமாக இருந்தது. அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். ‘யாரோ அழுறாங்க.’
ஒரு புன்னகையுடன் ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘பாவத்தோட புலம்பல், மகளே! நினைவுகளின் பயங்கர வடிவம்!’’
சிறிது நேரம் கழித்து அவள் தொடர்ந்து சொன்னாள்: ‘‘உனக்குப் புரியல.... பாவம் வடிவம் எடுத்து வந்தப்போ நினைவுகள் அதுக்கு உயிர்தானம் செய்தது. இப்படி ஒரு இரவில்... கிட்டத்தட்ட இதே நேரத்தில்...’’
ஜானகி அம்மா நீண்ட பெருமூச்சு விட்டாள். அவள் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.
‘‘அந்தக் கொடிய சம்பவத்தோட பிணம்தான் அது. அது தாகத்தைத் தாங்க முடியாம தேம்பித் தேம்பி அழுவுது. மகளே! பாரு.. பிரபாவைப் பார்க்குறப்போ ஒவ்வொரு நிமிடமும் நான் நினைவுகளால சூழப்பட்டு நடுங்கிப் போறேன். ஒவ்வொரு இரவிலம் நான் பயந்து நடுங்கிக்கிட்டு இருக்கேன்.’’
விஜயம்மா எதுவும் புரியாமல் நின்றிருந்தாள். மொத்தத்தில் ஒரு பயங்கரமான பேய்க் கதையைய் போல அது அவளுக்குத் தோன்றியது. அந்த மகனும் அதைப்போலவே பேய்க் கனவுகள் காணக் கூடியவன்தான் என்பதை அவளும் நன்கு அறிவாள்.
ஜானகி அம்மா தொடர்ந்தாள்: ‘‘மகளே! அந்தத் தப்பு ஆகாயம் அளவுக்கு இரத்தச் சதையோட முன்னால நின்னுக்கிட்டு இருக்கும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook